அம்மா சென்டிமென்ட்தான் அஜித் in வலிமை
தலயின் அல்டிமேட் ரசிகர்களுக்கு இது ஸ்வீட் நியூஸ். அஜித் - எச்.வினோத் காம்பினேஷனில் உருவாகி வரும் ‘வலிமை’ படப்பிடிப்பின் லேட்டஸ்ட் நிலவரம் என்ன? எப்படிஇருக்கிறார் தல..? படம் எப்போது வரும்? ஷூட்டிங் ஸ்பாட் அப்டேட் என்ன? இதுபோன்ற பல கேள்விகளுக்கும் விடை தேடிக்கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு பொங்கல் கொண்டாட்டமாக இதோ அசத்தல் அப்டேட்ஸ்.
* ‘சதுரங்க வேட்டை’ ரிலீஸுக்குப் பின், அஜித்துக்கென ஒரு கதையை ரெடி செய்து, அவரை அணுகினார் இயக்குநர் எச்.வினோத். அப்போது அஜித் ‘என்னை அறிந்தால்’ படப்பிடிப்பில் பிசியானதால், கதை கேட்காமல் இருந்தார். வினோத்தும் நம்பிக்கையுடன் தொடர்ந்து அவரை ஃபாலோ செய்து கொண்டிருந்தார்.
இதற்கிடையே ‘தீரன் அதிகாரம் ஒன்று’ம் வெளியாகிவிட்டது. அதன் மேக்கிங், அஜித்துக்கு பிடித்துப் போய்விட, வினோத்தை அழைத்திருக்கிறார். பக்கா ஆக்ஷன் கதை ஒன்றின் அவுட்லைனை சொல்லியிருக்கிறார் வினோத். ‘இந்த கதை நல்லா இருக்கு. ஆனா, இதை நம்ம காம்பினேஷன்ல ரெண்டாவது படமா பண்ணலாம்’ என்று சொல்லிவிட்டு ‘பிங்க்’ ரீமேக் வாய்ப்பினையும் கொடுத்தார். அதன்பிறகு நடந்தது அனைவரும் அறிந்தது. ‘நேர்கொண்ட பார்வை’ அஜித்துக்கு மட்டுமல்ல, வினோத்துக்கும் நல்ல பெயரை சம்பாதித்தது. வினோத்திடம் கொடுத்த வாக்குப்படியே அஜித்தும் அடுத்து அவரது டைரக்ஷனில் நடிக்க முன்வந்தார். அப்படி உருவானதுதான் இந்த ‘வலிமை’.
* சமீப வருடங்களாகவே, நெகட்டிவ் ரோலில் நடிப்பதை தவிர்த்துவிட்டார் அஜித். அதற்கு ‘வீரம்’ வெற்றியும் ஒரு காரணம். அண்ணன் - தம்பிகள் அன்புப் பிணைப்பு சென்டிமென்ட் கதையான ‘வீரம்’ ஃபேமிலி ஆடியன்ஸிடம் அமோக வரவேற்பை அள்ளியது. தொடர்ந்து ‘என்னை அறிந்தாலி’ல் அப்பா - மகள், ‘வேதாளம்’ படத்தில் அண்ணன் - தங்கை, ‘விஸ்வாசம்’ படத்தில் மீண்டும் அப்பா - மகள் என ஃபேமிலி, எமோஷனல் மிக்ஸிங் ஜானர்களே செலக்ட் செய்தார். எதிர்பார்த்ததை விட, அதிக வரவேற்பு குவிந்ததில் அஜித்தும் ஹேப்பியானார்.
அந்த வகையில் இந்த முறை அம்மா - மகன் பாசப்பிணைப்பை கையிலெடுத்திருக்கிறார் வினோத். அம்மாவாக சுமித்ரா நடிக்கிறார். இதற்கு முன் அஜித்தின் ‘பகைவன்’, ‘வீரம்’ படத்திலும் சுமித்ரா ஸ்கோர் செய்திருந்தார். படமும் ‘வலிமை’யான ஃபேமிலி ஆக்ஷன் என்டர்டெயினரான படமாக வந்திருக்கிறது என்கிறது யூனிட்.
