தீபாவளியில் அரங்கனின் ஜாலி (சாளி) உற்சவம்
திருவரங்கத்தில் அரங்கநாதன் ஒவ்வொரு வருடமும் தீபாவளிப் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார். தீபாவளிக்கு முந்தைய நாள் மாலை, மேள தாளங்கள் முழங்க, மூலவரான பெரிய பெருமாள் எண்ணெய் அலங்காரம் செய்து கொள்வார். கோயிலில் கைங்கரியம் செய்வோர்களுக்கும் அன்று பெருமாளின் சார்பாக எண்ணெய், சீகைக்காய் உள்ளிட்டவை வழங்கப்படும். அன்று இரவு, உற்சவரான நம்பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படும்.
அதன்பின், கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் ஆகியோரின் சந்நதிகளுக்கெல்லாம் எண்ணெய், சீகைக்காய், மஞ்சள் உள்ளிட்டவற்றைப் பெருமாள் அர்ச்சகர் மூலம் அனுப்பி வைப்பார். அவ்வாறே ரங்கநாயகித் தாயார் சந்நதிக்கும் எண்ணெய் அனுப்பி வைக்கப்படும். தீபாவளித் திருநாளன்று அதிகாலையில் ரங்கநாயகித் தாயாருக்கும், ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கும் எண்ணெய் அலங்காரம் செய்யப்படும். அனைவரும் புத்தாடையும் மலர் மாலைகளும் அணிந்து கொள்வார்கள். அதன்பின், ஆழ்வார்களும் ஆசார்யர்களும் தத்தம் சந்நதிகளில் இருந்து புறப்பட்டு, கருவறைக்கு முன்னிருக்கும் சந்தனு மண்டபத்துக்கு எதிரிலுள்ள கிளி மண்டபத்துக்கு வந்து நம்பெருமாளின் வருகைக்காகக் காத்திருப்பார்கள்.
காலை பத்து மணியளவில் சந்நிதியில் இருந்து புறப்படும் நம்பெருமாள், சந்தனு மண்டபத்தில் எழுந்தருளித் திருமஞ்சனம் கண்டருள்வார். அதன்பின் சிறப்பு அலங்காரத்தோடு பக்தர்களுக்கு அருள்புரிவார். தீபாவளி என்றால், மாமனார் மாப்பிள்ளைக்குச் சீர் செய்வது வழக்கமல்லவா? அந்த வகையில், சூடிக் கொடுத்த சுடர்கொடியான ஆண்டாளை அமுதனாம் அரங்கனுக்கே மணம் முடித்துத் தந்து, அரங்கனுக்கு மாமனார் ஆனவர் விஷ்ணுசித்தரான பெரியாழ்வார். குருவுக்குச் செலுத்தப்படும் அதே மரியாதையை மாமனாருக்கும் செலுத்த வேண்டும் என்பது மரபு.
அந்த வகையில், ஒவ்வொரு வருடமும் நம்பெருமாள் பெரியாழ்வாருக்கு மரியாதை செய்து, அவரிடமிருந்து தீபாவளிச் சீரைப் பெற்றுக் கொள்கிறார். இந்நிகழ்ச்சி சந்தனு மண்டபத்தில் நடைபெறும். பெரியாழ்வாரின் சார்பில் அரையர்கள் பெருமாளின் திருவடிகளைச் சுற்றி நாணய மூட்டைகளைச் சீராக வைப்பார்கள். வேத பாராயணமும் மங்கல வாத்தியங்களும் முழங்க இந்த வைபவம் நடைபெறும். நாணய மூட்டைகளுக்குச் சாளி என்று பெயர். நாணய மூட்டைகளை தீபாவளிச் சீராகப் பெரியாழ்வார் சமர்ப்பிப்பதால், ‘சாளி உற்சவம்’ என்று அழைக்கப்பட்ட இந்த உற்சவம், நாளடைவில் ‘ஜாலி உற்சவம்’ என்றாகிவிட்டது.
தனது மாமனாரான பெரியாழ்வார் தனக்கு அளித்த இந்த தீபாவளிச் சீரை அனைவருக்கும் காட்டி, மாமனாரின் பெருமையைப் பறைசாற்றுவதற்காக அந்த நாணய மூட்டைகளோடு இரண்டாம் பிராகாரத்தில் அரங்கன் வலம் வருவார். மாலையில் கிளி மண்டபத்துக்கு எழுந்தருளும் நம்பெருமாள் அங்கே காலைமுதல் காத்திருக்கும் ஆழ்வார் ஆச்சாரியார்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்களுக்குப் புத்தாடை, சந்தனம், வெற்றிலைப் பாக்கு, புஷ்பங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றைத் தீபாவளிப் பரிசாகத் தந்து கௌரவிப்பார்.
குடந்தை உ.வே. வெங்கடேஷ்
|