விருச்சிக லக்னம்- செவ்வாய் ராகு சேர்க்கை



கிரகங்கள் தரும் யோகங்கள் - 79

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

வீரத்திற்குரிய செவ்வாயும் யோகத்திற்குரிய ராகுவும் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் வாழ்க்கை திடீரென்று வேகமெடுக்கும். கேரக்டரே திடீரென்று மாறும். ‘காபி, டீ கூட குடிக்க மாட்டாரு. இப்போ பார்த்தா குடிக்கு அடிமையாகிக் கிடக்காரு...’ என்பார்கள். நண்பர்களின் சேர்க்கையில் எச்சரிக்கை வேண்டும். உடம்பில் சிறு கட்டி வந்தால் கூட மருத்துவரை சந்திப்பது நல்லது.

பூமி மற்றும் சகோதரத்திற்குரிய கிரகமான செவ்வாயோடு ராகு சேரும்போது சொத்து விஷயங்களில் சகோதரர்களோடு பிரச்னை ஏற்பட்டு நீங்கும். எப்போதுமே வைராக்கியத்தோடு திகழ்வார்கள். போராடும் குணம் அபரிமிதமாக இருக்கும். மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டு யோசிப்பார்கள். காலத்தை தள்ளிப்போட்டுக் கொண்டேயிருப்பார்கள். மறைத்துப் பேசும் குணமிருக்கும்.

இவர்களின் மறுபக்கத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. களத்தில் குதிக்காமல், பட்டியலில் இடம் பிடிக்காமல், சகலத்தையும் முடிக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பார்கள். இந்த இரு கிரகங்கள் ஒன்று சேரும்போது நாடி நரம்புகளிலும், எண்ணம், செயல்பாடுகளிலும் வினோதமான மாற்றங்கள் நிகழ்ந்து வரும். மேலே சொன்னவை யாவும் விருச்சிக லக்னத்திலுள்ள செவ்வாய் - ராகு சேர்க்கை தரும் பொதுவான பலன்களாகும்.

இப்போது லக்னாதிபதியான செவ்வாயும், ராகுவும் ஒவ்வொரு ராசியிலும் தனித்து நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா! உங்கள் லக்னத்திலேயே, அதாவது விருச்சிகத்திலேயே செவ்வாயோடு ராகு இருந்தால் உடலில் கரும் பச்சை மச்சத்தோடு பிறப்பார்கள். எப்போதும் படபடப்போடு காணப்படுவார்கள். ஆறு விரல் இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு அமர்ந்திருந்தால் பிரசவ அறுவை சிகிச்சையின்போது ஏதேனும் தவறுகள் நிகழ்ந்து அதனால் உடலில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புண்டு.

இந்த சேர்க்கை உள்ளவர்கள் தலையில் அதிக சுமைகளை ஏற்றி சுமக்கக் கூடாது. இரண்டாம் இடமான தனுசு ராசியில் செவ்வாயும் ராகுவும் சேர்ந்திருந்தால் திக்குவாய், தெற்றுப்பல், கொஞ்சம் மாறுகண் அமைப்பு உண்டு. அன்னிய பாஷையில் நல்ல புலமை பெற்றிருப்பார்கள். ஆரம்பக் கல்வியில் நன்கு எழுத வைப்பது மிகவும் கடினமானதாக இருக்கும்.  சிலருக்கு நாக்கில் சிறுசிறு கரும்புள்ளிகளும், கருப்பாகவும் இருக்கும். இவர்களுக்கு மேடைப் பேச்சில் மிகவும் ஆர்வம் இருக்கும்.

வக்கீலாக இருந்தால் வெளுத்து வாங்குவார்கள். கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கமும் இருக்கும். இவர்களுக்கு திருமணம் செய்யும்போது சரியான ஜாதகத்தைப் பார்த்துச் சேர்க்க வேண்டும். மறந்துபோயும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடக் கூடாது. மூன்றாம் இடமான மகர ராசியில் இவ்விரு கிரகங்களும் சேர்ந்திருந்தால் மிக நுட்பமான பார்வை இருக்கும். சைபர் க்ரைம் போன்ற காவல் துறையைச் சார்ந்த சில துறைகளில் இவர்கள் ஈடுபட்டால் பெரிதளவிலான விஷயங்களை வெளிக் கொணர்வார்கள்.

