நீதிக்கு அருள் சுரந்த வீதி விடங்கப் பெருமான்



கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்

* திருவாரூர்

தமிழகத்தின் பெருமைக்கு குறிப்பாக சோழப் பெருமன்னர்களின் சிறப்புக்குத் திலகமாய் விளங்குவது மனுநெறிப்படி வாழ்ந்துகாட்டிய சோழ மன்னன் ஒருவனது கதையே. இதனால்தான் தமிழ் இலக்கியங்கள் பலவும் இந்நிகழ்ச்சியைப் பெருமையோடு கூறிக்கொள்கின்றன. உதாரணமாக ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலம்பில்

‘‘வாயில்கடை மணி நடுநா நடுங்க
ஆவின கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத்தான்தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகார் என்பதியே.’’

- என்ற கண்ணகியின் கூற்றின் வாயிலாக மனுவெனும் பெருவேந்தனின் கதையைச் சுருக்கமாக யாத்துள்ளார். இத்தனை பெருமைமிகு நிகழ்ச்சியினைச் ஜெயங்கொண்டார் தம் கலிங்கத்துப் பரணியில்

‘‘அவ்வருக்கன் மகன் ஆகி மனுமேதினி புரந்து
அரியகாதலனை ஆவினது கன்று நிகரென்று
எவ்வருக்கமும் வியப்பமுறைசெய்த...’’

- என்று கூறுகிறார்.

‘‘மையல் கூர் சிந்தனை யாவிற்கு முற்றத் திருத்தேரில் மைந்தனை யூர்ந்த மறவோனும்’’  - என்று விக்கிரம சோழனுலாவும்,
‘‘பார்மேல் மருளப் பசுவொன்றின் அம்பர் நோய் தீர உருளுந்திருத்தேர் உரவோன்’’ -என்று குலோத்துங்கச் சோழனுலாவும்
 ‘‘அறவாழி மைந்தன் மேல் ஊர்ந்தோன்’’ - என்று இராசராச சோழனுலாவும்

‘‘வெய்யோனும் செம்மலைப் பண்டூர்ந்த தேரோனும்’’  என்று சங்கர சோழனுலாவும் மனுநெறியைப் பறைசாற்றுகின்றன. அறவாழி அமைந்தன்மேல் செலுத்திய இவ்வரிய நிகழ்ச்சி திருவாரூர்த் திருவீதியில் நடைபெற்று, ஆரூர் இறைவனாம் புற்றிடங்கொண்ட பெருமானாலேயே ஆட்கொள்ளப்பட்டதென்றால் இத்திருக்கோயிலின் பெருமைக்கு இதனினும் சிறந்த சான்று வேண்டுமோ!

சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் ஆரூரின் சிறப்பு உரைக்குமிடத்து மனுவேந்தனின் மகன் தேரில் சென்றபோது பசுங்கன்று ஒன்று தேர்க்காலில் பட்டு இறக்க, அதுகண்டதாய்ப் பசு கலங்கி நீதி வேண்டி அரண்மனை வாயிலில் கட்டப்பெற்றிருந்த மணியைத் தன் கொம்புகளால் அடித்து நீதி வேண்டியது. மணியோசை கேட்ட மன்னவன் மந்திரிகளை விசாரித்து புலம்பலுற்றான். மந்திரிகள் பாப விமோசனம் கூறினர். அது கேட்ட மனுவேந்தன் அது தர்மமாகாது எனக்கூறி தன் மந்திரியை அனுப்பி தன் மகன் மீது தேரினைச் செலுத்தி கொல்ல ஆணையிட்டான்.

அமைச்சனோ அது செய்யத்துணியாமல் தன் உயிரைப்போக்கிக்கொண்டான். அது அறிந்த மனுவேந்தன் தானே தேரில் நேரில் சென்று தன் மகன் மீது செலுத்தி பசுவுக்கு நீதி வழங்கினான். ஆரூர் பெருமான் அருளால் கன்றும், மகனும், அமைச்சனும் உயிர்பெற்று எழுந்தனர். இது சோழ அரச மரபின் நீதிக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இலக்கியங்களில் கூறப்படும் மனுவேந்தனின் வரலாறு பற்றித் தமிழகத்திலேயே ஒரு கல்வெட்டுத்தான் விரிவாகப் பேசுகிறது. இவ்வரிய கல்வெட்டும் திருவாரூர் திருக்கோயிலின் இரண்டாம் பிராகாரத் தென்புறச்சுவரில் உள்ளது. இது சோழப் பெருமன்னனான விக்கிரம சோழன் காலத்தில் வெட்டப்பட்டது.

வீதிவிடங்கப் பெருமானே பேசுவது போன்று எழுதப்பட்டுள்ளது. மேலும் பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறாது விடுத்த பல புதிய தகவல்களும் இக்கல்வெட்டில் காணலாம். இக்கல்வெட்டு கி.பி.1123 ஆம் ஆண்டு மே திங்கள் முப்பத்து ஒன்றாம் நாள் வெட்டப்பட்டதாகும். இதில் குறிப்பிடப்படும் மன்னன் சோழப் பேரரசன் விக்கிரம சோழன் ஆவான். சேக்கிழார் விக்கிரம சோழனின் மகனான இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில்தான் பெரிய புராணத்தை யாத்தார். எனவே சேக்கிழார் கூறும் மனுவின் வரலாற்றிற்கும் காலத்தால் முந்தியதே இக்கல்வெட்டாகும்.

