தெலங்கானா மகாத்மா!



தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்திலுள்ள தபிபுரா காந்தி அரசு பொதுமருத்துவமனை நோயாளிகளுக்கு தினசரி இலவசமாக உணவு வழங்கி வருகிறார் அசார் மக்சூஸி. சிறுவயதில் குடும்பத்தைக் காப்பாற்றி வந்த தந்தை இறந்துபோக, பசியும் பட்டினியுமாகக் கிடந்த வாழ்க்கை அசாருக்கு பிறரின் பசி, தாகம் போக்கத் தூண்டியுள்ளது.

“குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குச் செல்லும்போது பெரும்பாலான இரவுகளில் வெறும் வயிற்றுடன்தான் தூங்குவேன்...” என இறந்தகாலத்தை கண்ணீர் மல்க பேசுபவருக்கு, சாலையில் உணவுக்கு கையேந்திய ஆதரவற்ற பெண்ணுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்த தினத்திலிருந்து வாழ்க்கை மாறியிருக்கிறது.

தபிபுராவில் முதல் மூன்றாண்டுகள் சொந்தப்பணத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்கியவருக்கு இப்போது நன்கொடைகள் குவிகின்றன. “பெங்களூரு, ராய்ச்சூர், தந்தூர், ஜார்க்கண்ட், அசாம் ஆகிய இடங்களிலும் ஆயிரத்து இருநூறு பேர்களுக்கு இலவச உணவை அளிக்க முயற்சித்து வருகிறேன்...” என்கிறார் அசார் மக்சூஸி.

ரோனி