வளங்கள் நல்குவார் வாயுபுத்திரன்



நாமக்கல் ஆஞ்சநேயர்!

எங்கே ? எப்படி? என்ன ? ஆலய தரிசனம்


‘திங்களும், மதியுமாகி, சிறப்புறும் மழையுமாகி எந்தனை காவல் காக்கும் ஆஜானுபாகு. வானமே கூரையாக கோயில் கொண்டு, யாவரும் ஓர் குலம் என்றுணர்த்தும் அபூர்வன். ஏழைக்கும், பாழைக்கும் எப்போதும் துணை நிற்கும் ஜாம்பவான்’’ இப்படி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பக்தர்கள் கொண்டாடும் அற்புதம் ‘‘நாமக்கல் ஆஞ்சநேயர்’’.கொங்கு மண்டலத்தின் பசுமை படர்ந்து கிடக்கும் செழிப்பான மாவட்டங்களில் முக்கியமானது ‘‘நாமக்கல்’’. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற சொல்லுக்கேற்ப விவசாயத்தையும், தொழிலையும் இரு கண்கள் என்று போற்றும் மாந்தர்கள் நிறைந்த பகுதி. அற்புதங்கள் கொட்டிக் கிடக்கும் இந்த ஊரில், திரும்பும் திசையெல்லாம்
ஆன்மிக மணம் வீசிக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

‘நாமக்கல்’ என்ற ஊரின் பெயர்க்காரணமே இதற்கான முதல் சாட்சியம். நரசிம்ம மூர்த்தியோடு நாமகிரித்தாயாருக்கு அருட்பாலித்த ஆரைக்கல் என்னும் அதிசயமலையை மையமாக கொண்ட பகுதி. ஆரைக்கல் என்ற பெயருக்கு முன்பாக நாமகிரித்தாயாரின் திருநாமத்தை இணைத்து நாமகிரிஆரைக்கல் என்று அழைக்கப்பட்டது. இது காலப்போக்கில் நாமக்கல் என்று உருமாறியதாக கூறுகிறது, ஊரின் பெயர்க்காரணம். இப்படி தெய்வாம்சம் நிறைந்த நாமக்கல்லில் 246 அடி உயரம் கொண்ட ஒரே கல், மலையாக காட்சியளிக்க அதன் உச்சியில் கம்பீரமாக காட்சியளிக்கிறது ஒரு கோட்டை. கோட்டையின் மேற்கு திசையில் குடவரை சிற்பக் கலையின் உச்சம் தொடும் நரசிம்மர் கோயில். இவை இரண்டிற்கு நடுநாயகமாக, 18 அடி உயரத்தில் கம்பீரமாக நின்று அருட்பாலிக்கிறார் தேசம் முழுவதும் கொண்டாடும் நாமக்கல் ஆஞ்சநேயர்.வானமே கூரையாக திறந்த வெளியில், தொழுத கைகளுடனும், இடுப்பில் கத்தியோடும் ஆஜானுபாகுவாக நின்று சிந்தையை ஈர்க்கும் ஆஞ்சநேயர் சிற்பம், ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்பது தனிச்சிறப்பு. கோயிலின் பக்கவாட்டு சுவர்களில் அஷ்டபுஜநரசிம்மர், வைகுண்ட பெருமாள், வராகர், உலகளந்த பெருமாள் சிற்பங்கள் கவனத்தை ஈர்க்கிறது.

‘‘புராண காலத்தில் இரண்யவதத்திற்குப் பிறகு உக்கிரம் பொங்க காட்சியளித்தார் நரசிம்மர். பிரகலாதனின் வேண்டுகோளால் சாந்தமூர்த்தியாகி, சாளக்கிராம வடிவில் கண்டகி நதிக்கரையில் அமர்ந்தார். விஷ்ணுவை பிரிந்த மகாலட்சுமி, கமலாலயக் குளத்தில் நின்று கணவரை நினைத்து தவம் செய்தார். சஞ்சீவி மலையோடு சாளக்கிராமத்தை தூக்கி வந்த அனுமன், கமலாலயக் குளத்தைக் கண்டதும், தனது தாகம் தீர்க்க சாளக்கிராமத்தை அங்கு வைத்தார். தாகம் தீர்த்த அனுமனால் சாளக்கிராமமான நரசிம்மரை அங்கிருந்து தூக்கிச் செல்ல முடியவில்லை. அப்படியே அந்த இடத்தில் அமர்ந்து மக்களுக்கு அருட்பாலித்து வருகிறார். இப்படி நாமம் சூட்டிய நரசிம்மர் மலையாக அமர்ந்த இடமே ‘‘நாமகிரி’’ என்று போற்றப்படட்து. அவருடன் அருட்பாலித்த லட்சுமி தேவியை நாமகிரித் தாயார் என்று தேவர்கள் வணங்கினர்.

