பிஞ்சு இந்தியாவுக்கு சத்து தேவை!



நியூட்ரிஷனல் ரிப்போர்ட்

குழந்தைகள் எதிர்கால இந்தியாவின் தூண்கள் என்று வாய்ஜால சொற்கள் அடிக்கடி மேடைகளில் ஒலிப்பவை. இதன் இன்னோர் பக்கம் என்ன தெரியுமா? இந்தியாவில் உள்ள குழந்தைகளில் பாதிப் பேருக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளது என்பது!இதுதான் நம் முகத்தில் அறையும் எதார்த்தம்.

சினிமா தியேட்டரில் தேசியகீதம் பாடப்படுவதால் மட்டுமே நாம் நல்ல இந்தியர்களாகிவிட மாட்டோம். விளைந்த சோளம் போன்ற எந்தப் பாவமும் அறியாத நம் பிஞ்சுகள் உடல் சூம்பி, வயிறு ஒடுங்கி, பசியால் வாடி, ஊட்டமின்றி இருக்கும் நிலையை மாற்றும்போது மட்டுமே நாம் பொறுப்புள்ள இந்தியர்களாவோம் என்ற உண்மையை பொட்டில் அடித்துச் சொல்கிறது கடந்த நவம்பர் 4ம் தேதி வெளியாகி உள்ள 2017 குளோபல் நியூட்ரிஷியன் ரிப்போர்ட்.

ஐந்து வயதுக்குட்பட்ட 38% குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளதாம். அதில் 21% குழந்தைகள் உயரத்திற்கு ஏற்ற எடையின்றித் தவிப்பதாகச் சொல்கிறது அந்த அறிக்கை. இதில், 6 முதல் 59 மாதங்களான குழந்தைகளில் 58.4% பேருக்கு ரத்தசோகை பிரச்சனை உள்ளது என்பது அதிர்ச்சித் தகவல். மக்கள்தொகையில் ஆறு வயதுக்கும் குறைவான குழந்தைகளின் விகிதம் 13.6% என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஊட்டச்சத்துக் குறைவை 2022க்குள் ஒழித்துவிட நிதி ஆயோக், குடும்ப நல அமைச்சகம் ஆகியவை திட்டமிட்டு வருகின்றன. இதன் செயல்பாடுகளால் ஏற்பட்டுள்ள பலன்களை இனிமேல்தான் அறிய முடியும். நாட்டில் உள்ள 14 லட்சம் அங்கன்வாடிகளில் இதுவரை கர்ப்பிணி தாய்களின் வீடுதேடி ஊட்டச்சத்துப் பொருட்களை வழங்கிவந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட்டிருக்கிறது.

‘அங்கன்வாடிகளின் சர்வீஸ் திருப்தி இல்லை’ என்ற பொறுப்பற்ற காரணத்தை இதற்குச் சொல்லியிருக்கிறது மத்திய அரசு. அத்துடன் அடுத்த வருடம் (2018) ஏப்ரல் மாதத்துக்குள் அந்தப் பொருட்களுக்கான தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளதாகவும் வாக்களித்துள்ளது.

‘‘அங்கன்வாடிகளின் மூலம் வழங்கப்படும் ஊட்டச்சத்துப்பொருட்கள், குழந்தைகள் அல்லது கர்ப்பிணிப்பெண்களின் வயிற்றை வெறுமனே நிரப்புவதற்கு மட்டுமானது அல்ல. அது ஒரு முக்கியமான சமூக இயக்கம். ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறைக்குத் தேவையான அடிப்படை...’’ என்கிறார் குடும்பநல அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர்.

நகரம், கிராமம் என நாடெங்கும் நிறைந்துள்ள அங்கன்வாடி களின் மூலமாக நடந்து வந்த ஊட்டச்சத்துப்பொருட்களின் சேவையில் என்னதான் பிரச்னை?

‘‘காகிதத்தில் திட்டங்கள் சரியாக இருந்தாலும், பல்வேறு வகையான கலாசாரங்கள் கொண்ட மாநிலங்களில் அவற்றைச் செயல்படுத்தும்போது நடைமுறைக் காரணங்களால் அந்தத் திட்டமே தேங்கிப்போவதுதான் அதிகம் நடக்கிறது.

குறிப்பாக, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் ஊட்டச்சத்துத் திட்டங்களில் தேக்கமும் தொய்வும் உள்ளது. திட்டத்தை முறையாகப் பரவலாக்கினால் மட்டுமே அதன் பயன் முழுமையாக மக்களுக்குக் கிடைக்கும்...’’ என உறுதியான குரலில் பேசுகிறார் பூர்ணிமா மேனன். இவர் குளோபல் நியூட்ரிஷியன் ரிப்போர்ட் குழுவில் பணிபுரிந்தவர். உலக உணவுக்கொள்கை கழகத்தின் ஆராய்ச்சியாளராகவும் இருக்கிறார்.