சேக்கிழார் கூறாது விடுத்த செய்திகளாக மனுவின் புதல்வனுடைய பெயரும், இந்நிகழ்ச்சியால் உயிர் துறந்த அமைச்சனின் பெயரும், அவனது மைந்தன் பெயரும், இறுதியாக மனு தவம் மேற்கொண்டமையும், மனுவின் மந்திரியின் ஊரும், அவன் வம்சத்தில் தோன்றிய ஒருவனைப்பற்றிய தகவல்களும் உள்ளன. இறைவனே கூறுமாறு அமைந்துள்ள இக்கல்வெட்டில் காணும் மனுவின் வரலாற்றுப் பகுதியை மட்டும் காண்போம்.

‘‘திருவாரூர் கூற்றத்து திருவாரூர் உடையார் வீதிவிடங்கர் சித்திரைத் திங்கள் திருநாளில் சதய......ஸ்ரீ..... திருக்காவணத்தில்
சிம்மாசனத்து எழுந்தருளியிருந்து’’

‘‘நம் ஏவலால் பூலோக ராஜ்யம் செய்கிற சூரிய புத்திரன் மனு தன் புத்திரன் ஏறி வருகிற தேரில் பசுவின் கன்றகப்பட்டு பரமாதப் பட அதின் மாதாவான சுரவி கண்டு துக்கித்து மனுவின் வாசலில் மணியை எறிய அது கேட்டு மனு தன் மந்திரி இங்கணாட்டு பாலையூருடையான் உபய குலாமலனைப் பார்த்து நீ சென்று இதனை அறிந்து... வாயிற்புரத்து ஒரு பசு மணி எறியா நின்றிது என்று சொல்ல அது கேட்டு மனு புறப்பட்டு பசுவையும் பட்டுக்கிடந்த..................படி வினவி தன் புத்திரன் ஏறின தேரிலே ஊர்ந்து கொடுக்கவென்று உபய குலாமலனுக்குச் சொல்ல அவன் சந்தாபத்தோடும் புறப்பட்டு தன் செவிகளை தரையிலே குடைந்து

கோடுபட்டது கண்டு துவாரபாலகன் புகுந்து உபயகுலாமலன் தன் செவிகளை குடைந்துகொண்டு.....................தம்பிதனாய் மனுதானே புறப்பட்டு தன் புத்திரனைத்தானே தேரிலே ஊர்ந்து கொடுக்க அப்போதே நாம் அவனை அனுக்கிரஹித்து கன்றுக்கும் மந்திரிக்கும் மனுபுத்திரனுக்கும் ஜீவன் கொடுக்க அது கண்டு மனு சந்தோஷித்து கன்றினை எடுத்துக்கொண்டு பசுவுக்கு காட்டிக்குடு............... அபிஷேகம் பண்ணி இவனுக்கு உபயகுலாமலன் மகன் சூரியனை மந்திரியாக்கி இவனுக்கு தன்  புத்திரன் மாளிகை...... மங்கல......

ஊரும் கொடுத்து மனுவும் உபயகுலாமலனும் தவசினை தலை நின்றமையில் பாலையூருடையான் உபயகுலாமலன் வம்சத்தானாகிய பாலையூருடையார் சந்திரசேகரன் ஆதிவிடங்கனான குலோத்துங்க சோழ மகாபலி வாணாதிராயன் வம்சாதி ஆக வருகிற மாளிகை, மனை பழையபடி மாளிகையாக எடுத்து குடி வைப்பிப்பதாக’’ என்றுள்ளது. இதனால் விக்கிரம சோழன் காலத்தில் (கி.பி.31-5-1123) இவ்வரலாறு மிகவும் போற்றப்பட்ட ஒன்று என்பது தெளிவாகிறது. மற்ற எந்த ஒரு இலக்கியத்திலோ புராணத்திலோ குறிக்கப்படாத புதிய செய்திகளான மனுவின் புத்திரனின் பெயர் ப்ரியவிருத்தன் என்பதும்,

மனுவின் மந்திரியின் பெயர் இங்கணாட்டு பாலையூர் என்ற ஊரைச் சேர்ந்த உபயகுலாமலன் என்பதும் அவன் மகன் சூரியன் என்பதும் அவனே பின்பு மனுவினால் முடி சூட்டப்பட்ட ப்ரியவிருத்தனுக்கு மந்திரியாக இருந்தான் என்பதும் உபயகுலாமலனும் மனுவும் இறுதிக்காலத்தில் தவம் மேற்கொண்டார்கள் என்பதும் ஆகிய செய்திகள் உள்ளன. அடுத்து மனுவின் வம்சத்தில் தோன்றிய வழித்தோன்றலே விக்கிரம சோழன் காலத்தில் வாழ்ந்த இங்கணாட்டு பாலையூருடையான் சந்திரசேகரன் ஆதிவிடங்கனான மகாபலி வாணாதிராயன் என்பதும் தெரிய வருகிறது.

