உப்புமா திருடர்கள்!



- ரோனி

ஹைடெக்காக கொள்ளைக்கு ப்ளூபிரிண்டு போட்டு கொடுத்து திருடும் சீரியஸ் குழுக்கள் ஒருபுறமென்றால், அப்பளம் கூட நொறுங்காமல் சாப்பாட்டை திருடி போலீசிடம் மாட்டி செம மாத்து வாங்கும் கொழந்த கேங்ஸ் மறுபுறம். காமெடிக்கு கேரண்டி தரும் இரண்டாம் குழுவின் டெக்னிக் இருக்கிறதே... துபாய் ஏர்போர்டில் இரு பயணிகள் காத்திருந்தனர். அவர்களின் பெட்டிகளையும் முகத்தின் பதட்டத்தையும் பார்த்த கஸ்டம்ஸ் அதிகாரிகளின் விசாரணையில் உப்புமாவிலிருந்து ஆவி பறந்திருக்கிறது!

யெஸ். பெட்டி நிறைய சுடச்சுட கிலோ கணக்கிலிருந்த அத்தனையும் உப்புமா! உப்புமா ஏற்றுமதி கம்பெனியோ என சந்தேகத்துடன் செக் பண்ண... மாட்டிக்கிச்சு குருவி. பெட்டியின் உள்ளே சீக்ரெட் இடத்தில், வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். டாலர்கள், யூரோக்கள் என கத்தை கத்தையாக அடுக்கப்பட்டிருந்த அந்தப் பணத்தின் மொத்த மதிப்பு 86,600 டாலர்கள். அந்த நேரத்திலா அடுத்த உப்புமா ஆளும் வரவேண்டும்? அவரையும் வளைத்து பிடித்துவிட்டார்கள். அங்கும் உப்புமாவுக்குள் டாலர்ஸ்!