தாய்ப்பால் நகைகள்!



பதறாதீர்கள். தலைப்பில் இருப்பதுதான் மேட்டர். ஆனால், அது மட்டுமே செய்தி அல்ல!தாய்ப் பாசத்தின் முன் தங்கம், வெள்ளி, ஏன் வைரம் வைடூரியம் வைத்தால் கூட ஈடாகாது. இதை நன்கு உணர்ந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பிரீத்தி விஜய். தாய்ப்பால், தொப்புள்கொடி, குழந்தையின் முடி, நகம்... ஆகியவற்றைக் கொண்டு விதவிதமாக நகைகள் செய்து கொடுக்கிறார்.

‘‘எனக்கு சொந்த ஊர் மதுரை. பிகாம் படிச்சேன், பிஹெச்டி செய்தேன். ஆனால், ஆர்வம் எல்லாம் ஆர்ட் & கிராஃப்ட் செய்வதுலதான். திருமணத்துக்கு அப்பறம் பெங்களூர்ல செட்டில் ஆனேன். அங்க கணவர் வேலைக்குப் போயிட்டா வீட்ல நான் மட்டும்தான். அந்த சமயம்தான் ரொம்ப போரா... தனியா ஃபீல் பண்னேன்.

அப்பதான் ஏன் இந்த கிஃப்ட், கிராஃப்ட் ஐட்டங்கள் எல்லாம் செய்யக்கூடாதுன்னு தோணுச்சு. கணவர் கிட்ட கேட்டேன் அவரும் அதற்கான பொருட்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்தார். முதல் ஒரு மூணு வருஷங்கள் இந்த கிஃப்ட், கார்டுகள், கிளே நகைகள் இதையெல்லாம் செய்து கொடுத்துட்டு இருந்தேன். அப்பறம் ஏன் முகநூல் பக்கம் ஆரம்பிக்கக் கூடாதுனு தொடங்கி இதையே சிறு பிஸினஸா மாத்திக்கிட்டேன்...’’ என்னும் பிரீத்தி தொடர்ந்து இந்த தாய்ப்பால், தொப்புள் கொடி கொண்டு நகைகள் செய்வதை எங்கே எப்படி தொடங்கினார் என விவரித்தார்.

‘‘ஸ்மார்ட் மம்மி என்கிற முகநூல் பக்கம், அதிலே ஒரு பெண் ‘தாய்ப்பால் நகைகள் செய்கிறவர்கள் யாராவது இந்தியாவிலே இருக்காங்களா’ன்னு கேட்டிருந்தாங்க. நாமதான் ஏற்கனவே ஆர்ட் & கிராஃப் செய்கிறோமே இதையும் ஏன் செய்து பார்க்கக் கூடாதுனு தோணிச்சு.உடனே ‘நான் செய்து பார்த்துட்டு சொல்றேன்’னு சொன்னேன். அதுவரைக்கும் இந்தியாவுல இதுக்கு முன்னாடி இந்த நகைகள் செய்கிறவர்கள் யாராவது இருக்காங்களானு தெரியலை.

இது சார்ந்து தேடினப்ப நிறைய வெளிநாட்டுக் கட்டுரைகள்  கிடைச்சது. ஆனா, இந்தியாவிலே யாரும் செய்கிற மாதிரி தெரியலை. எனக்குப் பிறகு இப்ப ஒரு ரெண்டு பேர் தமிழகத்துலயே செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. ஆரம்பம் எல்லாமே முயற்சி களாதான் போனது. குறிப்பா இது பால் என்கிறதால் செய்து வைச்சா முதல் ரெண்டு நாட்கள்ல கெட்டுப்போனது.

திரும்பத் திரும்ப ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் செய்து பால் கெடக்கூடாது... கலர் மாறக் கூடாதுனு முயற்சி செஞ்சேன். என் நண்பர்கள் சிலர் வேதியியல் மாணவர்களாவும், கெமிஸ்ட்களாகவும் இருந்தாங்க. அவங்ககிட்ட உதவிகள் கேட்டு வாங்கினேன். ஏகப்பட்ட திரவங்கள், ஃபார்முலாக்கள்னு ஒரு நகையை செய்து மூணு மாசங்கள் அது எப்படி இருக்குனு பார்த்தேன்.

