கடக லக்னத்துக்கு சந்திரனும் புதனும் தரும் யோகங்கள்



ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ஓவியம்: மணியம் செல்வன்

சந்திரன் மனோகாரகன் ஆவான் என்பதை எல்லோரும் அறிந்திருப்பீர்கள். அப்படிப்பட்ட கடக லக்னத்தின் அதிபதியான சந்திரனோடு 12ம் அதிபதியும், மூன்றாம் இடத்தின் அதிபதியுமான புதன் இணையும் அற்புதமான சேர்க்கை இது. இப்படி சேரும்போது மனோகாரகனான சந்திரனை இன்னும் அதிகமாக புதன் கூர்மைப்படுத்துகிறார். சந்திரன் அறிவு எனில், புதன் நுண்ணறிவுக்கு உரியவராகிறார். மிக அபாரமான சமயோசித புத்தியைக் கொடுக்கக் கூடிய அமைப்பு இது.



இந்த இரு கிரகங்களும் சேர்ந்திருந்தால் எப்படி வேண்டுமானாலும் இயங்குவார்கள். எந்த முடிவை வேண்டுமானாலும் எடுப்பார்கள். அதனால் இவர்கள் என்ன நினைப்பார்கள், எதைச் செய்வார்கள் என்றே தெரியாது. ஆடு பின்னோக்கி நகர்ந்து பல மடங்கு முன்னோக்கிப் பாயும் மூர்க்கம்போல் செயல்படுவார்கள். இவர்கள் பொறுமையாக இருந்தால் ஏதோ பெரிய திட்டத்தை கைக்குள் வைத்திருப்பதாக அர்த்தம்.
உள்மனம் எப்போதும் இவர்களுக்கு உறங்காது.

எனவே, எப்போதுமான விழிப்பில் இருப்பார்கள். பொதுவாகவே கடக லக்னத்தில் பிறந்தவர்களை இந்த அமைப்பு அறிவுஜீவியாகக் காட்டும். இரட்டை அறிவின் இணைப்பு அல்லவா? அதனால் மேன்மையாக உயர்த்தும். சமூக சீர்திருத்த சிந்தனைகள் உடையவர்களாக இருப்பார்கள். மேலும், எப்போதுமே அடித்தட்டு மக்களைப் பற்றியும் சிந்தித்தபடி இருப்பார்கள். இனி இந்தக் கூட்டணி எந்தெந்த இடங்களில் இருந்தால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாமா?  

கடக லக்னமான ஒன்றாம் இடத்தில் லக்னாதிபதியான சந்திரனும் புதனும் சேர்ந்திருந்தால், மிதமிஞ்சிய நிர்வாகத் திறனைக் கொண்டிருப்பார்கள். மூன்றாம் இடமான தைரிய ஸ்தானத்திற்கு உரிய புதன் லக்னத்திலேயே இருப்பதால் துணிவோடு முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். இப்படி லக்னத்திலேயே புதனும் சந்திரனும் சேர்ந்திருப்பதால் அழகும் அறிவும் இணைந்த தோற்றம் இருக்கும். தாய்மாமன் வழியில் மிகவும் அந்தஸ்தோடு இருப்பார்கள். இளைய சகோதர, சகோதரிகள் இவர்களுக்கு பெரிய அளவில் பக்க பலமாக இருப்பார்கள். விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்திருப்பார்கள்.

சிம்மமான இரண்டாம் இடத்தில் புதனும் சந்திரனும் இணைந்திருந்தால் எதையுமே புள்ளிவிவரத்தோடு பேசுவார்கள். கலந்துரையாடல், பட்டிமன்றம் என எதுவாக இருந்தாலும் வெளுத்து வாங்குவார்கள். இவர்கள் இரண்டு பிஹெச்.டி., நான்கு எம்.ஏ. என்றெல்லாம் நிறையவும் பல துறைகளிலும் படித்து வைப்பார்கள். ஆனால், அம்மாதிரி இல்லாமல் ஏதேனும் ஒரு துறை சார்ந்த படிப்பில் சென்றால் நன்கு உயர்வார்கள். அபாரமான நினைவாற்றலோடு திகழ்வார்கள்.

கன்னி ராசியின் மூன்றாம் இடம், புதனுக்கு ஆட்சி வீடாகும். இங்கு சந்திரனோடு புதன் சேர்வதால் மிகச் சாதாரணமாகவே செல்வ வளத்தோடு திகழ்வார்கள். இந்த இடத்தில் இந்த கிரகங்கள் ஒரு முழுமையான வாழ்க்கையை நோக்கி அழைத்துச் செல்லும். முற்போக்குச் சிந்தனை மிகுதியாக இருக்கும். போக விஷயங்களில் மிகவும் ஈடுபாடு காட்டுவார்கள். புளிப்பும் இனிப்பும் கலந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வார்கள். காதில் கடுக்கண் மாட்டிக் கொள்வார்கள். பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். மரபார்ந்த விஷயங்களில் மிகவும் ஈடுபாட்டோடு இருப்பார்கள்.