 நாமகிரி, அரங்கநாதர் ஆரைக்கல் என்று மருவிய பெயர், காலத்தின் சுழற்சியில் நாமக்கல் ஆனது. கல்லாய் மாறிய நரசிம்மர், குடவரைக் கோயிலில் அமர்ந்து அருட்பாலிக்க, கோயிலுக்கு வெளியே திறந்த வெளியில் நின்று அவரை கைகூப்பி வணங்கினார் ஆஞ்சநேயர். வானத்தை கூரையாக்கி, உலக மக்கள் அனைவருக்கும் அருட்பாலிக்கும் பெரும்சக்தி ஆஞ்சநேயர் என்பதை உணர்த்துவதுதான் இந்த கோயிலின் சிறப்பு’’ என்கிறது தலவரலாறு.

கடமையை முடித்து திரும்பிய ஆஞ்சநேயர்


ராமாயண காலத்தில், சஞ்சீவி மூலிகையைப் பெறுவதற்காக, இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துவந்தார் ஆஞ்சநேயர். பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில் இரண்யவதையினால் உக்கிரமான சாளக்கிராமமான நரசிம்மரையும் எடுத்துவந்தார். சூரியன் உதயமான படியால், வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையிலிருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சந்தியாவந்தனத்தை முடித்தார். மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார். ஆனால், அதைத் தூக்க அவரால் முடியவில்லை. ‘‘ராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல்’’ என்று வானில் இருந்து அசரீரி ஒலி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பினார். ராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் இங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டுப்போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க, ஆஞ்சநேயர் நரசிம்மரை கை கூப்பி வணங்கியவாறு திறந்த வெளியில் நின்று பக்தர்களுக்கு அருட்பாலிக்கிறார்.

கோபுரம் இல்லாதது ஏன்?


காற்று, மழை, வெயில், புயல் என்று இயற்கை சீற்றங்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு திறந்த வெளியில் தொழுத கைகளோடு நின்று அருட்பாலிக்கிறார் நாமக்கல் ஆஞ்சநேயர். லோகநாயகனான ஸ்ரீநரசிம்மரே (எதிரில் உள்ள ஆலயம்) கிரி உருவில் மேல் விதானம் இல்லாமல் இருப்பதால் தாசனான எனக்கும் விதானம் தேவையில்லை என்று ஆஞ்சநேயர் திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் நின்றிருக்கிறார் என்பதும், நாமக்கல் ஆஞ்சநேயர் நாளுக்கு நாள், வளரும் அபூர்வ சக்தி கொண்டவர். அதனால் அவரை ஒரு கட்டுமானத்திற்குள் வைக்காமல் காற்று வெளியில் பிரதிஷ்டை செய்துள்ளனர் என்பதும் பக்தர்களின் கூற்று.

சிலையின் மகிமை


ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை பிரம்மாண்டத்தின் பிம்பமாக நிற்கிறது.  பீடத்திலிருந்து 22அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்ட, ஆஞ்சநேயர் முகம் அழகிய தேஜஸ் ஒளியில் மிளிர்கிறது. எதிரேயுள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தின் உபகோயில்தான் இந்த ஆஞ்சநேயர் சந்நதி என்றாலும் பக்தர்கள் கூட்டம், இங்குதான் அலை மோதுகிறது. இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியா சக்தி (நரசிம்மர்), ஞான சக்தி (ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற சிறப்புக்குரியது நாமக்கல்.