கலர் மாறாம இருக்கா, கெடாம இருக்கா... இப்படி எல்லாம் சோதனை செய்து பக்காவா தேறிய ஃபைனல் அவுட்புட்டை கஸ்டமர்கள்கிட்ட விற்க ஆரம்பிச்சேன். இதிலே இன்னொரு சவால் தாய்ப்பால் கொடுக்கறவங்க நேரிலே வந்துதான் கொடுக்கணும். அதை வாங்கி நான் வேலை தொடங்கற வரை பாதுகாக்கணும். இதுக்கு ஐஸ்பாக்ஸ், ஃபிரீஸர் எல்லாம் தேவைப்பட்டுச்சு.

தொப்புள் கொடி பிரச்னையே இல்ல. ஒருமுறை அதை குழந்தையுடைய உடல்ல இருந்து நீக்கிட்டாலே காய்ஞ்சிடும். அதை அப்படியே நாம பயன்படுத்திக்கலாம். அதே மாதிரி முதல் முடி, முதல் நகம்... இதெல்லாம் சுலபமா கிடைச்சது...’’ என்னும் பிரீத்தி, தாய்ப்பால் நகைகளுக்குத்தான் நிறைய சோதனைகள் செய்திருக்கிறார்.

‘‘நிறைய ஆராய்ச்சிகளையும் சோதனைகளையும் கடக்க வேண்டி இருந்துச்சு. கடைசியா ஒரு சோதனை
வெற்றியாகி மூணு மாசத்துக்கு மேல பாலுடைய தன்மை மாறாம இருந்துச்சு. அப்பறம்தான் முழுமையான பிஸினஸா இதை மாற்றி செய்யத் தொடங்கினேன். எனக்கு குழந்தைகள் பிறந்தப்ப என் தாய்ப்பால் வெச்சுக் கூட எனக்கு ஒரு டாலர் செய்துகிட்டேன்.

இது நம்பிக்கை  சார்ந்த விஷயம். பால்தானா இல்ல வெறும் கிளேவா இருக்குமோனு எல்லாம் கேள்விகள், சந்தேகங்கள் வராம இருக்க அந்த நகை ஆர்டர் கொடுத்தவங்களையே நேரடியா வரச் சொல்லி அவங்க கையாலயே அடிப்படை  டிசைன்களை செய்யச் சொல்லிடுவேன்.

இதுக்குன்னு தனியா வெள்ளி, தங்கம், ஃபேன்ஸி மெட்டல்கள்ல நகைகள் செய்து வாங்குறோம். அதாவது ஒரு டாலர்னா முழுமையான டாலர்களா இல்லாம அதுல நகை செய்கிறவங்க வேலை முடிச்சுட்டு தருவாங்க. அப்புறம் பால், நகம், முடினு நாம விரும்பற பொருட்களை நிரப்பற மாதிரி நகைகளை பிரத்யேகமா செய்து வாங்கணும்.

இதுல நகம், முடி, தொப்புள் கொடி... ஐடியா எல்லாம் தாய்ப்பால் நகைகள் சக்சஸ் ஆன பிறகு கஸ்டர்மர்களே கொடுத்த ஐடியாஸ். சில வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்து வாங்கிட்டு குழந்தைங்க ஒரு குறிப்பிட்ட வயசுக்கு வந்த பிறகு பரிசா கொடுக்கறாங்க.
இதைப் பார்த்ததும் இன்னொரு யோசனை ஸ்பார்க் ஆச்சு.

எதுக்கு தங்கம், வெள்ளி மாதிரி விலையுயர்ந்த மெட்டல்ஸ்..? மெஸ்ஸேஜ் பாட்டில்கள் மாதிரி செய்து குறைந்த விலைக்கு விற்கலாமேனு தோணுச்சு. அந்த வகைல இப்ப ரூ.2 ஆயிரத்துல தொடங்கி விற்கறோம். தங்கம், வெள்ளில வேணும்னா அதுக்கு ஏற்ப விலை கூடும்...’’ என்கிறார் ப்ரீத்தி.

ஷாலினி நியூட்டன்