உயிர்ப்பு



கட்டிலின் விளிம்பிலிருந்து தொங்கிய விரிப்பை இழுத்து உள்ளே செருகினான். அந்தச் சிறிய அசைவில் கண் விழித்த அம்மா, மெல்ல தனது சுருண்ட உடலை நகர்த்தி அவனது சீர் செய்யும் நடவடிக்கைக்கு இடம் கொடுத்தாள். அவளைப் பொறுத்தவரையில் நோயில் படுத்ததிலிருந்து தன் மகன் மாதவனுக்கு, தான் ஒரு பாரமாக ஆகிவிட்டோம் என்ற எண்ணம் விழுந்து விட்டது.

ஆனால், இது குறித்த கவலை எதுவுமில்லாமல் மாதவன் பேச்சில் கிண்டலும் உற்சாகமும் குறையாமல் வளைய வந்து கொண்டிருக்கிறான். இது அவனுடைய இயல்பு. இந்த உற்சாகமும் அடுத்த பொழுதைப் பற்றிய கவலையின்மையும்தான் அவனை மட்டுமல்ல, அவன் தாயாரையும், மற்றும் இரண்டு உடன் பிறப்புகளையும் இயக்கிக் கொண்டிருக்கிறது. அவளுக்கு அவன் அடிக்கடி கூறும் சார்லி சாப்ளினின் கதை நினைவிற்கு வந்தது.

“பாத்ரூம் போகணுமா?” கேட்டான் மாதவன். அவனுக்கு இந்த சித்திரை வந்தால் நாற்பது வயது முடிகிறது. அவரவர் வாழ்க்கை அவரவர்களுக்கு என்றாலும் படிக்க வேண்டிய பருவத்தில் மற்ற இரண்டு சகோதரர்களையும் போலில்லாமல் இவன் கதை, நாடகம் என்று சுற்றித் திரிந்தவன். தனக்கென்று குடும்பம் மனைவி என்றில்லாமல் நிலையான வாழ்க்கை எதுவுமில்லாமல் அல்லாடுகிறான்.

பெரிய பெரிய எழுத்தாளர்களுக்கு நகல் எடுத்துக் கொடுப்பது, கணினியில் எழுத்துருவாக்கம் செய்து கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுச் சொற்ப வருமானத்தைக் கொண்டு ஜீவிதம் செய்து வருகிறான். அதுவும் மற்ற இரண்டு சகோதரர்கள் மாதம் பிறந்தால் கொண்டு வரும் முள்ளங்கி பத்தை போன்ற வருமானம் இல்லை. பேரு மட்டும் பெத்தபேரு, உதவி வசனகர்த்தா.

அம்மா ஆமென்று தலையாட்டினாள். மாதவன் அம்மாவின் கட்டிலின் அருகில் குனிந்து பஞ்சை விட மெலிந்து போன தாயின் தேகத்தை அவள் தலைக்கு அடியில் கைகளைக் கொடுத்து பூப்போல மெல்ல தூக்கிவிட்டான். அவளது கவனம் முழுவதும் தனது முழு அங்கியின் மீதுதான் இருந்தது. கைகளால் மெதுவாக தொடைக்கு அடியிலிருந்து தொடங்கி சற்று மேலே தூக்கி நின்ற ஆடையைக் கணுக்கால்களை மறைக்கும் வண்ணம் இழுத்து விட்டாள். மெல்லிய குருத்து போன்ற எலும்புகளும், பச்சை ரத்தம் ஓடும் நாளங்களும்... அவளது பாதங்கள் இரண்டும் வாடிய தாழை மடல்களைப் போலிருந்தன.

நார்க்கட்டிலின் இருப்புச் சட்டங்களை பலமாகப் பற்றியபடி தனது ஆற்றலை எல்லாம் ஒன்று திரட்டி பிரயாசையுடன் எழுந்து நின்றாள். அந்தச் சிறிய முயற்சிக்கே அவளுக்கு மூச்சு வாங்கியது. கன்னங்களில், கழுத்தில், வயிற்றுப் பகுதியில் நீர் சேர்ந்து சற்று வீங்கிய தோற்றத்துடன் காணப்பட்டாள். சுருட்டி மடக்கினால் ஒரு பெரிய கித்தான் பையில் எடுத்துக் கொண்டு போகும்படியான உருவம்தான். ஆனால், அதற்குள் தன்னால் அடுத்தவர்களுக்குச் சிரமம் எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் அதிக கவனம் இருந்தது.

