சிரிப்பு பயம் த்ரில் திகில் ரொமான்ஸ்



எல்லாம் ‘காஞ்சனா-2’வில் இருக்கு!

ராகவா லாரன்ஸ்

சந்தித்து நாளாச்சுல்ல..?’’- அழுத்தமாகக் கை குலுக்குகிறார். கலைந்து கிடக்கும் தலைமுடி, கொஞ்ச நாள் தாடி என எதிர்பார்த்துப் போனால்செம ஃப்ரஷ் ராகவா லாரன்ஸ்! ‘காஞ்சனா’சூப்பர் ஹிட்! சன் பிக்சர்ஸ் வழங்கும்‘காஞ்சனா-2’, ஆட்டத்திற்குரெடி!

‘‘தமிழ்ப் படவுலகில் ‘காஞ்சனா’ எனக்குக் கொடுத்தது பெரிய மரியாதை! கிடைச்ச அங்கீகாரத்தை தக்க வைக்கணும்னு ஆசை. சளைக்காம, மலைக்காம உழைச்சுக்கிட்டு இருக்கோம். ‘காஞ்சனா’வை சும்மா ஜாலியா பண்ணினேன். எல்லாத்தையும் தூக்கித் தள்ளி வச்சிட்டு மக்கள் அங்கீகரித்த படம் அது. பேய்க் கதைன்னா அலறித் துடிக்காம, வாய்விட்டு சிரிக்க வைக்கவும் முடியும்னு சொன்ன படம். இப்பத்தான் நம்ம பாதையில் இன்னும் நம்ம பங்காளிகள் நடக்க ஆரம்பிச்சிருக்காங்க.

எனக்கு ஒவ்வொரு படமும் ஒரு தவம். மனசைப் பிடிக்கிறது, மசாலாவில் கலக்குறதுனு அது என்ன டைப் படமா இருந்தாலும் உள்ளே போயிட்டா அதுதான்னு அப்படியே மூட் செட் பண்ணிடுவேன். இப்போ ஒரு வருஷமா என் உடம்புக்குள்ளே உட்கார்ந்து இழுக்கிறது ‘காஞ்சனா-2’தான்!’’‘‘கொஞ்சம் நஞ்சம் இல்லை... ‘காஞ்சனா-2’வுக்கு இருக்கிற எதிர்பார்ப்பு எக்கச்சக்கம். உணருகிறீர்களா?’’‘‘ஆமா! இதைப் பேய்ப் படம்னு ஒரு வரியில் சொல்லிட்டுப் போயிட முடியாது. அப்படிப் பார்த்தால் ரொம்பப் புதுசா,

கதறடிக்கிற மாதிரி ஆக்ஷன் கூட இருக்கு. சிரிப்பு, பயம், த்ரில், திகில், ரொமான்ஸ், இசைன்னு இப்படி ஒரு கலவை இருக்க முடியுமான்னு உங்களுக்கே ஆச்சரியம் தாங்க முடியாது. முன்னாடி விமர்சனத்தை மீடியா பார்த்துக்கிட்டாங்க. இப்ப பப்ளிக் விமர்சனத்தை கையில் எடுத்துக்கிட்டாங்க. அவங்களுக்கு எது வேணும்னு தெரிஞ்சா போதும்.

இன்னொண்ணு... ‘காஞ்சனா’வுக்கும் இதுக்கும் துளி சம்பந்தமில்லை. யாரும் இதை ‘காஞ்சனா’ மாதிரியே இருக்கறதா சொல்லிடக்கூடாதுன்னு தெளிவா இருக்கேன். இது வேற படம்னு சொல்ல வைக்க ஆசைப்பட்டிருக்கேன். அப்புறம் ஏன் ‘காஞ்சனா-2’ன்னா, அந்தப் பெயர் எனக்குக் கொடுத்த இடம் பெரிசு.

