இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் மனநோயாளிகள் இருக்கிறார்கள்!



மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக அர்ப்பணிப்பாக பணி செய்து வரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவர் பரத் வாட்வானிக்கு அண்மையில் ராமன் மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது.சாரதா ஃபவுண்டேஷன் மையம் மூலம் தோராயமாக 7 ஆயிரம் பேர களுக்கு மேல் உளவியல் மருத்துவம் அளித்து அவர்களை தத்தம் குடும்பத்தோடு சேர்த்து வைத்திருக்கிறார் பரத் வாட்வானி.

‘‘12 வயதில் என் தந்தையை இழந்தேன். அப்போது படிப்பிலும் நான் சுமார்தான்...’’ புன்னகைத்தபடி பேசுகிறார் மரு. பரத் வாட்வானி. ஒருநாள் மனநிலை பாதிக்கப்பட்டு சாக்கடை நீரை அள்ளிக் குடித்தபடி இருந்த இளைஞரை சாலையில் பார்த்து அதிர்ந்து போனார் பரத். உடனே அந்த இளைஞரை தன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து ஆந்திராவிலுள்ள அவரது தந்தையிடம் ஒப்படைத்திருக்கிறார்.

இந்த நிகழ்வுதான் அவர் உளவியல் மையத்தை தனியாகத் தொடங்க முக்கியக் காரணம். 1988ல் மகாராஷ்டிராவில் தொடங்கப்பட்ட சாரதா ஃபவுண்டேஷன் மட்டுமே இன்று வரை இந்தியாவில் மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஒரே தன்னார்வ மருத்துவ மையம். தொழுநோயாளிகளின் மறுவாழ்வுக்கு உழைத்த அமரர் பாபா ஆம்தேவை தன் முன்னோடியாகக் கருதுபவர், தன் மையத்தை நிதிப்பிரச்னை மற்றும் மக்களின் ஆதரவின்மையால் தொடர்ந்து நடத்த தொடக்கத்தில் சிரமப்பட்டிருக்கிறார்.

“மனநல பிரச்னைகளுக்கான மையத்தை மக்கள் தீவிரமாக வெறுப்பதோடு, தங்களின் வீடுகளுக்கு அருகில் அவை இருக்கக் கூடாது என நினைக்கின்றனர். எனக்கு வழங்கப்பட்ட மகசேசே விருது, மக்கள் மனநலம் குறித்த விழிப்புணர்வைப் பெற உதவும் என நம்புகிறேன்...” என்னும் பரத்தின் மையத்தில் இரு மருத்துவர்கள், எட்டு செவிலியர்கள், 22 தன்னார்வத் தொண்டர்கள் நோயாளிகளை அக்கறையும் கனிவுமாக கவனித்துக் கொள்கின்றனர்.“இந்தியாவின் எந்த நகரத்துக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்.

அங்கு மனநலப் பிரச்னைகளுடன் சிலர் சுற்றித் திரிவதைப் பார்க்கலாம். அத்தகைய மனிதர்களைப் பார்க்கும் அந்த நொடியிலேயே அதுவரை நோயாளிகளுக்கு நான் செய்த சிகிச்சைகள் அனைத்தும் எனக்கு மறந்து போய்விடுகிறது...” என வேதனையுடன் குறிப்பிடும் மரு. பரத் வாட்வானி, இப்போது மனநோயாளிகளை கவனிக்கும் தன்னையொத்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை பரவலாகத் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.                             

- ரோனி