இளைய சகோதர, சகோதரிகள் மிகுந்த பாசத்தோடு இருப்பார்கள். தன்னைத்தானே மிகைப்படுத்திக் கொண்டு பேசிக்கொண்டிருக்கும் சுபாவமிருக்கும். இவர்களின் இன்னொரு பக்கத்தை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. நான்காம் இடமான கும்பத்தில் செவ்வாயும் ராகுவும் இருந்தால் தாயே தெய்வம் என்றிருப்பார்கள். ஆனால், சூழலால் சிலர் விடுதியில் சேர்ந்து படிப்பவர்களாக இருப்பார்கள்.

வாகனத்தை எச்சரிக்கையாக ஓட்டுவது நல்லது. வீடு மனை வாங்கும் போது சரியான பத்திரங்கள் உள்ளனவா என்று பார்த்து வாங்கவும். பாம்புப் புற்று இருந்த இடத்தில் வாங்காமல் இருப்பது நல்லது. தாய்வழிப் பாட்டனின் பெருமையை பேசுதல் பிடிக்கும். தாயாருக்கு அவ்வப்போது ஆரோக்யத்தில் பிரச்னை இருந்துகொண்டே இருக்கும். இந்த அமைப்பில் பிறந்தவர்கள் மறந்துபோயும் புகை பிடிக்கக்கூடாது. புற்றுநோய்க்கான வாய்ப்புண்டு. எனவே, புகைபிடித்தலை தவிர்த்தல் வேண்டும்.

ஐந்தாம் இடமான மீனத்தில் செவ்வாயும் ராகுவும் இருக்கும்போது மிக ஆச்சரியமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் திறனைப் பெற்றிருப்பார்கள். வாரிசுகள் பெரும் புகழ் பெறுவார்கள். பூர்வீகச் சொத்தை தங்கள் பேரில் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. குழந்தைகளை விடுதியில் சேர்த்து படிக்க வைக்காமல் இருப்பது நல்லது. ரத்தக் குழாய் அடைப்பு பிரச்னை வந்து சரியாகும். ஆன்மிகத்தில் சக்தி உபாசகர்களாக விளங்குவார்கள்.

ஆறாம் இடமான மேஷத்தில் செவ்வாயும் ராகுவும் இருந்தால் ஏதாவதொரு வழக்குப் பிரச்னைகள் இருந்தபடி இருக்கும். ஆனாலும், பெரிய பெரிய பதவிகளில் அமர்வார்கள். உயரதிகாரிகளாக விளங்குவார்கள். சின்னச் சின்னதாக அவ்வப்போது அவப்பெயர் வந்து போகும். கிரானைட், மார்பிள்ஸ், சிமெண்ட், ஜல்லி போன்ற தொழிலில் நிறைய சம்பாதிப்பார்கள். ராசிநாதனான செவ்வாயும் அங்கிருப்பதால் முகத்தில் ஆங்காங்கு வெட்டுக் காயங்கள் இருக்கும். வேற்று மதத்தவரால் அனுகூலமான விஷயங்கள் நடைபெறும்.

ஏழாம் இடமான ரிஷபத்தில் செவ்வாயும் ராகுவும் அமர்ந்தால் தோஷத்தை கொடுக்கும்தான். ஆனாலும், வாழ்க்கைத் துணைவர் மிகுந்த ஆளுமை மிக்கவராக இருப்பார். சிறியதாக உண்மையை மறைத்து திருமணம் செய்து வைப்பவர்களாகவும் இருப்பார்கள். ஆணாக இருப்பின் துடுக்கான மனைவி அமைவார். கூட்டுத் தொழிலில் பார்ட்னர் ஷிப்களிடம் சற்றே எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

முக்கியமாக பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு, அதிக ரத்தப்போக்கு போன்ற தொந்தரவுகளை இந்த அமைப்பு கொடுக்கும். எட்டாம் இடமான மிதுனத்தில் இவ்விரு கிரகங்கள் இருந்தால் மர்மமாக இருப்பார்கள். நிறைய மறதி உண்டு. சகோதரப் பகையும் உண்டு. தீவிர இயக்கங்கள் மற்றும் தீவிரவாத இயக்கங்கள் மீதும் இவர்களுக்கு மென்மையான போக்கு இருக்கும். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரித்தபடி இருப்பார்கள்.