தேசத்தின் இரண்டாவது பிரமாண்டம்


பிரம்மாவின் சபையில் ஒரு அப்சரஸாக இருந்தவர் அஞ்சனா. ஒருமுறை மந்தியொன்று, ஆசனம் இட்டு தவம் செய்து கொண்டிருந்ததை பார்த்தாள் அஞ்சனா. அந்த மந்தியின் மீது பழங்களை எறிந்து விளையாடினார். உடனே, அந்த மந்தி தவம் கலைந்து எழுந்து ஒரு முனிவராக மாறியது. கடும் கோபம் கொண்ட அந்த முனிவர், அஞ்சனா யார் மீதாவது காதல் கொண்டாலும், அந்தத் தருணமே மந்தியாக மாறிவிடுவாள் என சாபமிட்டார்.

தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு மன்றாடினாள் அஞ்சனா. தனக்கு மந்திமுகம் இருந்தாலும் தன் காதலன் தன்னை நேசிக்க வேண்டும் என்றும், சிவபெருமானின் அம்சமே தனக்கு மகனாக பிறக்கவேண்டும் என்றும் வரம் வேண்டினாள். மனமிரங்கிய முனிவரும் அப்படியே ஆகட்டும், சிவபெருமானின் அம்சமாக மகன் பிறந்தவுடன் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என அருட்பாலித்தார்.

சாபத்தின் பலனால், பூமியில் பிறந்து, ஒரு காட்டில் வசித்தாள் அஞ்சனா. ஒருநாள் காட்டில் ஒரு ஆடவனைக் கண்டு அவன் அழகில் மயங்கி அவன் மேல் காதல் கொண்டாள். காதல் கொண்ட அந்த தருணமே, அவள் குரங்காக மாறிவிட்டாள். அவள் அருகில் வந்த அந்த ஆடவன், தன்னை கேசரி என்றும், தான் மந்திகளின் அரசன் என்றும் கூறினான். குரங்குமுகத்தைக் கொண்ட மனிதனான அவனால் நினைத்த நேரத்தில் மனிதனாகவும் உருமாற முடியும். குரங்காகவும் உருமாற முடிந்தது. இதை கண்டு ஆச்சரியமடைந்தாள் அஞ்சனா.

தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி அஞ்சனாவிடம் அவன் கோரினான். அந்த காட்டிலேயே அஞ்சனாவும் கேசரியும் காந்தர்வ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணதிற்கு பிறகும் சிவபெருமானை நினைத்து எப்பொழுதும் தவத்தில் இருந்தாள் அஞ்சனா. இதனால் மனம் குளிர்ந்த சிவபெருமான் என்ன வரம் வேண்டும் என கேட்டார். முனிவரால் தனக்கு கிடைத்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற, சிவபெருமானே தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என கோரினாள். அப்படியே ஆகட்டும் என வரம் கொடுத்தார், சிவபெருமான்.

இதேசமயம் அங்கே, அயோத்தி அரசனான தசரத சக்ரவர்த்தியும் பிள்ளை வரம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகத்தை நடத்திக் கொண்டிருந்தார், இதனால் மனம் குளிர்ந்த அக்னி தேவன், தசரதனிடம் புனிதமான பாயாசத்தை கொடுத்து இதனை சரிசமமாக தன்னுடைய தேவியருக்கு பங்கிட்டுக் கொடுக்குமாறு கூறினார். தசரதனும் தன்னுடைய பட்டத்து ராணிகளான கோசலைக்கும், கைகேயிக்கும் இரண்டாகப் பிரித்து கொடுத்தார்.

அவர்கள் இருவரும், தங்களுக்கு அளிக்கப்பட்ட பிரசாதத்தினை சரி பாதியாகப் பிரித்து, இரண்டு பங்காக சுமித்ராவுக்கு கொடுத்ததினால் அவளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது என மரபு வழி கதைகளில் சொல்வார்கள். தசரதன் அந்த பிரசாதத்தை தன் மனைவியருக்கு கொடுக்கும்போது. அதில் சிறிதளவு பிரசாதத்தை ஒரு பறவை எடுத்துச் சென்று அஞ்சனா தவம் புரிந்த இடத்தருகே அதை விட்டு சென்றது.

காற்றின் கடவுளான வாயுபகவானிடம் அந்த பிரசாதத்தை அஞ்சனாவின் கைகளில் போடுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். பாயாசத்தை பார்த்த அஞ்சனா மிகுந்த சந்தோஷத்துடன் அதனை உண்டாள். அதனை உண்ணும்போது சிவபெருமானின் அருளை அஞ்சனா உணர்ந்தாள். அதன்பிறகு மந்தியின் முகத்தைக் கொண்ட ஒரு மகனை பெற்றெடுத்தாள் அஞ்சனா. சிவனின் அம்சமான அந்தக் குழந்தை பல பெயர்களில் அழைக்கப்பட்டது. ஆஞ்சநேயா (அஞ்சனாவின் மகன் என பொருள் தரும்), கேசரி நந்தனா (கேசரியின் மகன் என பொருள் தரும்), வாயுபுத்திரா அல்லது பவன் புத்திரா (காற்றின் கடவுளான வாயு தேவனின் மகன் என பொருள் தரும்).

அந்த குழந்தை தன்னுடைய குழந்தைப் பருவத்தில் மிகுந்த பலசாலியாக விளங்கினார். தன் தந்தை கேசரி மற்றும் தாய் அப்சரஸ் அஞ்சனாவின் சக்திகளை அவர் பெற்றார். வாயு தேவனின் மகன் என்பதால் காற்றை போல் மிக வேகமாக செயல்பட்டார். ஆஞ்சநேயரின் பிறப்பால், அஞ்சனா தன் சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றாள். சாப விமோசனம் பெற்ற அஞ்சனா, வானுலகிற்குத் திரும்பினாள். ராம பிரானின் தீவிர பக்தனானார் ஆஞ்சநேயர். அவர்தான்,  உயரமான பிரமாண்டம் என்ற சிறப்புடன் நாமக்கல்லில் அருட்பாலிக்கிறார்.

தெளிவுக்கு துளசி; நோய் தீர தீர்த்தம்


துளசி மாலை சாத்தி விஷ்ணுவை வழிபட்டால் மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் விலகும். மனக்கிலேசம் நீங்கும். புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் உண்டாகும் என்பது ஐதீகம். இதன்படி விஷ்ணுவின் திருநாமத்தில் ஊறித்திளைக்கும் ஆஞ்சநேயருக்கும் பக்தர்கள் துளசி மாலை சாத்தி வழிபடுவது பிரதானமாக உள்ளது. இதேபோல் ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்படுகிறது. மனமுருக வழிபடும் பக்தர்களுக்கு, இந்த துளசி தீர்த்தமானது ரத்தத்தை சுத்திகரிக்கிறது. தலைச்சுற்றல், கபம், மூச்சுத்திணறல் என்று பலபாதிப்புகளுக்கும் தீர்வாக அமைகிறது. இதன் காரணமாகவே நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஆண்டாண்டு காலமாக பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

வெண்ணெய் காப்பு மகிமை ;
வெற்றிலை மாலை பெருமை


நாமக்கல் ஆஞ்சநேயருக்கு செய்யப்படும் வெண்ணெய்க்காப்பு அலங்காரம் மிகவும் பிரசித்தி பெற்றது. ராமனை விட்டுப் பிரிந்த சீதையை மீண்டும் அவரோடு சேர்த்து ராமபட்டாபிஷேகம் செய்ததில் ஆஞ்சநேயரின் பங்கு மகத்தானது. அனுமன் மட்டுமில்லாமல், வானரப்படையும் இலங்கை யுத்தத்தில் ராமனுக்குத் துணை நின்று உதவியது. தனக்கு உதவிய வானரக் கூட்டத்திற்கு தன் நன்றியை தெரிவிக்கும் விதத்தில் தன்னுடைய அடுத்த அவதாரமான கிருஷ்ணாவதாரத்தில், விருந்தளித்தார் விஷ்ணு. பாலகிருஷ்ணராக கோகுலத்தில் வளர்ந்தபோது, வெண்ணெய் திருடி உண்பது அவரின் பொழுதுபோக்கு. வெண்ணெய் வாசனை காற்றில் பரவ, குரங்குகளின் கூட்டம் ஓடி வந்து ஜன்னல் வழியாக கையை நீட்டும். கிருஷ்ணர் அவற்றுக்கும் வெண்ணெயைக் கொடுத்து மகிழ்ந்தார்.  அவைகள், சாப்பிட்டது போக மீதியை மகிழ்ச்சியுடன் தன் உடலெங்கும் பூசிக் கொண்டதாம். இதனால்தான், ஆஞ்சநேயருக்கும் உடலெங்கும் வெண்ணெய்காப்பு செய்து வழிபடும் வழக்கம் உண்டானது என்று ‘‘மர்காந்போக்ஷ்யன்’’ என்ற பாகவதம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படியே ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

