பூஞ்சைகளை அழிக்க எளிமையான வழிகள்



ஹாம் அக்ரி - 27

பூஞ்சைக் காளான்கள் நமக்கு சில நோய்களைத் தருகின்றன. படர்தாமரை, புழுவெட்டு, பாதப்படை, நகங்களின் வீக்கம் போன்ற உபாதைகள் பூஞ்சைகளால் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன. இவை பொதுவாக நாம் உடலைச் சுத்தமாக பராமரிக்காமல் இருந்தாலும், நம் உடலின் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும்போதும் ஏற்படுகின்றன. நமக்கு பூஞ்சை நோய்கள் ஏற்படும் போது நாம் சைபால், போரோலின் போன்ற வெளிப்புற களிம்புகளையே உபயோகப்படுத்துகிறோம். இந்த மருந்துகள் Borax மற்றும் Zinc Oxide போன்ற எளிய ரசாயனங்களைக் கொண்டவை.

வைரஸ், பாக்டீரியா தொற்றுகளின்போது எடுத்துக்கொள்வதுபோல் ‘ஆன்டி பயாடிக்’ மருந்துகள் தேவைப்படுவதில்லை. அதுபோலவே தாவரங்களின் வெளிப்புறத்தில், பூஞ்சைத் தொற்று இருக்கும் இடத்தில் மேலே படும்படியான எளிய மருந்துகளே போதுமானதாக அமைகின்றன. சென்ற அத்தியாயத்தில் பார்த்தபடி, தாவரங்களுக்கு வரும் பெரும்பான்மையான நோய்கள் பூஞ்சைக் காளான்களாலேயே வருகின்றன. பப்பாளி / மாம்பழத்தில் வரும் இலைப்புள்ளி நோய், இலைகளின் கரும்புள்ளி மற்றும் செம்புள்ளி, தக்காளியின் முன் இலை கருகல்,

powdery mildew எனப்படும் நுண்துகள் பூஞ்சைக்காளான், தவளைக்கண் இலைப்புள்ளி, துரு நோய்கள், வேர்க்கடலை தண்டு அழுகல், வெர்டிசிலியம் வாடல் நோய், நெல் குலை நோய், sooty mould எனப்படும் கரி படிந்த பூஞ்சை, downy mildew எனப்படும், எலுமிச்சை சொறி நோய் போன்ற எல்லா இடர்ப்பாடுகளும் பூஞ்சைக் காளானால் ஏற்படக் கூடியவை. பெரும்பாலான பூஞ்சை நோய்களை வருமுன் தடுக்கலாம். எந்த பயிரில் என்ன பூஞ்சை தாக்கலாம் என்ற தகவல் தெரிந்ததாகவே இருக்கிறது.

அதனால் நமக்கு தடுப்பது மிகவும் எளிது. இதற்கான முறையும், மருந்துகளும் கூட எளிமையானவை. முதல் பூஞ்சைத் தொற்று நாற்றங்காலில் ஏற்படுகிறது. இது மண்ணில் இருக்கும் பூஞ்சைகளால் நாற்றுகளுக்கு பரவுகிறது. இதனால் இளம் நாற்றுகள் வாடி இறப்பதற்கும் அல்லது தொற்றோடு அடுத்த கட்டத்துக்கு நகருவதற்கும், பரவுவதற்கும் காரணமாக அமைகிறது. இதை இலவங்கப் பட்டை கொண்டு எளிதில் தடுக்கலாம். பட்டையைத் தூளாகவோ, கஷாயமாகவோ நாற்றங்காலில் தெளிப்பதன் மூலமாக இந்த பூஞ்சையைக் கொல்லலாம்.

இதனால் நாற்றுகள் பாதிக்கப்படாது. இது மிகவும் சக்தி வாய்ந்ததும் நிச்சயமாக வேலை செய்யக்கூடியதுமான மருந்து. பொதுவாக உபயோகப்படுத்தப்படும் கேப்டான் அல்லது திராம் என்ற ரசாயன கொடிய விஷத்தன்மையுள்ள பூச்சிக்கொல்லிக்கு நிகரானது. மற்ற பூஞ்சைகளைத் தடுப்பதற்கு வெங்காயம் அல்லது பூண்டுக் கரைசலைப் பயன்படுத்தலாம். சின்ன அல்லது பெரிய வெங்காயம், வெங்காயத்தாள், பூண்டு, பூண்டுத் தோல் இவைகளை தனியாகவோ, ஒன்றாகச் சேர்த்தோ அரைத்து, வடிகட்டி, பின் சாறை ஒன்றுக்கு பத்தாக நீரில் கலந்து நன்றாக இலை, தண்டு மற்றும் எல்லாப் பகுதிகளிலும் படும்படியாக அடிக்கலாம்.