கையைப் பிடித்துக் கொள்ளவில்லை என்றாலும் கழிப்பறை வரையில் உடன் சென்று வெளியில் நின்று கொண்டான். இப்பொழுதெல்லாம் அவளைத் தனியே எங்கும் அனுப்பாமல் தனது கண்பார்வையில் வைத்து கவனித்துக் கொள்கிறான். மீண்டும் அம்மாவைக் கழிப்பறையிலிருந்து அழைத்து வந்து நார்க் கட்டிலின் விரிப்பை உதறி சரி செய்து வேறு விரிப்பு மாற்றித் தலையணை தட்டிப் போட்டுப் படுக்க வைத்தான்.

அம்மா படுக்க விரும்பாமல் சற்று தள்ளாடியபடி தன்னை விழுந்துவிடாமல் சுதாரித்துக் கொண்டு முதுகைக் கூன் போட்டபடி அமர்ந்தாள். “ஏதாவது சாப்பிடறியா?’’ “என்ன இருக்கு?’’ “உனக்கு ஓட்ஸ் கஞ்சி பண்ணியிருக்கேன். இன்னிக்கு சாலிகிராமத்தில் என்  கதையை டிஸ்கஸ் பண்றாம்மா. நேத்திக்கே சில்வர் ஷங்கர் தயாரிப்பாளர்கிட்டே கதையைச் சொல்லிட்டாராம். ஃபைனலைஸ் ஆயிடும்னுதான் சில்வர் ஷங்கர் உறுதியா சொல்றார். இந்தத் தயாரிப்பாளர் கதை எழுதறவங்களை ரொம்பவே தலையில் வச்சு தாங்குவாராம்.

குறைந்தது ஒரு இலட்சம் கிடைக்கும்னு சொல்றாங்க. பேனரும் பெரிய பேனர். உறுதியாச்சுன்னா காசுக்குக் காசு, பேருக்குப் பேரு...” “உட்கார்ந்துண்டுதான் காலை நீட்டணும். நின்னுண்டு நீட்டக் கூடாது...” என்றாள் அம்மா நூறாவது முறையாக. “ஓட்ஸ் எடுத்து வைக்கட்டுமா?’’  “தெனம் ஓட்ஸ் சாப்பிட்டுச் சாப்பிட்டு நாக்கு மரத்துப் போச்சுடா...” “பூரி மசால் பண்ணித் தரட்டுமா?” அவன் கிண்டலை ரசிக்கும் அளவிற்குக் கூட அவளிடம் தெம்பு இல்லை.

அவளது ஆகாரம் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. நீர், சர்க்கரை, உப்பு எல்லாமே மருத்துவர் கூறும் அளவுகளில்தான் கொடுக்க வேண்டும். மீறும் ஒவ்வொரு அளவிற்கும் ஏற்படும் உடற் கோளாறுக்கு அவர்கள் மருத்துவமனைக்குக் கொடுக்க வேண்டிய தொகையை நினைத்தால் தூக்கம் நின்றுபோய்விடும். இதுவரையில் அண்ணன்மார்கள் இருவரின் வாசல் கதவைத் தட்டும் துர்பாக்கியத்தை ஆண்டவன் அளிக்கவில்லை. இனிமேலும் அளிக்கக் கூடாது என்பதுதான் இருவரது விருப்பமும்.

“சீக்கிரம் வந்துடு...” “என் ஒருத்தன் கையில் இருந்தால் நீ சொல்றபடி வரலாம். நான், ஹீரோ, சில்வர் ஷங்கர், இயக்குனர், தயாரிப்பாளர், அவனுடைய இரண்டாவது சம்சாரம் இத்தனை பேர் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய விஷயம். மத்யானம் போஜனம் கிடைக்கறதான்னு பார்ப்போம். வழக்கம் போல உனக்கு டயபர் கட்டிட்டுப் போறேன். வாக்கரைப் பக்கத்தில் வச்சுட்டு போறேன். வாக்கர் இருக்கு என்பதற்கு அடிக்கடி நடக்க வேண்டும் என்பதில்லை. ஒரு சாவியைப் பக்கத்துப் போர்ஷன் காமாக்ஷி கிட்ட கொடுத்துட்டுப் போறேன்.

