சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல நேரம் எப்போது?





ஸ்திர லக்னம் என்றழைக்கப்படுவதில் மிகவும் வலிமை வாய்ந்தது சிம்மமே ஆகும். சிம்ம லக்னத்தில் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டத்தோடு வாழ்க்கையும் வளம் பெறும். நீங்கள் எப்போதும் சுயம்புதான். பிறக்கும்போதே பல திறமைகள் உள்ளடங்கி இருக்கும். ரத்தத்தில் இப்படி ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றலைப் பகிர்ந்து கொள்ளத்தான் ஒருவரைத் தேடுவீர்கள். அப்படி சரியான நபர் கிடைத்து விட்டால் வெற்றியை எளிதாக்குவீர்கள். இல்லையெனில் சார்ந்து வாழும் தன்மையால் பலவீனமடைவீர்கள். உங்களுக்கு நேரடியான எதிரிகளே கிடையாது. உங்களை அண்டி இருப்பவர்களை தூண்டிவிட்டு அவர்கள் மூலமாகத்தான் வலை பின்னுவார்கள். அள்ளிக் கொடுக்கும் குணம் கொண்ட உங்களுக்கு மனசாட்சிக்கு மாறாக பேசத் தெரியாது. ஏழை, பணக்காரர், படிக்காதவர் என்று வித்தியாசம் பார்க்கத் தெரியாது. ஆயிரம் பேர் கூடி மணிக் கணக்கில் ஆலோசனை செய்து பேசினாலும் இறுதியில் உங்கள் யதார்த்தமான பேச்சுதான் சபையில் எடுபடும். அப்படிப் பேசும்போது சபையில் உங்களை வில்லனாகச் சித்தரிப்பதும் நடக்கும்.

சிம்ம ராசிக்காரர்கள் கொஞ்சம் ஆர்ப்பாட்டம், சின்னதாக அலட்டல், அலங்காரமான பேச்சு என்று வளைய வருவார்கள். ஆனால் சிம்ம லக்னத்தில் பிறந்த நீங்கள், உணர்ச்சிவசப்பட மாட்டீர்கள். வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாக எடுத்துக் கொள்வீர்கள். அடிமனதில் அதிரடி திட்டங்கள் தீட்டிக் கொண்டிருப்பீர்கள். ஆனால், முகத்தில் எந்த ரீயாக்ஷனும் இருக்காது. ஒருவரை விரும்பினால் ஒரேயடியாக விரும்புவீர்கள்; இல்லையெனில் தூக்கி எறிந்து பேசுவீர்கள். சின்ன காரணங்களுக்காக பெரிய அளவில் பகைத்துக் கொள்வீர்கள். உங்களிடம் ஒரே மாதிரியான சிந்தனைதான் இருக்கும். ஒரு முயற்சிக்காகக் கூட விஷயங்களை மாற்ற விரும்ப மாட்டீர்கள். ‘‘பத்து வருஷமா இதே வீட்ல இருக்கறோம். எதுக்காக இப்போ மாறணும்’’ என்பீர்கள்.
எதிரிகளையும் நேசிக்கச் செய்வீர்கள். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விடுவீர்கள். புறம் பேசத் தெரியாத லக்னத்தில் பிறந்துள்ளதால் எல்லோரும் உங்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள். எவ்வளவு பெரிய பதவியில் அமர்ந்தாலும் கர்வம் கொள்ள மாட்டீர்கள். அந்தப் பதவியைக் குறித்த வியப்பு உங்களிடம் இருக்காது. நிறைய கஷ்டப்பட்டு மேல் நிலைக்கு வந்திருப்பதால், அலட்டல் இல்லாமல் அமைதியாக இருக்கவே விரும்புவீர்கள். யாராவது ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தால், காட்டு சிங்கம் போல கர்ஜிப்பீர்கள். அதேபோல யாராவது ஒருவரைச் சார்ந்து, அன்புக்கு அடிமையாக இருப்பீர்கள்.

சூரியன் உங்களின் லக்னாதி

பதியாக வருவதால் சூரியனின் அம்சம் பூரணமாக இருக்கும். முன்வைத்த காலை பின் வைக்காத தெளிவோடு இருப்பீர்கள். வாழ்க்கைச் சூழலில் எல்லாவற்றையும் இழந்தாலும், பீனிக்ஸ் பறவைபோல உயிர்த்தெழுந்து உயரப் பறப்பீர்கள். ஏனெனில், உங்களிடத்தில் ஆத்ம பலம் அதிகமுண்டு. யாருக்காவது ஏதாவது கொடுத்துக் கொண்டே இருப்பீர்கள். சூரியன் லக்னாதிபதியாக வருவதால், வளைய வேண்டிய இடத்தில் வளையாது இருப்பீர்கள். அப்படி வளையவும் தெரியாது. ஆனால், வாழ்க்கையின் பின்பாதியில், ‘கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணியிருக்கலாமோ’ என்று வருத்தப்படவும் செய்வீர்கள். உதிப்பதும் அஸ்தமனமும் சூரியனின் இயல்புபோல, நீங்கள் அதிமேதாவியாகவும் பேசுவீர்கள்;சில