குடல் சம்பந்தமான பிரச்னை வந்தால் அசிரத்தையாக இருக்கக் கூடாது. மூன்றாம் நபர் வாழ்க்கைக்குள் வரவிடக் கூடாது. கள்ளத் தொடர்பில் கொண்டுபோய் விட்டுவிடும். ஆண்களுக்கு மர்ம ஸ்தானத்தில் நோய்வந்து நீங்கும். ஒன்பதாம் இடமான கடகத்தில் இவ்விரு கிரகங்கள் இருந்தால் செவ்வாய் நீசமாகி, ராகு பலமாவார். ராகுவால் யோகம் பெருகும். ராகு தசை நடைபெற்றால் நிறைய நன்மைகள் நடக்கும். இவர்கள் எப்படிப்பட்ட வாழ்வியல் சூழ்நிலையில் இருந்தாலும் நன்கு ஒளிர்ந்து முன்னுக்கு வருவார்கள்.

தன் தந்தையாரின் தவறைக்கூட தட்டிக் கேட்டு மாற்றுவார்கள். நண்பர்களைவிட புத்தகங்களுக்கு அதிக மரியாதை கொடுப்பார்கள். பத்தாம் இடமான சிம்மத்தில் ராகுவும் செவ்வாயும் இருந்தால் மெரைன் இன்ஜினியர், நிலக்கரிச் சுரங்கம் போன்ற இடங்களில் வேலை செய்வார். டெக்ஸ்டைல் தொழிலைத் தொடங்கி தங்களுக்கென தனித்த முத்திரை பதிப்பார்கள்.

ஆணோ, பெண்ணோ உள்ளாடைகள் உற்பத்தியில் ஈடுபட்டால் தங்களுக்கென்று தனித்துவத்தை உருவாக்கலாம். இவர்களில் சிலர் மிருககாட்சிச் சாலையில் விலங்குகள் காப்பாளர்களாக, பயிற்றுவிப்பவர்களாக இருப்பார்கள். பதினோராம் இடமான கன்னி ராசியில் இவ்விரு கிரகங்கள் அமர்ந்தால் மூத்த சகோதரர்களுக்கு நன்மையே நடக்கும்.

அதுபோல, பாதக ஸ்தானமான பதினோராமிடத்திலே பாவ கிரகமான ராகு அமர்வது திடீர் யோகமாக மாறும். நல்ல ரசனை உடையவர்களாக இருப்பார்கள். ஏஜென்சி, கமிஷன் போன்றவற்றில் ஈடுபட்டு நன்கு லாபம் சம்பாதிப்பார்கள். பன்னிரண்டாம் இடமான துலாம் ராசியில் செவ்வாயும் ராகுவும் இருந்தால் எதிலும் ஒரு பயம் இருந்து கொண்டேயிருக்கும். தூக்கம் குறையும். கட்டிலுக்கடியில் கட்டுவிரியன் என்பார்களே அதுபோல நிம்மதியற்ற நித்திரை இருக்கும். எல்லோரையும் சந்தேகப்படுவார்கள். எதிலேயும் ஒரு தடுமாற்றமும், தாழ்வு மனப்பான்மையும் இருக்கும்.

இந்த செவ்வாய்-ராகு சேர்க்கையானது கொஞ்சம் விசித்திரமான நல்ல மற்றும் தீய பலன்களைக் கொடுக்கக் கூடியதாகும். எனவே, இந்த சேர்க்கையின் எதிர்மறை கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து விடுபட நீங்கள் செல்ல வேண்டிய தலம் காஞ்சிபுரம் ஆகும். இங்கு காஞ்சி குமரக்கோட்டம் எனும் கோயிலில் அருளும் நாகசுப்பிரமணியரை தரிசித்து வாருங்கள்.

வேறெங்குமே இந்த அமைப்பை காண முடியாது. வள்ளி தெய்வானைக்கு மூன்று தலை நாகமும், முருகனுக்கு ஐந்து தலை நாகமும் குடை பிடிப்பதை இங்கு தரிசிக்கலாம். நாக, ஸ்கந்த வழிபாட்டின் சிறப்பை இத்தலம் எடுத்துரைக்கிறது. ராகு & கேது தோஷமுள்ளோர்கள் தவிர செவ்வாய் - ராகு ஜாதகத்தில் சேர்ந்திருப்போர் இத்தலத்திற்கு சென்று வரலாம்.

(கிரகங்கள் சுழலும்...)

ஓவியம்: மணியம் செல்வன்