தெளிவு பெறுஓம்



?சரம ஸ்லோகம் எனும் நுட்பமான திருமந்திரத்தின் விளக்கம் என்ன?
- அரிமளம் இரா.தளவாய் நாராயணசாமி.
 சரம ஸ்லோகம் என்பது மந்திரம் அல்ல. இறந்தவர்கள் குறித்துச் சொல்லப்படுகின்ற துதி. அவ்வளவுதான். அதாவது இந்த வருடத்தில், இந்த மாதத்தில், இந்த நட்சத்திரம், திதி, கிழமை கூடிய நாளில் இந்த குலத்தில் வந்த மாமனிதர் இறைவனின் பாதத்தினைச் சென்றடைந்தார் என்ற பொருளுடன் சமஸ்கிருத மொழியில் சொல்லப்படுகின்ற செய்யுளை சரம ஸ்லோகம் என்று அழைப்பார்கள்.

சட்டபூர்வமாக டெத் சர்ட்டிஃபிகேட் வாங்குவது போல் சாஸ்த்ரோக்தமாக வைதீகர் தரும் இறப்புச் சான்றிதழ்தான் இந்த சரம ஸ்லாகம். மற்றபடி இதனை திருமந்திரம் என்று சொல்வது கூடாது.?பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்கிறார்களே. இதன் பொருள் என்ன? இந்தப் பசிப்பிணியைப் போக்கும் வழிதான் என்ன?
- அருந்தாச்செல்வி, திருமங்கலம்.
“மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
காசி வந்த சொல்லியர் மேல்
காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்தது போம்.”

என்பது ஔவையின் வாக்கு. அதாவது மானம், குலம், கல்வி, வண்மை, அறிவு, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காமம் ஆகிய பத்தும் பசி வந்தால் பறந்து போகும் என்பதே இதற்கான விளக்கம். ஆயினும் இந்தப் பசிப்பிணியைத் தீர்க்கும் வல்லமை நமது தமிழ் மாதத்தில் ஒன்றான ஐப்பசிக்கு உண்டு. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வதைப் போல் ஐப்பசி வந்தால் பசியும் பறந்து போகும் என்று சொல்லலாம்.

முதலில் ஐப்பசி மாதத்தின் மகத்துவத்தைத் தெரிந்து கொண்டால் இதற்கான பொருள் முற்றிலுமாகப் புரியவரும். ஜோதிடவியலைப் பொறுத்தவரை ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் துலாம் “ராசியில் சூரியன் நீசம் பெற்ற நிலையில் அமர்ந்திருப்பார். அதாவது சூரியன் தனது வலிமை முழுவதையும் இழந்த நிலையில் வாசம் செய்யும் காலம் இது.

ஐப்பசி என்றதும் தீபாவளி பண்டிகையே நம் எல்லோரின் மனக்கண் முன்னால் வந்து நின்று மனதில் மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும். வருடத்திற்கு ஒரு முறை வரும் தீபாவளி நம் இந்தியக் குடும்பங்களின் பாரம்பரியத்திற்கும், கலாச்சாரத்திற்கும் உதாரணத் திருநாள்.

கண்ணுக்குத் தெரியும் கடவுளாம் சூரியன் வலிமை இழந்திருக்கும் இந்தக் காலத்தில் இவ்வளவு பெரிய பண்டிகையா.. இது முரண்பாடாக உள்ளதே என்ற எண்ணம் தோன்றுவது இயற்கை. சற்று விளக்கமாகக் காண்போம். தீபம் + ஆவளி = தீபாவளி. ஆவளி என்றால் வரிசை என்று பொருள். தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்துக் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

மூன்றாவதாக ஐப்பசி அமாவாசைக்கு மறுநாளில் இருந்து ஆறுநாட்கள் தொடர்ந்து நடைபெறும் கந்தசஷ்டி விழாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். சூரபத்மனின் பெரும்படையோடு முருகப்பெருமான் போர்புரிந்த ஆறு நாட்களும் கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆறாவது நாள் ஆன சஷ்டி அன்று சூரபத்மனின் வதம் நிகழ்கிறது. இவ்வாறாக ராவணன், நரகாசுரன், சூரபத்மன் என்று அசுரர்கள் அழிக்கப்பட்ட மாதம் இந்த
ஐப்பசி மாதம் என்பதால் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இந்த ஐப்பசி மாதம் அமைந்துள்ளது.