சமயங்களில்
சில்லறைத்தனமாகவும் நடந்து கொள்வீர்கள். உங்களின் பலவீனமாகவே இது இருக்கும்.
சூரியன் உங்கள் ஜாதகத்திற்கு வலிமையைக் கொடுப்பார். வாழ்வின் அடிப்படைத் தேவைகளை சரி செய்து கொடுப்பதில் பெரும் பங்காற்றுகிறார். உங்களின் ஜாதகத்தில் சூரியன் எப்படி இருந்தாலும் சரிதான், சில நடைமுறை பரிகாரங்களை கைக்கொள்ளுங்கள். தந்தையிழந்த குழந்தைக்கும், பார்வை இழந்தவருக்கும் உதவுங்கள். சூடான உணவை சாப்பிடுங்கள். காரத்தை கூட்டிக் கொண்டால் தவறில்லை. உணவில் சூரியகாந்தி எண்ணெயை அதிகம் உபயோகப்படுத்தலாம். இஞ்சி-சுக்கு கஷாயம் குடியுங்கள். கோதுமை அயிட்டங்களை அடிக்கடி சாப்பிடுங்கள். சூரிய தசை, சூரிய புக்தி, கார்த்திகை, உத்திரம், உத்திராடம் போன்ற நட்சத்திரங்கள், ஞாயிற்றுக் கிழமை, 1, 10, 19, 28 போன்ற நாட்கள் என்று எல்லாமுமே உங்களுக்கு சாதகமாக இருக்கும். பயன்படுத்திக் கொள்வது உங்கள் பொறுப்பு.



சூரியனை விட உங்களுக்கு செவ்வாயே இன்னும் அதிகமாக உதவப் போகிறார். கேந்திர ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான திரிகோணத்திற்கும் அதிபதியாக செவ்வாய் வருகிறார். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக இருந்தால் பாரம்பரியத்தை கட்டிக் காப்பாற்றுவீர்கள். சொந்த ஊர், வந்த ஊர் என்று எல்லா இடங்களிலும் சொத்துகளை வாங்கிக் குவிப்பீர்கள். நான்காம் இடம் என்பது சுக ஸ்தானத்தை குறிப்பதால், ஆடம்பரமான பங்களா கட்டி வாழ்வீர்கள். மேலும், தாய்க்குரிய இடத்திற்கும், பாக்ய ஸ்தானமான தந்தைக்குரிய இடத்திற்கும் செவ்வாய்தான் அதிபதியாக வருகிறார். அதேசமயம் உங்களின் ராசியாதிபதியான சூரியனும், செவ்வாயும் அதிநட்பு கிரகமாக வருவதால். பெற்றோருக்கு கௌரவத்தை கொடுப்பீர்கள். அவர்களால் முடியாததை நீங்கள் சாதிப்பீர்கள்.

இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் பரம்பரைச் சொத்து உள்ளவர்களாகவே இருப்பீர்கள். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் எங்கிருந்தாலும், அவரின் ஆசிகள் நிச்சயம் உண்டு. ஆனால், புதன் அல்லது சனியோடு சேர்ந்தால் போராட்டம்தான். செவ்வாய் தன்னுடைய முழுத்திறனையும் உபயோகப்படுத்தி உதவ முடியாத நிலையில்தான் இருப்பார். ஆனாலும் தன்னால் எந்த தீய பலனும் வராமல் பார்த்துக் கொள்வார். இதே செவ்வாய் சூரியனோடு இருந்து விட்டால் அதிகாரமுள்ள பதவிகளைத் தருவார். செல்வத்தில் திளைக்க வைப்பார். ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் அளவுக்கு உயர்த்துவார். தலைமை தாங்கி நடத்திச் செல்வதில் ஈடு இணையற்றவராக விளங்க வைப்பார். செவ்வாய் பூமிகாரகனாக இருப்பதால் மத்திம வயதிற்குள்ளாகவே வீடு, வாசல் யோகம் கிட்டிவிடும். 

செவ்வாய் உங்களுக்கு முழுமையாக உதவ, நடைமுறையில் சில விஷயங்களை கடைப்பிடிக்கலாம். செவ்வாய்க்கிழமை விரதம் இருங்கள். துவரை தானம் கொடுங்கள். அடிக்கடி பூண்டு மற்றும் மிளகை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அன்னம் நீரில் நீந்துவதுபோல படம் வரைந்து பார்வையில் படுவதுபோல வைப்பது நல்லது. நீங்கள் முதலாளியாக இருந்தால், தொழிலாளியின் வியர்வை காய்வதற்கு முன்பு சம்பளத்தை கொடுப்பது நல்லது. வீட்டில் செம்பருத்தி, செண்பகப் பூச்செடிகளை வளர்க்க முயற்சியுங்கள். மலை வாழைப்பழத்தை அடிக்கடி சாப்பிடுங்கள். சகோதரனை இழந்தவருக்கு உதவி செய்ய முயற்சியுங்கள். ரத்த தானம் செய்யுங்கள். வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் அருகில் இருந்தால், அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுங்கள். தெருவை அகலப்படுத்தும்போது பிடிவாதம் பிடிக்காது கொஞ்சம் இடத்தை விட்டுக் கொடுங்கள். உடன்பிறந்தவர்களுக்கு உண்டான சொத்துக்களை மனோ தர்மத்தோடு பிரித்துக் கொடுங்கள். இவையெல்லாம் செய்தால் செவ்வாய் உங்கள் ஜாதகத்தில் பலம் பெறும். செவ்வாய் தசை, செவ்வாய் புக்தி, அந்தரம் நடக்கும்போதெல்லாம் உங்களுக்கு சாதகமான பலன்களே நடைபெறும். மேலும் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களிலும், செவ்வாய்க் கிழமையிலும், 9, 18, 27 போன்ற தேதிகளிலும் எல்லா நல்ல முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள். செவ்வாய் நிறைய நற்பலன்களை அளிப்பார்.

