க்ளோசப் குடும்ப வன்முறை



-கே.என். சிவராமன்

கார் டிரைவரால் நடிகை பாவனாவுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை; சிறுமிகளான ஹாசினியும், ரித்திகாவும் படுகொலை செய்யப்பட்ட விதம் ஆகியவை பல கேள்விகளை சமூகத்தின் முன் எழுப்புகின்றன. இதனுடன் தொடர்புடையது குடும்பத்துக்குள் நடக்கும் வன்முறை. சொல்லப்போனால் இதுதான் ஆபத்தானதும் கூட. வெளியில் தெரியாமல், அதே நேரம் அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இந்த குடும்ப வன்முறை குறித்து அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
 
குடும்ப வன்முறை என்றால் என்ன?
உடல் ரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும்தான் குடும்ப வன்முறை. கன்னத்தில் அறைவது, அடிப்பது, உதைப்பது, தள்ளுவது, கையில் கிடைத்த பொருளை வீசி எறிவது, ஆயுதம் கொண்டோ அல்லது அது இல்லாமலோ தாக்குவது போன்றவை உடல் ரீதியான குடும்ப வன்முறை. இது கணவன் - மனைவி இடையில் மட்டுமே நடக்க வேண்டுமென்பதில்லை. மற்ற உறவினர்களுக்கு இடையிலும் நடக்கலாம்.

சந்தேகப்படுவது, ஆபாசமாகத் திட்டுவது, அவதூறு செய்வது, தனிமைப்படுத்துவது போன்றவை மன ரீதியான வன்முறைகள். தேவையில்லாமல் தொட்டுப் பேசுவது, முத்தமிடுவது, கட்டியணைப்பதில் தொடங்கி வல்லுறவு வரை செல்வது பாலியல் ரீதியான வன்முறைகள்.

இந்தச் சட்டம் எப்போது அமலுக்கு வந்தது?
இந்தியாவில் 70 சதவிகித பெண்கள் குடும்ப வன் முறையால் துன்புறுத்தப்படுவதாக புள்ளிவிவரம் சொன்னதை அடுத்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2005ம் ஆண்டு அமலுக்கு வந்துவிட்டது. இதன்படி கணவன் தன் மனைவியை அடித்தாலோ அல்லது அவமானப்படுத்தி துன்புறுத்தினாலோ இருபதாயிரம் ரூபாய் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் கிடைக்கும்.

பெண்கள் மீதும் இந்தச் சட்டம் பாயுமா?
குடும்ப வன்முறை புகார் என்றால் அது ஆண்கள் மீதுதான் பாய வேண்டும் என்று அவசியமில்லை. பெண்கள் மீதும் பாயும். சில வருடங்களுக்கு முன்பு மும்பை உயர் நீதிமன்றம் இதை உறுதி செய்திருக்கிறது. ‘பெண்களுக்கான நீதியை உறுதி செய்யும் விதமாகவே இச்சட்டத்தைப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தருவதாக இருந்தால் சட்டமே பொருளற்றுப் போய்விடும். வன்முறைக்கு ஆளான பெண், அதைத் தொடுத்த ஆண்களுக்கு எதிராக புகார் தருவது போலவே ஆண்களும் பெண்களுக்கு எதிராக புகார் செய்யலாம்’ என ஒரு மனுவை விசாரித்த நீதிபதி தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தச் சட்டம் பயனுள்ளதா?
நிச்சயமாக. ஆனால், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, வரதட்சணை தடுப்பு, குழந்தைத் திருமணம், ஈவ் டீசிங் போன்ற சட்டங்கள் ஏற்கனவே இயற்றப்பட்டு விட்டன. அவை அமலுக்கு வந்தும் ஆண்டுகள் பலவாகின்றன. ஆனால், இன்றும் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். வரதட்சணை கொடுமை பல சமூகங்களில் நடைமுறையில் வெளியே தெரியாதவாறு இயங்குகின்றன. குழந்தைத் திருமணம் குறிப்பிட்ட சில சமூகங்களிலும், வட மாநிலங்களிலும் நிலவுகின்றன. ஈவ் டீசிங் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அதைப் போலவே குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டமும் ஏட்டளவில்தான் உயிர் வாழ்கிறது.