* அஜித், இதில் போலீஸ் ஐபிஎஸ். படத்தில் அவர் பெயர், அர்ஜுன். ‘விஸ்வாச’த்தில் கொஞ்சம் உடல் எடை கூடி இருந்த தல, போலீஸ் கேரக்டருக்காக வெயிட்டை குறைத்திருக்கிறார். லாக்டவுன் பீரியட்டில் தன் வீட்டில் உள்ள ஃபிட்னஸ் கூடத்திலேயே தன் உடலை செதுக்கியவர், ‘மங்காத்தா’, ‘என்னை அறிந்தால்’ போலீஸை விட செம ஸ்மார்ட்டாக மாறியிருக்கிறார். அம்மா - மகன் எமோஷனல் பார்ட்டே வலுவான ஆக்ஷனுக்கு அடித்தளம்.
* ஹீரோயினாக வித்யாபாலனில் இருந்து யாமி கௌதம் வரை பலரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு, கடைசியில் ‘காலா’ ஹூமா குரேஷி, ஃபைனல் ஆனார். அஜித்துடன் சேஸிங் சீனில் அவரும் பிச்சு உதறியிருக்கிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்றி’ல் ஹீரோயினுக்கென எவ்வளவு போர்ஷன்ஸ் இருந்ததோ, அதே அளவுக்கு இதில் ஹூமாவுக்கு.
படத்தில் ஹூமா, புல்லட் ஓட்டும் காட்சி ஒன்றும் இடம்பெறுகிறது. இதற்கு முன் பைக் ஓட்டி பழக்கமில்லாத ஹூமா, இதற்காகவே புல்லட் ஓட்ட கற்றுக் கொண்டிருக்கிறார். பைக் பழகியதும், மும்பை ரோடுகளில் ஓட்டியும் மகிழ்ந்திருக்கிறார். அவரது டெடிகேஷனை வியக்கிறது யூனிட்.
* ‘சூரரைப் போற்று’வில் சூர்யாவுக்கு அனுமதி கொடுக்க மறுக்கும் ஆபீசர் வேடத்தில் நடித்த கன்னட நடிகர் அச்யுத் குமார், இதில் அஜித்தின் குடும்பத்தில் ஒருவராக நடிக்கிறார். அஜித்தின் தம்பியாக ராஜ் அய்யப்பன் நடிக்கிறார். அதர்வாவின் ‘நூறு’ படத்தின் வில்லன் இவர். அதுமட்டுமல்ல, அஜித்தின் ‘அமராவதி’யில் நடித்த பானுபிரகாஷின் மகன் இவர். தன் நண்பரின் மகனையே தன்னுடன் நடிக்க வைத்து அழகு பார்க்கிறார் தல. மகிழ்கிறார் ராஜ் அய்யப்பன்.
இதுதவிர ‘வடசென்னை’ பாவெல் நவகீதன், காமெடிக்கு யோகிபாபு, புகழ் என பலரும் இருக்கிறார்கள். கதைக்கேற்ப நடிகர்களைத் தேர்வு செய்து, பயன்படுத்துவது வினோத்தின் ஸ்டைல். ‘தீரனி’ல் இந்தி, மராத்தி நடிகர்களை அறிமுகப்படுத்தியது போல, இதிலும் பல மாநில நடிகர்களை பயன்படுத்தியிருக்கிறார்.
* வில்லனாக டோலிவுட் கார்த்திகேயா கும்மகொண்டா நடிக்கிறார். டோலிவுட்டில் செம போடு போட்ட ரொமான்ஸ் படமான ‘ஆர்.எக்ஸ்.100’ படத்தின் ஹீரோ இவர். அஜித்தின் ரசிகரான கார்த்திகேயா, தன்னுடைய ஃபேவரிட் தலயுடன் நடிக்க விரும்பி இதில் வந்திருக்கிறார். செம ஸ்மார்ட் ஆன அவர் படத்திற்காக, பல மாதங்கள் டயட், ஃபிட்னஸ் கண்ட்ரோலில் இருந்து சிக்ஸ் பேக் உடற்கட்டு கொண்டு வந்திருக்கிறார். அவரது உழைப்பைப் பார்த்து வியந்த அஜித், அவரே அறியாத அவரது தருணங்களை தன் கேமராவில் க்ளிக்கி, புகைப்பட ஆல்பமாக பரிசளித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த கடைசி நாள் ஷூட்டிங்கில் கூட, ‘இன்னிக்கு நீங்க உங்க டயட்டை கைவிட்டே ஆகணும்’ எனச் சொல்லி, தன் கைப்பட பிரியாணி விருந்து வைத்து அவரை உபசரித்திருக்கிறார். அஜித்தின் அன்பில் திக்குமுக்காடி திரும்பியிருக்கிறார் அந்த டோலிவுட் ஹீரோ.