ரெண்டு மூணு தபா வந்து பார்த்துக்கறேன்னு சொல்லியிருக்கா. கூடிய மட்டும் சுருக்க வந்துடறேன்...” மாதவன் கிளம்பினான். வேகு வேகு என்று ஓடினால்தான் பத்து மணிக்குள் பேருந்தைப் பிடித்துக் கோடம்பாக்கம் போக முடியும். மற்றவர்கள் காத்திருக்க இவன் செல்வதற்கும், இவன் காத்திருந்து மற்றவர்கள் வருவதற்கும் பெரிய அளவில் பேதம் உள்ளது.

சில்வர் ஷங்கர் அவனைப் பொறுத்தவரையில் நண்பன், மேதை, வழிகாட்டி எல்லாம். அவன் முகம் சற்று மாறி, ‘‘என்ன மாதவன் வழித்தடம் அறிந்து கொஞ்சம் முன்னால் வந்திருக்கக் கூடாதா?’’ என்ற கேள்வியை மற்றவர் முன்னால் கேட்டு விடக் கூடாது. அந்தத் துறையைப் பொறுத்தவரையில் நேரம் தவறாமை என்பது அவனைப் போன்ற முதல் படியில் இருப்பவர்களுக்கு மட்டும்தான். உச்சிப்படியில் இருக்கும் சில்வர் ஷங்கர் போன்றவர்களுக்கு அல்ல.

போன பத்து நாட்களாக அம்மாவிடம் அதிகப்படியான முன்னேற்றமும் இல்லை. அதிகப்படியான சீரழிவும் இல்லை. அருகில் இருந்த எழுபது வயதான எம்.பி.பி.எஸ்., மருத்துவரிடம்தான் அம்மாவைக் கொண்டு போய்க் காட்டுவான். தீராத ரத்த அழுத்தம், தலை சுற்றல் உள்ளன. அவர் கொடுக்கும் மாத்திரையில் அடங்கிக் கிடந்தது ஒருநாள் எல்லை மீறி அம்மாவை அவரது கிளினிக்கில் இரண்டு நாட்கள் அனுமதிக்கும்படியானது. அந்த நேரம்தான் அவனுக்குக் கிடைத்த அபரிமிதமான ஓய்வில் ஒரு முழு படத்திற்கான அவுட் லைனைக் காட்சி வாரியாகப் பிரித்து நடு நடுவில் வாய்விட்டுச் சிரிக்கக் கூடிய வசனங்களைக் கோர்த்து ஒரு நல்ல திரை வடிவத்தை எழுதி முடித்தான்.

சில்வர் ஷங்கர் அதை முழுவதும் வாசித்துவிட்டு தலையில் வைத்துக் கொண்டாடினான். பூவோடு சேர்ந்த நார் என்ற பட்டம் மட்டும் மாதவனுக்கு ரசிக்கவில்லை. இதுபோன்ற நுட்பமான அவமானங்களை உள்வாங்கி மரத்துப்போன மனது அதனை முகத்தில் காட்டாமல் இருக்கப் பழகிக் கொண்டு விட்டது. அடுத்த முறை அம்மாவிற்கு மேலும் இப்படி ஒரு சீரழிவு ஏற்பட்டால் நோய் வேறு பரிமாணம் அடையும் என்று மருத்துவர் எச்சரித்து விட்டார். அவனைக் கூடை கூடையாகப் பணம் ஏற்பாடு செய்யச் சொல்லியிருந்தார்.

முதலில் கூடைக்கே அலையணும். அப்புறம்தானே அதில் இட்டு நிரப்ப பணம்? பேருந்தில் ஏறியதும் நடத்துனரிடம் மாத பாசைக் காட்டிவிட்டு கூட்டத்தில் ஒருவனோடு ஒருவனாகத் தன்னை மறைத்துக் கொண்டான். சென்னையின் வசதி இந்தக் கூட்டம்தான். சட்டென்று காணாமல் போய்விடலாம். யாரும் தேட மாட்டார்கள். வீட்டில் இருக்கும் அவனையும் அம்மாவையும் தேடுவதற்கே ஆளைக் காணவில்லை. இத்தனைக்கும் அம்மா, தான் சமையல் வேலை பார்த்து வந்த இல்லத்தின் உடைமையாளரிடம் சொல்லி மூத்தவன் கணேசனுக்கு கனரக போக்குவரத்து வண்டிகள் தயாரிக்கும் பெரிய நிறுவனம் ஒன்றில் நல்ல பதவியில் வேலை வாங்கிக் கொடுத்தாள்.