துலாம் ராசியில் புதனோடு சேர்ந்த சந்திரன் இருந்தால்  இசை, நாட்டியம் உள்ளிட்ட கலைத்துறையில் ஈடுபாட்டோடு விளங்குவார்கள். நூதனமாக வீடு கட்டி வாழ்வார்கள். பத்திரிகைத் துறை, புத்தகங்கள் எழுதுதல் என படைப்பு சார்ந்த தொழில்களில் ஈடுபடுவார்கள். தாயையே தெய்வமாக வழிபடுவார்கள். தாயார் காட்டும் வழியிலேயே நடப்பார்கள். புதுப்புது வாகனங்கள் வாங்குவார்கள். வாகனங்கள் மீது தீராக் காதலோடு இருப்பார்கள்.



விருச்சிக ராசியானது சந்திரனுக்கு நீச வீடாகும். புதனுக்கு பகை வீடாகும். இந்த இடத்தில் இந்த இரண்டு கிரகங்களின் இணைப்பு இருந்தால், பொதுவாகவே எல்லோராலும் ‘பயந்தாங்கொள்ளி’ என்றே அழைக்கப்படுவார்கள். மனதால் பலவீனராக இருப்பார்கள். இவர்கள் கோரமான சம்பவங்கள் நிறைந்த படங்களைக் கூட பார்க்கக் கூடாது. இதோடு தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்து கொள்ளும். இவர்களின் வாரிசுகள் இவர்களிடம் ரொம்பவும் ஒட்ட மாட்டார்கள். ஏதோ சில காரணங்களால் விலகியே இருப்பார்கள்.

இந்த அமைப்புள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அவசரத் தேவை தவிர வேறு எதற்கும் கடனே இவர்கள் வாங்கக் கூடாது. தனுசு ராசியான குரு வீட்டில் புதனும் சந்திரனும் இணைந்து இருந்தால் முரட்டு சுபாவம் மிக்கவர்களாக இருப்பார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் உடனடியாக யோசிக்காமல் முடிவெடுப்பார்கள். நிறைய பயணங்களைச் செய்தபடி இருப்பார்கள். இவர்களின் இளைய சகோதர, சகோதரிகளுக்கு உடல் ஆரோக்யத்தில் ஏதேனும் பிரச்னை வந்தபடி இருக்கும். இல்லையெனில் ஏதேனும் செலவுகள் வைத்துக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் எப்போதும் எந்த விஷயத்துக்கும் யாரையாவது சார்ந்தே இருப்பார்கள். தனித்து இயங்குவதில் பயம் இருக்கும். 

மகரத்தில் புதனும் சந்திரனும் இணைந்து இருந்தால் திறமையும், அறிவும், அந்தஸ்தும் உள்ள வாழ்க்கைத்துணை அமைவார். இவர்கள் கூட்டுத் தொழிலாக ஏதேனும் வியாபாரத்தை மேற்கொண்டால் மிகச் சிறப்பாக வருவார்கள். பொதுவாகவே இந்த அமைப்பு நல்ல முன்னேற்றத்தையே கொடுக்கும். எதில் ஈடுபட்டாலும் அதில் நன்றாக முன்னேற்றம் இருந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையில் அடுத்தடுத்து உயர்வுகள் ஏற்படும். இவர்கள் வேண்டாம் என்றாலும் உயர் பதவிகள் இவர்களைத் தேடி
வரும்.
கும்பத்தில் புதனும் சந்திரனும் சேர்ந்திருந்தால், எடுத்த காரியங்களில் தடைகள் இருந்தபடி இருக்கும். எதை எடுத்தாலும் இரண்டுக்கு நான்கு தடவை முயற்சித்து, ஐந்தாவது தடவைதான் முடியும். பயங்கர செலவாளியாக இருப்பார்கள். இவர்கள் செலவைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், குடும்பமே கடனில் மூழ்க வேண்டியிருக்கும். தாயின் ஆரோக்கியம் அவ்வப்போது பாதித்தபடி இருக்கும். புதன் எட்டில் மறைந்தால் அயல்நாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கும்.

அல்லது அங்கேயே சென்று வேலை பார்ப்பவர்களும் அதிகமுண்டு. ‘மறைந்த புதன் நிறைந்து கொடுப்பார்’ என்பது பழமொழி. இவ்வாறு புதன் எட்டில் மறைந்தால் எந்த விஷயமாக இருந்தாலும் தொடக்கம் நன்றாக இருக்காது. ஆனால், முடிவில் எல்லாமே சாதகமாக முடியும்.
மீனமான பத்தாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் அமர்வதில் புதன் நீசமடைவார். அதனால் ஏடாகூடமாக ஏதாவது பேசி விட்டு எல்லோரிடமும் மாட்டிக் கொள்வார்.

