சிம்ம ராசிக்காரரான நீங்கள் லட்சியவாதிகள். ‘‘நான் ஜெயிச்சா மட்டும் போதாது. என் பையன் என்னைவிட சாதிக்கணும். நான் விட்ட இடத்த என் பையன் பிடிச்சுக் காட்டணும்’’ என்று பாலாடையில் பால் புகட்டும்போதே லட்சியத்தையும் சேர்த்துக் குடிக்க வைப்பீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியாக தனுசு குரு வருவதால் சத் புத்திரன், சத் புத்திரி என்று சொல்வார்களே... அதுபோல நல்ல வாரிசு அமையும். மனைவி கர்ப்பமாக இருக்கும்போதே, ‘குழந்தையின் நுண்ணறிவும் ஆரோக்கியமும் சிறந்து விளங்க என்ன வழியிருக்கிறது’ என்று யோசிப்பீர்கள்.
சிலர் ஒருபடி மேலே போய் அதற்கு ஏதேனும் மருந்து, மாத்திரை உண்டா என்றெல்லாம் மருத்துவரை நச்சரிப்பதுண்டு. குழந்தை உறுதியானதுமே ட்ரீட் வைப்பவர்கள் உண்டு. வளைகாப்பு, சீமந்தம் என்றால் இரண்டு நாட்களுக்கு முன்பே விடுப்பு எடுத்து விழாவாகக் கொண்டாடுபவர்கள் பலர் உண்டு. ஆனந்தப் பரவசத்தில் துள்ளிக் குதிப்பீர்கள்.
பொதுவாக உங்களுக்கு ஆண் வாரிசு அதிகமாக இருக்கும். ‘‘இந்த ஸ்கூல்லதான் சேர்க்கணும், இந்த இந்த மொழிகள் எல்லாம் கத்துக் கொடுக்கணும்’’ என்று நீண்ட பட்டியலே தயாரித்து வைத்திருப்பீர்கள். ‘‘என் பிள்ளை பெரிய அதிகாரியாகவோ, தொழிலதிபராகவோ, மந்திரியாகவோ வர்றது இரண்டாம் பட்சம்தான். ஒழுக்கமானவன், நேர்மையான பிள்ளைன்னு நாலு பேரு பாராட்டுற அளவுக்கு நடந்துக்கிட்டா போதும். அப்புறம்தான் படிப்பு, பணம், பதவி எல்லாம்’’ என்கிற உறுதியோடு பிள்ளைகளை வளர்க்க நினைப்பீர்கள்.
உங்கள் ராசிக்கு எட்டாம் இடமான மீனத்திற்கும் அதிபதியாக குருவே வருவதால் உங்களில் சிலருக்கு தாமதமாக பிள்ளைப்பேறு உண்டாகும். சிலருக்கு திருமணமான உடனே வேலை காரணமாக வெளிநாடு செல்லும்போது மனைவியைப் பிரிந்திருக்க வேண்டியிருக்கும். உங்கள் சொந்த ஜாதகத்தில் குரு வலுவாக இருந்தால் பிள்ளைகள் படிப்பில் மட்டுமில்லாமல், பாரம்பரியக் கலைகளிலும் வல்லவர்களாக விளங்குவார்கள். உங்கள் ஜாதகத்தில் குருவுடன் செவ்வாய் சம்பந்தப்பட்டிருந்தால் பிள்ளைகள் நாடாள்பவர்களாகவும், பல்கலைக்கழகம், வங்கிகளில் முதன்மைப் பதவி வகிப்பவர்களாகவும் விளங்குவார்கள்.
சூரியனுடன் குரு சம்பந்தப்பட்டிருந்தால் வேதங்கள், உபநிடதங்களைக் கற்றறிந்தவர்களாகவும், எளிமையாக ஆன்மிகச் சொற் பொழிவு ஆற்றுபவர்களாகவும் இருப்பார்கள். குரு பகவான் புதன், சுக்கிரன், சனியுடன் சேர்ந்திருந்தால் குழந்தை பாக்கியம் தாமதமாகக் கிடைக்கும். குழந்தைகள் கொஞ்சம் பிடிவாத குணம் மிக்கவர்களாகவும், அறிவுரைகளை அலட்சியம் செய்பவர்களாகவும், சோம்பல் மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள்.
குரு உங்கள் ஜாதகத்தில் எப்படி இருந்தாலும் பரவாயில்லை... கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களைச் செய்தால் குரு பலம் பெறும். வேர்க்கடலை, கொண்டைக் கடலை அடிக்கடி சாப்பிடுங்கள். கொண்டைக்கடலை சுண்டல் செய்து கோயிலில் பிரசாதமாகக் கொடுங்கள். வாய் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள். பாத யாத்திரையாகவோ அல்லது மாலை போட்டுக்கொண்டு செல்லும் அடியார்களுக்கு பயணச் செலவுக்குக் கொடுங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசானைத் தேடிச் சென்று, அவர் மனம் மகிழும்படி இயன்ற உதவியைச் செய்யுங்கள். வழக்கில் சொத்தை இழந்தவர்களுக்கு உதவுங்கள். மாமரக்கன்று அல்லது கிச்சிலிக் கன்று நட்டு பராமரியுங்கள். மஞ்சள் நிற புஷ்பங்களை இறைவனுக்கு சாற்றுங்கள்.
சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணத்தை தள்ளிப் போடாமல் விரைந்து முடிப்பது நல்லது. குறிப்பாக 23லிருந்து 29 வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொள்வது நல்லது. நடுவில் சந்திர தசை வருவதால் குழந்தை பாக்கியம் தள்ளிப் போகும். சிலருக்கு 40லிருந்து 45 வயதிற்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு குழந்தை பாக்கியத்தில் தடைகள் இருக்காது. என்றாலும் 24 முதல் 33 வயதிற்குள் பெற்றுக் கொள்ளும் குழந்தை பெரும் அதிர்ஷ்டசாலியாக இருக்கும். 38 வயதிற்கு மேல் ராகு தசை வருவதால், அதற்குள் குழந்தை பெற்றுக் கொள்வது நல்லது. மகர ராசி வாழ்க்கைத்துணையை நீங்கள் தவிர்ப்பது நல்லது.
உத்திரம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவாக திருமணம் தாமதமாக முடியும். 29 வயதுக்குப் பிறகு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 22 வயது முதல் 39 வயது வரை உங்களுக்கு ராகு தசை வருவதால் சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களின் தசை நடைமுறையில் இல்லாத வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
சிம்ம ராசிக்காரர்களின் பூர்வ ஸ்தானத்திற்கு அதிபதியாக, குழந்தை வரம் தருபவராக தனுசு குரு வருகிறார். தனுசு என்பதே ஆயுதத்தைக் காட்டும் சின்னமாகும். எனவே ஆயுதத்தை கையில் ஏந்திய குரு அம்சமாக அருளும் தெய்வத்தை வணங்கினாலே போதும். அப்படிப்பட்ட தலமே மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் ஆலயமாகும். இங்கு மூலவராக முருகப் பெருமான் வேல் தாங்கிய கோலத்தோடு பீடத்தில் உறைந்திருக்கிறார். உருவமாக அல்லாது பீடம் போன்று அருள்கிறார். இந்தத் தலம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. கொளஞ்சியப்பரை தரிசித்து வாருங்கள். உங்கள் இல்லத்தில் விரைவில் தொட்டில் கட்டுவீர்கள்.
கன்னி ராசிக்காரரான நீங்கள் சுதந்திர சிந்தனை உள்ளவர்கள். ‘‘நாம என்ன சொல்லிக் கொடுத்தாலும், அவங்க சொந்த அனுபவத்துல கத்துக்கற மாதிரி வருமா’’ என்று குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பீர்கள். மீன் தராமல் தூண்டிலை வாங்கிக் கொடுப்பீர்கள். உங்களுக்கு ஐந்துக்குரிய இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு உரியவராக சனி பகவான் வருகிறார். உங்களின் ராசிநாதனான புதனுக்கு மிகவும் நெருக்கமானவர். உங்களின் நிறைவேறாத ஆசைகளை பிள்ளைகள் நிறைவேற்றுவார்கள். பிள்ளைகள் பொறுமைசாலிகளாகவும், அனுசரித்துப் போகும் குணம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். அயல்நாடு, அண்டை மாநிலம் சென்று கல்வி கற்பார்கள்.
முன்னோர் செய்த தவறுகளை பிள்ளைகள் செய்துவிடக் கூடாது என நினைப்பீர்கள். உங்களை விட நல்லவர்களாகவும், திறமைசாலிகளாகவும் இருக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். சிலர் தாங்கள் உருவாக்கும் நிறுவனம், தொழிற்சாலை மற்றும் பாரம்பரியத் தொழிலை பிள்ளை தொடர்ந்து செய்ய வேண்டுமென்று ஆசைப்படுவீர்கள். உயர்கல்வி அல்லது வேலை காரணமாக பிள்ளைகளை அவ்வப்போது நீங்கள் பிரிய வேண்டி வரும்.
சனி உங்களின் சொந்த ஜாதகத்தில் ரிஷபம், துலாம் ராசியான சுக்கிரனின் வீட்டிலோ, மிதுனம், கன்னி ராசியான புதனின் வீட்டிலோ அமர்ந்திருந்தால் அறிவுடன், அதிர்ஷ்டமும் உள்ள பிள்ளைகள் பிறப்பார்கள். உங்கள் ஜாதகத்தில் 5ம் வீட்டில் புதனோ, சுக்கிரனோ இடம் பெற்றிருந்தால், பிள்ளைகள் சகலகலா வல்லவர்களாக இருப்பார்கள். சனி பகவான் பூரம், கேட்டை, பூராடம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தால் உங்கள் பிள்ளைகள் நீதித்துறையில் பெரிய பதவி வகிக்க வாய்ப்புண்டு. வாகன வடிவமைப்பாளராகவும், ஜவுளித் துறையில் பிரகாசிப்பவர்களாகவும் இருப்பார்கள்.
