அஜீரணத்தில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள்!



-டாக்டர்  கு.கணேசன்

மனித உடல் இயக்கத்தில் அனுதினமும் ஆயிரக்கணக்கான உணர்வுகள் உருவாவதும் மறைவதும் இடைவிடாமல் நடக்கின்றன. அவற்றில் ஒன்று, பசி உணர்வு. உலகில் வாழும் எல்லா ஜீவராசிகளுக்கும் இதுதான் ஆதார சக்தி! ‘உடல் வளர்த்தேன்… உயிர் வளர்த்தேனே!’ என்று திருமூலர் சொன்னதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். பசிப்பதால்தான் சாப்பிடுகிறோம். சாப்பிடுவதால்தான் உயிர் வாழ்கிறோம். நமக்குப் பசி இல்லையென்றால் அல்லது அகோரமாகப் பசித்தால் ஆரோக்கியத்தில் சிக்கல் என்று அர்த்தம். சரியான நேரத்தில் சரியான அளவில் பசி எடுத்துச் சாப்பிடுகிறோம் என்றால்,  நம் செரிமான மண்டலம் நூற்றுக்கு நூறு சரியாக இயங்குகிறது.

பசி பற்றிய சரியான புரிதல் அநேகரிடம் இல்லை. அதனால்தான், ‘கையில் எடுத்து வாயில் போட்டால், சாப்பாடு ஆகிவிட்டது’ என்று அர்த்தப்படுத்திக்கொண்டு, கண்ட நேரத்தில் கண்டதைச் சாப்பிடுவதும், கைக்குக் கிடைத்ததை அவசரமாக அள்ளிப் போட்டுக்கொள்வதும் வழக்கமாகி விட்டது. அப்போது பசி அவர்களுக்கு எதிரியாகி விலகிப்போகிறது.

‘உடலுக்கு உணவு தேவை’ என்று செரிமான மண்டலம் நமக்கு உணர்த்தும் அறிகுறிதான், பசி. நம் ரத்தத்தில் குளுக்கோஸ் எனும் சத்து இருக்கிறது. இதுதான் உடலுக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. இது சாதாரணமாக 100 மி.லி. ரத்தத்தில் 80 முதல் 120 மி.கி. வரை இருக்க வேண்டும். இது 80க்குக் கீழ் குறைந்தால், இந்தத் தகவல் மூளைக்குப் போகும். அங்கு ஹைப்போதலாமஸ் எனும் காவல் நிலையம் இருக்கிறது.

இங்கு ‘பசி மையம்’ (Appetite Centre) என்று ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இருக்கிறார். உணவுத் தகவல் இவருக்கு வந்து சேர்ந்ததும், ‘வேகஸ் நரம்பு’ என்ற காவல்காரரிடம், ‘திருடனைப் பிடித்து வா!’ என்று கட்டளையிடுவது மாதிரி, ‘இரைப்பையில் பசியைத் தூண்டு’ என்று பணிப்பார். உடனே இது இரைப்பைத் தசை இயக்கங்களைத் தூண்டும். இதனால் நமக்கு வயிறு பிசைகிற மாதிரி இருக்கும். இரைப்பையில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரந்ததும், வயிற்றைக் கிள்ளுகிற மாதிரி இருக்கும். இந்த இரண்டு உணர்வுகளும் ஒன்று சேர்வதையே ‘பசி’ என்கிறோம்.

பசித்ததும் உணவு சாப்பிடுகிறோம். உணவிலிருந்து உடலுக்கு குளுக்கோஸ் கிடைத்ததும், ‘திருடனைப் பிடித்துவிட்டோம்’ என்று சொல்வதைப்போல, ‘போதுமான உணவு கிடைத்துவிட்டது’ என்ற தகவல் ‘காவல்நிலைய’த்தில் உள்ள ‘திருப்தி மையம்’ (Satiety Centre) என்ற இன்ஸ்பெக்டருக்குச் சென்றுவிடும். அவர் காவல்காரரிடம், ‘ஸ்டேஷனுக்குத் திரும்பி வா!’ என்று சொல்வதைப்போல, ‘பசியை நிறுத்து’ என்பார். இந்தத் தகவல் இரைப்பைக்கு வந்ததும், தசை இயக்கங்களைக் குறைத்துக்கொள்ளும்.

