பிரபுதேவா - நயன்தாரா விவகாரத்தில் பிரச்னை பிரேக் டான்ஸ் ஆடுகிறது. பிரசன்னா - சினேகாவின் காதல், திருமணம் வரை வளர்ந்து ஃபிளவர்வாஷ் போல மின்னுகிறது. அங்கிட்டு பிரபுதேவா விஷயத்தில் ஏன் அப்படி நடக்கிறது, இங்கிட்டு சினேகாவின் இல்லற வாழ்க்கை எப்படி அமையும் என்பதை தெரிந்துகொள்ளும் ஆவல் தமிழக ரசிகர்களுக்கு இல்லாமலா இருக்கும்? யாருடையது இது என்று சொல்லாமல், இவர்களின் கைரேகைகளைக் காட்டி ஜோதிடர்களிடம் ‘கல்யாண பலன்’ கேட்டோம்...
கே.கே.நகர் நடைமேடையில் அமர்ந்திருந்த எம்.கே.முத்தரையரிடம் தட்சணை வைத்து சினேகாவின் கைரேகையைக் காண்பித்தோம். ‘‘கடல் தண்ணி வத்தினாலும் குடல் தண்ணி வத்தாத அளவுக்கு இவங்களுக்கு அன்ன ரேகை சூப்பரா இருக்கு. காசு, பணம், காரு, பங்களாவுக்கு குறைவில்லாத தன ரேகையும் அம்சமா இருக்கு. ஆனா ரெண்டே கால் வருஷமா கவலை கொண்ட உள்ளமும், கலங்கி நின்ன மனசுமா இருந்துச்சுங்க. இவங்க கல்யாண விஷயத்துல குடும்பத்துல ஏற்பட்ட குழப்பமும் பிரச்னையும்தான் காரணமுங்க. கல்லடி பட்ட கண்ணாடி மாதிரி இருந்த மனசு, இப்போதாங்க காயம் ஆறி இருக்குங்க. 21 வயசிலேயே திருமணம் ஆகியிருக்க வேண்டிய ரேகை அம்சம் இருந்தாலும் சில தோஷங்களால் இனிமேதான் நடக்கப் போகுதுங்க. சாந்தமா இருந்தா மகாலட்சுமி. கோபமா இருந்தா பத்ரகாளிதான் இவங்க குணம். கல்யாண செய்தியும் நெருங்கி வந்திருக்கணுமே...’’ என நமது முகத்தைப் பார்க்கிறார்.
எதுவுமே தெரியாததுபோல நாம் இருக்க, மீண்டும் தொடர்கிறார்... ‘‘கல்யாண வாழ்க்கை நல்லாதான் இருக்கும். வீட்ல மீனாட்சி ஆட்சிதான். கணவனா வர்றவரு இந்தம்மாகிட்ட அடங்கித்தான் போகணும். பால்வாடி புள்ள மாதிரி அவரும் இந்தம்மா சொல்றதைக் கேட்டு நடப்பாருங்க!’’ என்றார் உறுதியாக.
அடுத்த லொகேஷன் மயிலாப்பூர் தெப்பக்குளம். நவகிரக ஜோதிடர் பரசுராமைச் சுற்றி ஒரு கும்பல் முக்கால் வட்டமிட்டிருந்தது. பிரசன்னாவின் கைரேகையைக் காட்டினோம். ‘‘சித்த நேரம் அப்படி ஓரமா நில்லுங்க...’’ என்றவரை ஒரு மணி நேரத்திற்குப் பிறகே நெருங்க முடிந்தது.
‘‘இவருக்குக் கல்யாணம் நெருங்கிக்கிட்டு இருக்கு. விரும்பிய பொண்ணையே கைப்பிடிக்கப் போகிறார். இவருக்கு மனைவியா அமையுற பொண்ணு, லட்சணமா இருக்கும். கலை, சினிமா சம்பந்தப்பட்ட தொழில் யோகம்தான் இருக்கு. அநேகமா இந்த வருஷத்துக்குள்ள கல்யாணம் முடிஞ்சிடும். காதல் கல்யாணம்தான்! தன்னைவிட அந்தஸ்தும் ஆஸ்தியும் அதிகமா உள்ள பொண்ணா பார்த்துதான் கல்யாணம் பண்ணுவார். குடும்ப வாழ்க்கை சந்தோஷமா அமையும். சில விஷயங்களில் வரப்போற மனைவிக்கும் இவருக்கும் பொருத்தம் சரியா அமையாது. விட்டுக்கொடுத்துப் போனால் நல்லது. ஆறு பிள்ளைகளுக்கு அப்பாவாகிற கொடுப்பினையும் இருந்தாலும், இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரி ஒண்ணு, ரெண்டோட நிறுத்திக்குவாரு...’’ என்று தொடர முற்பட்டவரை, ‘‘இந்த கணக்கு போதும்’’ என நிறுத்திவிட்டுக் கிளம்பினோம்.
