துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனும் குருவும் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் - 67

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ஒரு போட்டியில் எத்தனை பேர் மோதினாலும் முதல் பரிசு, இரண்டாம் பரிசு என்பவைதான் முக்கியத்துவம் பெறும். முந்தி வரும் அந்த இரண்டு பேரில் யார் முதலாமவர், யார் இரண்டாமவர் என்கிற போட்டியைப் போன்றதுதான் குருவுக்கும் சுக்கிரனுக்குமான முதன்மை. சம பலம் வாய்ந்த இரு அணிகள் மோதிக் கொண்டால் எப்படியிருக்குமோ, அதுபோல இவ்விரு கிரகங்களும் சேர்ந்திருந்தால் அந்த இடமே சுவாரசியம் நிறைந்ததாக மாறிவிடும்.

இந்த சேர்க்கை பெற்றவர்கள், குதிரைக்குக் கடிவாளம் கட்டியது போல எங்கும் இருக்க மாட்டார்கள். இவர்களெல்லாம் நல்லவர்கள், அவர்களெல்லாம் கெட்டவர்கள் என்று ஒருக்காலும் ஓரணியில் இவர்களால் திரள முடியாது. எல்லோரையுமே கேள்விக்கு உட்படுத்துவார்கள். எத்தனை பெரிய மனிதராயினும் அவர்களின் பதவிகளைப் பார்த்து அஞ்சாமல், கறாராக ஆய்வுக்கு உட்படுத்துவார்கள். தவறுக்குள்ளும் சரியான பார்வையைப் பார்க்கும் விவேகமும் உண்டு. பெரும் குற்றவாளி என்றாலும், அவன் செயலில் உள்ள நியாயத்தை இவர்கள்தான் சுட்டிக் காட்டுவார்கள். 

பொதுவாகவே சாஸ்திரங்கள் குருவையும், குரு பார்வையையும் பெருமைப்படுத்தியே பேசுகின்றன. ஆனால் ரிஷப மற்றும் துலாம் லக்னங்களுக்கு குரு எங்கிருந்தாலும், என்ன கிரகத்தோடு இருந்தாலும் எதிர்மறைப் பலன்கள்தான் ஏற்படுகின்றன. குருவின் பார்வைகூட இந்த முழு நற்பலனைக் கொடுக்காமல் கெடுபலன்களையும் கலந்தே தரும். ஆனால், துலாம் லக்னத்திற்கு சுக்கிரனே அதிபதியாக வருவதால், குருவை விட சுக்கிரன் அதிக நன்மைகளையே புரிவான்.

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனும் குருவும் ஒரே இடத்தில் இணைந்திருந்தால் கிடைக்கும் பொதுவான பலன்கள் இவை. இப்போது நாம் துலாம் லக்னத்தை ஒன்றாம் இடமாகக் கொண்டு ஒவ்வொரு ராசிக்குள்ளும் இவ்விரு கிரகங்கள் நின்றால் என்ன பலன் என்று பார்ப்போமா? ராசிக்கு முதல் இடத்தில் - அதாவது துலாம்  லக்னத்திலேயே லக்னாதிபதியான சுக்கிரனும், மூன்றுக்கும் ஆறுக்கும் அதிபதியான குருவும் சேர்ந்திருந்தால் முரண்பாடுகளின் தொகுப்பாக இருப்பார்கள்.

இளைய சகோதர, சகோதரிகள் தன்னைப் புரிந்துகொள்ளவில்லையே என்று வருத்தத்தோடு இருப்பார்கள். அவர்களும் ஏதேனும் ஒருவிதத்தில் இவரைச் சார்ந்தே இருப்பார்கள். தனக்கு ஏதோவொரு நோய் இருப்பதாக சந்தேகத்தோடு இருப்பார்கள். குருட்டு தைரியத்தில் ஏதேனும் கடனை வாங்கியபடி இருப்பார்கள். இந்த அமைப்பில் பிறக்கும் குழந்தைகள் மஞ்சள் காமாலையோடு பிறப்பார்கள். நரம்பு தொடர்பான சிக்கல்கள் வந்து நீங்கும்.

