வாழ்க்கை என்பது வாழவே!
அர்த்தமுள்ள இந்துமதம்-70
‘‘விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்’’ - என்றான் மகாகவி பாரதி.
மனம் சொல்ல வேண்டுமாம்; உடல் ஆட வேண்டுமாம்! மனம் ‘போ’ என்றால், உடல் போக வேண்டும். ‘ஐயோ, எல்லோரும் போகிறார்கள்! நாம் போக முடியவில்லையே’ என்று மனது ஏங்க, உடம்பு போக முடியாமல் தள்ளாட, அந்த நிலைமை வருமானால், மனித வாழ்க்கையில் என்ன சுகம் இருக்கிறது? அதனால்தான், ‘மனதை அடக்கி உடம்பை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள்’ என்று நான் அடிக்கடி போதிக்கிறேன்.
நான் ஒரு போதகாசிரியன் அல்ல; உபந்நியாசியும் அல்ல; உலகை முற்றிலும் உணர்ந்தவனுமல்ல; துறந்தவனுமல்ல; என்னுடைய வாழ்க்கை அனுபவங்கள் பலவற்றையே இதுகாறும் நான் உங்களுக்குத் தொகுத்துத் தந்திருக்கிறேன். இப்போது அதனை இந்தப் பத்தாவது பாகத்திலும் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால், வாழ்க்கையை இந்திய மக்கள் சுகமாக நடத்த வேண்டும். மலேசியாவிலேயோ, சிங்கப்பூரிலோ, மற்ற நாடுகளிலேயோ பார்க்கும்போது, இந்தியாவில் இருக்கின்ற அளவுக்கு நோயாளிகள் அங்கே இல்லை.
இங்கே உடல் நோயாளிகளைவிட, மனநோயாளிகள் அதிகம், கவலைப்படுபவர்கள் அதிகம். கஷ்டப்படுபவர்கள் அதிகம். வறுமைக் கஷ்டம் என்றால், ஏதாவதொரு பரிகாரம் தேட முடியும். ‘இனம் தெரியாத ஒரு துயரம் உங்களுக்குள்ளேயே மண்டிக்கிடக்கிறதே! என்ன செய்வேன்?’ என்று அழுகிறவர்கள் அதிகம். அந்தத் துயரத்தாலே உடம்பு ஆட்டி வைக்கப்பட்டு மனதைக் கெடுத்துக் கொண்டவர்கள் அதிகம். இவர்களெல்லாம் ஒரு கட்டத்தில் சீராக வாழ வேண்டும்; துணிந்து வாழ வேண்டும்.
துணிச்சலோடு, எதையும் எதிர்த்து நிற்கின்ற தன்மையோடு, ‘‘வந்தோம்; பிறந்தோம்; வாழ்வோம்; சாவோம்!’’ என்று முடிவு கட்டிக்கொண்டு, வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாகும். ‘வருவதைக் கண்டு மயங்காதே போவதைக் கண்டு கலங்காதே!’ பெரிய பதவி வருமானால், ‘எனக்கு மேல் எவன் பெரியவன்?’ என்று திமிர் பிடித்து அலையாதே. பதவி போய் விடுமானால், ‘ஐயோ! போய் விட்டதே!’ என்று அழாதே. வருவதும் போவதும் ஆண்டவனுடைய போக்குவரத்துச் சாலை விதி. ஆண்டவன் அதிலே டிராபிக் கமிஷனர். அவன் போட்ட உத்தரவின்படியேதான் சில விஷயங்கள் வருகின்றன; சில விஷயங்கள் போகின்றன.
ஆறு வயதிலேயே குழந்தைகள் இறந்துபோகின்றன; பதினாறு வயதிலேயும் இறந்து போகின்றன; போகின்ற குழந்தைகளுக்காக நாம் அழ முடிகிறதே தவிர, திரும்பிக் கொண்டு வரமுடிவதில்லை. நூறு வயது வரையில் சில பேர் வாழ்கிறார்கள்; ஏன் வாழ்கிறார்கள் என்பது நமக்குத் தெரிவதில்லை. எல்லாம், எல்லாக் கதைகளும் எங்கே போய் முடிகின்றன? எவனோ ஒருவன் இருக்கிறான்; ஏதோ ஒரு சக்தி இயங்குகிறது; அந்தச் சக்தியினுடைய கரங்களில் இருந்து அத்தனையும் புறப்படுகின்றன; திரும்ப அந்தக் கால்களிலேயே அவை போய்ச் சேர்ந்துவிடுகின்றன.
