வேம்பையர் ஃபேஷியல்
அவரவர் ரத்தத்தால் அவரவர் முகத்தை பொலிவுபடுத்தும் ஃபேஷன்
-ஷாலினி நியூட்டன்
ஹாலிவுட் படமான ‘ட்வைலைட்’டில் ஹீரோயின் கிறிஸ்டென் ஸ்டூவர்ட் சாதாரண பெண்ணாக இருந்ததை விட கடைசி இரண்டு பாகத்தில் - அதாவது வேம்பையர் ஆக மாறியபின் - இன்னும் அழகாக இருப்பார். காரணம் வேம்பையர் மேக்கப். சுருக்கங்கள் இல்லாமல், பளிச்சென்ற முகம். ரத்தச் சிவப்பில் லிப்ஸ்டிக். சிவப்பு லென்ஸ் என கிறிஸ்டெனின் இந்த கெட்டப்புக்கு ரசிகர்கள் ஏராளம். வேம்பையர் மேக்கப்பே இவ்வளவு அழகு எனில் வேம்பையர் ஃபேஷியல்?
‘வாட்..?’ என அதிர்ச்சி ஆகவேண்டாம். ஃப்ரூட் ஃபேஷியல், ஒயின் ஃபேஷியல், சாக்லேட் ஃபேஷியல் போல் இந்த ஃபேஷியலை பியூட்டி பார்லர்களில் செய்ய இயலாது. சரும சிறப்பு சிகிச்சை நிபுணர்களிடம் நம் ரத்தத்தைக் கொண்டே செய்து கொள்ள வேண்டும்!
ரைட். அதென்ன வேம்பையர் ஃபேஷியல்?
பொறுமையாக பதில்களைப் பகிர்ந்து கொண்டார் ஜோஹரா பேகம் (Dr.Zohra Begum.C, Consultant dermatologist and Cosmetologist). ‘‘யெஸ். சமீபத்துல கிம் கர்தாஷியன் இந்த சிகிச்சைதான் செய்துகிட்டாங்க. இதை நாங்க ‘வேம்பையர் லிஃப்டிங்’னு (Vampire Lifting) சொல்லுவோம். நம்ம உடல்ல இருந்தே ரத்தத்தை எடுத்து முகத்துல செய்துக்கக் கூடிய சிகிச்சை.
இதுல மூணு கட்டங்கள் இருக்கு. நம்ம உடல்ல இருந்தே 10 மிலி அளவுக்கு ரத்தம் எடுத்து அதை சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், ரத்தத் தட்டுகள்னு தனித்தனியா பிரிச்சுடுவோம். ரத்த அணுக்களை தனியா பிரிச்சு அதுக்குள்ள இருக்கிற வளர்ச்சிக் காரணிகளையும் தனிமைப்படுத்திடுவோம். அதுல இருந்து 2 மிலிதான் நாங்க இந்த சிகிச்சைக்குப் பயன்படுத்துவோம்.
தவிர இந்த வளர்ச்சிக் காரணிகளைத் தூண்ட ரத்தத் தட்டுகள் ஆக்டி வேட்டரைப் பயன்படுத்துவோம். இந்த இரண்டு கட்டங்கள் கடந்ததுக்கு அப்புறம்தான் இன்சுலின் சிரிஞ்சை பயன்படுத்தி முகத்துல இந்த ரத்த அணுக்களை செலுத்துவோம். இதுல வலியெல்லாம் இருக்காது. ஆனா, இந்த சிகிச்சை 30 வயதுல இருந்து 40 வயதுக்குள்ள செய்துகிட்டா எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.
உடனே 18 வயசு மாதிரியானு யோசிக்கக் கூடாது. வயதாகும் போது நம்ம உடல் ரத்தத்தோட வளர்ச்சிக் காரணிகள் கொஞ்சம் கொஞ்சமா வலுவிழக்கும். இதனாலதான் முகத்துல சுருக்கம், தேவையில்லாத பைகள், கன்னம் ஒட்டிப் போறது எல்லாம் ஏற்படுது. ஸோ, இந்த வளர்ச்சிக்காரணிகளைத் தூண்டி அந்த செல்களைத்தான் நாங்க முகத்துல செலுத்துறோம். இதனால தானாகவே முகத் திசுக்கள் தூண்டப்பட்டு புது செல்கள் அதிகரிக்கும். ஏற்கனவே சில சுருக்கங்கள் இருந்தாலும் அதையும் ஓரளவுக்கு இந்த சிகிச்சை சரி செய்யும்.
இந்த முறையைநாங்க முடிகொட்டி வழுக்கை விழுந்தா அதை சரி செய்யவும் பயன்படுத்துவோம். இதை சில பார்லர்கள் செய்யறதா கேள்விப்பட்டிருக்கேன். இது சாதாரண ஃபேஷியலோ அல்லது ஹேர் கட்டிங்கோ இல்ல. தப்பாகிட்டா திரும்ப சரி செய்ய முடியாது. ஏன்னா, இது ரத்தம் சம்பந்தப்பட்ட விஷயம்.
அளவுகள் மாறினாலோ அல்லது சரியான வகைகள்ல ரத்த அணுக்கள் பிரிக்கப்படலைன்னாலோ விளைவுகள் பயங்கரமா இருக்கும். முக்கியமா ரத்தம் உடலுக்குள்ள இருக்குற வரைக்கும்தான் அது நல்லது. வெளிய வந்துட்டா அதன் தன்மை மாறிடும். உறைஞ்சு நஞ்சாகிடும். அந்த உறையக் கூடிய அணுக்களை முதல்ல பிரிக்கறது தான் இதுல முக்கிய வேலை.
அடுத்து ஊசி சிரிஞ்ச் புதுசா இருக்கணும். இதுல காம்ப்ரமைஸே கூடாது. ஊசி மூலமாதான் நோய் வைரஸ் பரவுது. அதனால பார்லர்கள்ல செய்தாலும் தக்க தோல் நிபுணர்கள் உதவியோட செய்யறாங்களானு ஒண்ணுக்கு இரண்டு முறை கேட்டுத் தெரிஞ்சுக்குங்க. இதை ஏன் அழுத்தம்திருத்தமா சொல்றேன்னா ரத்தத்தை முழுமையா அப்படியே பயன்படுத்தினா கட்டியா தோலுக்கு அடில தங்கி அது ஒரு புது பிரச்னையைக் கொண்டு வந்துடும். இது முகம் சம்பந்தப்பட்ட விஷயம். எச்சரிக்கையா இருக்கறது நல்லது. பை தி வே, இந்த முறைல நிறம் மங்கிய தோல்பகுதியையும், முகத்துல இருக்கிற சின்னச் சின்ன குழிகளையும் கூட சரி செய்யலாம்!’’ என்கிறார் ஜோஹரா பேகம்.
வேம்பையர் ஃபேஷியல்
* தலை முடியின் வளார்ச்சியைத் தூண்டுகிறது
* முகம் மற்றும் கன்னங்களின் தோலில் புத்துணர்ச்சி கொடுக்கிறது.
* கண்களைச் சுற்றி வழுவழுப்பான தோல்
* தாடையை உறுதியாக்குகிறது
* கழுத்துப் பட்டைகளில் சுருக்கங்களை நீக்குகிறது
|