மலையப்பனின் முதல் தரிசனம் யாருக்கு?



திருமலையில் ‘சுப்ரபாத சேவை’ என்று ஒரு தரிசனம் உண்டு! விடியற்காலை 02:30 மணிக்கு மலையப்பனுக்கு சுப்ரபாதம் ஆரம்பிக்கும். அதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் நடையை சாத்தியிருப்பார்கள், உடனே, அடுத்த நாள் தரிசனத்துக்குப் பெருமாள் தயாராகிவிடுவார்! ஒரு நாளின் இந்த முதல் தரிசனம் யாருக்குக் கிட்டும் தெரியுமா? வேதம் ஓதுபவர்களுக்கா, ஆலய பிரதான ஜீயருக்கா, மந்திரிக்கா, வி.ஐ.பிக்கா…? இல்லை! வேறு யாருக்கு?

இவர்கள் எல்லாரும் கைகட்டிக் காத்திருக்க, வேறு ஒருவருக்குதான் ஏழுமலையான் முதல் தரிசனம் தருகிறார்! யார் அவர்? அந்த பிரம்ம முகூர்த்த வேளையில், கூட்டம் அதிகம் இல்லை. குளிர்த் தென்றல் வீசுகிறது. சில பக்தர்கள் அங்கப் பிரதட்சிணம் செய்து முடிக்கிறார்கள்; சுப்ரபாத தரிசனத்துக்காக பக்தர்கள் நிற்கும் இடம் திருமாமணி மண்டபம். இரண்டு பெரிய காண்டா மணிகள் வாசலில்! அருகே நந்தா விளக்கு! எதிர்ப் பக்கம் கருடன். கருவறை வாயிலை துவார பாலகர்கள் (ஜய, விஜயர்) இருபுறமும் காத்து நிற்க, தங்க வாயில் (தெலுங்கில்- பங்காரு வாகிலி) மூடப்பட்டுள்ளது.

அர்ச்சகர்கள் குடங்களில் நீருடன் நிற்கின்றனர். பூக்குடலைகள் தாங்கியபடி இன்னும் சிலர் காத்திருக்கின்றனர். யாருக்கு? திருமலையில் ஜீயர் என்னும் வைணவத் தலைவருக்கு “பெரிய கேள்வி அப்பன்” என்ற தூய தமிழ்ப் பெயர்! ஆலய நிர்வாகத்தில் கேள்வி கேட்கும் உரிமை பெற்றவர்; ஆதலால், கேள்வியப்பன் என்ற தமிழ்ப்பெயரைச் சூட்டி, அந்தப் பதவியை உருவாக்கினார் ராமானுஜர். அந்தக் கேள்வியப்பன் சாவியைத், துவார பாலகர்கள் அருகில் வைத்து, கதவைத் திறக்க அனுமதி பெறுகிறார், பின்னர் அவரும் காத்திருக்கிறார். யாருக்கு? அன்னமாச்சார்யரின் பூபாளக் கீர்த்தனையும் அடுத்து தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் தமிழ்த் திருப்பள்ளி எழுச்சியின் முதல் பாசுரமும் இசைக்கப்படுகின்றன.

ஓரிரு நிமிடங்களில் மணிகள் ஒலிக்கின்றன, பேரிகையும் ஊதுகோலும் சேர்ந்து ஓசை எழுப்புகின்றன, நெய்தீபத்தின் மணமும், பச்சைக் கற்பூரத்தின் வாசனையும் புத்துணர்வு அளிக்கின்றன. இதோ.....திருக்கதவம் திறக்கப்படுகிறது! காத்திருந்த எல்லோரும் எக்கி எக்கி, எம்பெருமானைச் சேவிக்கத் துடியாய்த் துடிக்க, பெருமாளுக்கு முன்னால் வெள்ளைத் திரை, தரிசனம் செய்ய முடியாதபடி ஏமாற்றம் தருகிறது. சரி, யாருக்குதான் முதல் தரிசனம்? பளிச்சென்று ஜீயர், அர்ச்சகர்கள் எல்லாரும் ஒதுங்கிக் கொள்கிறார்கள். மிகவும் எளிமையான ஒருவர் உள்ளே வர, எல்லாரும் அவருக்கு வழிவிட்டு ஓரமாக நின்று கொள்கிறார்கள்!

அவர், மாட்டிடையர்! பசு-கன்றுடன் வரும் இடையன், பொற்கதவின் முன் வந்து நிற்க, மெல்லத் திரை விலக, அவன், தன் பசு-கன்றுடன் பரந்தாமனைக் காண்கிறான். ஆமாம், இவர்கள் முகத்தில்தான் மலையப்பன் முதலில் விழிக்கின்றான்! இந்தப் பழக்கம் பல நூற்றாண்டுகளாய் இருந்து வருவது. ஜாதி வித்தியாசங்கள் பார்க்கப்பட்ட காலத்தில் கூட, இந்த வழக்கம் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது. ஏனென்றால், கோ+விந்தன் = பசு+காப்போன் அல்லவா இந்தப் பெருமாள்! உயிர்கள் என்னும் பசுக்களைக் காத்து மேய்க்கும் ‘நல் மேய்ப்பன்’! அதற்குப் பிறகுதான் ஜீயரும், அர்ச்சகர்களும், இன்ன பிற அடியவர்களும்  ஒவ்வொருவராய் உள்ளே செல்கிறார்கள்!

- ஏ.எஸ். கோவிந்தராஜன்