உடனே, பசி அடங்கிவிடும். இப்போது நாம் சாப்பிடுவதை நிறுத்தி விடுகிறோம். “நல்ல சாப்பாடு... திருப்தியாக இருந்தது” என்று நம்மை சொல்ல வைக்கும் அறிவியல் ரகசியம் இதுதான்! “எனக்குப் பசியே இல்லை. அதனால், சாப்பிட முடியவில்லை” என்று பலரும் புலம்புவார்கள். பசி எடுக்கவில்லை என்பதற்கு முக்கியக் காரணம், அஜீரணம். இந்த அஜீரணத்தைக் குலவை போட்டு வரவேற்க ஆயிரம் காரணிகள் வரிசைகட்டி நிற்கின்றன.

அதிக காரம், புளிப்பு, மசாலா உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் இரைப்பையில் மியூக்கஸ் சவ்வு சிதைந்து, செரிமான நீர்கள் சுரப்பது குறைந்துவிடும். இது அஜீரணத்துக்கு வழிவகுக்கும். விருந்து மற்றும் விழாக்கால நேரங்களில் அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடுவதால் அஜீரணம் ஏற்படும். எண்ணெயில் வறுத்த, பொரித்த இறைச்சி மற்றும் மீன், இனிப்புப் பலகாரங்கள், நெய், வெண்ணெய், வனஸ்பதி போன்றவற்றை  அடிக்கடி சாப்பிடும்போது இரைப்பையில் எண்ணெய் மட்டும் தனியாகப் பிரிந்து மிதக்கும்.

இதனால் செரிமான நீர்கள் உணவுடன் கலப்பது தடைபட்டு, அஜீரணம் தலை காட்டும். அதிக அளவு காபி/தேநீர்/ மென்பானம் குடிப்பது, புகைபிடிப்பது, மது அருந்துவது, வெற்றிலை/ பான்மசாலா போடுவது போன்றவையும் அஜீரணம் ஏற்படக் காரணமாகலாம். துரித உணவு, கலப்பட உணவு, நச்சுணவு ஆகியவை இதற்கு விதிவிலக்கல்ல! தொடர்ந்து நேரந்தவறி சாப்பிடும்போது குடலியக்கம் மாறுபடுகிறது. இதனால் அஜீரணம் ஏற்படுகிறது. உணவை அவசர அவசரமாக சாப்பிட்டால், உமிழ்நீருடன் உணவு சரியாக கலக்காத காரணத்தால் அஜீரணம் தோன்றுவதுண்டு.

அஜீரணப் பிரச்னையை ஆளுக்கு ஆள் வெவ்வேறுவிதமாகச் சொல்வார்கள். சிலர் பசிக்கவில்லை என்பார்கள். வேறு சிலர் புளி ஏப்பம் வருகிறது, எதுக்களிக்கிறது, குமட்டுகிறது, வயிற்றில் இரைச்சல் ஏற்படுகிறது, வாந்தி வருகிறது, பித்த மயக்கம், வாயுத் தொந்தரவு என்பார்கள். இன்னும் சிலரோ ‘வயிறு உப்புசம்’ என்பார்கள். கடைசியாகச் சொன்னது வயதானவர்களை ரொம்பவே படுத்திவிடும். காரணம் என்ன?

