மகளை சங்கிலியில் கட்டிய தந்தை!



- ரோனி

வங்காளதேசத்தின் செருப்பு தைக்கும் தொழிலாளியான கமல் ஹுசைனுக்கு தன் மகள்தான் பிரச்னை. அவர் வேலைக்குச் சென்று திரும்பி வரும்போதெல்லாம் பத்து வயதேயான மகள் சனா, போதை போக்கிரிகள் மற்றும் பாலியல் தொழிலாளிகளுடன் இருந்திருக்கிறாள். சில சமயம் வீட்டைவிட்டு சனா வெளியே போனால் வருவதற்கு 10 நாட்கள் ஆகுமாம். ஒருநாள் செருப்பு தைக்க பயன்படும் பசையை போதைக்காக பயன்படுத்தியதை கண்டு ஷாக் ஆனவர், மனதை கல்லாக்கிக்கொண்டு மகளைக் காப்பாற்ற ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.

‘‘நான் சம்பாதிக்கும் பணத்தை வைத்து என் மகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாது. எனவே வேறுவழியில்லாமல் அவளை சங்கிலியால் வீட்டில் கட்டிவைத்துவிட்டேன். என் மனமும் நோகிறதுதான். ஆனால் அவளைக் காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை...’’ என சமூக
வலைத்தளத்தில் அவரிட்ட பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது கமல் ஹுசைனின் மகள் சனாவுக்கு பலரும் உதவ முன்வந்துள்ளது மகிழ்ச்சியான செய்தி.