மக்கள் சூப்பர் ஸ்டார்!



ஒரு கலெக்டர் மனைவியின் சாதனை

‘எந்த மாற்றம் வேண்டும் என்றாலும் நாம் முதலில் மாற வேண்டும்’ என்பார்கள். ஆட்சி, அதிகாரம் இருந்தால் மட்டும்தான் ஊருக்கும் நாட்டுக்கும் உழைக்க முடியும் என்று இல்லை. உதவ வேண்டும் என்ற மனமும் உழைக்கத் தயங்காத குணமும் இருந்தால் எதுவும் சாத்தியமே என நிரூபித்திருக்கிறார் பீகாரைச் சேர்ந்தரிது. சிங்வாஹினி என்றால் ‘சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் அன்னை’ என்று பொருள். சிங்வாஹினி கிராம மக்கள் நிஜமாகவே ரிதுவைத்தான் தங்கள் கிராமத்தைக் காக்கும் சக்தியின் வடிவமாகப் பார்க்கிறார்கள்.

பீகாரின் வைஷாலி கிராமத்தில் பிறந்த ரிதுவுக்கு 1996ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான அருண் குமாருடன் திருமணமானது. அப்போது முதல் தில்லி வாசம்தான். அவ்வப்போது தன் கணவரின் ஊரான சிங்வாஹினிக்கு வந்து செல்லும் சமயத்தில்தான் குடிநீர், மின்சாரம், கழிவறை, சாலைகள், பள்ளிக்கூடம் என அடிப்படைத் தேவைகள்கூட இன்றி மக்கள் அவதிப்படுவதைப் பார்த்திருக்கிறார்.

உடனே தன் முதல் முயற்சி யாக பொகாரோ பகுதியில் பி.எட் முடித்துவிட்டு ஆசிரியையாகப் பணியாற்றுபவருக்கு, தன் சேமிப்புத் தொகையை மாதந்தோறும் தந்து வறுமையால் பள்ளிக்குச் செல்லாத 360 குழந்தைகளுக்குப் பாடம் நடத்த ஊக்குவித்திருக்கிறார் ரிது. இதன் விளைவாக, 2015ம் ஆண்டு அந்த கிராமத்தைச் சேர்ந்த 12 மாணவிகள் மேல்நிலைக்கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

இதன் பிறகு, கழிவறை அமைப்பது, சுகாதாரத்தைப் பராமரிப்பது, பெண் சிசுக் கொலைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இயற்கை விவசாயத்தில் ஈடுபட உதவுவது என்று மக்களின் மனநிலையை ஆரோக்கியமானதாக மாற்றினார். ‘‘நான் புதிய முயற்சியில் இறங்கும்போது கிராம மக்கள் பலரும் உன்னால் இதைச் செய்ய முடியாது என தடுப்பார்கள்.

ஆனால், மனவலிமையை நான் உறுதியாக நம்பினேன். என்னுடைய கனவு தேசத்தை உருவாக்கும் பாதையில் எந்த தடைக்காகவும் மனம் சோர்ந்து போகாமல் இருக்க முக்கியக் காரணம், என்னை முழுமையாக நம்பி பல்வேறு திட்டங்களுக்கு ஆதரவு தந்த கிராம மக்கள்தான்!’’ என மனமார மக்களுக்கு கிரீடம் சூட்டுகிறார் ரிது ஜெய்ஸ்வால்.

தொடக்கத்தில் கணவரின் ஆதரவுடன் அவ்வப்போது சிங்வாஹினி கிராமத்தில் பணியாற்றிய ரிது ஜெய்ஸ்வால், பின்னர் அங்கேயே தங்கி பணியாற்றத் தொடங்கியது நல்ல பலன்களைக் கொடுத்தது. கிராமத்துக்கு முதன்முறையாக மின்சாரவசதிகளை 80 வீடுகளுக்கு மேல் பெற்றுக்கொடுத்து விளக்குகளை ஒளிரவைத்தாலும் அதனைத் தொடர்ந்து மேம்படுத்துவதில் தடுமாற்றம் ஏற்பட்டது. இதற்கான தீர்வைத் தேடியவரை பஞ்சாயத்து தேர்தலில் பங்கேற்க ஆலோசனை கூறியதோடு, 72 சதவிகித ஓட்டுக்களைப் போட்டு ரிது ஜெய்ஸ்வாலை மக்கள் வெற்றி பெறச் செய்தனர்.