தி.நகரில் இருக்கும் பூங்கா ஒன்றின் நுழைவாயில் அருகே இருந்த ‘பாம்பே புகழ்’ ஜோதிடர் எஸ்.பி.குமாரசாமி முன் சம்மணம் போட்டு அமர்ந்து நயன்தாராவின் கைரேகையைக் காட்டினோம். ‘‘வித்தியாசமான ரேகை அமைப்புங்க இந்த அம்மாவுக்கு. பாருங்க... ரேகையே தெரியாத அளவுக்கு ஒரு அமைப்பு’’ என நம்மிடமே காட்ட, ‘‘நாங்க பார்த்துட்டோம் சாமி! நீங்க பார்த்துச் சொல்லுங்க’’ என்றதும் தாடியைத் தடவியவாறு தொடர்ந்தார்...
‘‘அவசர முடிவு, நினைச்சதை உடனே செய்யணும்ங்கிற பிடிவாதம் இந்தப் பொண்ணுக்கு இருக்கும். ஒரே வண்டியில பூட்டிய இரட்டைக் குதிரை மாதிரிதான் மனசு இருக்கும். எந்தக் கரை பச்சைங்கிற குழப்பத்துல இங்கேயும் அங்கேயும் மாறி மாறி தாவிக்கிட்டு இருப்பாங்க. ஒருத்தர ரொம்ப சுலபமா நம்பிடுவாங்க. அதே வேகத்துல ரொம்ப சுலபமா ஏமாந்திடுவாங்க. நூறு பேருக்கு மத்தியில தனி மனுஷியா தெரிஞ்சாலும், மனசுக்குள்ள இருக்குற சோகங்களை சொல்லி மாளாது.
சுகபோக வாழ்க்கையை விரும்புகிறவர். சோதனை வந்தாலும்கூட அதனை வென்று காட்டும் தைரியசாலி. சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க தம்பி. இவருக்குத் திருமண பாக்கியம் ரொம்பவே குறைவா இருக்கு. அப்படியே நடந்தாலும் நிறைய சோதனையைத்தான் அனுபவிப்பார். இவரால் கணவருக்கும் பிரச்னைதான். ரெண்டாம் தாரமா வாழ்க்கைப்படும் நிலையும் இருக்கு. ரேகை அமைப்பு வச்சித்தான் நான் சொல்றேன். என்னைய தப்பா நினைச்சிக்காதீங்க’’ என்றார் பணிவாக!
தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோயில் எதிரே கடை விரித்திருந்த ஜோதிடர் கே.கே.வீரையாவிடம் பிரபுதேவாவின் கைரேகையைக் கொடுத்தோம்.
ஐந்து நிமிடம் கைரேகையை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்துவிட்டு நிமிர்ந்தவர், ‘‘இவரு மீன ராசிக்காரரா இருப்பாரு. தேகம் ஒல்லியாதான் இருக்கும். மனசுல வண்டி வண்டியா தெய்வபக்தி வச்சிருப்பார். நெத்தியிலயோ, கழுத்திலேயோ பக்திக்கான அடையாளத்தைக் காட்டிக்கிறவர்.
வசதி, வாய்ப்புகளில் குறையில்லை. பூர்வீக சொத்தே எக்கச்சக்கம் இருக்கும். அஷ்டமத்து சனியினால இன்னும் மூணு வருஷத்துக்கு கல்யாணம் நடக்காது. குடும்பத்துல பிரச்னை மேல பிரச்னைதான் வரும். கல்யாண வாழ்க்கையில திருப்தி அடையவே மாட்டாரு. சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பதில் கில்லாடி. ஊரு உலகத்துக்குத்தான் பொண்டாட்டி, புள்ளையெல்லாம் தவிர இவரு தனிக்காட்டு ராஜா.
ஜாலியா இருக்கணும்னு ஆசைப்படுவார். வசதி இல்லாத மாமனாரோ, அல்லது மாமனாரே இல்லாத குடும்பத்துலயோ சம்பந்தம் பண்ணா மட்டும் இவரது குடும்ப வாழ்க்கை இனிப்பா இருக்க வாய்ப்பிருக்குங்க. சுத்திமுத்தி பார்த்தாலும் குடும்ப வாழ்க்கையில பிரச்னை அதிகம் இருக்கும்னு சொல்லுதுங்க இந்த ரேகை’’ என முடித்துக்கொள்கிறார்.
- அமலன்
படங்கள்: புதூர் சரவணன், ஆர்.சி.எஸ்.