வயதானவர்களுக்கு சாதாரணமாகவே செரிமான நீர்கள் சுரப்பது குறைந்துவிடும். இதனால், குடலில் உள்ள பாக்டீரியாக்கள், உணவில் உள்ள மாவுச்சத்தை நிறையவே புளிக்கச் செய்துவிடும். அப்போது அதில் நிறைய காற்று உள்வாங்கி வயிறு உப்பிவிடும். முதல் நாள் இரவு முக்கால் பாத்திரத்துக்குக் கரைத்த இட்லி மாவு புளித்து, மறுநாள் காலையில் பாத்திரம் நிரம்பி, குப்பென்று உப்பி இருப்பதைப் பார்த்திருப்பீர்களே. அதுமாதிரிதான் இதுவும்.

அஜீரணத்தை ஏற்படுத்துபவை என்று ஒரு பட்டியல் போட்டால், 100 நோய்களுக்கு மேல் தாண்டும். அதில் சாதாரண இரைப்பை அழற்சியில் ஆரம்பித்து, அல்சர், காய்ச்சல், குடல் புழு, ரத்தசோகை, உடற்பருமன், நோய்த்தொற்று என்று நீண்டு... புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, கணைய பாதிப்பு, பித்தப்பைக் கோளாறு, சிறுநீரக நோய் போன்ற ஆபத்தான நோய்கள் வரை அடங்கும்.

அதேநேரம், அஜீரணத்துக்கு மனம் சம்பந்தப்பட்ட காரணங்களும் இருக்கின்றன. மகிழ்ச்சியாக இருக்கும்போது அதிகமாகப் பசி எடுத்துச் சாப்பிடுவதும், சோகமாக இருக்கும்போது பசி குறைந்து விடுவதும் இதனால்தான். மனதுக்குள் ஏகப்பட்ட போராட்டங்களும் குழப்பங்களும் வைத்துக் கொண்டு, கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை அலையாய் அலைந்து அஜீரணத்துக்காக சிகிச்சை எடுத்தால், எந்தத் தீர்வும் கிடைக்காது.

அஜீரணம் ஏற்பட்டால், அது செரிமானப் பிரச்னையாலா, மனப் பிரச்னையாலா என்பதைக் குடும்ப மருத்துவரிடம் தெரிந்துகொள்வது நல்லது. பெரும்பாலும் உணவுமுறையில் மாற்றம் செய்துகொண்டாலே இது சரியாகிவிடும். அஜீரணத்துக்குக் காரணமாகும் நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை கைகொடுக்கும். ஆயிரத்தில் ஒருவருக்குப் புற்றுநோய், கணைய அழற்சி, குடலடைப்பு போன்ற ஆபத்துகள் அணிவகுக்கும்.

ஒருவருக்கு மாதக்கணக்கில் அஜீரணம் நீடிக்கிறது என்றால் அதை அலட்சியப்படுத்தக்கூடாது. மாஸ்டர் ஹெல்த் செக்கப், எண்டோஸ்கோப்பி, கொலனோஸ்கோப்பி ஆகிய பரிசோதனைகள் தேவைப்படும். “அஜீரணத்துக்கெல்லாமா ‘செக்கப்’ செய்வது?” என்று யோசிக்க வேண்டாம். என்னிடம் சிகிச்சைக்கு வந்த பள்ளி ஆசிரியரின் அனுபவம் இது. அவருக்கு அடிக்கடி ஏற்பட்ட வயிற்றுப்பொருமலுக்கு அவராகவே மருந்துக் கடையில் மருந்து வாங்கிச் சாப்பிட்டுக்கொள்வார். “டாக்டரிடம் காண்பியுங்கள்” என்று மனைவி சொன்னாலும் கேட்க மாட்டார்.

“வயிற்றில் வலி ஒன்றும் இல்லை. எதற்குத் தேவை இல்லாமல் டாக்டரிடம் போக வேண்டும்?” என்பது அவரது வாதம். ஒருநாள் ஓர் அசைவ விருந்துக்குப் போனார்; சாப்பிட்ட அரை மணி நேரத்தில் வாந்தி எடுத்தார். வாந்தியில் ரத்தம் வந்தது. பயந்துபோய் என்னிடம் வந்தார். எண்டோஸ்கோப்பி பரிசோதனையில் அவருக்கு இரைப்பைப் புற்றுநோய் இருப்பது உறுதியானது. அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, கீமோதெரபி என்று இரண்டு வருடங்களாக அலைந்து கொண்டிருக்கிறார். இந்தப் பரிசோதனையை ஆரம்பத்திலேயே செய்திருந்தால், இந்த அளவுக்கு நோய் மோசமாகி இருக்காதுதானே!