அந்த லயத்தை உணர்ந்துகொண்ட பின்னாலே, உடல் மறத்து, உள்ளம் மறத்துப் போய், ‘நாம் பிறந்தது ஆண்டவனை எண்ண, அடுத்தவருக்கு உதவ, நியாயமாக வாழ என்கிற எண்ணம் பிறந்து விடுகின்றது. அந்த நியாயத்தை மதித்து, ‘உன்னையே நீ அறிந்து’ உலகையும் அறிந்து, எல்லோருக்கும் வேண்டியவனாகவும், எல்லோருக்கும் நல்லவனாகவும், எல்லோரையும் புரிந்துகொண்டவனாகவும், எல்லோராலும் புரிந்துகொள்ளப் பட்டவனாகவும் வாழ வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.எல்லாம் வல்ல கண்ணன், எல்லோர்க்கும் அருள்வானாக.
நல்லவன் வாழ்வான்
இந்தப் பத்துப் பாகங்களில், பல்வேறு விஷயங்களைக் கூற நான் முயன்றிருக்கிறேன். எத்தனை விஷயங்களில் நான் முழுமை பெற்றிருக்கிறேன் என்பதை, என்னால் நிர்ணயிக்க முடியவில்லை. ஆனாலும், மதம் மனித குலத்துக்கு இன்றியமையாதது என்பதை நான் வற்புறுத்தி இருக்கிறேன். மனிதனுடைய அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களில் நானும் பங்கு கொண்டு, இன்பங்களைப் பகிர்ந்துகொள்ளவும், துன்பங்களிலிருந்து விடுதலை பெறவும் அவர்களுக்கு வழி சொல்லி இருக்கிறேன்.
ஆனால், இவ்வளவுக்கிடையிலேயும், ஒரு மயக்கம் உங்களுக்கிருப்பதைப் போலவே எனக்கும் உண்டு. அது என்ன மயக்கம்? எவ்வளவுதான் நாணயமாக இருந்தாலும், நேர்மையாக இருந்தாலும், ஒழுங்காக நடந்தாலும், வாழ்க்கையில் துன்பம் என்பது வந்துதான் தீரும். அது சரிதான். ஆனால், நாணயம் கெட்டவன், நேர்மை கெட்டவன், ஒழுக்கம் கெட்டவன், மரியாதை கெட்டவன் இவனெல்லாம் உற்சாகமாகவும், வசதியாகவும் வாழுகிறானே, அதுவும் நீண்ட காலம் வாழுகிறானே, ‘எப்படி’ என்கிற மயக்கம்தான் அது.
‘நான் யாருக்கும் தீங்கு இைழக்கவில்லை! எனக்கு ஏன் இந்தக் கஷ்டம்?’ என்று கலங்குவார் உண்டு. ‘நான் தினமும் கோயிலுக்குப் போகிறேனே, ஆண்டவன் என்னை ஏன் சோதிக்கிறான்?’ என்று வருந்துவார் உண்டு. ‘நான் யாருக்கும் துரோகம் செய்ததில்லை; யாருடைய குடும்பத்தையும், நிலத்தையும் அபகரித்ததில்லை; நான் படாதபாடும் இல்லை’ என்று ஆதங்கப்படுவார் உண்டு. அவர்களுடைய ஆதங்கத்தில் ஓரளவுக்கு நான் பங்கு கொள்ள முடியும். ஆண்டவன் அப்படித்தான் சோதிப்பான்.