கணேசனுக்குத் தன் பொறியியல் படிப்பின் மீது தீராத நம்பிக்கை உண்டு. சட்டென்று பிடித்துக் கொண்டு உயரத்திற்குப் போய்விட்டான். வேளச்சேரியில் நூறடி சாலையில் மிக உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பில் பனிரெண்டாவது தளத்தில் சொந்த வீடு, காதல் திருமணம், இரண்டு குழந்தைகள். லிப்ட் இருந்தாலும் அவனும் அவன் தாயாரும் மேலே ஏறுவதற்குச் சிரமப்பட்டனர். 

மாதவன் தனது நிறுத்தம் வந்ததும் கீழே இறங்கினான். வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லாததால் பேருந்து அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் கொண்டு வந்து விட்டது. பத்து நிமிடம் முன்னால் கொண்டு விட்டதால் அனைத்து சென்னைவாசிகளுக்கும் இருக்கும் அந்தப் பரபரப்பு இன்றி அவன் சற்றுக் காலாற நடந்தான்.

ஷோபா கல்யாண மணடபத்தின் அருகில் இருந்த பெட்டிக் கடையில் ஒரு கோல்ட் ஃபில்ட்டர் வாங்கி ஆழமாகப் புகையை உறிஞ்சினான். எல்லா திரையரங்குகளிலும் காட்டப்படும் புகைப் பழக்கம் உடல் உயிரைக் குறிக்கும் என்ற வாசகம் மனத்திரையில் கருப்பு வெளுப்பாக ஓடியது. கணேசனுக்கு அடுத்தவன் நாராயணன். அவன் அண்ணனைப் போல அதி புத்திசாலி இல்லை என்றாலும் மாதவன் அளவிற்கு ஊர் சுற்றியும் இல்லை.

ஊரில் இருக்கும் எல்லா தகுதித் தேர்விற்கும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டு ஆயுள்காப்பீட்டுக் கழகத்தில் உதவியாளர் பணியில் அமர்ந்து துறைத் தேர்வுகளில் படித்து பதவி உயர்வு பெற்று கொஞ்ச காலம் வேலூருக்கு மாற்றலாகி, மீண்டும் சென்னைக்கு மாற்றலில் வரும்போது உடன் வேலை பார்த்த பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு வந்தான்.

அம்மாவிற்கு அட்சதை போடும் வாய்ப்பைக் கூட அவன் வழங்கவில்லை. மூத்தவர் இருவருக்கும் ஆயிரம் காரணங்களுடன் தனித் தனி குடித்தனம். மாதா மாதம் இருவரும் தலைக்கு ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் மாதவன் வங்கிக் கணக்கில் பணம் போட்டு விடுவார்கள். பணம் வரவு வைக்கப்பட்டதற்கான குறுந்தகவல் ஒவ்வொரு முறை கைப்பேசியில் வரும்போதும் அவன் கூனிக் குறுகுவான்.

சிகரெட்டை அணைத்துவிட்டு  மின்ட் மிட்டாய் ஒன்றை வாயில் அதக்கிக் கொண்டு மாதவன் எல்.வி.பிரசாத் சாலையில் நுழைந்தான். அந்தச் சாலையில் ஒரு வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் சில்வர் ஷங்கர் தனியாக அலுவலகம் போட்டு வைத்திருந்தான். பல வருடங்களாகத் திரைத் துறையில் பழம் தின்று கொட்டை போட்டவன். அவனுடைய சிற்றப்பன்கள் இரண்டு பேர் வெவ்வேறு துறைகளில் திரைப்படத்தை நம்பி வாழ்க்கையை ஓட்டுபவர்கள். அவர்களது பெரிய தாத்தா ஒருவர் நாற்பது ஐம்பதுகளில் குணச்சித்திர வேடங்களில் பிரபலமாக விளங்கியவர். சில்வர் ஷங்கரும் தடாலென்று திரைத் துறைக்குள் நுழையவில்லை. இரண்டு மூன்று பத்திரிகை அலுவலகம், அமெச்சூர் நாடகங்கள், நான்கைந்து காப்பி ரைட்டர்.

