மோடி 2.0 நல்லது நடக்குமா? 17வது நாடாளுமன்றம் - ஒரு பார்வை!
அதிகமான கோடீஸ்வரர்கள், அதிகமான கல்வி கற்றவர்கள், அதிகமான பெண்கள்... என களைகட்டியிருக்கிறது புதிய நாடாளுமன்றம். சென்ற நாடாளுமன்றத்தோடு ஒப்பிடும்போது சாதியப் பகிர்மானமும் முன்பை விட பரவலாகியிருக்கிறது. அதாவது, எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர், முற்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர்... என எல்லாத் தரப்பினரின் பங்களிப்பும் கணிசமாகக் கலந்துள்ளது. ஓர் ஆரோக்கியமான சமூகத்துக்கு இது ஒரு நல்ல தொடக்கம்.
அதே சமயம் கோடீஸ்வரர்கள் முந்தைய அரசை விடவும் இதில் அதிமாக எம்பி ஆகி உள்ளனர். அதேபோல் குற்றப்பின்னணி உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களானதும் இப்போது கணிசமாக அதிகரித்துள்ளது.
இவை நம் சமூக வளர்ச்சியை அச்சுறுத்தும் காரணிகள்.இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல்களில் பெண் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒவ்வொரு தேர்தலின்போதும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்திய அளவில் பெண் வாக்காளர்கள் அதிகரித்திருப்பதும் இதற்கு ஒரு காரணம் என்றாலும் பெண் வாக்காளர்கள் அதிகரித்த விகிதத்துக்கு பெண் வேட்பாளர்களோ எம்.பி.க்களோ அதிகரிக்கவில்லை என்பதையும் சொல்ல வேண்டும்.
இப்போது 78 பெண்கள் எம்.பி.க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இது மொத்த எம்.பிக்களில் 14.4%. 33% கூட நாம் இன்னும் நெருங்கவில்லைதான். ஆனால், கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் வெறும் 11.4%, அதாவது 62 பெண் எம்.பி.க்களே இருந்தார்கள் என்பதை நாம் கவனிக்கவேண்டும். அதற்கும் முன்பு 2009ம் ஆண்டு 10.5% பெண்களே, அதாவது 57 பெண் உறுப்பினர்கள் மட்டுமே இருந்தார்கள்.
ஆக, 2009ம் ஆண்டு தேர்தல் முதல் பெண்களின் பங்களிப்பு கணிசமாக உயர்ந்து வந்தாலும் இந்தப் பாதையில் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்ட 78 எம்.பி.க்களில் 34 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். இந்தக் கட்சி மொத்தம் 53 பேரை களத்தில் இறக்கியது. அதில் வென்றவர்கள் 34 பேர்தான். ஒப்பீட்டளவில் மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தன்னிடம் உள்ள மொத்த எம்.பிக்களில் 41%தை பெண்களுக்கு ஒதுக்கியது. இதற்கு அடுத்த நிலையில் பிஜூ ஜனதாதளம் ஒடிஸாவில் 33% பெண்களுக்கு வாய்ப்பளித்தது.
மாநில அளவை நோக்கும்போது உத்தரப்பிரதேசத்திலிருந்து மட்டும் 11 பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்றம் வந்திருக்கிறார்கள். இதற்கு அடுத்த நிலையில் மேற்கு வங்கமும் ஒடிஸாவுமே உள்ளன. இந்த முறை தமிழகத்திலிருந்து சென்றிருக்கும் பெண் எம்.பி.க்களில் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன், ஜோதிமணி மூவருமே கவிஞர்கள். எந்தவொரு விஷயம் குறித்தும் தேர்ந்த வாசிப்பும், திறமையான பேச்சாற்றலும் உடையவர்கள் என்பது ஆறுதலான விஷயம்.
இந்தத் தேர்தல் முடிவுகள் ஒருவகையில் ஆண்களை விடவும் பெண்களே அதிகம் தேர்ந்தெடுக்கப்பட சாத்தியம் உள்ளவர்கள் என்பதைப் போன்ற புரிதலையும் உருவாக்கியுள்ளது.715 பெண்கள் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் கிட்டத்தட்ட 10%க்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், 7,334 ஆண்கள் போட்டியிட்டு அதில் வெறும் 6% மட்டுமே தேறியிருக்கிறார்கள்.
சாதி ரீதியாகப் பார்க்கும்போது இந்தத் தேர்தலில் முந்தைய தேர்தலை விடவும் கணிசமாகவே பிராமணர்கள் அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். பிற உயர்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விகிதம் குறைந்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர் விகிதமும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இதுவரையான நாடாளுமன்றத்திலேயே இப்போதுதான் இளமையான நாடாளுமன்றம் அமைந்துள்ளது என்று சொல்லலாம். கடந்த தேர்தலில் 58 ஆக இருந்த எம்.பி.க்களின் சராசரி வயது, இந்தத் தேர்தலில் 54 ஆகக் குறைந்துள்ளது. இப்போது உள்ளவர்களில் 12% பேர் நாற்பது வயதுக்கும் குறைவானவர்கள். எழுபதைக் கடந்தவர்கள் வெறும் ஆறு சதவீதம் மட்டுமே. இந்திய நாடாளுமன்றம் இனியும் முதியோர் சபையாகவே இருக்காது என்பதையே இந்த வளர்ச்சி காட்டுகிறது!
இளங்கோ கிருஷ்ணன்
|