வேண்டியவர்களைத்தான் சோதிப்பான். காரணம், இந்தப் பக்தி உண்மையானதா என்று கண்டுகொள்ள விரும்புவான் என்றெல்லாம் நான் சமாதானம் கூற முடியும். ‘எந்த மனைவியிடம் காதல் இருக்கிறதோ, அந்த மனைவியிடம் தான் சந்தேகம் அதிகம் வரும்’ என்பதுபோல, ‘எந்த மனிதனிடம் ஆண்டவனுக்கும் பீரிதி இருக்கிறதோ, அந்த மனிதனிடம்தான் சோதனைகள் அதிகமாக ஏற்படுத்திப் பார்ப்பான்’ என்பதும் உண்மையாகும். ஆனால், அடுத்த கேள்விதான் யாரும் பதில் காண முடியாத ஒரு கேள்வியாகும்.
அது, நல்லவர்கள் வருந்துகிறார்கள் என்பதைவிட, தீயவர்கள் வாழுகிறார்களே, அது எப்படி? எனக்குத் தெரியும். ஒரு நண்பர், வாழ்க்கையில் எந்தவிதமான நன்மையையும் யாருக்கும் அவர் செய்தது கிடையாது. எதை அனுபவிக்க வேண்டும் என்றாலும், தானும், தன் குடும்பமும் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று வாழ்ந்தவர்; வாழ்பவர்; ஆம், இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எவ்வளவு சிரமங்கள் வந்தாலும்கூட, அவருக்கு வசதி குறையவில்லை; பதவி குறையவில்லை; புகழ் குறையவில்லை! எப்படி இது இயங்குகிறது? எப்படி இது நடக்கிறது?
லட்சோப லட்சமாகப் பணத்தைக் குவித்தார், அதுவும் தவறான வழியில்; அதுவும் நிலைத்து விட்டது. தவறான வழியில் சேர்ந்த பணம் நிலைக்காது என்பார்கள்; நிலைத்து விட்டதே! கண் முன்னாலே கண்டிருக்கிறோமே! தப்பான வழியில் அபகரித்த பதவி நிலைக்காது என்பார்கள்; அது பல வருடங்கள் அவர் கையில் இருந்ததே, அது எப்படி? இவையெல்லாம் மனதில் ஏற்படுத்தக்கூடிய மயக்கம் என்ன? ஆண்டவனுடைய இயக்கம் என்பதிலே ஒரு சந்தேகத்தை இதுதான் உண்டாக்குகிறது. இதைப் பொறுத்தவரை, உங்களுக்கு நான் சொல்லக்கூடியது ஒன்றே ஒன்றுதான்.
இப்படிப்பட்ட அக்கிரமக்காரர்கள், இருபது வருஷம், இருபத்தைந்து வருஷம் நிம்மதியாக வாழ்ந்தாலும்கூட இவர்களுடைய கடைசிக் காலம் மோசமாக இருக்கும். அவர்கள் படாதபாடு பட்டுத்தான் தங்களுடைய வாழ்க்கையை முடிக்க வேண்டியிருக்கும். இல்லையென்றால் அவர்கள் செய்த பாவங்களுக்கு அவர்களுடைய குழந்தைகள் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும். நான் ஒரு கட்டுரையிலே சொன்னபடி, பதினான்காவது லூயி செய்த தவறுகளுக்கான தண்டனைகளை, பதினாறாவது லூயி அனுபவிக்க வேண்டியிருந்தது.
பழைய ஜார்ஜ் மன்னன் செய்த தவறுகளை, அடுத்து வந்த வாரிசு அனுபவிக்க வேண்டியிருந்தது. எல்லாவற்றையும் நீங்கள் எண்ணிப் பார்த்தால், நீண்டகாலம் அயோக்கியன் நிம்மதியாக வாழுவான்; ஆனால், அதே நேரத்தில் அவனுக்கு வரப்போகிற தண்டனை நல்லவர்களுக்கு வராது. நமக்கெல்லாம் வருகிற கஷ்டம், விடிந்தால், எழுந்தால் மிகச் சிறிய கஷ்டமாகவேதான் இருக்கும். நமக்கு அது பெரியதாகத் தோன்றும். ஆனால், அவர்களுக்கு வருகின்ற கஷ்டம் இருக்கிறதே, அது நிச்சயமாக தற்கொலை செய்துகொள்ளலாமா? என எண்ணும் அளவுக்குத் தோன்றும்.
