பசிபிக் பெருங்கடலை விமானத்தில் கடந்த முதல் பெண்!



உலகின் இரண்டாவது பெரிய கடல் அட்லாண்டிக். சுமார் 10 கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்தக் கடல், பூமியின் 20 சதவீத நிலப்பரப்பையும், 29 சதவீத நீர்ப்பரப்பையும் தன்னகத்தே கொண்டது. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் அரணாக இருப்பதே அட்லாண்டிக் கடல்தான். கப்பல் மூலம் இந்தக் கடலை ஒரு சுற்று சுற்றிவர ஒரு யுகமே தேவை.

கப்பலில் பயணிப்பது என்பது ஒரு தனி அனுபவம் என்றால் கடலின் மேற்பரப்பில் ஒரு குட்டி விமானத்தில் பறப்பது பேரனுபவம். கடினமான காலநிலையைத் தாங்கும் உடலும், மன உறுதியும், விமானத்தைத் திறமையாக ஓட்டும் திறனும், அதனுடன் சாகசத்தின் மீது தீராத வேட்கையும் இருந்தால் மட்டுமே கடலின் மேற்பரப்பில் விமானத்தை இயக்கி இந்தப் பேரனுபவத்தைத் தன்வசமாக்க முடியும்.

மும்பையைச் சேர்ந்த ஆரோஹி பண்டிட் என்ற இளம்பெண் சாகசத்தின் மீது தீராத காதல் கொண்டவர். திறமையான விமானி. கடந்த மே மாதம் குறைந்த எடையுள்ள ஒரு குட்டி விமானத்தின் மூலம் அட்லாண்டிக் கடலைக் கடந்தார். அதுவும் தனியாக.

உலகிலேயே முதல் முறையாக ஒரு பெண் அட்லாண்டிக் கடலை விமானத்தின் மூலம் கடப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை. பல்வேறு தரப்புகளிலிருந்தும் ஆரோஹிக்கு பாராட்டுகள் குவிந்தன.‘‘என் நாட்டுக்கும் வீட்டுக்கும் என்னால் பெருமை கிடைத்திருப்பதை பெரும் கௌரவமாகக் கருதுகிறேன்.

என்னுடைய இந்த சாகசம் பெண்களுக்குத் தன்னம்பிக்கையையும், எதிலும் துணிந்து இறங்குகிற உத்வேகத்தையும் கொடுக்கும் என்று நம்புகிறேன். கடலின் மீது விமானத்தில் பறக்கும்போது இயற்கை எவ்வளவு ஆச்சர்யமானது என்பதை துல்லியமாக உணர முடியும்.  சில இடங்களைக் கடக்கும்போது இந்த உலகில் இவ்வளவு அழகான இடங்கள் இருக்கின்றனவா என்று வியந்தேன்...’’ என்கிற ஆரோஹிக்கு வயது 23.

கடந்த மாதத்தின் இறுதியில் பசிபிக் பெருங்கடலையும் குட்டி விமானத்தில் கடந்து அட்லாண்டிக் மற்றும் பசிபிக்கை விமானத்தில் தனியாகக் கடந்த முதல் பெண் என்ற சாதனையையும் தன்வசமாக்கிவிட்டார் இவர்.    

த.சக்திவேல்