அப்போதுதான் மாதவன் ஷங்கரிடம் அறிமுகமானான். ஒரு சினிமா, இரண்டு டெலிவிஷன் சீரியல் என்று பன்முகம் காட்டியபின்னரே கதை வசனகர்த்தா என்ற ஒளிவட்டம் பின்னால் சுழலத் தொடங்கியது. அலுவலகக் கட்டிடத்திற்குள் நுழைந்தபோது சீனு விளக்குமாற்றால் தரையைக் கூட்டிக் கொண்டிருந்தான். மாதவன் சிஸ்டத்தை ஆன் செய்து விட்டுக் காத்திருந்தான். சீனுவைத் தவிர வேறு யாருமில்லை. இது எப்போதும் நடக்கும் கூத்து என்றாலும் இதனை மீறவோ அல்லது எடுத்துச் சொல்லவோ தனக்கு அதிகாரம் இல்லை என்பதை உணர்ந்த மாதவன் தனது சட்டைப் பையிலிருந்து பென்டிரைவை எடுத்தான்.

“வைரஸ் இல்லாம பார்த்துக்குங்க சார்...’’ என்ற சீனுவை முறைத்தான். “ஆன்டி வைரஸ் சாஃப்ட் வேர் போடச் சொல்லுப்பா உங்க முதலாளியை...’’ வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. சீனு கதவைத் திறக்க சென்ட் மணக்க தயாரிப்பாளரும் அவன் சம்சாரமும் நுழைந்தனர். தயாரிப்பாளரின் சம்சாரம் அணிந்திருந்த லெக்கின்ஸ் பயமுறுத்துவதாக இருந்தது. பின்னால் சில்வர் ஷங்கரும் கூடவே நுழைந்தான்.

சீனுவும் மாதவனும் தயாரிப்பாளர் அமரச் சொல்லும் வரையில் நின்றுகொண்டிருந்தனர். கூடம் முழுவதையும் அடைத்துக் கொண்டு திவான் போடப்பட்டிருந்தது. சுவரில் நான்கைந்து தலையணைகள் சதுர வடிவில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. சில்வர் ஷங்கர் யார் முன் அனுமதியுமின்றி ஒரு தலையணையின் மேல் சாய்ந்து கையில் ஒரு ஸ்க்ரிப்ளிங் அட்டையுடன் அமர்ந்தான். தயாரிப்பாளர் ஒரு தலையணையில் சாய்ந்து கொண்டார்.
“மாதவன்...” சில்வர் ஷங்கர் அழைத்தான்.

“சொல்லுங்க சார்...’’ “சாருக்கு உன் கதை பிடிச்சுப் போயிடுச்சாம். ரொம்பப் பாராட்டினாரு. இருந்தாலும் பெண்களுக்குப் பிடிக்குதா இல்லையான்னு தெரிஞ்சுக்க அவரு மேடத்தைக் கூட்டிகிட்டு வந்திருக்காரு. உன்னால் மேடத்திற்குக் கதை சொல்ல முடியுமா?’’தயாரிப்பாளரின் சம்சாரம் எவ்வித ஆபத்தையும் எடுக்க முயற்சிக்காமல் ஓரத்தில் போடப்பட்ட சோஃபா ஒன்றில் அமர்ந்து கொண்டாள். தனக்கு அருகில் இன்னொரு நாற்காலி போடச் சொன்ன அவளது நாகரீகம் மெச்சும்படி இருந்தது என்றாலும் மாதவன் நின்று கொண்டே கதை சொல்வதாகக் கூறினான். அவனால் நின்றபடி, நடந்தபடி, தான் உருவாக்கிய கதையைக் கூறுவது எளிதாக இருப்பதாக எண்ணுபவன்.

பத்து பேருக்கு ஒரே கதையைக் கூறினாலும் முதன் முறையாகக் கூறுவதைப் போன்ற உணர்வுடன் கூறவேண்டும் என்பதுதான் அவனுக்கு அளிக்கப்பட்ட பாலபாடம். அதை நினைவில் வைத்துக்கொண்டு தயாரிப்பாளரின் சம்சாரத்திற்குக் கதை சொல்லத் தொடங்கினான். நாற்பது காட்சிகளையும் ஏற்ற இறக்கங்களுடன் அவன் கூறிய விதத்திலும், கதையில் இருந்த புதுமையிலும், இடையிடையே அந்தக் காட்சிகளை மனத் திரையில் ஓடவிட்டு வாய் விட்டுச் சிரித்தும், முக பாவங்களை மாற்றியும் அவள் கதை கேட்ட விதம் அவனை மேலும் ஆர்வத்துடன் கதை சொல்ல வைத்தது.

