ஆதிசங்கரர் என்ற அற்புத அவதாரம்



அவதாரத்தைப் பற்றி க்ருஷ்ண பரமாத்மா சொன்னது தான் ஸ்ரீசங்கராவதாரத்தை ஏற்படுத்திவிட்டது. தர்மம் நலிந்து, அதர்மம் பெருகும்போதெல்லாம் அவதரித்து தர்ம ஸம்ஸ்தாபனம் செய்கிறேன் என்று சொல்லிவிட்டாரல்லவா? அந்த வாக்கைப் பரிபாலனம் பண்ணிக்காட்ட வேண்டிய சூழ்நிலை அவர் பரமபத ஆரோஹணம் செய்து இரண்டாயிரம் - இரண்டாயிரத்துநூறு வருஷங்களுக்கு அப்புறம் ஏற்பட்டது. அந்தக் காலத்து தேச ஸ்திதியை நிறையச் சொல்லியாயிற்று.

சுருக்கமாகச் சொல்வதென்றால் க்ருஷ்ணாவதார காலத்தில் ப்ரவ்ருத்தி-நிவ்ருத்தி தர்மங்களுக்கு ஹானி ஏற்பட்டிருந்தது போலவே… இல்லை, அதைவிடப் பலமடங்கு தீவிரமாக, இப்போது ஏற்பட்டிருந்தது.லோகம் பூரா நடக்கும் கோடி கோடி தப்புக் கார்யங்களை எப்படி அழிப்பது, அது மட்டும் முடியுமா என்றால்: அந்தக் கார்யங்களை அழிக்க வேண்டாம். அவை விளைவுதான். இந்த விளைவுக்குக் காரணமுண்டு. வித்து உண்டு. வித்தை ஊன்றினால்தானே விளைச்சல் வரும்? காரியத்துக்கு வித்து எண்ணம்.

கெட்ட எண்ணம் முதலில் தோன்றி, அதன் நிறைவேற்றத்திற்காகவே அப்புறம் கெட்ட கார்யம் தோன்றுகிறது. ஆனபடியால் ஜனங்களுடைய கெட்ட எண்ணம் போகும்படியாக, அதாவது, அவர்களுடைய அறிவு திருந்தும்படியாகப் பண்ணிவிட்டால் போதும். அவதார நோக்கமான தர்ம ஸமஸ்தாபனம் நடந்துவிடும்.

‘அறிவு திருந்தும்படி எப்படிப் பண்ணுவது? வேறே எப்படி? எல்லாருக்கும் தெரிந்ததுதான்: நல்லதை நல்ல படியாக எடுத்துச் சொல்வதால்தான். ஞானோபதேசத்தினால்தான். வாயுபதேசம் மட்டும் போதாது. வாழ்க்கை உதாரணத்தோடு அது கலந்து வந்தால்தான் பலன் தரும், அதனால் ஞானியாக அவதாரம் செய்யணும். ஞானி என்றால் ஸந்நியாஸியாக அவதாரம் செய்யணும்’ என்றபடி பகவான் தீர்மானம் பண்ணிவிட்டார்.

இந்த மாதரி எங்கே வேண்டுமானாலும் ஞானி தோன்றுவதென்பது அபூர்வமாக நடப்பதுதான். அதில் நாம் பயிற்சி கொடுத்துப் பண்ணும்படியாக ஒன்றுமில்லை. உபதேச குரு என்றால் அவர் ஒரு ‘ஸிஸ்ட’ப்படி பயிற்சி கொடுத்தே சிஷ்யர்களை ஞானமடையச் செய்யணும். ஆகையால் இவரும் அப்படி ‘ஸிஸ்ட’த்தில், அதாவது, ஸம்ப்ரதாய பூர்வமாக, அதாவது சாஸ்த்ரோக்தமான முறையில் போய் ஞானியானவராக இருந்தால்தான் பொருத்தமாயிருக்கும்.

அபூர்வமாக ஞானிகள் எந்தச் சூழ்நிலையில் வேண்டுமானாலும் தோன்றலாமென்றாலும், பொதுவாக அந்த பரிபக்வத்தைப் பெற சாஸ்த்ரங்கள் கூறியுள்ள விதி என்னவென்றால், உசந்த முறையில் ப்ரஹ்மசர்யமோ, க்ருஹஸ்தாச்ரமமோ வகித்த பிற்பாடு ஸந்நியாஸம் வாங்கிக்கொண்டு, உபநிஷத்துக்களில் ஜீவ-ப்ரஹ்ம ஐக்யத்தைப் பற்றிச் சொல்லும் மஹாவாக்யங்களை அநுஸந்தானம் பண்ணிப் பண்ணியே (தீர்க்கமாக த்யானம் செய்தே) ஞானம் அடையவேண்டும் என்பதுதான்.