செவ்வாயுடன் சனி சேர்ந்திருந்தால் முன்கோபம், பிடிவாத குணம் உள்ளவர்களாகவும், மேற்கல்வி தொடர முடியாதவர்களாகவும் அவ்வப்போது விபத்துகளை சந்திப்பவர்களாகவும் இருப்பார்கள். சூரியனுடன் சனி சேர்ந்திருந்தால் அடிக்கடி கருச் சிதைவு நேரக்கூடும். மருத்துவத் தவறால், பாதிப்புடன் கூடிய குழந்தை பிறக்கக்கூடும். ராகு அல்லது கேதுவுடன் சனி சேர்ந்திருந்தால், சரும நோய் உள்ளவர்களாகவும், வேறு ஜாதி அல்லது மதத்தில் திருமணம் முடிப்பவர்களாகவும், சமூக ஒழுக்க நெறிகளைப் புறக்கணிப்பவர்களாகவும் இருப்பார்கள். உங்கள் ஜாதகத்தில் சனியுடன் குரு சேர்ந்திருந்தால் நல்ல பிள்ளைகளாக இருப்பார்கள். ஆனால், அதிர்ஷ்டம் குறைந்தவர்களாக இருப்பார்கள். உங்கள் திருமணத்தின்போது வாழ்க்கைத்துணையின் ஜாதகத்தில் 5ம் வீட்டில் பாதகாதிபதி சூரியன், செவ்வாய் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
உங்கள் ஜாதகத்தில் சனி பலவீனமாக இருந்தால், வீட்டுத் தோட்டத்தில் மகிழ மரம், வேப்ப மரக்கன்று நட்டுப் பராமரியுங்கள். நீல நிறப் புஷ்பத்தை சுவாமிக்கு அர்ச்சித்து வழிபடுவது நல்லது. கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகளை விடுவிக்க வையுங்கள். தொழுநோயாளிகளுக்கு உதவுங்கள். எள்ளுருண்டையை அவ்வப்போது எடுத்துக் கொள்ளுங்கள். பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் உண்பதற்கு முன்பு காக்கைக்கு சோறு வையுங்கள். ஏதேனும் ஒரு கோயில் தல விருட்சத்தைப் பராமரியுங்கள். அடிபட்ட பூனைக்கு உதவுங்கள்.
கன்னி ராசியில் உத்திரம் 2, 3 மற்றும் 4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏறக்குறைய 20 வயது முதல் 38 வயது வரை ராகு தசை நடைமுறையில் இருப்பதால், திருமணத்தின்போது ராகு தசை, கேது தசை இல்லாத வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுங்கள். குழந்தை பாக்கியம் தடையில்லாமல் கிடைக்கும். சிலருக்கு 37, 42, 43 வயதில் கூட குழந்தை வாய்ப்பது உண்டு.
ஹஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு ஏறக்குறைய 30 வயது வரை ராகு தசை நடைபெறுவதால் குழந்தை பாக்கியம் 27 முதல் 30 வயதிற்குள் கிடைக்கும். பொதுவாக இந்த நட்சத்திரக்காரர்களுக்கு பெண் குழந்தைகள் பிறந்தால் வாழ்க்கை அமோகமாக இருக்கும். ஆண் குழந்தை என்றால் அதிக கவனம் செலுத்தி வளர்க்க வேண்டி வரும்.
சித்திரை 1, 2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏறக்குறைய 21 வயதிலிருந்து 36 வயது வரை பாதகாதிபதி குரு தசை நடைமுறையில் இருப்பதால் வாழ்க்கைத்துணையை கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தக் காலகட்டம் தாயா, தாரமா என்ற தடுமாற்றத்தைத் தரும். முடிந்தவரை தனிக்குடித்தனம் இருப்பது நல்லது. ஒரு கருச்சிதைவுக்குப் பின்னர் குழந்தைப்பேறு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.
உங்களின் பூர்வ புண்ணியாதிபதியாக மகரச் சனி வருகிறார். பொதுவாகவே மகரம் என்றாலே பாற்கடலில் சயனிக்கும் அரங்கனை வணங்குவது நல்லது. அப்படி சயனக் கோலத்தில் ஆபரணதாரி எனும் திருநாமத்தோடு பெருமாள் ஆவராணி எனும் தலத்தில் சேவை சாதிக்கிறார். இத்தலம் நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் சிக்கலிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஒருமுறை தரிசிக்க ஓராண்டுக்குள் மழலைக்குரல் ஒலிக்கும்.
(தீர்வுகளைத் தேடுவோம்...)
முனைவர் கே.பி.வித்யாதரன்