இறுதியில் அவன் உச்சக்கட்ட காட்சியை விவரித்து முடித்ததும் தயாரிப்பாளரின் சம்சாரம் எழுந்து நின்று கை தட்டினாள். “ரொம்ப நல்லாருக்கு...” பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. தயாரிப்பாளர் முகத்தில் அநியாயத்திற்கு திருப்தி நிலவியது. அனைவருக்கும் மதிய உணவு வரவழைக்கப்பட்டது. அடுத்தகட்ட பேச்சு வார்த்தைக்குத் தாவியபடி உணவு பரிமாறப்பட்டது. இயக்குனர், மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள், இசையமைப்பு, கேமராமேன், லொகேஷன் போன்ற பல விஷயங்கள் ஆராயப்பட்டன.

கிளம்பும்போது, ‘‘உங்க சிஷ்யன்னா சும்மாவா? தம்பி கிட்ட எல்லாத்தையும் சொல்லிடுங்க...” என்று கூறிவிட்டுத் தயாரிப்பாளர் கிளம்பினார். மாதவன் எதுவும் பேசாமல் இருந்தான். தனது அபிப்பிராயத்தின் மேல் அவனால் அங்கு ஒரு வார்த்தை கூடப் பேச முடியாது என்பதை அறிந்தவன் என்பதால் மெளனமாக இருந்தான். உள்ளே ஒரு திருப்தியான எண்ணம் ஓடியது. விரைவில் இந்தப் படத்திற்கான அறிவிப்புகள் வெளியாகும். ஒரு பெரிய பேனரிலிருந்து தனது முதல் கதை வசனம் வருகிறது என்பதை அவனால் நம்பவே முடியவில்லை.

எத்தனை அவமானங்கள்! “கதை நாடகம்னு சுத்தி சுத்தி தண்டமா வந்து நிக்கறியே. இருபத்தாறு வயசாச்சு இனிமேல் அரசாங்க வேலைக்கு லாயக்கில்லை. என்ன பண்ணப் போற?” எத்தனை கேள்விகள்! எத்தனை எள்ளி நகையாடல்கள்! அத்தனையும் ஒரு முடிவிற்கு வரப்போகிறது. “மாதவன்...” சில்வர் ஷங்கரின் குரல் அவனை பூமிக்குக் கொண்டு வந்தது.

“சொல்லுங்க பாஸ்...’’ “உனக்கு இந்த புரொடியூசரைப் பத்தி தெரியும். இவர் படம் அப்படின்னாலே எல்லா சென்டரிலும் படம் வித்திடும். இவரும் தனது படத்துக்கு சாதாரண நடிகர்களையோ கலைஞர்களையோ புக் பண்ண மாட்டார். இவரது படத்தின் எல்லா விஷயத்திலும் ஒரு தரம் இருக்கும்...’’“ஆமா பாஸ். இவர் பேனரில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் நடிகைங்க பேட்டி கொடுத்ததைப் பார்த்திருக்கேன்...’’ “இவருக்குக் கதை ரொம்பப் பிடிச்சுப் போயிடுச்சு. நேத்திக்கே ஓகே சொல்லிட்டாரு. இன்னிக்கு சம்சாரத்தைக் கூட்டிகிட்டு வந்ததெல்லாம் ஒரு கண் துடைப்புதான்.