அஜீரணத்தை ஓரங்கட்ட...

* சுத்தமாகத் தயாரிக்கப்பட்ட சமச்சீரான உணவை நேரத்தோடு, நிதானத்தோடு, அனுபவித்துச் சாப்பிடுங்கள்.
* காரம், புளிப்பு, மசாலா மிகுந்த உணவுகள் வேண்டாம்.
* மோர், இளநீர், பழச்சாறு, காய்கறி சூப் அடிக்கடி  குடிக்கலாம்.
* ஆவியில் வேக வைத்த உணவுகள் நல்லது. எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகள் நல்லதல்ல.
* நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை தினமும் சாப்பிடுங்கள்.
* இரவில் இரண்டு பழங்களைச் சாப்பிடுங்கள்.
* சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடியுங்கள்.
* வாயுவை  வரவேற்கும் உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
* தினமும் நடைப்பயிற்சி, யோகாசனம் அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள்.
* டாக்டர் சொல்லாமல் ஆன்டிபயாடிக்குகள், ஸ்டீராய்டுகள், வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடாதீர்கள்.

வாசகர் கேள்விகள்

‘வென்டிலேட்டர்’ என்றால் என்ன டாக்டர்? இது எதற்குப் பயன்படுகிறது?
-ரேவதி, காஞ்சிபுரம்.

செயற்கை சுவாசம் அளிக்கும் கருவிக்கு ‘வென்டிலேட்டர்’ என்று பெயர். நோயாளி சுயமாக மூச்சுவிட முடியாத நிலையில் இந்தக் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதில் தற்காலிக வென்டிலேட்டர், மெக்கானிக்கல் வென்டிலேட்டர் என இருவகை உண்டு. நிமோனியா, செப்சிஸ், தீவிர ஆஸ்துமா, நாட்பட்ட நுரையீரல் அடைப்பு, நுரையீரலில் நீர் கோர்த்தல், குறை ரத்த அழுத்தம், கோமா, விபத்தில் நெஞ்சுப் பகுதியில் அடிபடுவது போன்ற காரணங்களால் நுரையீரல் செயல் திறன் குறையும். இந்தச் சூழலில் நோயாளியால் சுயமாக சுவாசிக்க முடியாது. இதனால் இதயம், சிறுநீரகம், மூளை போன்ற முக்கிய உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் செயலிழக்கும். இதைத் தவிர்க்க செயற்கை சுவாசம் அளிக்கப்படும்.

இரண்டு மணி நேரத்துக்கு மேல் இது தேவைப்பட்டால் மெக்கானிக்கல் வென்டிலேட்டர் பொருத்தப்படும். அதாவது, மூக்கு, வாய் வழியாக அல்லது முன்கழுத்தில் துளை போட்டு சுவாசக் குழாய் வரையில் செயற்கைக் குழாய் செலுத்தி, அதை வென்டிலேட்டருடன் இணைத்துவிடுவார்கள். நோயாளியின் நுரையீரல் செயல் திறன் மேம்படும்போது, கொஞ்சம் கொஞ்சமாக வென்டிலேட்டர் துணையில்லாமல் சுவாசிக்கும் நிலைமைக்குக் கொண்டுவருவார்கள்.

‘செப்சிஸ்’ என்றால் என்ன நோய், டாக்டர்?
-மரிய செல்வம், திண்டுக்கல்.