இதே போல் வெற்றிலை மாலை சாத்தி வழிபடுவதும் பிரதானமாக உள்ளது. நாமக்கல் காவிரி கரையோர பகுதிகளில் வெற்றிலை பயிரிட்ட விவசாயிகள், ஒரு காலத்தில் நல்லசாகுபடிக்காக ஆஞ்சநேயரை வேண்டினர். விளைச்சல் அமோகமானது. நன்றிக்கடனாக வெற்றிலையை மாலையாக கோர்த்து ஆஞ்சநேயருக்கு அணிவித்து வழிபடத் துவங்கினர். உழைப்புக்கு உத்ரவாதம் அளித்து தங்கள் வாழ்வை உயரச் செய்த கடவுளுக்கு வெற்றிலை மாலை சாத்துவதை பெருமையாக கருதுகின்றனர் விவசாயிகள். அதுமட்டுமல்லாமல் அசோகவனத்தில் அனுமன் சீதையை வணங்கிய போது சீதை அருகிலிருந்த வெற்றிலைக் கொடியிலிருந்து வெற்றிலைகளைக் கிள்ளி அனுமன் மீது தூவி வாழ்த்தினாளாம். அதனாலும் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுகிறது.

ராகு, சனி பகவான் தோஷங்களிலிருந்து  காக்கும் வடைமாலை


நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துதல், எலுமிச்சம் பழம் மாலை சாத்துதல், துளசி மாலை சாத்துதல், வடை மாலை சாத்துதல், பூ மாலை சாத்துதல் என்று பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக்கடனை அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் வடைமாலை சாத்துவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முன்பு ஒரு சமயம் நவகிரகங்களில் அதிக குரூரமான ராகுவும், சனியும் ஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதால் அவருக்கு கீழ்ப்படிந்தார்கள். பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும் ராகுவாலும் இடையூறுகள் ஏற்பட்டால் அவர்களை திருப்திப்படுத்துவதற்கு ராகுவுக்கு பிடித்த உளுந்தும் சனிக்கு பிடித்த எள்எண்ணெய்யும் கொண்டு வடைசெய்ய வேண்டும். அந்த வடையை மாலையாக கோர்த்து ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி பகவான், ராகு இருவரின் தொல்லைகளில் இருந்து மனிதர்கள் விடுபடுவார்கள் என்பது ஐதீகம். இதன் காரணமாகவே ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர்.

ஆஞ்சநேயருக்கான அபிஷேக பலன்கள்


நல்லெண்ணைய் அபிஷேகம்: பித்ரு, சனி தோஷத்தை நிவர்த்தி செய்கிறது. பஞ்சாமிர்த அபிஷேகம்: காரியங்கள் நிறைவேற காரணமாகிறது.சந்தன அபிஷேகம்: தீர்வில்லா பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. சீகக்காய் அபிஷேகம்: மனோசக்தியையும், நம்பிக்கையும் கொடுக்கிறது. பால் அபிஷேகம்: மண்ணை வளப்படுத்தி மும்மாரி தருகிறது.

தங்கக் கவசத்தில் ஆஞ்சநேயர்

நாமக்கல் ஆஞ்சநேயர் தங்கக் கவச அலங்காரத்தில் பிரமாண்டமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் ரூ.5ஆயிரம் செலுத்தி தங்க முலாம் பூசிய இந்த தாமிர கவசத்தை சாத்துவதால் லட்சுமியின் அருள் கிடைக்கும். வீட்டில் செல்வ வளம் பெருகுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இதன்மூலம் வீட்டில் தங்கம், வைரம், வைடூரியம் போன்றவை பெருகுவதாக பக்தர்களிடையே நம்பிக்கை உள்ளது. வாழ்க்கையில் பொருளாதார மேம்பாடு அடைய தங்கக் கவசம் சாத்தி ஆஞ்சநேயரை வழிபடுகின்றனர் ஆயிரக்கணக்கான பக்தர்கள்.

(மேலும் விவரங்கள் அடுத்த இதழில்...)
- ஜி. காந்தி     
படங்கள் : சி. சுப்பிரமணியம்.