விருச்சிக ராசியான இரண்டாம் இடத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்திருப்பவர்கள், தான் முன்பு சொன்ன கருத்தை தானே மறுத்துப் பேசுவார்கள். அதனால் இவருடைய பேச்சை சபையினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எதையுமே கொஞ்சம் கற்பனை கலந்து பேசுவார்கள். ஒரு கேள்வியைக் கேட்டால் சுற்றி வளைத்துப் பேசுவார்களே தவிர, நேரடியான பதிலைச் சொல்ல மாட்டார்கள்.

காது மற்றும் கண்ணில் ஏதேனும் தொந்தரவு வந்து நீங்கும். பள்ளியில் ஆசிரியர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். தங்களைவிட பெரியோர்களிடம் நெருக்கமாகப் பழகுவார்கள். தனுசு ராசியான மூன்றாம் இடத்தில் குரு ஆட்சி பெறுகிறார். இங்கு சுக்கிரனோடு சேரும்போது சமூகத்திலோ, தான் சார்ந்த துறையிலோ யாராலும் கவனிக்கப்படாத விஷயத்தை எடுத்துச் சொல்லி புகழ் பெறுவார்கள். இளைய சகோதர உறவுகளோடு ஏதேனும் பிரச்னை இருந்தபடி இருக்கும்.

நான்கு பேருக்கு வழிகாட்டும் ஆசிரியர்களாக விளங்குவார்கள். பொருளாதார நிலையில் மிகுந்த ஏற்றம் பெறுவார்கள். நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள். ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பதே இவர்களின் தாரக மந்திரமாகும். மகர ராசியான நான்காமிடத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்தால், தாயாருக்கு சின்னச் சின்ன உடல்நலக்கோளாறுகள் வந்து நீங்கியபடி இருக்கும். தாயாரின் வழிகாட்டுதல் நிறையவே இருக்கும். எந்த சீமைக்குச் சென்றாலும் சொந்த ஊரை மறக்க மாட்டார்கள்.

இவர்களின் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்தால், தாய்வழிச் சொத்துக்கள் இவருக்கு வந்து சேரும். எப்போதும் சொந்த ஊரிலிருந்து வட கிழக்கு பக்கமாக இடமோ, மனையோ வாங்கக்கூடாது. பொதுவாகவே வாகனங்களைக் கையாளும்போது கவனம் தேவை. கும்ப ராசியில் குருவும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால் பூர்வீகச் சொத்தை அடைவதில் அலைச்சல் ஏற்படும். இவர்கள் பிறந்த உடனேயே பெற்றோர் இடம் பெயர்ந்திருப்பார்கள். குரு ஐந்தில் இருப்பதால் தாமதமாகவே மழலை பாக்கியம் கிட்டும்.

தந்தைக்கும் மகனுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் இருந்துகொண்டே இருக்கும்.  எப்போதுமே இவர்களின் கட்டுப்பாட்டிற்குள் குழந்தைகள் வளர மாட்டார்கள். தந்தையாருக்கு யாரெல்லாம் தொல்லை கொடுப்பாரோ, அவரிடமே இவர் சென்று நட்பு பாராட்டுவார். ஆனாலும், தான் சார்ந்த மரபு, சம்பிரதாயம் போன்றவற்றிலெல்லாம் மிகுந்த ஆர்வம் செலுத்துவார்கள்.

மீன ராசியில் குரு உச்சமானாலும் ஆறாமிடமாகச் சென்று அமர்கிறார். இவர் தனக்குத் தானே பிரச்னைகளை உருவாக்கிக் கொள்கிறார். மூன்றுக்குரிய இளைய சகோதர ஸ்தானாதிபதி ஆறில் அமர்வதால் ஏதேனும் ஒரு பிரச்னை வந்தபடி இருக்கும். இவர்களில் பலர் நாத்திகர்களாகவும் இருப்பார்கள். கையில் பணம் இருந்தால் தண்ணீர் போல செலவழிப்பார்கள். வீணாக எதிரிகளோடு மோதிக்கொண்டே இருப்பார்கள்.

குரு இங்கு ஆட்சி பெற்றிருந்தாலும் ஆறாம் இடமாக இருப்பதால், சுற்றியுள்ளவர்களே இவர்களைச் சிக்க வைப்பார்கள். மஞ்சள் காமாலை வந்து நீங்கும். இவர்கள் கடன் வாங்குவதை நிறுத்தினாலொழிய வாழ்க்கையில் நிம்மதி கிடையாது. மேஷ ராசியான ஏழாம் இடத்தில் குருவும் சுக்கிரனும் அமர்ந்தால் பெரும்பாலும் காதல் திருமணம் செய்து கொள்வார்கள். இவர்களின் வாழ்க்கைத் துணைவர் கலைகளில் மிகவும் ஈடுபாடு மிக்கவர்களாக இருப்பார்கள். மிகுந்த ரசனை உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்.