வெற்றிக் களிப்பில் ஏ.சி அறையில் குஷன்சேர் போட்டு அமராமல், பெண்கள் ஆர்மி அமைத்து பொது இடத்தில் மலம் கழிப்பதைத் தடுத்ததோடு, மாவட்ட நீதிபதி ராஜீவ் ரோஷன் உதவியோடு இரண்டாயிரம் கழிப்பறைகளை மக்களுக்குக் கட்டிக்கொடுத்து திறந்தவெளி கழிப்பிடமற்ற கிராமம் எனப் பெயர் வாங்கிக் கொடுத்தது இவரின் முக்கிய சாதனை.

‘‘விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பெற்றுத்தர முயன்றபோது பண்ணையார்களின் கொலை மிரட்டல் ஏராளம் வந்தன. பொது விநியோகமுறை உள்ளிட்ட விஷயங்கள் முதலில் தடுமாற்றமாக இருந்தாலும் கல்வியின் உதவியால் அதனைத் துல்லியமாகப் புரிந்துகொண்டேன்...’’ என உற்சாகமாகப் பேசுகிறார் ரிது ஜெய்ஸ்வால்.

குண்டும் குழியுமான சாலைகளைச் சீரமைக்க அரசு நிதி பற்றாக்குறையாக இருந்ததால் மக்களிடம் சிறிது தொகை பெற்று கூடுதலாகத் தன் சொந்த தொகையையும் சேர்த்து அதனை செம்மை செய்திருக்கிறார் ரிது. பொது விநியோக முறையில் பல்வேறு தகிடுதத்தங்கள் நிகழ்வது பஞ்சாயத்துத் தலைவரான ரிதுவின் காதுக்கு வர, உடனே டீம் ஒன்றை அமைத்து அதிரடியில் இறங்கியவர் 14 ஆயிரம் ரேஷன் கார்டுகளைத் திரும்பப் பெற்று தவறுகளைச் சீர்திருத்தியது நம்ப முடியாத கம்பீர சாதனை.

கிராமத்தில் உள்ள ஒன்பது பள்ளிகளில் சரியான நேரத்துக்கு வராத ஆசிரியர்களைப் பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் பள்ளி கேட்டுக்கு முன்னே நின்று வரவேற்பது உள்ளிட்ட அற்புத ஐடியாக்களின் மூலம் தவறைச் சரி செய்த ரிது, பெண்களுக்குத் தையல் பயிற்சி மையம், ஆண்களுக்கு செல்போன் ரிப்பேர் பயிற்சி மையங்களைத் தொடங்கியதோடு, பல்வேறு என்ஜிஓ அமைப்புகளை அழைத்து கிராம மக்களுக்குத் தொழில்பயிற்சி அளித்துள்ளார்.

இந்திய விவசாய ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ICAR) மூலம் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு சுய தொழில் பயிற்சிகளையும் தர உதவியது ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை அமைக்கும் லட்சிய செயல்பாடுகளுக்கு சாட்சி. இவரின் செயல்பாடுகளுக்கு அங்கீகாரமாக ‘பாரதீய சத்ரா சன்ஷத்’ என்ற அமைப்பு 2016ம் ஆண்டு ‘Uccha Shikshit Aadarsh Yuva Sarpanch Puraskar’ விருது அளித்து கௌரவித்துள்ளது. பீகாரைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர்களில் முதன்முறையாக இவ்விருதைப் பெற்றவர், ரிது ஜெய்ஸ்வால்தான்! ‘‘ஊழல், நோய், சாதி, பேராசை பயமின்றி நிம்மதியாக தினசரி என்னுடைய கிராமத்து மக்கள் உறங்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை!’’ எனப் புன்னகைக்கிறார் ரிது ஜெய்ஸ்வால்.

- ச.அன்பரசு

பாரதீய சத்ரா சன்ஷத்!

ராகுல் வி காரத் என்பவரால் 2011ம் ஆண்டு உருவான பாரதீய சத்ரா சன்ஷத், 29 மாநிலங்களில் 400 பல்கலைக் கழகங்களில் உள்ள 25 ஆயிரம் மாணவர்களுக்கு (18 - 25 வயதுக்குட்பட்ட) பொதுவாழ்வில் ஈடுபட பயிற்சியளித்து வருகிறது. இது, அரசியல் சார்பற்ற தன்னார்வ அமைப்பு. இந்தியாவின் ஜனநாயக அரசியல் அமைப்பில் படித்த இளைஞர்களைப் பங்கேற்கச் செய்யும் விதமாக அவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகள், விருதுகள் உள்ளிட்டவற்றையும் இந்த அமைப்பு ஸ்பெஷலாக அளிக்கிறது. வலுவான சுயசார்பான தலைமையையும் உறுதியான கொள்கைகளையும் உருவாக்கி இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே பாரதீய சத்ரா சன்ஷத்தின் லட்சியம்.