மரண மாஸ்! ‘பேட்ட’ Exclusive updates



*இந்தப் பொங்கல்... ‘பேட்ட’ பொங்கல்! பிரமாண்டமான ‘எந்திரன்’ கொடுத்த சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘ஜிகர்தண்டா’ கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இளமையும், இனிமையும் துள்ளும் ரஜினியை இதில் பார்க்கலாம்.

*‘பாட்ஷா’வில் தேவன், ஆனந்த்ராஜ் என சின்னச்சின்ன வில்லன்கள் நிறைய பேர் இருந்தாலும் மெயின் வில்லன் ரகுவரன்தான். அவரைப் போல ‘பேட்ட’யில் ரவுண்ட் கட்டப்போவது நவாசுதீன் சித்திக்தானாம். அவரும் ரஜினியும் வரும் சீன்களில் வேற லெவல் ஆக்‌ஷன் தெறிக்கும் என்கிறது யூனிட்.

*சூப்பர் ஸ்டாரின் படங்களிலேயே ஸ்டார் காஸ்ட் அதிகம் என்று சொல்லக்கூடிய அளவில் படத்தில் நட்சத்திரங்கள் எண்ணிக்கை டஜனைத் தாண்டியிருக்கிறது. ரஜினிக்கு பிடித்தமான ‘முள்ளும் மலரும்’ கொடுத்த இயக்குநர் மகேந்திரன், சசிகுமார், விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, குருசோமசுந்தரம், முனீஷ்காந்த், சிம்ரன், த்ரிஷா, மாளவிகா மோகனன், மேகா ஆகாஷ் என எக்கச்சக்கம் பேர் உள்ளனர். தவிர பாலிவுட்டின் சிறந்த நடிகரான நவாசுதீன் சித்திக் இப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.

*ரஜினியின் செம மாஸ் கமர்ஷியலான ‘பாட்ஷா’, ‘படையப்பா’வை விட ட்ரிப்பிள் பம்பர் பரிசாக ‘பேட்ட’ இருக்கும் என்கிறார்கள். டார்ஜிலிங், டேராடூனில் படப்பிடிப்பு தொடங்கி, லக்னோ வரை பயணமாகி நிறைவடைந்திருக்கிறது. ‘தலைவர் படம் இயக்கியதை என்னாலயே நம்பமுடியல...’ என இன்னும் ஆச்சரியத்தில் புன்னகைக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

*அடுத்தாண்டு டிசம்பர் வரை கால்ஷீட் ஃபுல் ஆக இருக்கும் நவாசுதீன் சித்திக், ரஜினி படம் என்பதால் இதில் நடிக்க உடனே சம்மதித்தாராம். டயலாக் பேப்பரை வாங்கி சின்சியராக மனப்பாடம் செய்து ஷாட்டில் அவர் பட்டையைக் கிளப்பியதையும், லக்னோவில் நடந்த ஷெட்யூலில் தொடர்ந்து இரண்டு இரவுகள் நடித்துவிட்டு அடுத்தநாள் காலை இந்திப் பட ஷூட்டிங்குக்கு அவர் சென்றதையும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்கள்.

*தன் போர்ஷன் முடிந்தபிறகு ரஜினி கேரவன் செல்ல மாட்டாராம். சாதாரண பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து மற்றவர்களின் நடிப்பை உன்னிப்பாக கவனிப்பாராம்.

*ஸ்பாட்டிலும் பிரேக் சமயத்திலும் எல்லோருடனும் சகஜமாக ரஜினி உரையாடுவாராம். குறிப்பாக நவாசுதீனுடன் பேசும்போது அவர் ரிலாக்சாக ஃபீல் செய்ய வேண்டும் என்பதற்காக இந்தியிலேயே பேசுவாராம்.

*‘பேட்ட’ ஸ்டண்ட் போர்ஷன்கள் அனைத்தும் காலம் கடந்தும் பேசப்படும் என்கிறார்கள். காரணம், ஆக்‌ஷன் டைரக்டராக இப்படத்தில் பணிபுரிந்திருப்பவர் பீட்டர் ஹெயின்.

*வாரணாசியில் படப்பிடிப்பு நடந்தபோது, ரஜினியும் த்ரிஷாவும் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு வந்திருக்கின்றனர்.