கந்த சஷ்டிக்கு வேறொரு மகத்துவமும் உண்டு. அந்த நாளில் தாயாகிய சந்திரன் புத்திர காரகன் ஆகிய குருவின் வீட்டில் அதாவது தனுசு ராசியிலோ அல்லது அவரது வீட்டினைக் கடந்து மகர ராசியின் முதல் பாகத்திலோ அமர்ந்திருப்பார். குருவின் பலத்தினைப் பெறுவதோடு சூரியனுக்குரிய நட்சத்திரமான உத்திராடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் அது. “சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்” என்ற பழமொழியை எண்ணிப்பாருங்கள். அதன் பொருள் இதுதான்.

சஷ்டியில் விரதம் இருந்தால் அகத்தில் உள்ள பையான கர்ப்பப்பையில் குழந்தை வரும்.... அதாவது சஷ்டி விரதம் புத்திர தோஷத்தை நீக்கி குழந்தை பாக்கியத்தைத் தரும் என்று பெரியவர்கள் விளக்கமளிப்பார்கள். அதனால்தான் கந்தசஷ்டியில் இருந்து விரதத்தினை ஆரம்பித்து தொடர்ச்சியாக ஒரு வருட காலம் பிரதி மாதம் வரும் வளர்பிறை சஷ்டியில் விரதம் இருந்தால் அடுத்த கந்த சஷ்டிக்குள்ளாக கடுமையான புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் கிட்டிவிடும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். இதனாலேயே திருச்செந்தூர் புத்திர பாக்கியத்தினைத் தரும் குருவின் ஸ்தலமாகவும் விளங்குகிறது.

துலா மாதம் என்றழைக்கப்படும் ஐப்பசி மாதம் முழுவதும் கங்கைக்கு இணையான புண்ணிய நதியான காவேரியில் கங்கா தேவியானவள் பிரவாகிப்பதாக புராணங்கள் உரைக்கின்றன. தான் செய்த பாவங்களைக் கழிக்க எல்லோரும் கங்கையில் நீராடுகின்றனர். உலகத்தாரின் பாவ மூட்டைகளைச் சுமக்கும் கங்காதேவியானவள் அதிலிருந்து விடுபட்டு தன்னைப் பொலிவு ஆக்கிக்கொள்ள வேண்டி காவேரிக்கு வந்து ஸ்நானம் செய்யும் காலமே இந்த ஐப்பசி மாதம். கங்கா தேவியே தனது பாவத்தினைப் போக்கிக்கொள்ள காவேரியை நோக்கி ஓடிவருகிறாள் என்றால் நமது காவேரியின் மகத்துவத்தைச் சொல்லவும் வேண்டுமா..!

ஐப்பசி மாத பௌர்ணமி நாளன்று சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவதைக் காண்கிறோம். உத்தரகாரண ஆகமம் எனும் நூலில் அன்னபூஜா படலத்தில் இதற்கான விதி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பித்ருகாரகன் ஆன சூரியன் நீசம் பெற்றிருக்கும் காலத்தில் மாத்ருகாரகனான சந்திரன் பௌர்ணமி நாளில் முழு நிலவாக ஒளிவீசும் காலத்தில் அன்னத்தினைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்து அதனை பிரசாதமாக வழங்குவர். அதாவது தந்தை வலிமை இழந்திருக்கும் காலத்திலும், தாய் ஆனவள் தன் மக்களைக் காத்து ரட்சிப்பார் என்பதே இதன் பொருள்.

ஐப்பசி மாத அமாவாசை நாளில் கேதாரகௌரீ விரதம் கொண்டாடப்படுகிறது. நீசம் பெற்ற சூரியனோடு தாயான சந்திரன் இணையும் காலம் ஐப்பசி அமாவாசை. அன்றைய தினத்தில் கேதார கௌரீ விரதத்தினைப் பூர்த்தி செய்து அன்னை பார்வதியானவள் சிவபெருமானின் உடம்பினில் சரிபாதியைப் பெற்று தனது உரிமையை நிலைநாட்டியதை புராணங்களின் வாயிலாக அறிகிறோம்.

