Blue whale எமன்!



இந்தியாவுக்கு வந்தாச்சு இந்த மரண விளையாட்டு

- ச.அன்பரசு

மும்பையின் அந்தேரியைச் சேர்ந்த ஒன்பதாவது படிக்கும் சிறுவன், அன்று பள்ளிக்குச் செல்லவில்லை. நண்பன் போன் செய்தபோது, ‘நான் கேமில் பிஸியாக இருக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறான். நண்பனும் சிரித்துக்கொண்டே மற்ற நண்பர்களிடம் அதைப் பகிர்ந்து கொண்டிருக்கிறான். ஆனால், மேட்டர் சீரியஸானது அன்று மாலைதான். 

5 மணிக்கு வீட்டின் 5வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டான் வீடியோகேம் விளையாடிய சிறுவன். விசாரித்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அவன் உயிரைப் பறித்தது அவன் விளையாடிய ப்ளூவேல் எனும் ஆன்லைன் விளையாட்டு. இந்தியாவில் இந்த மரண விளையாட்டால் உயிரிழந்திருக்கும் முதல் சிறுவன் இவன்தான். அப்படியானால் மற்ற நாடுகளில் ஏற்கெனவே இறந்திருக்கிறார்களா? ஆம். ஒருவர் இருவர் அல்ல, சுமார் நூற்றுக்கணக்கானவர்கள்.

உலக நாடுகளின் இன்றைய தலையாய பிரச்னை தீவிரவாதமோ, வேலையில்லா திண்டாட்டமோ மட்டுமே அல்ல. இன்னும் சொல்லப்போனால் அவற்றைவிட முக்கியமான மண்டை காயவைக்கும் பிரச்னை ப்ளூவேல் எனும் இந்த கேம்தான். 2013ம் ஆண்டு பிலிப் புடெய்கின் என்ற ரஷ்ய இளைஞரின் சைத்தான் மூளையில் உருவான சூசைட் கேம்தான் ப்ளூவேல்.

முதலில் சமூக வலைத்தளத்தில் ரிலீஸான இந்த விளையாட்டை நன்கு ட்யூன் செய்து குரூரமான வீடியோக்களை இணைத்து விளம்பரம் செய்தார் பிலிப். டீன் ஏஜ் இளைஞர்களை இது ஈர்க்க, தனிமையில் உள்ள சிறுவர்கள், இளைஞர்கள் ப்ளூவேல் கேமை விளையாட ஆரம்பித்தனர். 50வது நாள் கிளைமேக்ஸில் ரஷ்யாவில் இறந்தவர்கள் மட்டும் நூறு பேர்களுக்கும் மேல் இருக்கும்.

இறப்பு தொடர்ந்து அதிகரிக்க, பிலிப்பின் கையில் காப்பு மாட்டியது போலீஸ். பிலிப் அசரவே இல்லை. ‘‘நான் ப்ளூவேல் கேமை மகிழ்ச்சிக்காகவே உருவாக்கினேன். மற்றவர்களும் இதை விரைவில் புரிந்து கொள்வார்கள். இறந்தவர்கள் அனைவருக்கும் அவர்களின் நடைமுறை வாழ்வில் கிடைக்காத அன்பு, கவனம், புரிந்து கொள்ளலை என் விளையாட்டுதான் கொடுத்தது. இது ஒருவகையான சமூக சுத்திகரிப்பு...’’ எனப் பகீர் வாக்குமூலம் கொடுத்தார் பிலிப்.
 
கோர்ட் இப்போது அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்கின் கிரெஸ்டி ஜெயிலில் களி தின்று வரும் பிலிப்பை அடையாளம் தெரிந்தபிறகு சிறைக்கு லவ் லெட்டர்களும் எக்கச்சக்கமாக குவிந்து வருவதை என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறி வருகிறார்கள் சிறைத்துறை அதிகாரிகள்.

