நிலா...மழை...குழந்தை



கவிதை வனம்

* நிலவைக் காட்டி
குழந்தைக்குச் சோறூட்டும்
அம்மாக்கள்
கவனிப்பதேயில்லை
ஒவ்வொரு வாய்க்கும்
நிலவும் வாய் திறப்பதை!

* மழையில்
குடை பிடித்து
வீடு வந்து
சேர்ந்ததும்
அடம் பிடித்துக்
குடை மடக்கிய
குழந்தையின் முகத்தில்,
மழை பொழிந்த வானத்தை
மடக்கியதன் மலர்ச்சி

-மகிவனி

பட்டாம் பூச்சியின் மரணம்

அருகில் விரைந்த கார் கதவிடுக்கில்
சிக்கிய பட்டாம்பூச்சி படபடப்பது
காற்றின் துடிப்பா?
உயிரின் தவிப்பா? 
அய்யோ! 
நெடுஞ்சாலைகளில் 
பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டவர் யார்?

-லாவண்யா சுந்தரராஜன்