* ‘நேர்கொண்ட பார்வை’ டெக்னீஷியன் டீமே இதிலும் பரபரக்கிறது. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு, யுவன் ஷங்கர் ராஜாவின் இசை என கலக்குகிறது டீம். ‘விஸ்வாச’த்தில் இமான் கொடுத்த ‘கண்ணான கண்ணே’ தாலாட்டு மெலடி போல, இதில் தாயின் அன்பை உணர்த்தும் பாடல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் யுவன். இது தவிர விக்னேஷ்சிவன் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். ‘ஆலுமா டோலுமா...’ போல இந்த ஆண்டில் தெறிக்கும் பாடலாக அது இருக்கும் என்கிறது பட வட்டாரம்.
* ஆக்ஷன் போர்ஷன்களை திலீப் சுப்பராயன் அமைத்திருக்கிறார். திலீப் மீது அஜித்துக்கு தனி பாசம் உண்டு. ஏனெனில் ‘ஜி’ படத்தின் மூலம்தான் ஸ்டண்ட் மாஸ்டராகவே அறிமுகமானார் திலீப். ‘நேர்கொண்ட பார்வை’யில் கூட ஆக்ஷன் போர்ஷன்களுக்கு செம ரெஸ்பான்ஸ். வினோத்துக்கும் திலீப்புக்குமே செட் ஆகிவிட, இந்தப் படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார். ‘அஜித் சார் டூப் போட மாட்டார். ரிஸ்க்கான சீக்குவென்ஸ்களை அவரே செய்து அசத்துவார்’ என வியக்கிறார் மாஸ்டர்.
அதில் உண்மையும் இருக்கிறது. கொரோனா டைமில் ஹைதராபாத்தில் நடந்த சேஸிங் ஷூட்டில்தான், அஜித்துக்கு அடிபட்டது. காயத்தை வெளிக்காட்டாமல், முழு ஆக்ஷன் சீக்குவென்ஸையும் முடித்துக் கொடுத்துவிட்டே அங்கிருந்து அஜித் கிளம்பினார்.
* 95 சதவீதபடப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதுஎன்கிறார்கள். மீதமுள்ள ஐந்து சதவீதமும் வெளிநாட்டில் படமாக்க வேண்டிய போர்ஷனாம். லாக்டவுனுக்கு முன்னர் சுவிட்சர்லாந்தில் படமாக்க எண்ணியிருந்தார்கள். இப்போது அங்கே செல்ல முடியாததால், வேறு நாடுகள் பரிசீலனையில் உள்ளன. அப்படியும் செட் ஆகாத பட்சத்தில் ராஜஸ்தான் செல்வார்களாம்.
அதாவது கதைக்கான லேண்ட்ஸ்கேப் எங்கு பொருந்து கிறதோ, அங்கே மார்ச், ஏப்ரலுக்குள் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். ‘வலிமை’யை சம்மர் விருந்தாகக் கொண்டுவர திட்டமிட்டனர். ஆனால் ‘‘ஊரடங்கு நிலவரங்கள் சரியாகி, திரையரங்குகளில் நூறு சதவிகித இருக்கைகள் சாத்தியம் என்றானபிறகு படத்தைக் கொண்டு வரலாம். நமக்கு ரசிகர்களின் நலனும் முக்கியம். ஸோ, பொறுமை காப்போம்...’’ என திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாராம் அஜித்.
மை.பாரதிராஜா
|