வாழ்க்கைத் துணைவர் சட்டென்று தூக்கி எறிந்து பேசுபவராக இருப்பார். தான் சொல்வதே சரியென்று நிலைநாட்டிக் கொண்டிருப்பார். இவர்கள் ஒரு தொழிலை ஏற்று அதைச் சரியாகச் செய்தாலே போதுமானது. ஏனெனில், பல்வேறு இணைத் தொழில்களில் ஈடுபட்டு கையைச் சுட்டுக் கொள்வார்கள். இவர்கள் ஆணாக இருந்தால் பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களுக்கு மேலதிகாரிகளோடு ஏதேனும் பிரச்னை வந்த வண்ணம் இருக்கும். 

ரிஷப ராசியான எட்டாம் இடத்தில் லக்னாதிபதியே ஆட்சி பெறுகிறார். லக்னாதிபதி சுக்கிரனோடு குரு சேரும்போது எப்போதும் சிந்தனை வயப்பட்டவராகவே இருப்பார். எதையும் அறிவுபூர்வமாக பேசவேண்டுமென்று விரும்புவார்கள். எந்த காரியத்தைச் செய்தாலும் கடைசி நேரத்தில் சொதப்பலாக முடியும். சிலர் ஆயுர்வேத மருத்துவத்தில் தீவிர ஆராய்ச்சியாளராக விளங்குவார்கள். எதிலுமே துணிந்து இறங்க மாட்டார்கள். பல நேரங்களில் தாயார் அல்லது சகோதரியின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பார்கள். இவர்களின் பலவீனமே பெருங்கோபம்தான். எனவே அதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். 

இதைச் சரி செய்து கொண்டாலே போதும். முக்கியமாக நான்கு கால் பிராணிகளிடத்தில் அலட்சியமாக இருத்தல் கூடாது. மிதுன ராசியான ஒன்பதாம் இடத்தில் குருவும் சுக்கிரனும் அமர்ந்தால் தந்தை மிகமிக புத்திசாலியாக இருப்பார். இங்கு விதிமீறல்களின் நாயகனான சுக்கிரனோடு இணைவதால் தங்களின் தவறை எப்போதும் நியாயப்படுத்திப் பேசுவார்கள். முக்கியமாக தந்தைக்கும் இவருக்குமே ஏதேனும் பனிப்போர் நிகழ்ந்தபடி இருக்கும். தந்தைக்கு நீண்ட ஆயுள் உண்டு.

தந்தையின் தொழிலை ஏற்று நடத்துவார்கள். நிறைய சேமித்து வைக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். புண்ணிய காரியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள். மத்திம வயதுக்கு மேல் தர்ம ஸ்தாபனங்களில் ஈடுபட்டோ அல்லது தானே ஒன்றைத் தொடங்கியோ மற்றவர்களுக்கு உதவுவார்கள். இன்னொரு வகையில் பார்த்தால் தந்தையின் கனவை இவர்களே நிறைவேற்றுவார்கள்.

கடக ராசியான பத்தில் குருவும், சுக்கிரனும் அமர்ந்தால் சொந்தத் தொழில் செய்யலாம். ஏனெனில், இங்கு குரு உச்சமடைகிறார்.  வெளிநாடு சென்று பணம் ஈட்டுவார்கள். ஆனால், இந்த பத்திலுள்ள குரு அடிக்கடி வேலையை மாற வைத்துக்கொண்டே இருப்பார். இவர்களிடம் பயோடேட்டாவை கேட்டால் பெரிய புத்தகத்தையே கையில் கொடுப்பார்கள். சமயச் சொற்பொழிவாளர், ஆசிரியர், வங்கி மேனேஜர் என பதவிகளில் இருப்பார்கள்.