இதற்கு என்ன காரணம்?
உள்ளங்கை நெல்லிக்கனி. இந்தச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட பெண் முதலில் புகார் அளிக்க வேண்டும். ஆனால், கணவனை சிறைக்கு அனுப்பிவிட்டு, தான் மட்டும் குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ எந்த நடுத்தர, கீழ் நடுத்தர, ஏழைப் பெண்களும் விரும்புவதில்லை. அதற்கு அவர்களது வளர்ப்பு முறையும் இடம் தரவில்லை. இந்திய கலாசாரம் என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் கருத்தும் இதற்கு இடம் தருவதில்லை. எனவே பெரும்பாலான பெண்கள் புகார் தருவதில்லை. அதனால் இந்தச் சட்டம் வெறும் பேப்பரில் மட்டுமே அச்சடிக்கப்பட்டதாக இருக்கிறது.

தமிழகத்தின் நிலைமை என்ன?
2014ம் ஆண்டு குடும்ப வன்முறை குறித்து இந்தியா முழுவதிலும் இருந்து பதிவான புகார்களின் எண்ணிக்கை 4,547. அதில் தமிழகத்தில் மட்டுமே பதிவான புகார்களின் எண்ணிக்கை 3,838. அதாவது, நாட்டில் ஒட்டுமொத்தமாக பதியப்பட்டிருக்கும் புகார்களில் 80%க்கும் மேலாக தமிழகத்தில்தான் பதியப்பட்டிருக்கிறது. இந்த புள்ளி விவரத்தை சொன்னது அல்லது வெளியிட்டது எந்த தன்னார்வ அமைப்பும் அல்ல. கேள்வியொன்றுக்கு நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தெரிவித்த தகவல் இது.

அப்படியானால் மற்ற மாநிலங்களில் வசிக்கும் பெண்கள் கொடுமைக்கு ஆளாவதில்லையா?
அப்படிச் சொல்ல முடியாது. ஏனெனில் ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், பீகார், சட்டீஸ்கர், கோவா, குஜராத், அரியானா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிஸோரம், நாகலாந்து, ஒடிசா, பஞ்சாப், திரிபுரா, உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், அந்தமான் நிக்கோபார், தில்லி ஆகிய மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் எவ்வளவு புகார்கள் பதியப்பட்டன என்று தெரியவில்லை. உள்துறை அமைச்சகம் அளித்துள்ள அட்டவணையில் இந்த விவரங்கள் இல்லை.

தகவல் கிடைக்கவில்லை என்கிற பதிலைத்தான் நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களின் விவரங்கள்தான் மத்திய அரசிடம் இருக்கின்றன. இதன் அடிப்படையில்தான் 2014ல் இந்தியா முழுவதிலும் இருந்து பதிவான புகார்களின் எண்ணிக்கை 4,547 என்று சொல்கிறார்கள். கர்நாடகாவில் நான்கே நான்கு வழக்குகள்தான் கடந்த ஆண்டு பதிவாகியிருக்கிறதாம். உத்தரப்பிரதேசத்தில் ஒரு வழக்கு கூட பதிவாகவில்லையாம்.

புள்ளி விவரங்கள் உணர்த்தும் பாடம் என்ன?
மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் இந்த விவரங்களை வைத்து மற்ற மாநிலப் பெண்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக பொருள் கொள்ள முடியாது. நாகரீக சமூகத்துக்கு சவால்விடும் வகையில்தான் இந்தியாவில் குடும்பங்கள் இயங்கி வருகின்றன. ஆணாதிக்க சமூகம் என்பதற்கான முழுப் பொருளையும் நடைமுறையில் உணர்த்தி வருவது இந்தியக் குடும்பங்கள்.