உங்களின் லக்னத்திலிருந்து ஐந்தாம் இடமான பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு குரு வருகிறார். சத் புத்திரன், சத் புத்திரியை அருளுவார். நுண்ணறிவைத் தருவார். குருவே எட்டாம் இடத்திற்குரியவராக வருவதால் உங்களில் சிலருக்கு தாமதமாக பிள்ளைப்பேறு உண்டாகும். வேலை நிமித்தமாக குடும்பத்தைப் பிரிந்திருக்க நேரும். செவ்வாய் அளவுக்கு இல்லாவிட்டாலும், அவருக்கு அடுத்த படியாக குரு உங்களுக்கு நன்மைகளைச் செய்வார். தங்க ஆபரணங்கள் நிறைய சேரும். கல்வி நிறுவனங்கள் நடத்துதல், முக்கிய ஸ்தாபனங்களுக்கு டிரஸ்ட்டியாக இருத்தல் என அந்தஸ்தாக வாழ்வீர்கள். இதே குரு எட்டாம் இடத்திற்கும் வருவதால், செலவுகளையும், அலைச்சல்களையும் கொடுத்துதான் நன்மைகளை அடையும்படி செய்வார். பிள்ளைகளை நினைத்து அவ்வப்போது பயமும் இருக்கும். ‘‘நம்ம பேச்சை பிள்ளைகள் இன்னும் சரியா கேட்டிருந்தா பிரமாதமா வந்திருப்பாங்க’’ என்கிற ஆதங்கம் இருக்கும்.

உங்களின் சொந்த ஜாதகத்தில் கடகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய வீடுகளில் ஒன்றில் குரு அமர்ந்திருந்தாலோ, சூரியனுடன் குரு சேர்ந்திருந்தாலோ, ராஜபோகமான வாழ்க்கை அமையும். குருவும் செவ்வாயும் சொந்த ஜாதகத்தில் சேர்ந்திருந்தால் குரு மங்கள யோகம் கிடைக்கும். சிறிய வயதிலேயே பெரிய பதவிகளில் அமர்வீர்கள். குரு செவ்வாயுடன் மேஷம், தனுசு வீடுகளில் சேர்ந்திருந்தால் ராணுவம் அல்லது விமானப் படையில் முதன்மை பதவி வகிப்பவராக இருப்பார். குரு தசை, குரு புக்தி, வியாழக்கிழமை, புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்கள், 3, 12, 21, 30 போன்ற தேதிகள் என்று குறிப்பிட்ட காலங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

பொதுவாக இந்த மூன்று கிரகங்களுமே சனியை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரங்களில் அமரக் கூடாது. சனியின் பார்வையோ அல்லது சேர்க்கையோ பெற்றிருந்தால் எல்லாம் காலதாமதமாகும். மேலும் சொந்த ஜாதகத்தில் இவை மூன்றும் பரஸ்பரம் மறையாமல் இருப்பது நல்லது. வேர்க்கடலை, பனங்கற்கண்டு, பால் போன்றவற்றை அவ்வப்போது எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக வியாழக்கிழமையன்று பதினோரு பேருக்காவது தயிர் சாதம் வாங்கிக் கொடுங்கள். ஏழைகளின் கல்விச் செலவுக்கு உதவுங்கள்.

இந்த மூன்று கிரகங்களால் ஏற்படக் கூடிய யோகப் பலன்களை முழுமையாக பெறுவதற்கும், அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ்வதற்கும் நீங்கள் செல்ல வேண்டிய தலமே, பழநி முருகன் கோயில் ஆகும். அக்கோயிலுக்குச் சென்று ராஜ அலங்கார முருகனை மறக்காது தரிசியுங்கள். அல்லது வீட்டில் ராஜ அலங்கார முருகனின் படத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
(தீர்வுகளைத் தேடுவோம்...)

மாற்றம் தரும் மந்திரம்

சிம்ம லக்னத்தில் பிறந்த நீங்கள், இந்த திருப்புகழை எப்போதும் சொல்லி மேன்மை பெறுங்கள்:  
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர
மணிபடும்
அப்புன மதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே