காஞ்சியில் மகாசிவராத்திரி



கோயில்களின் நகரமாம் காஞ்சியில் ஏராளமான சிவன் மற்றும் பெருமாள் கோயில்கள் நிறைந்துள்ளன. இதனையொட்டியே காஞ்சிபுரம் நகரமே சிவகாஞ்சி என்றும் விஷ்ணு காஞ்சி என்றும் இரண்டு பகுதிகளாக உள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலை ஒட்டியுள்ள பகுதி விஷ்ணு காஞ்சி பகுதியாகவும், பஞ்சபூதத் தலங்களில் மண்தலமாக விளங்கக்கூடிய பிரசித்திபெற்ற ஏகாம்பரநாதர் கோயிலை ஒட்டியுள்ள பகுதி சிவகாஞ்சி என்றும் வழங்கப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த காஞ்சிபுரத்தில் பழம்பெருமை வாய்ந்த கைலாசநாதர் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், கச்சபேஸ்வரர் கோயில்களிலும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

பஞ்சபூத தலங்களுள் மண் தலமான ஏகாம்பரநாதர் கோயிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். இக்கோயிலின் தலவிருட்சம் என போற்றப்படும் மாமரத்தின் வயது 5000 ஆண்டுகள். இந்த மாமரத்தின் கீழ் உமையம்மை தவம் செய்ததாகவும், இம்மரத்தில் கனியும் மாங்கனிகள் நான்கு வித சுவையுடையவை என்றும் கூறப்படுகிறது. இந்தக் கோயிலில் உள்ள சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோயில்களைப்போல அம்மனுக்கு என்று தனியாக சந்நதி கிடையாது.

 இதேபோன்று காஞ்சிபுரத்தில் உள்ள பழமை மிக்க சிவன் கோயிலான கைலாசநாதர் கோயில் தென்திசை கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் சுமார் 1300 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க கோயில்களில் மகாசிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியன்று வருவது மகா சிவராத்திரி. மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இது சிறப்புடையது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மகாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது. மகாசிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவராத்திரியின் போது இரவு நான்கு ஜாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு ஜாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேஷமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.

முதல்கால பூஜை பிரம்மா, சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த பூஜையில் பஞ்ச கவ்வியம் எனப்படும் பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமியம், கோசாணம் அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம் என்று கூறப்படுகிறது. இரண்டாம் காலை பூஜை விஷ்ணு, சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.

இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாத்தியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணெய் தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர் வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்தக் காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மூன்றாம் கால பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்தக் காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும், பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து எள் அன்னம் நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணெய் தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது.

இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும். நான்காம் கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.

குங்குமப்பூ சாத்தி, கரும்புச் சாறு, பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்டை பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்த அன்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மகா சிவராத்திரி பெருவிழா காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களான ஏகாம்பரநாதர் கோயில், கைலாசநாதர் கோயில், கச்சபேஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் விமரிசையாகக் கொண்டாடப்படும். மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெருமானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் நாமும் அடைவோமாக.

செய்தி: இரத்தின.கேசவன்

படங்கள்:காஞ்சி எம்.பாஸ்கரன்