வடிவேலன் அருள் பொங்கும் வைகாசி
விஷ்ணுதாசன்
மணலை எண்ணமுடியுமா - செந்தில்நாதன் மகிமை சொல்ல முடியுமா? மரத்தில் இலைகள் எண்ணமுடியுமா? முருகனருளை அளக்க முடியுமா?
அருணகிரி குருநாதர் துணைகொண்டு ஆறுவிரல் அனுபவகிரி தமிழ்படிப்போம்! தணிகையில் ஒலிக்கும் மந்திரதிருப்புகழ் தீராத நோய் தீர்க்கும் மருந்தாகும்!
வாழ்வு மணக்கும் சந்தனம் - அதிலுண்டு வளமும், மகிழ்ச்சியும் ஹரிசந்தனம்! மனம் எண்ணியது தரும் மந்தாரம் மாறாத செல்வம் பாரிஜாதம், கற்பகம்!
பஞ்சதருவும் பக்தி செய்யும் -முருகன் பாதம் பணிந்தால் சக்தி தரும்! அஞ்சுக உருமாறி சொர்க்கமலர் பறித்து மன்னன் பிணி தீர்த்த குரு வாழ்க!
வசந்த காலம் வைகாசி மாதம் வான்மழை வடிவேலனருள் வரும் நேரம்! சந்தங்கள் பிறக்கும்; சங்கீதம் இனிக்கும்! சம்சார சந்தோஷம் நிலைக்கும்!
கந்தனை உருகி வணங்கி பணிந்தால் கடும் முயற்சியின்றி ஞானியாகலாம்! கடுகளவு பயிற்சியின்றி கவிஞனாகலாம்! கருணை வென்ற அருணகிரி வாழ்க!
கல்லில் கடவுள் காண்பவன் ஞானி! கல்லில் கலை வடிப்பான் கவிஞன்! சூரியஒளி சுகமென்பான் ஞானி! சுடரும் கவிதை தருவான் கவிஞன்!
அறிவால் அனுபவித்து ஒதுங்குவான் ஞானி! அனுபவித்து வாழும் அனுபவம் கவிஞன்! அகத்தில் ஒளி பெற்றவன் ஞானி! அகத்தொளி புறத்தில் வடிப்பான் கவிஞன்!
பெண்ணை வெறுத்து மறுப்பான் ஞானி! பெண்ணுக்கு புகழ் சேர்ப்பான் கவிஞன்! தீயில் குளித்து எழுவான் ஞானி! தீயை மனதில் வளர்ப்பான் கவிஞன்!
உண்மை உணர்ந்தவன் உன்னத ஞானி! உள்ளதை உரைப்பான் உயர்ந்த கவிஞன்! இறைவனுடன் இரண்டற கலப்பான் ஞானி! இறை தமிழுடன் கலந்திடுவான் கவிஞன்!
முருகனின் சேவை உள்ளம் வாழ்க! அருணகிரியார், வயலூர் வேலன் வாரியார் தொண்டரடி பணிந்தால் மேன்மை! ஞானம் எள்முனையளவு பெற்றாலும் முருகன் அருளே!
|