இவ்வளவு பெரிய பேனரில் எடுக்கப் போகும் படத்திற்கு ஓர் அமெச்சூர் எழுத்தாளன் கதை என்று விளம்பரப்படுத்தினால் போணியாகுமா அப்படின்னு யோசிக்கிறார்...” “என்ன சார் கே.பி. சாரோட ‘சர்வர் சுந்தரம்’ படத்தை ஏ.வி.எம் பேனரில்தானே படமா எடுத்தாங்க?” “ஆனா, அதுக்கு முன்னால் அவரு ஒரு எஸ்டாபிளிஷ்டான நாடக ஆசிரியர் மாதவன்...’’ மாதவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“ஒரு சின்ன காம்ப்ரமைஸ் பண்ணிக்கச் சொன்னார்...’’ மாதவன் மௌனத்தைத் தொடர்ந்தான். “ கதை உன்னுதாவே இருக்கட்டும். ஆனால், திரையிலும் மற்ற விளம்பரங்களிலும் கதை திரைக்கதை வசனம்னு என் பேரு இருக்கட்டும்னு சொல்றாரு...’’ மாதவனுக்கு அப்போது ஏற்பட்ட வலியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் மாதவனாக இருந்தால்தான் முடியும். “எனக்கு ஒரு நாள் டைம் கொடுப்பீங்களா பாஸ்?” கேட்ட மாதவனின் குரலில் இருந்த உற்சாகம் உருகி ஓடிய தடம் கூடக் காணவில்லை.

“தாராளமா கூட ரெண்டு நாள் கூட எடுத்துக்க. ‘ஃபிலிம் ஃபேர்’ அவார்ட் ஃபங்ஷனுக்கு அவரும் அவர் சம்சாரமும் பெங்களுர் போறாங்க. வருவதற்கு திங்கட்கிழமையாகும். அப்ப சொல்லு. ஆனா ஒண்ணு மாதவன்...” “சொல்லுங்க பாஸ்...” “முதல் படத்திற்கு நீ ஒரு தயாரிப்பாளர்கிட்டே இருந்து வாங்கும் சம்பளத்தை விட என் பெயரில் இந்தக் கதை வந்தால் அதன் மூலம் அவர் எனக்குக் கொடுக்கும் தொகையிலிருந்து நான் உனக்குக் கொடுக்கப்போகும் தொகை அதிகமாக இருக்கும். சரியா?’’

(அடுத்த இதழில் முடியும்)

- சத்தியப்ரியன்


சில்லறை டார்ச்சர்!

சீனாவின் புடியன் நகரிலுள பிஎம்டபிள்யூ டீலர் ஆபீஸ், திடீரென ஒருநாள் மாலை மூடப்பட்டது. காரணம் சீனரின் கார் வாங்கும் ஆசைதான். காரின் விலையான 11 ஆயிரம் டாலர்களை ஒருவர் பத்து பெட்டிகளில் சில்லறையாகக் கொண்டுவந்துவிட்டார். கடை ஊழியர்கள் ஷட்டரை இறக்கி, கைகளில் ரத்தம் கசிய சில்லறைகளை எண்ணியிருக்கிறார்கள்.

அதிபர் இல்லாத கரன்சி!

பிலிப்பைன்ஸ் சென்ட்ரல் பேங்க், புதிதாக அச்சிட்ட 100 பெசோ கரன்சி நோட்டுகளைத் திரும்பப் பெற உள்ளது. அதிபர் மானுவேல் ரோக்ஸாஸின் முகம் நோட்டின் பிரிண்டிங்கில் மிஸ்ஸானதே காரணம். இதனை இணையத்தில் எர்லா அன்னே என்ற பெண் பதிவிட்டு பிலிப்பைன்ஸ் அரசின் மானத்தை வாங்கிவிட்டார்.

காக்பிட்டில் பறவை!

அமெரிக்காவின் மிச்சிகனிலிருந்து கிளம்பிய ஜார்ஜியா விமானம் வேகமாக கீழிறங்கும் சூழ்நிலை. வெடிகுண்டா? கடத்தலா? ம்ஹூம். காக்பிட்டில் பறவை என்ட்ரியானதுதான் காரணம். மீண்டும் டெட்ராய்ட்டில் கீழிறக்கப்பட்டு உள்நுழைந்த ஹம்மிங்பேர்டை விரட்டி விமானத்தை ஸ்டார்ட் செய்து பறந்திருக்கிறார்கள்.

தடைக்கு எதிராக தீவு!

நியூசிலாந்தின் தைருவாவைச் சேர்ந்த 7 குடிமகன்கள் அரசின் புத்தாண்டு மது தடைக்கு எதிராக என்ன செய்தார்கள் தெரியுமா? கடலில் மணல்திட்டை கிரியேட்டிவாக உருவாக்கி உற்சாக பானம் அருந்தி அரசை வம்புக்கு இழுத்துள்ளனர். மது அருந்தி தகராறு ஏற்படுவதால்தான் தடை அமுலானது என்பதுதான் இதில் சுவாரஸ்யமான விஷயம்.