வள்ளியை மணமுடித்த வடிவேலன்
* வள்ளிமலை மீது நின்று வஞ்சி ஏக்கத்தில் பாடுகிறாள்! தணிகைமலை சாரல் பட்டு தவித்து மனம் ஏங்குகிறாள்! கவண்வில்லாக இடைகுறுக கந்தன் நினைவில் வாடுகிறாள்!
* வள்ளி வாழைப்பூ நிறத்தழகி! வள்ளிக்கிழங்கு இடையழகி! வைரஒளி முகத்தழகி! வடிவேலன் மனத்தழகி! வளமான குழலழகி! வஞ்சனையில்லா சொல்லழகி!
* பங்குனி உத்திரத்தில் மணமாலை கொண்டு வருவேனென்றார்! பாசவார்த்தை கூறி ஆசை முத்தம் பெற அதை செய்தாரோ! பக்தர் சேவை பணியில் சொன்னதை மறந்தாரோ தோழி!
* மனத் தினையும் அன்புத் தேனும் பக்தி கலந்து மங்கை நானும் காத்திருக்க மனதை வேலால் வதைக்கும் முருகன் விளையாட்டை யாரிடம் முறையிட வழிபிறக்கும் தோழி!
* குறுநகை முருகன் நினைவால் குறு மணிமாலை நழுவியது! தணிகை செல்லும் வான்மேகமே! அணி என் காதல் சொல்லும்! மணிமாலை முருகன் காண கொண்டு சென்றால் வாழ்த்துவேன்!
* குழந்தையாய் கொஞ்சுவான்! குமரனாய் மிஞ்சுவான்! வேங்கை மரமாய் நிற்பான்! வேடவர் உருவில் வருவான்! வயோதிக வடிவெடுத்து தாகமென வம்பிழுப்பான்!
* சேவல் கூவக் கேட்டேன்! சேல்விழியான் வருகை அறிந்தேன்! மயில் அகவக் கண்டேன்! மலர்விழியான் மையல் உணர்ந்தேன்! ஆறுமுகத்தில் அருளை கண்டேன்! ஆனந்தத்தின் எல்லை கண்டேன்!
* கந்தன் தரிசனம் தந்தான் கன்னி மனக்காதல் வென்றான்! கானக்குயில் வள்ளியை மணந்தான்! கவியாய் தமிழை பொழிந்தான்! கவின்மயிலேறி திருத்தணி சேர்ந்தான்!! கந்தவேள் பணிய நலம் சேர்ப்பான்!
விஷ்ணுதாசன்
|