ஒண்ணே ஒண்ணு... கோவை சரளாம்மாதான் இதிலும் அம்மா! டெக்னிக்கலாவும், ஸ்க்ரிப்ட் ஸ்டைல்லயும் அடுத்த கட்டத்துக்குப் போகிற மாதிரி ஒரு படம் பண்ணணும்ங்கிறதுதான் ஐடியா. ‘காஞ்சனா-2’ அப்படி வந்ததில் சன் பிக்சர்ஸுக்கு பெரிய பங்கு இருக்கு. ‘காஞ்சனா’வில் நானே ஒன் மேன் ஷோவா நிக்கிற மாதிரி இருக்கும். இதில் நான், நித்யா மேனன், டாப்ஸி, சரளா அம்மா எல்லாரும் ஸ்கோர் பண்ண வாய்ப்பு வந்திருக்கு.

படத்தை ஒரு ஆளா தாங்கிப் பிடிச்சுக்கிட்டு நிக்காம, பிரிச்சுக் கொடுத்து நடிப்பை வாங்கிட்டா அழகுதானே? அது இருக்கு இதில்! ‘காஞ்சனா’வை விட எல்லாமே இதில் இன்னொரு மடங்கு. ரசிக்கவும், சிரிக்கவும், பயப்படவும், திகில் அடையவும், த்ரில் கூட்டவும் நிறைய இடங்கள் வச்சிருக்கேன்.

என் படத்தில் உள்ளே நிறைய உணர்வுபூர்வமான விஷயங்களும் இருக்கு. இனம் புரியாத வலி இருக்கும். ‘காஞ்சனா’வில் சரத்குமாரை திருநங்கையா எதிர்பார்த்தீங்களா..? அப்படி ஒரு வலி இதிலும் இருக்கு. எல்லா வெற்றிப் படங்களிலும் ஆட்டம் பாட்டத்திற்கு மத்தியில் யாருடைய வலியாவது இருந்திருக்கும்!’’‘‘ரொம்ப டைம் எடுத்துட்டீங்களே...’’

‘‘எனக்கு டைம் முக்கியமில்லை. ஒவ்வொண்ணும் பெஸ்ட்டா வரணும். எனக்கே தெரியும். இந்த கேப்ல பத்தடி பின்னாடி போயிருக்கேன்னு! ஆனா, படம் வந்தா நூறு அடி முன்னாடி பாய்ஞ்சிடுவேன். பெரிய படம், பெரிய கேன்வாஸ், கருவிகள், வேலைகள்னு மேன் பவர் நிறைய ஆன படம்.

ஒருநாள் சுடுகாட்டுல ஷூட்டிங் நடந்தப்போ, ராத்திரி தலை சுத்தி கீழே விழுந்தேன். அடுத்த நாலு மாதம் படுக்கையில். ஃபைனான்ஸ், ஹெல்த், டென்ஷன்னு எல்லா வலியையும் நானே ஏத்துக்குவேன். படத்துல காட்ட மாட்டேன். படத்தைப் பாருங்க... ஏதாவது ஒரு மார்க் என் முகத்துல ஆரம்பிச்சு யார் முகத்துலயாவது தெரியுதா பாருங்க. அதுதான் லாரன்ஸ். இப்ப நான் சொல்ற டிஸிப்ளின், ஈடுபாடு, கடின உழைப்பு எல்லாம் படம் ரிலீஸான பிறகு எல்லாருக்குமே புரியும்!’’‘‘அடடா... டாப்ஸி, நித்யா மேனன்னு இரண்டு ஹீரோயின்கள்...’’

‘‘டாப்ஸி எங்கே பார்த்தாலும் ரெண்டு பாட்டுக்கு வந்திட்டு, நான்கைந்து சீன்களில் தலையைக் காட்டிட்டுப் போயிருவாங்க. இதில் முதன்முறையா நடிக்க அவங்களுக்கு சந்தர்ப்பம். எனக்கு ஜோடி கூட அவங்கதான். ஒரு மெல்லிய ரொமான்ஸ் படம் பூராவும் இருக்கு. நித்யா மேனனுக்காக நாலு மாதம் காத்திருந்தேன்.

