சூழ்ச்சியால் சரிந்த அறிவியலாளர்!
நாக்பூரில் பிரம்மோஸ் ஏவுகணை ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றிய நிஷாந்த் அகர்வால், பாகிஸ்தானுக்கு ஏவுகணை ரகசியங்களைக் கொடுத்த விவகாரத்தில் கைதாகியுள்ளார். ஃபேஸ்புக்கில் துறுதுறுப்பாக சுற்றித்திரிந்த நிஷாந்த் அகர்வால், பெண்களின் பெயர்களிலான மூன்று போலி ஐடிகளின் காதல் வார்த்தைகளை நம்பி தேசிய பாதுகாப்பு ரகசியங்களை அவர்களுக்கு கூறியதாக போலீஸ் அவரை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளது. இதே பெண்களின் ஐடி டிரிக் மூலம்தான் சில மாதங்களுக்கு முன்னர் பிஎஸ்எஃப் படைவீரர் அச்சுதானந்த் மிஸ்ராவை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மயக்கி,
ராணுவ ரகசியங்களைப் பெற்று வெளியிட்டது அரசுக்கு தெரியவர, உடனே நொய்டாவிலிருந்த அச்சுதானந்தை காவல்துறை கைது செய்தது. “பாகிஸ்தானிலிருந்து இயக்கப்பட்ட பெண்களின் பெயரிலான ஐடிகளில், நிஷாந்துக்கு அமெரிக்காவில் அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு வலை விரித்து அவரை வீழ்த்தியுள்ளனர்...” என்கிறார் காவல்துறை அதிகாரி ஒருவர். ஐஐடி ரூர்க்கியில் கல்வி கற்ற நிஷாந்த் அகர்வால், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தினால் (DRDO) 2017 - 18ம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானி விருது வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- ரோனி
|