உபயகுலாமலன் வம்சத்தில் வந்த வாணாதிராயனுக்கு விக்கிரம சோழனால் மாளிகையும், மனையும் அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. மன்னனது ஆணையான (King’s sorder) இக்கல்வெட்டு வீதிவிடங்கப் பெருமானே பேசுவது போன்று வடிக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் உள்ள வேறு இரண்டு கல்வெட்டுக்களிலும் மேற்குறிப்பிட்டுள்ள வாணாதிராயன் பற்றிய குறிப்புகள் உள்ளன. கும்பகோணத்திற்கு அருகே திகழும் திருப்புவனம் எனும் ஊரில் அமைந்துள்ள திரிபுவன வீரேச்சரம் எனும் கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் எடுக்கப்பெற்றதாகும்.

அக்கோயிலின் மகாமண்டபத்து அதிட்டானப்பகுதியில் மனுநீதிச் சோழனின் வரலாறு தொடர் சிற்பங்களாக அமைந்துள்ளன. தேர்க்காலில் பசுவின் கன்று அகப்பட்டு இறத்தல், பசு தன் கொம்புகளால் மணியை அடிப்பது, அமைச்சர்களை அழைத்து மனுச்சோழன் விசாரணை செய்தால், பின்புதானே தேரில் சென்று தன் மகன் மீது செலுத்தி நீதி வழங்குவது, இறையருளால் கன்று, மகன் அமைச்சன் ஆகிய மூவரும் உயிர் பெற்று எழுந்து ஈசனை வணங்கி நிற்பது ஆகிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

காவிரியின் வடகரையில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் திருக்கோடிகாவாகும். இவ்வூரினை மக்கள் வழக்கில் திருக்கோடிக்காவல் எனக் குறிப்பர். அங்கு திகழும் சிவாலயத்தின் கோபுர வாயிற்பகுதியில் தொடர் சிற்பக்காட்சிகளாக மனுநீதிச் சோழனின் வரலாறு சித்தரிக்கப்பெற்றுள்ளது. மனுவின் மகன் கன்றின் மீது தேரினைச் செலுத்துதல், மன்னவன் கோயில் வாசலில் திகழும் ஆராய்ச்சி மணியினை தாய்ப்பசு தன் கொம்புகளால் அடித்து கதறுதல், மனுவேந்தனின் விசாரணைக் காட்சி, தன் மகள் மீது தேரினைச் செலுத்துதல் போன்ற காட்சிகள் அங்கு இடம் பெற்றுள்ளன.

கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருக்கொட்டையூர் எனும் தேவாரப் பாடல் பெற்ற திருக்கோயில் சுவரில்  ஒரு அற்புதமான சிற்பம் இடம் பெற்றுள்ளது. ஒருபுறம் மாளிகை ஒன்று திகழ வீதியில் உள்ள தேரின் மீது மனுநீதிச்சோழன் நின்றுகொண்டிருக்கும் காட்சியும், அத்தேரில் சக்கரத்தின் கீழாக அவன் தன் புதல்வன் கிடக்க எதிரே உயிர் பெற்று எழுந்த பசுங்கன்று தன் தாயின் மடியைப்பற்றி பால் அருந்தும் காட்சியும் இடம் பெற்றுள்ளன. மேலே வானத்தில் மூன்று தேவர்கள் இருந்து கையுயர்த்தி போற்றுகின்றனர்.

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் லேபாட்சி எனும் ஊர் ஒன்றுள்ளது. அங்கு திகழும் சிவாலயத்தின் மண்டபத்தின் உட்கூரையில் (விதானம்) பல ஓவியக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவை விஜயநகர அரசர்கள் காலத்தில் தீட்டப்பெற்றவையாகும். அங்கு திகழும் காட்சிகளில் ஒன்றாக 70 அடி நீளமும் 3 அடி அகலமும் உடைய ஒரு நீண்ட ஓவியப் படைப்பு இடம் பெற்றுள்ளது. அதில் மனுநீதிச் சோழனின் முழு வரலாறும் இடம் பெற்றுள்ளது. சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் கூறியுள்ள கதை முழுதும் இங்கு வண்ண ஓவியக்காட்சிகளால் இடம் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டுக்கே உரிய மனுவேந்தனின் வரலாறு மாநிலங்கடந்து ஒரு கோயிலில் சித்திரிக்கப்பெற்றிருப்பதைக் காணும்போது நாம் வியப்படைகின்றோம். திருவாரூரில் நிகழ்ந்த இப்புராண வரலாறு தமிழ் மன்னர்களின் மாண்பினை உலக மக்களுக்கு  என்றென்றும் எடுத்துக்காட்டும் வண்ணம் இலக்கியங்களும் இத்தகைய கலைப்படைப்புகளும் திகழ்கின்றன.

- முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்