‘‘எப்போது அது வரும்? என்றைக்கு அந்தத் தீர்ப்பு ஆண்டவனிடமிருந்து கிடைக்கும்?’’ என்று நீங்கள் கேள்வி கேட்கக் கூடாது. சிலபேர் ஏழு வருஷங்களில் தண்டிக்கப் படுகிறார்கள்; சிலபேர் ஒன்பது வருஷங்களில் தண்டிக்கப்படுகிறார்கள்; சிலபேர் இருபது வருஷங்களில் தண்டிக்கப்படுகிறார்கள்! கடைசி அடி என்பது சரியான மரண அடியாக இருக்கும். எந்த ஒரு அயோக்கியனும் நிம்மதியாகச் செத்து, அவனுடைய குடும்பம் நிம்மதியாக வாழ்ந்ததாக வரலாறே இல்லை. இதுவரையிலும் ஆண்டவன் ஒரு நியதியை அப்படி வகுத்து வைத்திருக்கிறான்.
ஒரு இயக்கத்தை அப்படி நடத்திக் கொண்டிருக்கிறான். இல்லையென்றால் உலகத்தில் போராட்டங்கள் ஏது? அயோக்கியர்கள் இல்லையென்றால், இறைவன் இயக்கத்தைப் பற்றிய சிந்தனை ஏது? ஒரு பக்கம் அயோக்கியர்கள் இருந்துகொண்டேதான் இருப்பார்கள். அவர்கள் ஆரவாரம் செய்துகொண்டேதான் இருப்பார்கள். அந்த ஆரவாரத்தைப் பார்த்து, ‘நாம் நல்லவனாக இருந்தும் நமக்கு எதுவும் இல்லையே? சீ! இது என்ன தெய்வ நம்பிக்கை?’ என்று நாம் கலங்கிவிடக் கூடாது. பற்றிய கைகள் அப்படியே தெய்வத்தைப் பற்ற வேண்டும்.
அப்படியே, அவனைப் பின்பற்றித் தொடருமானால் நல்லவர்களுடைய குடும்பம், ஏழேழு தலைமுறைக்கும் நிம்மதியாக இருக்கும். அயோக்கியர்களுடைய குடும்பம், ஏழேழு தலைமுறைக்கும் கஷ்டப்பட்டே தீரும் என்பது ஆண்டவன் வகுத்துவிட்ட விதி. ஆகவே, எனது இந்தத் தொடர் நூலைப் பத்துப் பாகங்களாகப் படிக்கின்றவர்கள், இந்த மயக்கத்திலே இருந்துவிடுபட்டால் மட்டும் போதும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோளாகும். மற்ற விஷயங்களையும், இந்த பாகங்களில் ஓரளவுக்குச் சொல்லியிருக்கிறேன்.
நானே மயங்குகிற ஒரு விஷயத்தைத்தான், பத்தாவது பாகத்தில் கடைசியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனால், அந்த மயக்கத்திலிருந்தும் நான் விடுபடுகிறேன். என் கண் முன்னாலேயே பலபேர் தண்டிக்கப்பட்டதைப் பார்த்து முன்பும் எழுதியிருக்கிறேன்; இப்பொழுதும் எழுதிக்கொண்டிருக்கிறேன்; இன்னும் பார்த்துக்கொண்டும் இருக்கிறேன். மற்றவர்களுடைய தண்டனையையும் நான் பார்த்துவிட்டுத்தான் சாவேன் என்று கருதுகிறேன். ஆண்டவன் அந்த வாய்ப்பை எனக்கு அளிப்பானானால், நிச்சயமாக அயோக்கியர்கள், அக்கிரமக்காரர்கள் புழுப்போல துடித்துச் செத்ததற்குப் பின்னாலேயே என்னுடைய மரணம் நிகழும்.
(முற்றும்) கவிஞர் கண்ணதாசன் நன்றி: கண்ணதாசன் பதிப்பகம், சென்னை - 600 017.
|