ரசிகர் மன்றங்களை அழைக்கிறார் அபர்ணா!
இளைஞர்கள் நினைத்தால் யாருடைய எதிர்காலத்தையும் மாற்றலாம். கடந்த வருடம் சென்னை, கடலூரில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது அரசு இயந்திரத்தை எதிர்பார்க்காமல், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடோடி உதவி செய்ததை நாடே திரும்பிப் பார்த்தது நினைவிருக்கலாம். இப்போது படிப்பு, குடும்பத்தைத் தாண்டி சமூக நலப்பணிகளில் தங்களை ஈடு படுத்திக்கொள்கிற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் மதுரையைச் சேர்ந்த அபர்ணா கவனிக்கத்தக்கவர். தமிழக முதல்வரிடம் ‘சிறந்த இளைஞர் விருது’ பெற்ற துடிப்பான இளம்பெண்.
மதுரையை அடுத்த மேலூர் அருகே இருக்கும் ஒரு கோயிலை மும்முரமாக தனது குழுவுடன் இணைந்து தூய்மை செய்துகொண்டிருந்த அவரைச் சந்தித்தோம். “அப்பா பத்திரிகைத் துறையில் இருக்கார். அம்மா கைவினைப் பொருட்கள் பயிற்சியாளர். நான் ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியரா வேலை செய்றேன். கல்லூரியில் படிக்கும்போதே ‘நேரு யுவகேந்திரா’வுல என்ன இணைச்சிக்கிட்டு சமூகப் பணிகள்ல ஈடுபட ஆரம்பிச்சேன். அப்புறம்தான் ‘நாம ஏன் தனியா ஒரு அமைப்பு துவங்கக் கூடாது’ன்னு தோணுச்சு.
‘பட்டாம்பூச்சி இளைஞர் மன்றம்’ ஆரம்பிச்சேன். இப்போ முதலமைச்சர் கையால ‘சிறந்த இளைஞர் விருது’ கிடைக்கிற அளவுக்கு வந்திருக்கேன்னு நினைக்கும்போது, நான் சரியான பாதையிலதான் போய்க்கிட்டு இருக்கேன்னு நம்பிக்கை வருது. எங்க குழுவுல மொத்தம் இருபது பேர். எய்ட்ஸ் விழிப்புணர்வு, குழந்தைத் திருமணம், புகையிலை எதிர்ப்பு இப்படி ஏதாவது ஒரு விஷயத்தை கையில எடுத்துக்கிட்டு தெரு நாடகங்கள் போடுவோம்.
கிராமியப் பாடல்கள் வாயிலா விழிப்புணர்வு கொடுப்போம். கோயில்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் இப்படி வாரத்துக்கு ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து தூய்மைப்படுத்துறதுதான் எங்க முதல் வேலை. இது இல்லாம பெண்களுக்கு சுயதொழில், கிராமங்கள்ல முதியோர் கல்வி, இப்படி எங்களால என்ன முடியுமோ செய்துக்கிட்டு இருக்கோம். கோயில்கள், ரயில் நிலையங்கள் இங்கேயெல்லாம் சும்மா போய் தூய்மை செய்திட முடியாது.
முறையா காவல்துறை அனுமதி வாங்கித்தான் செய்யணும். அப்படித்தான் நாங்களும் செய்துட்டு இருக்கோம். இந்த விருது கிடைச்சதாலே பெற்றோருக்கும் எங்க மேல நம்பிக்கை வந்துடுச்சு’’ என்று படபடக்கும் அபர்ணா மக்களின் ஆதரவு, எதிர்காலத் திட்டம் குறித்து சொல்கிறார் “மக்கள் எங்களுக்கு ஆதரவா இருக்காங்க, சில இடங்கள்ல தண்ணீர், சாப்பாடு, ஓய்வெடுக்க இடம் கூட கொடுப்பாங்க.
இன்னும் சில இடங்கள்ல எங்களுடன் சேர்ந்து வேலை செய்வாங்க. ஆனாலும் எங்களுக்கு இது போதாது. எங்க திட்டத்தை விரிவாக்க நினைக்கிறோம். ராமேஸ்வரம் கடல் பகுதி, வைகை, காவிரி நதியோரங்கள்னு நீர்நிலைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களையெல்லாம் தூய்மைப்படுத்துற திட்டம் இருக்கு. மதுரையில வைகை நதியைச் சுற்றி மட்டும் சுமார் ஐம்பதுக்கும் மேலான ரசிகர் மன்றங்கள் இருக்கு. தங்களுக்கு விருப்பமான நடிகரோட படம் வெளியாகும்போது லிட்டர் லிட்டரா பால் ஊத்தி, கூட்டம் கூட்டி கொண்டாடுறாங்க.
அவங்கெல்லாம் ஒண்ணா சேர்ந்து வேலை செஞ்சா போதும்... மொத்த நதிக்கரைகளையும் தூய்மைப்படுத்திடலாம். அவங்களும் தன்னோட விருப்ப நடிகர்கள் பிறந்த நாள் மட்டும் இல்லாம சாதாரண நாட்களிலும் கூட தங்களுடைய ரசிகர் மன்றங்களை ஆக்கபூர்வமான விஷயங்களுக்குப் பயன்படுத்தினா சம்பந்தப்பட்ட ஹீரோக்களுக்கும் நல்ல பேரு வாங்கிக் கொடுக்கும். முதற்கட்டமா ரசிகர் மன்றங்களை சந்திச்சுப் பேசலாம்னு இருக்கோம். இளைஞர்கள் தயக்கம் காட்டாம சமூகநலப் பணிகள்ல ஆர்வம் காட்டணும். அதுக்கு பெற்றோர்களின் ஊக்கமும் கொஞ்சம் வேணும்’’ என்கிற அபர்ணாவின் வார்த்தைகளில் அவ்வளவு தன்னம்பிக்கை!
தங்கஸ்ரீ நடிகரோட படம் வெளியாகும்போது லிட்டர் லிட்டரா பால் ஊத்தி, கொண்டாடுறாங்க. அவங்கெல்லாம் ஒண்ணா சேர்ந்து வேலை செஞ்சா போதும்...
- ஷாலினி நியூட்டன் படங்கள்: சந்திரன்
|