‘செப்டிசீமியா’ (Septicaemia) என்பதைத்தான் ‘செப்சிஸ்’ என்கிறார்கள். பொதுவாக, நிமோனியா, மூளைக்காய்ச்சல் என்று எந்த ஒரு தொற்றும் சரியான சிகிச்சை கிடைக்காதபோது அல்லது உடலில் நீரிழிவு நோய் கட்டுப்படாமல் கடுமையாக இருக்கும்போது ரத்தத்தில் அது பரவி இந்த நிலைமையை உண்டு பண்ணும். இந்த நச்சுள்ள ரத்தம் இதயம், நுரையீரல், மூளை போன்ற முக்கிய உறுப்புகளையும் பாதிக்கும். நோயாளியின் பொது ஆரோக்கியம் கெடும். அவருக்கு சுய நினைவு இருக்காது. அப்போது அவருடைய உயிருக்கு ஆபத்து நேரும்.

கோமாவிலிருந்து ஒருவர் முழுவதுமாக மீள முடியுமா? மூளைச்சாவும் கோமாவும் ஒன்றா?
-குணசேகரன், ஓமலூர்.

கோமா என்பது நினைவிழக்கும் நிலைமை. மூளைக்கு ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் குறைவாக செல்லும்போது கோமா ஏற்படுகிறது. சுயநினைவுக்குக் காரணமான மூளை நரம்புகள் பாதிக்கப்படுவதால் இது ஏற்படுகிறது. இது தற்காலிகமானதுதான். இதற்கான காரணத்தைச் சரி செய்தால் கோமாவிலிருந்து மீள முடியும். இதில் உடனடியாக மரணம் ஏற்படும் வாய்ப்பு குறைவு.

ஒருவர் கோமாவில் இருந்தால், அவருக்கு ‘கோமா ஸ்கோர்’ அளவைப் பார்ப்பார்கள். இந்த அளவைப் பொருத்தும், கொடுக்கப்படும் சிகிச்சையைப் பொருத்தும் அவர் கோமாவிலிருந்து மீள முடியுமா என்று சொல்லலாம். கண் திறப்பது, பேசுவது, சொன்ன செயலைச் செய்வது ஆகிய மூன்றையும் அவர் எப்படிச் செய்கிறார் என்பதை வைத்து இந்த ஸ்கோர் அளக்கப்படுகிறது. மூன்றையும் சரியாகச் செய்தால் 15 மதிப்பெண்கள். இதுதான் அதிகபட்ச ஸ்கோர். குறைந்தபட்ச ஸ்கோர் மூன்று.

கோமா ஸ்கோர் 12க்கு மேல் இருந்தால், சிகிச்சை மூலம் மிக விரைவில் நினைவு திரும்ப வாய்ப்புண்டு. 7 முதல் 11 வரை என்றால் நினைவு திரும்ப சில நாட்கள் ஆகும். கோமா ஸ்கோர் 3 எனில் நினைவு திரும்புவது மிகவும் கடினம். என்றாலும் தொடர் சிகிச்சை மூலம் இந்த மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. அப்போது கோமாவிலிருந்து மீளவும் முடியும்.

மூளைச்சாவு என்பது மூளை முழுவதுமாகவும் நிரந்தரமாகவும் செயலிழக்கும் நிலைமை. மூளைச்சாவு ஏற்பட்டவரும் கோமாவில்தான் இருப்பார். ஆனால், இரண்டும் ஒன்றல்ல. கோமாவிலிருந்து மீள முடியும்; மூளைச்சாவிலிருந்து மீளமுடியாது. இறப்பு உறுதி. இவர்களுக்குச் செயற்கை சுவாசம் அளிப்பதன் மூலம் இதயம் சில மணி நேரங்களுக்குச் செயல்படும். இந்தச் சூழ்நிலையில்தான், நோயாளியின் குடும்பத்தாரிடம் அனுமதி பெற்று, சீராக இயங்கும் இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளைத் தானமாகப் பெற்று, அடுத்தவர்களுக்குப் பொருத்துகிறார்கள்.

(இன்னும் பேசுவோம்...)