குரு பார்க்க கோடி நன்மை



மேகம் மறைத்த வான் வளத்தை
வீட்டுக்கு அழைப்பது எவர் கருணை!
சோகம்விலக்கும் கானக் குயிலிசை
மக்களிடம் சேர்ப்பது எவர் கருணை!
வேகம், விவேகம் கலந்த மதிநுட்பம்
விஞ்ஞானம் பேசுவது எவர் கருணை!
தாகம் தீர்க்கும் ஆறும், அருவியும்
திசைகள் இணைப்பது எவர் கருணை!
ஏகாந்த அமைதி, ஞானம் சிலர்

வாய்க்கப்பெறுவது எவர் கருணை!
அளவிலா செல்வம், அடுக்கடுக்காய் வெற்றி
ஆனந்தத்தில் திளைப்பது எவர் கருணை!
குறைவிலா துணிமணிகள், பொன்ஆபரணம்
விரும்பி வந்தடைவது எவர் கருணை!
குறித்தகாலத்தில் குமரப்பருவத்தில்
குமரியுடன் இல்லறம்சேர்வது எவர் கருணை!
குடத்து விளக்காய் நின்ற பெருமையை
குன்றில் கொடியேற்றுவது எவர் கருணை!
குருபார்வை ஜாதகத்தில் வந்தால் போதும்
குருடனும் விழிபெற்று நாடாள்வான்!
ஆங்கிரச முனியின் மகன் பிருகஸ்பதி
அளவிலா யாகம் செய்து தேவகுருவானாய்!
ஆலோசனையில் அமைச்சன், குணத்தில் அந்தணன்
அதிகாரத்தில் அரசன், நிறத்தில் பொன்னன்!
அறிவுரையில் ஆசான், ஞானத்தில் மறையோன்!
தடைகளைப் பொடியாக்கும் தாராபதி பார்வை!
தகரம் தங்கமாகும், தரணி வசப்படும்!
தெய்வீகப்பார்வை தரிசனம் பெற்று வாழ்வில்
வளமும், நலமும் சேர்ப்போம்!
தெய்வமந்திரி என்றும் நமை ஆள்வான்!
குருவின் அருள் சேர்க்கும் தட்சணாமூர்த்தி
குருவாய் போதித்த கண்ணன், முருகன்
மவுனகுருவாய் வெற்றிதரும் கணபதியை
நாளும் பணிந்து திரவியம் பெறுவோம்!
மும்மூர்த்தி அவதாரம் தத்ராத்ரேயரின்
மூலமந்திரம் தியானித்து மனம் தெளிவோம்!
ஒளிமயமான வாழ்வருளும் ஒளிமேனியன்
ஓரப்பார்வை இடர்நீக்கும் வரம்!
ராஜகிரக பெயர்ச்சி
அனுகூலம் தரும்
ராஜயோகம் வாசல் தேடி வரும்!
குருபார்க்க கோடி நன்மை உணர்வோம்!
திருக்கோயில் சென்று
திருவருள் பெறுவோம்!

- விஷ்ணுதாசன்