இவர்கள் தீய நபர்களோடோ அல்லது நல்லவர்கள் போல் தெரியும் நண்பர்களோடு சேர்ந்தோ வியாபாரத்தைத் தொடங்கக் கூடாது. எதையுமே தீர்மானமாகப் பேசக்கூடிய தைரியத்தோடு இருப்பார்கள். செய்யும் வேலையை விட தான் விரும்பும் வேலையையே திருப்தியாகச் செய்வார்கள். மத்திம வயதிற்குப்  பிறகு தனக்குப் பிடித்த துறையில் ஈடுபட்டு புகழ் பெறுவார்கள். இந்த இரு கிரகங்களும் பத்து பாகையைத் தாண்டிவிட்டால், இவர்களுக்குத் தெரியாத விஷயங்களே இருக்காது.

சிம்ம ராசியான பதினொன்றாம் இடத்தில் குருவும் சுக்கிரனும் அமர்ந்திருந்தால் கிட்டத்தட்ட ஒரு ராஜகுருவின் அனைத்து தோரணைகளும் இவர்களிடத்தில் காணப்படும். வேதங்களுக்கும் உபநிஷதங்களுக்கும் உரை எழுதும் அளவுக்கு பரந்த அறிவாற்றலோடு இருப்பார்கள். மூத்த சகோதர உறவுகளை விட்டு கொஞ்சம் தள்ளி இருப்பதே நல்லது. இவர்களின் உழைப்பில் வராத ஏதேனும் சொத்து நிச்சயம் புதையல் போல் கிடைக்கும். இவர்கள் பசுத் தொழுவம், குதிரை என்று ஏதேனும் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.

கன்னி ராசியான பன்னிரெண்டாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் அமர்ந்தால், தீவிரமாக ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள். சக்தி வழிபாட்டை முக்கியமாக ஏற்றுக்கொண்டு கடைப்பிடிப்பார்கள். ஒரு சிலருக்கு வித்தியாசமான உடலமைப்பு இருக்கும். எப்போதுமே கடந்த கால துக்கங்களை நினைத்தபடியே இருப்பார்கள். காமத்திலிருந்து கடவுளுக்கு என்பது போல அதிக களியாட்டங்களுக்குப் பிறகு துறவற நிலைக்கு உயர்வார்கள். இவர்கள் தங்களின் சொந்த ஊரிலிருந்து இடம் பெயர்ந்தால் மிகவும் நல்லது.

குரு-சுக்கிரன் சேர்ந்த அமைப்பானது முரண்பாடுகளை ஏற்றுக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் முன்னேறும் அமைப்பாகும். மனதளவில் எது சரி, எது தவறு என்று இடையறாது ஒரு போராட்டத்தோடு இருப்பார்கள். கன்னியில் சுக்கிரன் நீசமாவதால் இவர்களிடம் பொதுவாகவே போராட்ட குணம் குறைவாக இருக்கும். எனவே, அமைதியின்றி தவிப்பார்கள். இடமா, வலமா என்று அவ்வப்போது குழம்புவார்கள். எனவே, தெளிவான முடிவுகளையும், தீர்க்கமான பார்வையையும் பெற்றிட இவர்கள் சாக்த வழிபாடு என்கிற சக்தி வழிபாட்டில் வணங்கப்படும் தசமஹா தேவியர்களில் ஒருவளான பகளாமுகியை வணங்க வேண்டும்.

இந்த தேவிக்கு மிக அபூர்வமாகவே கோயில் உண்டு. ஆனால், ரௌத்திரமும் சாந்தமும் ஒரு சேரக் கலந்த அம்சம் நிறைந்தவள் இவள். கோவில்பட்டி, விளாத்திகுளத்திற்கு அருகேயுள்ள ஜமீன் கரிசல்குளம் எனும் தலத்தில் இவளுக்குக் கோயில் அமைத்திருக்கிறார்கள். இவளுக்கு எலுமிச்சை பழ அன்னத்தை நிவேதனம் செய்தால் எதிரிகளின் வேகத்தை குறைப்பாள். மனநிலை பிறழ்ந்தவர்கள் இங்கு சென்று வந்தால் மிகவும் நல்லது. பொதுவாகவே வீரத்திற்கும் விவேகத்திற்கும் உரியவளான இவளை வணங்கி வர வாழ்வு வளம் பெறும் என்பதில் ஐயமில்லை.

(கிரகங்கள் சுழலும்...)

ஓவியம்: மணியம் செல்வன்