வெறும் வெங்காயத் தாள், பூண்டுத்தோல் உபயோகப்படுத்தினால், அதோடு கொஞ்சம் சோளத் தோகை சேர்த்து, நீரில் காய்ச்சி, வடிகட்டி பின் அப்படியே உபயோகப்படுத்தலாம். இதுவும் ஒரு தடுப்பு முறைதான். தொற்றுக்குப் பிறகு இது பலன் தராது. பூஞ்சைத் தாக்குதலால் நோய் வந்தபின் கீழ்க்கண்ட எளிய முறைகளைப் பின்பற்றலாம்: பால் தெளித்தல்: இது எளிதான, நம்பகமான முறை. இது தக்காளி, வெள்ளரி, கத்திரி, வெண்டியில் வரக்கூடிய powdery mildew, downy mildew மற்றும் மொசைக் நோய்களைக் கட்டுப்படுத்தக் கூடியது.

இந்த முறையில் ஒரு பங்கு பாலுக்கு ஒன்பது பங்கு நீர் கலந்து தெளிக்க வேண்டும். நோய் தாக்குதல் அதிகமாக இருந்தால் வாரத்திற்கு 3 முறையும், தடுப்பதற்காகவோ, தாக்குதல் குறைவாகவோ இருந்தால் வாரத்திற்கு ஒரு முறையும் தெளிக்கலாம். கார அமிலத்தன்மையை மாற்றி பூஞ்சை விரும்பாத சூழ்நிலையை பால் உருவாக்குகிறது. இதனால் பூஞ்சைகள் அழிகின்றன. சமையல் சோடா: கார அமிலத் தன்மையை மாற்றி பூஞ்சைகளைக் கொல்லும் உத்தியில் சமையல் சோடா மற்றொரு முறை.

இரண்டு மேஜைக் கரண்டி சமையல் (Baking) சோடாவுக்கு, 4 - 5 கரண்டி எண்ணெய், கொஞ்சம் காதி சோப் கரைசலை 5 லிட்டர் தண்ணீரில் நன்றாக குச்சி வைத்து கலக்கவும். எண்ணெய் பிரிந்து வந்தால் இன்னும் கொஞ்சம் சோப்புக் கரைசல் சேர்த்துக்கொள்ளவும். இந்தக் கரைசலை செடியில் நேரடியாகத் தெளிக்கலாம். மில்டியூ இருந்தால் முதலில் வெறும் நீரை வேகமாகப் பீய்ச்சி அடித்து பின்னர் இதை தெளிக்கலாம். இதனால் இலைக்கருகல், கருகல், சொறி நோய்கள் அகலும். வினிகர் / புளிக்காடி: இதுவும் செலவில்லாத எளிய முறை.

இதில் இரண்டு மேஜைக்கரண்டி வினிகரை 8 - 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். இது இலைகளில் பூஞ்சைகளால் உண்டாகும் கரும் புள்ளிகளைப் போக்கும். ஹைட்ரஜன் பெரோக்ஸைட்: மருந்துக்கடைகளில் கிடைக்கும் மூன்று சதவீத ஹைட்ரஜன் பெரோக்ஸைட்-ஐ நேரடியாக தெளிப்பதன் மூலமாக பலவிதமான பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய்களைக் கட்டுப்படுத்தலாம். இது இயற்கை முறைதான். மேற்குறிப்பிட்ட முறைகள் மிகவும் திறனானவை; தோட்டங்களில் பரிசோதித்துப் பார்க்கப்பட்டவை.

