கவிதைக்காரர்கள் வீதி

ஆறுதல் அடைமழையில் நனைந்த சோளக்கொல்லை பொம்மை தலை துவட்டிவிட வருகிறது காற்று! - பெ.பாண்டியன், காரைக்குடி.
சுதந்திரம் கொடுக்கப்பட்ட அரை வட்டத்தின் மதிப்பைக் கொண்டு பை ஆர் ஸ்கொயரால் பெருக்கி வந்த விடையென மாடு மேய்ந்த இடத்தைக் குறிப்பிட்டு எழுதுகையில் கேள்வி எழுப்புகிறது மனம்... அவ்வளவுதானா மாட்டின் சுதந்திரம்? - ஸ்ரீநிவாஸ் பிரபு, சென்னை-90.
சிக்னல் டோரா பொம்மை வாங்கச் சொல்லி அழுகிறது குழந்தை காருக்கு உள்ளேயும் வெளியேயும்! - வி.நாராயணன், தஞ்சாவூர்.
இன்முகம் எழுத்தில் இருப்பதை எடுத்துக் கொடுக்கும் பணிதான் என்றாலும் இன்னும் கொஞ்சம் சிரித்தபடி இருக்கலாம் இந்த மருந்துக்கடை விற்பனையாளர்கள். - செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி.
தவம் யாருக்காகவோ தவமிருக்கிறது, தவறிய ஒற்றைச் செருப்பு - கவி கண்மணி, கட்டுமாவடி.
|