ஈகோ Vs ஈகோ!
ஐந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி ஐம்பத்திரண்டு கோடியை அள்ளிய சூப்பர் ஹிட் மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. இப்போது அமேசான் ப்ரைமில் வியூக்களைக் குவிக்கிறது.
நாட்டைக் காத்த இராணுவ வீரனுக்கும் காட்டைக் காக்கும் சப் இன்ஸ்பெக்டருக்கும் இடையிலான ஈகோ யுத்தம்தான் இந்தப் படம்.முன்னாள் இராணுவ வீரன் கோஷி அட்டப்பாடி வழியாக காரில் சென்று கொண்டிருக்கும்போது காவல்துறையின் பரிசோதனையில் மாட்டிக்கொள்கிறான். அட்டப்பாடியில் மதுவுக்குத் தடை. இது கோஷிக்குத் தெரியாது. காரை சோதனை செய்யும்போது மதுபாட்டில்கள் சிக்குகின்றன. எரிச்சலடையும் கோஷி, சோதனை செய்தவர்களை அடிக்க, பதிலுக்கு சப் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் கோஷியை அடித்து ஸ்டேஷனில் அடைக்கிறார். அத்துடன் கோஷிக்கு பெயில் கிடைக்காத படியும் செய்கிறார். அரசியல்வாதிகள் மற்றும் பெரும் புள்ளிகளுடன் தொடர்பில் இருக்கும் பணக்காரன் கோஷி என்பது தெரியவர, பிரச்னையை சுமுகமாக முடித்துவிடலாம் என்று நினைக்கிறார் அய்யப்பன்.
ஆனால், கோஷி அதற்கு உடன்படுவதில்லை. தான், யார் என்று காட்டி அய்யப்பனுக்குப் பாடம் கற்பிக்க நினைக்கிறான். காவல் நிலையத்திலேயே அய்யப்பன் மது அருந்துவது மாதிரி ஒரு டிராமா செய்து வீடியோ எடுத்துவிடுகிறான் கோஷி.
இன்னும் இரண்டு வருடங்களில் ஓய்வு பெறப்போகும் அதிகாரி அய்யப்பன். அந்த வீடியோ வெளியானால் இதுவரை அவர் காப்பாற்றி வந்த எல்லா நற்பெயர்களும் போய்விடும். அத்துடன் அந்த வீடியோவில் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் இருப்பது ஸ்டேஷனின் பெயரையும் கெடுத்துவிடும். திடீரென்று ஒரு தொலைக்காட்சி சேனலில் வீடியோ வெளியாக, கொதித்துப் போகிறார் அய்யப்பன். தனது இன்னொரு முகத்தை அய்யப்பன் காட்ட, ஆடிப்போகிறான் கோஷி.
பதிலுக்கு கோஷியும் ஈகோ யுத்தத்தை தொடங்க சூடுபிடிக்கும் திரைக்கதை கிளைமேக்ஸ் வரை ஜெட் வேகத்தில் பறக்கிறது.
ஈகோ எவ்வளவு அர்த்தமற்றது என்று அழுத்தமாகச் சொல்லும் இந்தப் படம், பேசித் தீர்க்கவேண்டிய சின்னச் சின்ன பிரச்னைகள் கூட ஈகோவினால் பெரிதாக வெடிப்பதையும், அது, நிம்மதியாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையை எப்படியெல்லாம் தலைகீழாகப் புரட்டிப்போடுகிறது என்பதையும் சுவாரஸ்யமாக சித்தரிக்கிறது.
வெறும் இரண்டு கதாபாத்திரங்களைச் சுற்றி நிகழும் கதையை வைத்துக்கொண்டு நம்மை மூன்று மணி நேரம் எங்கேயும் நகரவிடாமல் கட்டிப்போட்டிருக்கிறார் இயக்குநர் சச்சி. சில மாதங்களுக்கு முன் இவர் இறந்துவிட்டது மலையாள சினிமாவுக்குப் பேரிழப்பு.
நாடி நரம்புகளில் ஈகோ வெறி ஊறிப்போனவர்களாக பிஜு மேனனும் பிருத்விராஜும் நடிப்பில் கலக்கியிருக்கிறார்கள். படத்தின் நாயகர்களும் வில்லன்களும் இவர்களே. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யப்போகிறார்கள்.
|