பல திறமையான முன்னோடி விவசாயிகள் இந்த முறைகளை உபயோகப்படுத்து கிறார்கள். மிக முக்கியமாக உடனடியாக தயாரித்து உபயோகப்படுத்தக்கூடியவை. இயற்கை விவசாயம் என்பது வெறும் பஞ்சகவ்யா, அமிர்த கரைசல், மூலிகை பூச்சி விரட்டி என்ற ஒருசில முறைகள் மட்டுமே பயன்படுத்தப்படுவது போன்ற மாயை, மீண்டும் விவசாயிகள் கடைகளை நம்பும்படியான சூழலைத்தான் ஏற்படுத்துகிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள முறைகள் பெரும்பாலும் விருக்‌ஷாயுர்வேதா என்ற நூலிலிருக்கும் முறைகளை அடிப்படியாகக் கொண்டவை. இவை அனைத்துமே நொதிக்க வைத்து தயார் செய்யக்கூடியவை. தயாரிப்பதற்கு குறைந்தது 3 வாரம் எடுத்துக்கொள்ளக் கூடியவை. இந்தக் காரணங்களால் பெரும்பாலான இயற்கை விவசாயிகள், அங்கக சான்று பெற்றவர்கள், கடைகளில் விற்கும் இயற்கை இடுபொருள்களைத்தான் வாங்க வேண்டி இருக்கிறது.

(வளரும்)

* எங்கள் வீட்டில் பவழமல்லி மரம் இருக்கிறது. அழகான பூக்கள் இருந்தாலும் நாங்கள் இதை எவ்விதத்திலும் பயன்படுத்துவதில்லை. இதற்கு ஏதும் மருத்துவ குணங்கள் இருக்கின்றனவா?
- சந்திரன், மதுக்கூர்.

ஆம்; இது மூலிகைச்செடிதான். பல மருத்துவ பலன்கள் கொண்டது. இதன் இலையை தேநீராக உபயோகிக்கலாம். அடிக்கடி முதுகுவலி வருபவர்களுக்கு இரு நல்ல மருந்து. இருதயம் பலகீனமான குழந்தைகளுக்கும் இது சிறந்த மருந்து. இதன் இலைகளை வறுத்து பின் நீரிட்டு சுண்டக்காய்ச்சி கஷாயமாகக் கொடுத்தால் இருதயம் பலப்படும். இரத்தம் விருத்தியாகும். பூவின் காம்பிலிருக்கும் பவழ நிறம் பட்டுத்துணிகளுக்கு இயற்கை முறையில் சாயமிட பயன்படுகிறது. இந்தச் செடியின் பட்டை, பூ, வேர் அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவைதான்.

* கழிவு நீரை சுத்தப்படுத்த ஆஸ்திரேலியாவில் செடிகளை பயன்படுத்துவதாக அறிந்தேன். நம் வீட்டில் உற்பத்தியாகும் நீரையும் இப்படி பயன்படுத்தி உபயோகிக்க முடியுமா?
- தண்டபாணி, விழுப்புரம்.

வீட்டுக்கழிவு நீர் மட்டுமல்ல, ஒரு சில தொழிற்சாலைக் கழிவு நீரையும் தாவரங்களால் சுத்தி செய்ய முடியும். சாக்கடைகளில் இயற்கையாக வளரக்கூடிய ஆகாயத்தாமரை, நெய்வேலி காட்டாமணக்கு போன்ற பெரும்பாலான தாவரங்கள் கழிவு நீரிலுள்ள அசுத்தங்களை நீக்கக்கூடியவை. நீரில் இருக்கும் அசுத்தங்களை அவை உணவாகக் கொள்கின்றன.

முறைப்படி பெரிய அளவில் உபயோகப்படுத்தக்கூடிய தாவரம் கல்வாழை எனப்படும் Canna செடிதான். இதை பல்வேறு தொழிற்சாலைக் கழிவுகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். கழிவு நீரை ஒரு வாய்க்கால் மூலமாக செலுத்தமுடியுமென்றால், அந்த வாய்க்காலின் உள்புறமும், கரையிலும் கல்வாழையை நட்டு வைத்து விடவேண்டும். இப்படிச் செய்யும்போது, வாய்க்காலின் மறுபுறம், தெளிந்த சுத்தம் செய்யப்பட்ட நீர் கிடைக்கும்.

- மன்னர் மன்னன்