புக் பண்ணும்போது, ‘இந்தப் பொண்ணு ஆயிரம் கேள்வி கேட்கும்... கஷ்டமா இருக்கும்’னு சொன்னாங்க. ஆனா, நித்யாவும் வந்து என்கிட்ட ஒரு குழந்தை மாதிரி உட்கார்ந்து நடிச்சிட்டுப் போனாங்க.

கேரக்டர் இன்வால்வ்மென்ட் அப்படி! சரத்குமாருக்கு காத்திருந்தேனே... அவரும் அவர் கேரக்டருக்கு ஒரு நியாயம் செய்தார் இல்லையா? அப்படியே நித்யாவும்! ரொம்பவும் உழைச்சு படத்துக்கு நிறைவா இருந்தாங்க. ஒவ்வொரு படத்தையும் முதல் படமா செய்றவங்க கிட்ட நாமளும் சந்தோஷமா வொர்க் பண்ண முடியும். அப்படி சந்தோஷப்பட்ட இடங்கள் படம் முழுவதும் இருக்கு!’’

‘‘பாடல்களில் ரொம்ப கவனம் செலுத்தியிருக்கீங்க...’’‘‘முன்னாடி அப்படியெல்லாம் இல்லை. என்னதான் பாட்டு பெரிசா இருந்தாலும் படம் நல்லா இருந்தால்தான் ஓடும்னு நினைப்பேன். ஆனா, இப்ப நேரம், ரசனை மாறியிருக்கு. மெலடி, ஸ்பீடுன்னு பாடல்கள்ல பின்னியிருக்கோம். தமன், சத்யா, பாலமித்ரா, லியோன்னு நாலு திறமையாளர்கள் இருக்காங்க. அனுபவிச்சு, லயிச்சு, இழைச்சுக்கிட்டு இருக்கிற ‘காஞ்சனா-2’வை ஒரே வரியில் சொல்லணும்னா ‘மாஸ் மசாலா’!’’‘‘திடீர்னு தாய்க்கு கோயில் கட்டுறீங்க?’’

‘‘எனக்கு தாய்க்கு முன்னாடி எதுவும் ஒண்ணும் இல்லைனு தோணிச்சு. பெத்த தாயை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் துணிவு எப்படி வருது? கடவுள் தன்னை எல்லாப் பக்கமும் வைக்க முடியாதுன்னு நினைச்சுத்தான் தாய்மார்களை அனுப்பி வச்சிருப்பார்னு எனக்கு நம்பிக்கை. என்னைப் பெத்த தாயோட சிலை ராஜஸ்தானில் தயாராகிட்டு இருக்கு. அதைப் பார்த்து யாராவது பத்துப் பேர், தாயை காப்பகத்திற்கு அனுப்புகிற கொடுமையை மறக்கட்டும்.

புத்தி வரட்டும். அடுத்த பிறவி பற்றி பேசவே வேண்டாம். இதுதான் நாம் தாயோடு இருக்கக் கூடிய கடைசி வாய்ப்பு. எனக்கு என் தாய் விலைமதிக்க முடியாத செல்வம்’’ எனச் சொல்லும்போதே கார் வந்து ஒட்டி உரசிக்கொண்டு அசைந்து நிற்கிறது. ‘‘ஹலோ... டூயட் டைம் ஆரம்பிச்சாச்சு!’’ எனக் கண் சிமிட்டியபடி டாப்ஸியைத் தழுவ நழுவுகிறார் லாரன்ஸ்.யாரும் இதை ‘காஞ்சனா’ மாதிரியே இருக்கறதா சொல்லிடக் கூடாதுன்னு தெளிவா இருக்கேன்.

 நா.கதிர்வேலன்