‘‘நான் முதலில் இந்த விளையாட்டின் சுவாரஸ்யத்தினால் ஈர்க்கப்பட்டு உடனே செல்ஃபோனில் இன்ஸ்டால் செய்து விட்டேன். ஆனால், கேமின் டாஸ்க்குகள் என்னை நானே காயப்படுத்திக் கொள்வதைத் தூண்டியதால் உடனே கேமை நீக்கிவிட்டேன். டாஸ்க்குகளை செய்ய ஆரம்பித்துவிட்டால் அதிலிருந்து மீள்வது மிகச் சிரமம்...’’ என்கிறார் வீடியோகேம் பிரியரான அருண்.

சரி. இந்த மொபைல் விளையாட்டின் மீது சிறுவர்களும் இளைஞர்களும் ஈர்க்கப்பட என்ன காரணம்? ‘‘குழந்தைகளுக்கு சிறுவயதில் ஏற்படும் தனிமையும், மன அழுத்தமும்தான் முக்கிய காரணம். நிஜவாழ்வு தராத த்ரில், சாகச உணர்வு போன்ற விஷயங்களை ப்ளூவேல் கேம் பக்கா பேக்கேஜாக தருவதால் ரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது...’’ என்கிறார் உளவியலாளர் சீமா ஹிங்குரானி.

‘‘தன்னைப்பற்றிய கேளவி களை எழுப்பி, அதற்கான விடைதேடும் தத்தளிப்பில் உடலும் மனமும் ஒன்றுக்கொன்று ஓவர்டேக் எடுக்கும் நிலையிலுள்ள டீன் ஏஜ் பருவத்தினரைக் குறி வைத்துச் சிதைக்கிறது ஆன்லைன் விளையாட்டான ப்ளூவேல். உடனே இதனை பெற்றோர்கள் கவனித்து தடுப்பது அவசியம்...’’ என்கிறார் ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையின் சமீர் பாரிக்.

என்ன செய்யலாம்?

பெற்றோர்கள் குழந்தைகளிடம் தினசரி 20 நிமிடங்களாவது மனம்விட்டு நண்பர்களாகப் பேசுவது அவசியம். அவர்களின் உடலில் ஏதேனும் பிரச்னை இருந்தால் உடனடியாகக் கவனித்து அதனைத் தீர்ப்பது முக்கியம். வயிறு சம்பந்தமான பிரச்னை என்றால், அது பதற்றத்தின் அறிகுறி.    

உதவிக்கு வரலாமா?

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ப்ளூவேல் குறித்து யாரேனும் #bluewhalechallenge என்று டைப் செய்து தேடினால்,  உடனே உங்களுக்கு உதவி தேவையா? எனக் கேட்டு தற்கொலைக்கு கவுன்சிலிங் கொடுக்கும் அமைப்புகளின் எண்கள் காட்டப்படுகின்றன.

தற்கொலை விளையாட்டு ப்ளூவேல்!

தினசரி ஒன்று என 50 நாட்களுக்கு 50 டாஸ்க்குகள். டாஸ்க்கை முடித்தவுடன் போட்டோ / வீடியோ எடுத்து ப்ளூவேலின் வழிகாட்டிக்கு அனுப்ப வேண்டும். கேமை போனில் அல்லது ஆன்லைனில் விளையாடலாம். உங்கள் வழிகாட்டி யார் என அறிய #bluewhalechallenge, #curatorfindme, #i_am_whale என்று மெசேஜ் அனுப்ப வேண்டும்.

அநாமதேய வழிகாட்டி ஃபிக்ஸ் ஆனதும் கேம் தொடங்கும். முதலில் தினசரி டாஸ்க்குகள்-பாடல் கேட்பது, நடுராத்திரி எழுந்து குரூர வீடியோக்களைப் பார்ப்பது என லைட்டாகத் தொடங்கும். பிறகு, ‘நரம்புகளை ரேஸரால் லைட்டாக கட் செய்யுங்கள், நாள் முழுவதும் குரூர வீடியோக்களைப் பாருங்கள்’ என ட்ரீட்மென்ட் தொடரும். கிளைமேக்ஸில், விளையாடுபவர் மாடியிலிருந்து குதித்தால் கேம் ஓவர். உலகெங்கும் இதுவரை பறிபோன உயிர்களின் எண்ணிக்கை 130.