செல்வ நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். எல்லோரையும் நம்பி ஏமாறுவார்கள். தந்தையோடு கருத்து மோதல் இருந்துகொண்டே இருக்கும். இவர்கள் எப்போதுமே நண்பர்கள் விஷயத்தில் கவனத்தோடு இருக்க வேண்டும். ஏனெனில், கூடவே இருந்து கொண்டு குழிபறிப்பவர்கள் அதிகமாக இருப்பார்கள். மேஷத்தில் புதனும் சந்திரனும் இணைந்து இருந்தால் ஆடிட்டிங் துறை, ஆர்க்கிடெக்ட், கன்சல்டன்சி,  வெப் டிசைனிங், நகை டிசைனர் போன்ற துறைகளில் ஈடுபாடு காட்டுவார்கள். இன்னும் சிலர் பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தையே அமைக்கும் வல்லுநர்களாக இருப்பார்கள்.

வீடியோ கேம்ஸுக்கான மென்பொருள் தயாரித்தல், டுடோரியல் காலேஜ், ஷேர் புரோக்கர் போன்ற அறிவுசார்ந்த பணிகளில் ஈடுபடுவார்கள்.  இவர்கள் மத்திம வயதுக்குப் பிறகு தினமும் வேலைக்குச் செல்லாமல் ஏதேனும் தொழிலைத் தொடங்கி விடுவார்கள். யாரிடமும் கைகட்டி வேலை பார்ப்பது பிடிக்காது.

ரிஷபத்தில் புதனும் சந்திரனும் சேர்ந்திருந்தால் மூத்த சகோதரர்களால் மிகுந்த நன்மை இருக்கும். எல்லாவிதத்திலும் ஒற்றுமையாக இருந்து கூட்டு வியாபாரத்தைக் குடும்பத்தோடு அமர்ந்து செய்வார்கள். அதிர்ஷ்டவசமாக திடீர் பணவரவெல்லாம் இருக்கும். இவர்கள் ஷேர் மார்க்கெட்டில் ஈடுபட்டு மிகப் பெரும் பணத்தை ஈட்டுவார்கள்.

மிதுனத்தில் புதனும் சந்திரனும் இணைந்திருந்தால் ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று இருப்பார்கள். காசை கட்டுக்கடங்காமல் செலவழிப்பார்கள். சந்தோஷத்திற்கும் மகிழ்ச்சிக்கும்தான் முக்கியத்துவம் அளிப்பார்கள். மத்திம வயதுக்குப் பிறகு ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள். வைணவத் தலங்களுக்கும், ஜீவ சமாதிகளுக்கும் அடிக்கடி சென்று வருவார்கள். பயணம் செய்வதில் மிகுந்த ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள்.

பொதுவாக புதனும் சந்திரனும் சேர்ந்தால் மனமே விழாக்கோலம் பூணும். தோற்றப் பொலிவு கூடியபடி இருக்கும். ஐம்பது வயதானாலும் நாற்பது வயது நபர் போல இருப்பார்கள். எதையுமே கூர்ந்து கவனித்து பேசும் பழக்கம் இருக்கும். தன்னுடைய இமேஜ் பாதிக்காதபடி ஜாக்கிரதையாக இருப்பார்கள். ஆனாலும், சில இடங்களில் இந்த இரு கிரகங்களும் மறையும்போது எதிர்மறை பலன்களை அளித்து விடும். மனச் சோர்வும், மந்த புத்தியும், கவலை சூழ்ந்த முகமுமாக எப்போதும் தோற்றமளிப்பார்கள்.

எனவே, இந்த அமைப்பு இருந்து அம்மாதிரி எதிர்மறை பலன்கள் இருந்தால் அவர்கள் வழிபட வேண்டிய இறைவன் லட்சுமி ஹயக்ரீவரே ஆகும். ஏனெனில், இந்த அமைப்பு நிறைந்த  அறிவையும், செல்வத்தையும் கொடுக்கக் கூடியது. அதேபோல லட்சுமி ஹயக்ரீவரும் கூர்மையான புத்தியையும், செல்வ வளத்தையும் அளிப்பார்.

எனவே, கடலூருக்கு அருகேயுள்ள திருவந்திபுரம் என்று அழைக்கப்படும் தலத்தில் அருளும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை தரிசித்து வாருங்கள். இத்தல மூலவரான தேவநாத சுவாமியையும் சேவித்து வாருங்கள். புதனும் சந்திரனும் நேர்மறையாக செயல்பட்டு மாற்றங்களை நிகழ்த்துவார்கள். கடலூர் நகருக்கு 6 கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

(கிரகங்கள் சுழலும்...)