கவிதைக்காரர்கள் வீதி
* எத்தனை கேவலமானவனாயிருப்பேன் என்னைக் கண்டதும் பயந்தோடும் காகத்தின் மனதில்!
* ஒவ்வொரு முறை கோயிலுக்கு வரும்போதும் அர்ச்சனைச் சீட்டைக் கொடுத்ததுமே அத்தனை பேரின் பெயர், ராசி, நட்சத்திரத்தையும் மனப்பாடமாக ஒப்பிக்கிறாள்; கடவுளுக்குத்தான் இன்னமும் மனப்பாடமாகவில்லை!
* அம்மாவைப் போல அரவணைத்து, குளிப்பாட்டி, சிங்காரித்துவிட்டும், தம்பியைப் போல வம்பிழுத்து, வீட்டுப் பாடங்கள் செய்தும், தாத்தாவைப் போல அஞ்சுதலைப் பாம்புக்கதை சொல்லியும் பொம்மைகளைத் தூங்க வைத்து விளையாடும் மகள், சிலநேரங்களில் என்னைப் போலவும்... பொம்மைகளை அதட்டி மிரட்டியபடி!
* எறும்புகளுக்கு பயந்து ஒளித்து வைக்கும் நம்மைப்போல் இருப்பதில்லை இயற்கை!
* உண்மைதான்... தினமும் விடிகாலையில் இன்னிசையால் எழுப்பிவிடும் பெயர் தெரியாத பறவைகளுக்கு சிறு தானியம் கூட வைத்ததில்லை; அந்த இசை பசிக்கானதாகக்கூட இருக்கலாம்...
* யார் கண்டது? என்றேனும் வேற்றுக்கிரகவாசிகள் வரக்கூடும் உலகை அள்ளிச் செல்லக்கூடும் கேரி பேக்கில்...
வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்
|