ஐப்பசி மாத அமாவாசை நாளன்று வடஇந்தியர் பலரும் மகாலட்சுமி பூஜை செய்வர். இன்றளவும் நகைக்கடை அதிபர்கள் அன்றைய தினம் லட்சுமி குபேர பூஜை நடத்துவதைக் காண்கிறோம். இதற்குக் காரணம் துலாம் லக்னத்திற்கு தொழில் ஸ்தானாதிபதி சந்திரன். லாப ஸ்தானாதிபதி சூரியன். தொழில் மற்றும் லாப ஸ்தானாதிபதிகள் இருவரும் இணைந்து துலாம் ராசியிலே சஞ்சரிக்கும் நேரம் என்பதால் செய்யும் தொழிலில் லாபம் வேண்டி இந்த நாளில் லட்சுமி குபேர பூஜையை செய்கிறார்கள்.

அன்றைய தினத்திலிருந்து புதிய கணக்கும் தொடங்குகிறார்கள். அன்றைய தினத்தில் லட்சுமி தேவியை பூஜிக்க சகல ஐஸ்வரியங்களும் நம்மிடம் வந்து சேரும். ஐப்பசியில் கதிரவன் கார்மேகத்திற்குள் புகுந்துகொண்டாலும் இந்த மாதம் களையிழந்து போவதில்லை. காலதேவனின் கடு(ட)மையினால் உண்டாகும் பஞ்சத்திற்கும், வெள்ளத்திற்கும் தன் மக்கள் பலியாகிவிடக்கூடாது என்பதற்காக பகவானை எண்ணி பகலவன் பிரார்த்தனை செய்யும் காலமே இந்த ஐப்பசி மாதம் என்பதை உணர்வோம். சூரியதேவனின் வழியில் நாமும் பகவானின்பாதத்தைச் சரணடைவோம். பசிப்
பிணியில் இருந்து உலகத்தைக் காப்போம்.

?ஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலன்களை பார்க்கிறார்களே.. குறிப்பாக எந்த வயதிலிருந்து ஜாதகருக்கு கிரஹங்கள்
பலா பலன்களைத் தருகிறது?
-விஜயா மாதேஸ்வரன், தர்மபுரி.

குழந்தை பிறந்து ஒரு வயது கழித்து ஜாதகம் எழுத வேண்டும் என்கிறார்கள் ஜோதிட வல்லுனர்கள். ஆசை என்பது எப்பொழுது அந்தக்குழந்தையின் மனதில் உதிக்கிறதோ அப்பொழுதில் இருந்தே கிரஹங்கள் தங்கள் பணியினைத் துவக்கிவிடுகின்றன. ஒரு பொம்மையை இறுகப் பிடித்துக்கொண்டு இது என்னுடையது என்று எப்பொழுது அந்தக்குழந்தை நினைக்கத் துவங்குகிறதோ அதிலிருந்தே வினைப்பயன் என்பது துவங்கிவிடுகிறது. நமது உடலில் அந்தராத்மா என்பது தனது செயல்பாட்டைத் துவக்கும்போது ஜாதகமும் வேலை செய்ய ஆரம்பிக்கிறது.

ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று புத்தர் சொன்னதன் காரணமும் இதுவே. ஆசையைத் துறந்தவர்களுக்கு கிரஹங்களினால் பாதிப்பு இல்லை. துறவிகளுக்கும் சந்யாசிகளுக்கும் ஜாதகம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும் இதனால்தான். ஆக ஆசை என்ற ஒன்று எப்பொழுது மனதில் உதயமாகிறதோ அப்பொழுதில் இருந்தே கிரஹங்கள் தங்கள் பலாபலன்களைத் துவக்கிவிடுகிறது என்பதே உங்கள் கேள்விக்கானபதில்.

திருக்கோவிலூர் K.B. ஹரிபிரசாத் சர்மா