தில்லி உள்ளிட்ட பிற மாநிலங்கள் ஊட்டச்சத்துத் திட்டங்கள் குறித்து மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதால் அங்கெல்லாம் இது சிறப்பாகச் செயல்படுவதைச் சுட்டிக்காட்டுகின்றனர் சுகாதார வல்லுநர்கள். ‘‘அரசின் திட்டங்களை மக்கள் பெறுவதில் அடிப்படை கட்டமைப்பு, சமூக கலாசாரம், வளர்ச்சி ஆகியவற்றின் பங்கு அதிகம். இதில் கேரளா, உத்தரப்பிரதேசம் இரண்டும் எதிரெதிர் உதாரணங்கள்...’’ என பளிச்சென நிஜம் பேசுகிறார் நியூட்ரிஷன் இந்தியா அமைப்பைச் சேர்ந்த பிரேமா ராமச்சந்திரன்.

மாணவர்களின் ஊட்டச்சத்து தேவையை நிறைவு செய்யும் விதமாக, தினசரி உணவை கிச்சடி, உப்புமா போன்ற வகையில் தருவதற்கான ஐடியாவை மத்திய அரசு உருவாக்கி யுள்ளது. உணவு வகைகளை மாநில அரசே தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். இதில் உணவு சாஷேக்களின் மேல் பிரிண்ட் செய்துள்ள பார்கோடுகளின் மூலம் அதனைக் கண்காணிக்க முடியும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் ஸ்பெஷல்.

‘‘இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் ஊட்டச்சத்தான உணவுகளை வழங்குவதில் முன்னோடியான சிந்தனையைக் கொண்டுள்ளன. ஒடிஷாவில் வாரம் இருமுறை முட்டை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் சத்துணவுத் திட்டம் இந்தத் திட்டங்களுக்கு எல்லாம் முன்னோடியானது...’’ என்கிறார் ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளரான ரித்திகா கெரா.

6 - 36 மாதக் குழந்தைகளுக்கு 500 கலோரி உணவும் (15 கிராம் புரதம்), ஊட்டச்சத்துக் குறைந்த குழந்தைகளுக்கு 800 கலோரி உணவும் (25 கிராம் புரதம்) தேவை என உலக சுகாதார அமைப்பு (WHO) வலியுறுத்துகிறது. இந்தியாவில் 2008ம் ஆண்டிலிருந்து ICDS, NRHM ஆகிய இரு அமைப்புகளின் வழியே பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

2013ம் ஆண்டு அனீமியா குறைபாட்டுக்காக ஃபோலிக், இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கும் (RMNCH+A) திட்டம் உருவாக்கப்பட்டது.

உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி, ஆதார் அட்டையில் பயனர்களை இணைப்பது, ஊட்டச்சத்துப் பிரச்னையை கிராமப்புறங்களில் இன்னும் தீவிரமாக்கியுள்ளது. 

தேசிய குடும்பநல சர்வே (3)ன்படி, மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்துப் பாதிப்புக்கு கல்வி அறிவற்ற தாய்மார்களே (55%) முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது. ‘‘ஊட்டச்சத்துக் குறைவும், பெண்கல்வியும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடைய பிரச்னைகளாக உள்ளன. தாய்ப்பால் தருவது பற்றிய விழிப்புணர்வு குறைவு உட்பட பல்வேறு விஷயங்கள் இதில் ஊடுபாவாய் பின்னியுள்ளன.

எனவே, பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அரசு அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே ஊட்டச்சத்து லட்சியத்தை அடையலாம்...’’ என தெம்பாய் பேசுகிறார் மான்செஸ்டர் பல்கலையின் உலக மேம்பாட்டு கழகத்தினைச் சேர்ந்த பேராசிரியர் ராகவ் கெய்கா.              

NRHM

கிராமப்புற மக்களின் நலனைப் பேண ஏப்.12, 2005ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு National Rural Health Mission (NRHM). முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கால் தொடங்கிவைக்கப்பட்டு ஆரோக்கியத்தில் பின்தங்கிய 18 மாநிலங்களில் பல்வேறு மருத்துவத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதில் வடகிழக்கு மாநிலங்கள், இமாச்சலப் பிரதேசம் ஆகியவை ஸ்பெஷல் கவனம் பெற்றன. இதில் NUHM என்னும் நகர்ப்புற தொற்றா நோய்களுக்கான தடுப்பு திட்டமும் உள்ளடங்கும்.

ICDS

தொடக்க கல்வி, குழந்தைகள் மற்றும் தாய்களின் சுகாதாரம் (6 வயது) ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பு 1975ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1978ம் ஆண்டு மொரார்ஜி தேசாயால் இடைநிறுத்தப்பட்டு பின்னர் 10ம் ஐந்தாம் ஆண்டில் மீண்டும் அங்கன்வாடிகளில் செயல்படுத்தப்பட்டு உயிர்பெற்றது. 2012 - 13 காலகட்டத்தில் மட்டும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைவை போக்க இந்த அமைப்புக்கு ஒதுக்கப்பட்டது 159 பில்லியன் டாலர்கள்.