ஜெகமாளும் ஈசனுக்கு ஜோத்பூரில் பிரமாண்ட சிலை



இந்தியாவின் 2வது மிக உயரமான சிலையாகவும், உலகின் மிகப்பெரிய சிலைகள் வரிசையில் நான்காவதாகவும், இந்து சிலைகளில் உலகிலேயே மிகப்பெரியதாகவும் ராஜஸ்தானின் நத்துவாராவில் சிவன் சிலை கட்டப்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய இந்து சிலை என்ற பெருமையை பெற உள்ள, இந்த சிவபெருமானின் உயரம் 351 அடியாகும். இது முற்றிலும் கான்கிரீட் மற்றும் சிமெண்ட் கலவையால் அமைக்கப்படுகிறது. நத்துவாராவில் உள்ள கணேஷ் தேக்ரி என்ற இடத்தில் மலைக்குன்றின் மீது சிலை அமைக்கப்படுகிறது. நத்துவாராவுக்கு வருவதற்கு 20 கி.மீ. தொலைவில் இருந்து பிரமாண்ட சிவபெருமானின் உருவத்தை தரிசிக்க முடியும் என்பதுதான் அதன் விசேஷம்.

அமர்ந்த நிலையில், சாந்த வடிவமாக இடது கையில் சூலாயுதமும், வலது கையை மடியிலும் வைத்தவாறு சிவபெருமான் சிலை அமைக்கப்படுவதாக இத்திட்டத்தின் தலைவரான ராஜேஷ் மேத்தா கூறினார். இந்த சிலையை பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மிராஜ் குழுமம் பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டி வருகிறது. சிலையின் உள்ளே அமைக்கப்படும் லிஃப்ட் மற்றும் மாடிப்படி வழியாக 280 அடி உயரம் வரை பக்தர்கள் செல்ல முடியும். மேலும், சிவபெருமான் சிலையை இரவில் வெகு தூரத்தில் இருந்து தரிசிக்கும் வகையில், பிரமாண்ட மின்விளக்குகள் அமெரிக்காவில் இருந்து  தருவிக்கப்பட உள்ளன.

இதேபோல்,  சிவபெருமான் அமைய உள்ள குன்றைச் சுற்றிலும் பூங்கா, பல்வேறு வகையான உணவகங்கள், சிறுவர்கள் விளையாட்டு அரங்குகள், திறந்தவெளி பிரசங்க மேடை என்று பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டில் நாமும் இந்த சிவபெருமானை தரிசிக்க செல்ல முடியும். உலகின் மிக உயர்ந்த இந்து சிலையை தரிசித்த பெருமையும் கிடைக்கும். ராஜஸ்தானின் ஜோத்பூர் நகருக்கு சென்றால், அங்கிருந்து ஏராளமான பஸ்கள், கால்டாக்சிகள் நத்துவாராவுக்கு செல்கின்றன. கட்டணம் அதிகபட்சம் ரூ.75.     

ஜே.எஸ்.கே.பாலகுமார்