குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பது ஆபத்து?





அம்மா ஊட்டாத பாலை ஆவினம் ஊட்டும்’ என்பார்கள். தூய்மையானதாகவும், தாய்ப்பாலுக்கு நிகராகவும் கருதி குழந்தைகளுக்கு பசும்பாலை புகட்டும் வழக்கம் ஆண்டாண்டு காலமாக நம்மிடையே இருக்கிறது. அதிலும் வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், முழுக்க முழுக்க நம்புவது பசும்பாலைத்தான். பல நூற்றாண்டுகளாக பசும்பாலோடு மனித சமூகத்துக்கு பந்தம் உண்டு. ஆனால், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தேசிய குடும்ப நல சர்வே, ‘பசும்பால் குழந்தைகளுக்கு உகந்ததல்ல...’ என்று பீதி கிளப்பியிருக்கிறது.

கடைசிச்சொட்டு பாலையும் கறந்து விற்பதற்காக மாடுகளுக்கு ஹார்மோன் ஊசிகளைப் போடுவதாக ஏற்கனவே புகார்கள் உண்டு. ஹார்மோன் ஊசி போடப்பட்ட மாட்டின் பாலைக் குடிப்பதால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் கூட பல்வேறு தொந்தரவுகளுக்கு உள்ளாவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த லட்சணத்தில், ‘குழந்தைகளுக்கு பசும்பால் கொடுத்தால் சிறு
நீரகம் செயலிழக்கும்’ என்ற குடும்ப நல சர்வேயின் அறிக்கையால் தாய்மார்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  

பசும்பாலில் என்னதான் பிரச்னை..?
அப்போலோ மருத்துவமனையின் தலைமை உணவு ஆலோசகர் புவனேஸ்வரியிடம் கேட்டோம்.
‘‘உலக சுகாதார நிறுவனம், ‘பிறந்தது முதல் 6 மாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர வேறெதையும் தரக்கூடாது’ என்கிறது. ஆனால் பல பெண்கள் 3 மாதங்கள் மட்டும் தாய்ப்பால் கொடுத்துவிட்டு, பிறகு பசும்பால், பாக்கெட் பால் கொடுக்கத் தொடங்கி விடுகிறார்கள். பசும்பாலை விட பாக்கெட் பால் பெரிய விபரீதம். எருமை, பசு என பல மாடுகளின் பாலை ஒன்றாகக் கலந்து, கொழுப்பைக் குறைத்து, அதிக வெப்பம், அதிக குளிர்ச்சியில் வைத்து பதப்படுத்தி பாக்கெட்டில் அடைக்கிறார்கள்.

பொதுவாக குழந்தையின் நீளம், எடை, தலை, மார்புச் சுற்றளவு எல்லாவற்றையும் பார்த்து, அதன் தன்மையை ஆராய்ந்துதான் உணவைத் தீர்மானிக்க வேண்டும். தாய்ப்பாலைப் பொறுத்தவரை குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப, அதன் தன்மையும், சத்து அளவுகளும் மாறிக்கொண்டே இருக்கும். இது இயற்கையே கொடுத்த வரம். ஆனால் பசும்பால் அப்படியல்ல. குழந்தையின் தேவைக்கு அதிகமாகவோ, குறைவாகவோ சத்துகளைக் கொண்டிருக்கும். குழந்தையின் உறுப்புகளால் பசும்பாலை ஜீரணிக்க முடியாது. எல்லாம் சிறுநீரகத்தில் படிந்துவிடும். தாய்ப்பால் சுரக்கவில்லை என்று குழந்தைக்கு வேறு உணவுகளைத் தேடுவதை விட, தாய்க்கு பால் சுரக்கத் தேவையான அளவுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளைக் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு கொடுப்பதற்கு பதிலாக தாய் நிறைய பசும்பால் குடிக்கலாம். பால்சுரப்பு அதிகரிக்கும். பூண்டு, பழங்கள், காய்கறிகள், முட்டை, மீன், இறைச்சி வகைகளை நிறைய எடுத்துக் கொள்ளலாம். நிறைய தண்ணீர் குடிக்கலாம். வேலைகளை அளவாக செய்ய வேண்டும். தேவையான அளவுக்குத் தாய்ப்பால் சுரந்தால் வேறு உணவுகளை நாட வேண்டிய தேவையே இருக்காது...’’ என்கிறார் புவனேஸ்வரி.



குழந்தைகள் இரைப்பை மற்றும் குடலியல் சிறப்பு மருத்துவர் தனசேகர் கேசவலுவும், ‘ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பசும்பால் ஏற்றதல்ல’ என்று உறுதியாகக் கூறுகிறார்.

‘‘ஒரு வயது வரை குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் போதிய அளவு வளர்ச்சியடையாது. இந்த நேரத்தில் எவ்வளவு சத்துகள் தேவை என்பதை அறிந்து சரியான முறையில் உணவு தரவேண்டும். இல்லாவிட்டால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். தாய்ப்பாலை விட சரியான உணவு வேறில்லை. ஆனால் பசும்பாலில் போதுமான அளவு சத்துகள் இல்லை. அதன் ஜீரணத் தன்மையும் வேறுபடும். பசும்பாலால் ஏற்படும் பிரச்னையை ‘கௌஸ் மில்க் புரோட்டின் அலர்ஜி’ என்று சொல்வோம். அண்மைக்காலமாக இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட நிறைய குழந்தைகள் சிகிச்சைக்காக வருகிறார்கள்.

ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான உணவைப் பரிந்துரைக்கும்போது, ‘நோ ஆடட் சுகர்... நோ ஆடட் சால்ட்... நோ ஆடட் கௌ மில்க்...’ என்று சொல்வோம். 1 வருடம் வரை குழந்தைகளுக்கு கண்டிப்பாக பசும்பால் மட்டுமே கொடுக்கக்கூடாது. தாய்ப்பால் தரமுடியாத நிலை ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனைப்படி மாற்று உணவுகளைக் கொடுக்கலாம். 

தொடர்ந்து பசும்பால் மட்டுமே கொடுத்தால், ரத்தசோகை ஏற்படலாம். போதிய கால்சியம் கிடைக்காததால் ‘ரிக்கெட்ஸ்’ எனப்படும் எலும்புநோய் வரலாம். கை, கால் எலும்புகள் வளைந்து, வளர்ச்சி குறைந்துவிடும். மலச்சிக்கல், உடல் பருமன், பற்சிதைவு, வயிற்றுப்போக்கு, குடலில் ரத்தக்கசிவும் ஏற்படலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து போகவும் நேரலாம். சிலர் பாலை காய்ச்சாமல் அப்படியே குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள். அதுவும் தவறு. காய்ச்சாமல் குடிக்கிறபோது, மாட்டில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் ‘போவைன் டி.பி’ எனப்படும் காசநோய் வரலாம்...’’ என்று எச்சரிக்கிறார் டாக்டர் தனசேகர் கேசவலு. வெளுத்ததெல்லாம் தாய்ப்பாலாகாது. கவனத்தில் கொள்ளுங்கள் தாய்மார்களே..!
- வெ.நீலகண்டன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்