ê*வாரணாசி, லக்னோ, டேராடூன் என வட மாநிலங்களின் இண்டு இடுக்குகளில் படப்பிடிப்பு நடந்தபோதெல்லாம் அங்கிருந்த மக்கள் ஒன்றுதிரண்டு ‘சூப்பர் ஸ்டார்... சூப்பர் ஸ்டார்...’ என கோஷம் எழுப்பியிருக்கிறார்கள். ‘ஏ அப்பா... எந்தளவுக்கு ரஜினி ரீச் ஆகியிருக்கிறார்..!’ எனச் சொல்லிச் சொல்லி யூனிட் பிரமிக்கிறது.

*பூங்கொத்தும் புன்னகையுமாக ரஜினியும் சிம்ரனும் கைகோர்த்து வரும் லுக் வெளியானதும் ‘சூப்பர் ஸ்டாரும் சூப்பர் சிம்ரனும்’ என ‘பேட்ட’ யில் நடித்திருக்கும் சசிகுமார் மனம் திறந்து அப்ளாஸ்களை அள்ளி வீசியது சும்மா உலூலாயிக்கி அல்ல. படம் பார்க்கும்போது அந்த கெமிஸ்ட்ரி தெரியும்! அதனால்தான் ‘சிம்ரன் அழகும் இளமையும்... வாவ்வ்வ்!’ என் த்ரிஷாவும் பாராட்டியிருக்கிறார்.

*சிம்ரனும், த்ரிஷாவும் முதல் முறையாக ரஜினியுடன் நடிக்கிறார்கள். ‘இப்பதான் எங்க சினிமா கேரியர் பூர்த்தியாகி இருக்கு!’ என இருவரும் சிலிர்க்கிறார்கள்.

*மலையாளத்தில் ஸ்கோர் செய்து வரும் மாளவிகா மோகனன் இந்தப் படத்தில் கமிட் ஆனதும் ரஜினியின் ஜோடி அவர்தான் என வதந்தி கிளம்ப, ‘ரொம்ப சவாலான ரோல் பண்றேன். இப்போதைக்கு இதுதான் சொல்ல முடியும்!’ என மர்மமாக புன்னகைக்கிறார்.

*ரஜினியை எதிர்க்கும் கேரக்டரில் விஜய்சேதுபதி பிச்சு உதறியிருக்கிறாராம். இந்த ப்ளாக் முழுக்கவே கைதட்டலால் அதிரும் என கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார்கள். குறிப்பாக டார்ஜிலிங்கில் இரவில் நிலவிய கடும் குளிரில் படமாக்கப்பட்ட ஃபைட் சீக்குவென்ஸ் பலமுறை ஒன்ஸ்மோர் கேட்கப்படும் என கண்சிமிட்டுகிறார்கள்.

*படத்தின் இன்னொரு ப்ளஸ் ஆர்ட் டைரக்டர் சுரேஷ். ‘எந்திரன்’ படத்தில் சாபுசிரிலின் மெயின் அசிஸ்டென்ட் இவர். விக்ரமின் ‘இருமுகன்’ படத்தில் மிரட்டியவர்.

*திட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்னதாகவே மொத்தப் படப்பிடிப்பையும் கார்த்திக் சுப்புராஜ் முடித்துவிட்டார். இத்தனைக்கும் படப்பிடிப்பு நடந்த ஒவ்வொரு நாளுமே சவாலான காட்சிகள்தான். பல சீன்களில் குறைந்தது 2 ஆயிரம் பேராவது பங்கேற்க வேண்டும். அனைவரையும் தன் திறமையால் வேலை வாங்கியிருக்கிறார் என இயக்குநரை புகழ்கிறார்கள்.

*d‘24’ படத்துக்காக தேசிய விருது பெற்றவரும், கமலுடன் ‘காதலா காதலா’, ‘ஹேராம்’, ‘ஆளவந்தான்’ படங்களில் பயணித்தவரும், இந்தியாவின் டாப் மோஸ்ட் ஒளிப்பதிவாளர்களில் ஒருவருமான திரு, இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸோ, ஒவ்வொரு ஃபிரேமிலும் ஃபெஸ்டிவல் மூட் கொண்டாட்டத்தைப் பார்க்கலாம்!