எங்கும் ஒளிரும் ஆத்ம தீபம்!



வணக்கம் நலந்தானே!

இந்து மத புராணங்களில் மூன்று அடுக்குகள் உண்டு. முதலடுக்கில் சிறு குழந்தைக்கு சோறூட்டுபோது சொல்லும் எளிமையான கதையாக இருக்கும். அதுவே அந்தக் கதை அடுத்த அடுக்கில் கேளிக்கையையும் பொழுதுபோக்குச் சித்திரத்தையும் தன்னுள் கொண்டிருக்கும். மூன்றாவதாக அனுபவமும் ஆழ்ந்த பார்வையும் கொண்டு பார்த்தால் கொழுக்கட்டைக்குள் பூரணம்போல பெருந் தத்துவம் ஒளிந்திருக்கும். அந்தத் தத்துவத்தை பீடமாகக் கொண்டுதான் கதையும், புராணம் விளக்கும் சிற்பமும், வழிபாட்டு முறைகளும் என்று கிளைகள் நாற்புரமும் பரந்து விரிந்தபடி சென்று கொண்டிருக்கும்.

கார்த்திகை தீபமும் அருணாசல மலையும் ஒன்றுக்குள் ஒன்றாக இருப்பது. சிவாலயங்கள் எனில் லிங்கமே மூலவராக இருப்பார். அப்பேற்பட்ட பெரும் லிங்கம் உற்பத்தியானதே திருவண்ணாமலையில்தான். ஈசன் தன்னையே தானென லிங்கத் திருமேனியாக நெடுநெடுவென வளர்ந்து நின்றார். இந்தக் கதை எளிமையாக இருப்பினும் ஆழ்ந்த வேதாந்த தத்துவத்தை நோக்கி நகர்பவை.

கதை இதுதான். விஷ்ணுவிற்கும் பிரம்மாவிற்கும் தங்களில் யார் பெரியவர் என்று சண்டையிட்டனர். இதைத் தீர்த்து வைப்பதற்காக சிவன் தோன்றி யார் முதலில் என் அடியையும் முடியையும் அறிகின்றார்களோ அவரே பெரியவர் என்கிறார். விஷ்ணுவும் பிரம்மாவும் அறியாத ஈசனா? ஆனால், நமக்காக இறைவனே இறை தேடல் மேற்கொள்ளும் லீலையை புராணம் இங்கு காட்டுகின்றது.

என்ன காட்டுகின்றது?

யார் பெரியவர் எனும் கேள்வியே அகந்தையோடு தொடர்புடையது. இப்படிப்பட்ட அகந்தையானது எங்கும் நிறைந்த, எல்லாவற்றிலும் ஊடுருவியுள்ளதை எப்படி அறியும். ஆனாலும் சரி, முயற்சித்து வா என்று ஈசன் கூறினார். இதோ கண்டு பிடித்து விடுகின்றேன். நான் எப்பேற்பட்டவன் தெரியுமா? என்று இரு அகந்தைகள் எழுச்சி கொள்கின்றன. ஒருவர் படைத்தவனான மூலத்தை விட்டு படைப்பு எனும் பிரபஞ்சத்தை ஆராய்ந்து கொண்டிருக்கும் பிரம்மா. இன்னொருவர் என்னால் மிகப் பெரும் சாதனங்களை செய்து உன்னை கண்டுபிடிக்கின்றேன் என்று அகந்தையையே நுட்பமாக்கிக் கொண்டு தன்னுள் அதனை தேடிக் கண்டுபிடிக்கும் விஷ்ணு.

இறுதியாக இருவரும் தேடித் தேடி ஓய்ந்து போயினர். அப்படி அவர்கள் ஓய்ந்தபோது அகங்காரம் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு சரணாகதி அடைகின்றது. அப்போதுதான் ஈசன் அக்னித் தூணாக ஸ்தம்பமாக வானுக்கும் மேலாக... பூமிக்கும் கீழாகத்... தகதகவென தோன்றினார். அதாவது இறையானது எல்லாவற்றினுள்ளும், மேலும் கீழும் பரவி நிற்கின்றது. அது கருணையோடு குளிர்ந்து இன்று நாம் பார்க்கும் அருணாசல மலையாக நின்றது.   

எந்த இடத்தில் அகந்தை வீழ்கிறதோ சட்டென்று அங்கு சிவமெனும் செம்பொருள் தன்னொளியாக பெருஞ் ஜோதியாக எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருப்பதை அறிகின்றார்கள். இதை அளந்து விடுகின்றேன். அதைப் பிடித்து விடுகின்றேன் என்பது ஆன்மிக வாழ்வின் அபத்தம். அவனருளை மட்டுமே நம்பு; தன் அகங்கார இருளை நம்பாதே என்பதே இக்கதையின் தத்துவம். இப்படி தன்னுள் பெருஞ் ஜோதியொன்று ஒளிர்வதை புறத்தே அருணாசல மலையில் மீது தீபமாக ஏற்றி உள்ளுக்குள் தள்ளும் நிகழ்வே கார்த்திகை தீபத்தின் மையம். அதன்பிறகு, கார்த்திகை மட்டுமல்ல காணுமிடமெல்லாம் அருணை ஜோதிதான்.

- கிருஷ்ணா