பெண்களுக்கு சம உரிமை, பேச்சுரிமை, பொருளாதார உரிமை, கல்வி உரிமை ஆகியவை இன்னும் முழுவீச்சில் செயலுக்கு வரவில்லை. வெற்று கோஷங்களாகத்தான் காற்றில் கரைகின்றன. ஆண்களைச் சார்ந்து வாழ்வதே பெரும்பாலான பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால் இதை எதிர்க்க வேண்டும் என்றுகூட பல பெண்கள் நினைக்கவில்லை. அந்தளவுக்கு அறியாமையில் வாழ்கிறார்கள்.

தமிழகம் முன்னுதாரணமா?
ஆமாம். நாட்டிலேயே அதிகளவு புகார்கள் தமிழகப் பெண்களால்தான் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதை எதிர்மறையில் எப்படி இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பெண்கள் மீதான கொடுமைகள் அதிகளவு இருக்கின்றன என்று பார்க்கிறோமோ அதே போல் நேர்மறையில் இன்னொரு விஷயத்தையும் பார்க்கலாம். அணுகலாம். அதாவது, தமிழகப் பெண்கள் துணிச்சலுடன் ஆண்கள் மீது புகார் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள் என்பதுதான் அது. இந்த துணிச்சல் ஒரே இரவில் பெண்களுக்கு வந்துவிடவில்லை.

தந்தை பெரியாரில் தொடங்கி பல திராவிட இயக்க முன்னோடிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியாக போராடி வந்ததன் விளைவைத்தான் இந்தத் தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் அனுபவிக்கிறார்கள். தெளிவுடன் இருக்கிறார்கள். தங்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்திருக்கிறார்கள். மறுக்கப்படுவதை கேட்டுப் பெறுகிறார்கள்.

இதற்கு காவல்துறை தோள் கொடுக்கிறதா?
இல்லை என்றுதான் வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த முடிவுக்கு வரவும் மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் விவரங்கள்தான் காரணம். 2014ம் ஆண்டு தமிழகத்தில் குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவான புகார்களின் எண்ணிக்கை 3,838. இவற்றில் காவல்துறையால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவை வெறும் 9 தான் அதேபோல் குடும்ப வன்முறைக்கு தண்டிக்கப்பட்டவர்களும் வெறும் 11 பேர்தான்.

அதாவது, குடும்ப வன்முறைக்கு ஆளாகும்போது காவல்துறையிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பரவலாக தமிழகப் பெண்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால், வன்முறையை மேற்கொண்டவர்களுக்குத் தண்டனை வாங்கித் தரவேண்டும் என்ற அக்கறை காவல்துறைக்கு இல்லை. பின்தங்கிய மாநிலம் என்று கருதப்படுகிற ஜார்கண்டில் கூட இந்த நிலை இல்லை. 2014ல் அங்கு பதிவான குடும்ப வன்முறை புகார்களின் எண்ணிக்கை 552. இதில் 108 பேர் தண்டனை பெற்றிருக்கிறார்கள்.

அதாவது, மாவோயிஸ்ட் ஆதிக்கத்தில் இருக்கும் இந்த மாநிலத்தில், மாவோயிஸ்டுகளை வேட்டையாடுவதற்கே நேரம் சரியாக இருக்கும் அந்த மாநிலத்தின் காவல்துறை, அதையும் மீறி குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் பதிவான புகார்களையும் விசாரித்திருக்கிறது. இதுபோல் தமிழக காவல்துறையும் குடும்ப வன்முறையின் கீழ் பதிவாகும் புகார்களை விசாரித்து சம்பந்தப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்தால் நன்றாக இருக்கும்.

ஏனெனில் இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து மகளிர் காவல்நிலையம் தொடங்கப்பட்டது தமிழகத்தில்தான். இப்போது நம் மாநிலத்தில் மொத்தம் 1,296 காவல் நிலையங்கள், 196 மகளிர் காவல் நிலையங்கள் இருக்கின்றன. சுமார் 250 ஐபிஎஸ் அதிகாரிகள், ஒரு லட்சம் காவலர்கள் பணியாற்றுகிறார்கள். இயற்றப்பட்ட எல்லா சட்டங்களையும் போல், இந்த குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டத்துக்கு உயிர் கொடுக்கும் பொறுப்பும் இவர்களிடமே இருக்கின்றது. ஆவன செய்வார்கள் என்று நம்புவோம்.