பூக்கள் படும் பாடு!
வணக்கம் நலந்தானே!
‘‘நான் கொடுத்த மாலை கரெக்டா பெருமாளுக்கு அப்படியே பொருந்தறது. எனக்கு அப்படியொரு சந்தோஷம்’’ என்கிற வாக்கியத்தை தினமும் பலபேர் கோயில்களில் அமர்ந்து பேசுவதை கேட்கலாம். ஆனால், இதற்குப் பிறகு நடக்கும் விஷயம்தான் முக்கியமானது. நாம் எந்த புஷ்பங்களை, துளசி மாலைகளை கொண்டுபோய் கொடுத்தோமோ அப்படியே மொத்தமாக குப்பைபோல் அள்ளி கொண்டு வந்து கோயிலின் மூலையில் மெதுவாக வைத்துவிட்டு (வீசிவிட்டு) சென்று விடுவார்கள்.
அது வைக்கோல் பிரியை பசுக்கள் இழுத்து இழுத்து நடுத் தெருவில் போடுவதுபோல பக்தர்கள் தங்களின் இஷ்டத்திற்கு எடுத்தும், உதிர்த்தும், சிதறச் செய்தும் வளாகம் முழுவதும் பரப்பி விடுவார்கள். ஏதோ கற்பனை என்று நினைக்காமல் ஏதேனும் கோயிலின் விழாவன்று சென்று பாருங்கள். பின்னர், அந்த நிர்மால்யம் என்கிற பிரசாதம் எல்லோர் கால்களிலும் எப்படி மிதிபட்டுக் கொண்டேயிருக்கிறது என்பதை உணர்வீர்கள். சிறு காகிதத்தை கூட மிதிக்கக் கூடாது. சரஸ்வதி சொரூபம் என்கிற பண்பாட்டை கற்றுக் கொண்டவர்கள் நாம்.
ஆனால், பூக்களும், துளசி மாலைகளும், வில்வ தளங்களும் படுகிற பாட்டை சொல்ல முடியாது. அதிலும் சிவராத்திரியோ, வைகுண்ட ஏகாதசியோ, அம்மனுக்குரிய ஆடி மாதமோ மறுநாளன்று கோயிலுக்கு அருகேயுள்ள குப்பைத் தொட்டிக்கருகே சென்று பார்த்தால் கதறி அழத் தோன்றும். நமக்கு ஏன் தோன்றவில்லையெனில், ‘‘நான் கோயிலுக்கு கொடுத்துவிட்டேன். அவர்களும் சுவாமிக்கு சார்த்தி விட்டார்கள் அவ்வளவுதான். அதுக்கப்புறம் என்ன? என்கிற அறியாத்தனமான அலட்சியமே காரணம். தீவிர பக்தர்கள் மிகநிச்சயமாக கோயிலின் நிர்வாகத்திற்கு இதையெல்லாம் எடுத்துரைக்க வேண்டும்.
இதெல்லாம் கூட யோசிக்கணுமா என்ன என்கிற போதாமையால் விட்டுவிடுகிறோம். என்னதான் செய்வது? துளசியையும் வில்வத்தையும் காயவைத்து கோயில்களில் உள்ள நந்தவன செடிகளுக்கு அழகான பாத்திகட்டி அதற்குள் தூவலாம். வில்வப் பொடி உடலுக்கே நல்லது என்கிறார்கள். அரைத்து பிரசாதமாக சாதத்தோடு கலந்து கொடுக்கலாம். துளசியை காய வைத்து மீண்டும் துளசி ஜலமாக சந்நதிகளிலேயே கொடுக்க முடியுமா என்று யோசனை செய்யலாம். சாஸ்திர சம்மதம் இருந்தால் இரண்டையுமே காய வைத்து வீட்டிலுள்ள தெய்வப் பிரதிமைகளுக்கு சாற்றலாம்.
‘‘வேற வேலை இல்ல போ’’ என்று மறுப்பவர்களோடு எதுவுமே பேச முடியாது. அவர்களெல்லோரும் கோயிலுக்கருகே ஓடும் சாக்கடையின் ஓரத்தில் இரண்டு நாட்கள் கழித்து மட்கிய நிலையில் ஈரப்பதத்தோடு கொட்டப்படும் வில்வத்தையும், துளசியையும் கண்டு மனம் மாறலாம். கருவறைக்குள் ஏ.சி. போட்டும், செல் ஜாமர் வைக்கும் அளவுக்கு முன்னேறிய நாம் இதற்கு ஒன்றும் செய்ய முடியாதா என்ன? கோயில்களின் அழுக்குகளுக்கு பழகி விட்டிருக்கிறோம். அதுதான் கோயில்களின் இயல்பு என்று ஆழ் மனம் வரை ஏற்றுக் கொண்டுவிட்டோம்.
‘‘இதெல்லாம் கோயிலோட வேலைதானுங்களே’’ என்று கேட்பவரும் உண்டு. ஆமாம், நிச்சயம் கோயில்கள்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அளவுக்கு மீறி தேங்காய் சேர்ந்தால் டெண்டர் விடும் நிர்வாகம். சுவாமியின் மீதமர்ந்த பூக்களிடம் காட்டும் அலட்சியத்தை களைய வேண்டும். அதேசமயம், மக்களுடைய ஒத்துழைப்போடு அதனால்தான் உங்களோடும் இந்த விஷயப் பகிர்தல். பிரசாதங்களை வாங்கும்போது எங்கு கொட்டுவது என்று தேடி ஓடும்போது உங்கள் கரங்களை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். கைகளிலுள்ள பிரசாதத்தோடு உங்களின் மனதிலும் மணம் கூடுவதை உணர்வீர்கள்.
|