ஸந்நியாஸியான குருவாக அவதாரம் செய்வதென்று முடிவாயிற்று. இந்த அவதாரத்திலே பாரத தேசம் முழுக்க ஸஞ்சாரம் செய்து நாடு பூரா பரவியிருந்த தப்பான மதங்களை வாதங்களினால் நிராகரணம் பண்ணி, ஸத்யமான வேதாந்த மதத்தை ஸ்தாபிக்க வேண்டியிருந்தது. அதாவது, அவதாரமாக வருகிறவர் ஸதா காலமும் ஸஞ்சாரம் பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டிருந்தது. குடும்பப் பொறுப்புள்ள க்ருஹஸ்தன் எப்படி இந்த மாதிரி எப்பவும் ஊர் சுற்றிக்கொண்டே இருக்கமுடியும்? மாறாக, ஸந்நியாஸிக்குத்தான் ‘எப்பவும் ஸஞ்சாரம் பண்ணிக்கொண்டே இருக்கணும்; ஒரே இடத்தில் அதிக நாள் இருந்தால் ‘லோகல் அட்டாச்மென்ட்’கள் உண்டாகி விடுமாதலால் இடம் மாறிக்கொண்டே இருக்கணும்’ என்று சாஸ்த்ரமே விதி செய்திருக்கிறது.

இதுவும் இப்போது ஸந்நியாஸ அவதாரம் ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாயிற்று. நாலு ஆஸ்ரமங்களில் ஸந்நியாஸாச்ரமம்தான் ஸஞ்சாரத்திற்கு யோக்யமான ஆஸ்ரமம். பிரம்மசாரியாகப்பட்டவன் ‘அந்தேவாஸி’ என்பதாக குருவோடு கூடவே சேர்ந்து வஸிக்க வேண்டியவன். குருகுலவாஸமே விதிக்கப்பட்ட அவன் ஸஞ்சார வாழ்க்கை நடத்தமுடியாது. க்ருஹஸ்தன் மற்ற ஆஸூரமிகளை ஆதரிப்பதும், தன்னுடைய குடும்ப பரணம் செய்வதுமான கடமையை ஸ்வக்ருஹத்திலேயே இருந்து கொண்டுதான் செய்யமுடியும். அவனும் ஸஞ்சாரம் பண்ணிக்கொண்டே இருக்க முடியாது. வானப்ரஸ்தனும் காட்டில் ஒரே இடத்தில் இருந்துகொண்டுதான் வ்ரத நியம தபோநுஷ்டானங்களைப் பண்ணவேண்டும் என்று சாஸ்த்ரம். ஸந்நியாஸி மட்டுந்தான் சாஸ்த்ர விதிப்படியே ஒரே இடத்தில் ஜாஸ்தி நாள் தங்காமல் ஸஞ்சரித்துக்கொண்டே இருக்கவேண்டியவன். ஆகையினால் அப்படிப்பட்ட ஒரு அவதாரத்தினால்தானே தேசம் பூராவுக்கும் உபதேசம் தருவதான கார்யம் நடக்க முடியும்?

முக்கியமாக இந்த அவதாரம், நிவ்ருத்தி மார்க்கத்தில் ஞானம் பெற்றே மோக்ஷமடையமுடியும் என்ற உபநிஷத அபிப்ராயத்தை முடிவாகச் சொல்லவந்தது. எனவே அது ஸந்நியாஸியாயில்லாமல் வேறெப்படியும் இருக்கமுடியாதென்று ஆகிவிட்டது. ப்ரவ்ருத்தியிலிருப்பவர் நிவ்ருத்தியை
அந்தரங்க ஸாதனமாகச் சொல்வது பெரிய முரண்பாடல்லவா? இப்படிப் பல காரணங்களால், கலி பிறந்து ஸுமார் 2500 வருஷத்துக்கப்புறம், ஈஸ்வரன் குருவாக அவதாரம் பண்ண வேண்டுமென்றும், அப்படி ஞானாவதாரமாக வருபவர் ஸந்நியாஸியாகவே இருக்கவேண்டும், ஆயுஸ் முழுக்க அப்படியிருந்து உபதேசம் பண்ணவேண்டும் என்றும் முடிவாயிற்று.
பகல் வேளையில் எப்போதோ ஒரு ஸமயம் மானம் (வானம்) மூடிக்கொண்டு இருட்டிப்போவது போல க்ருஷ்ணர் காலத்தில் ஏற்பட்டதால் அப்போதைக்கு அவர் ஒரு தீபத்தை ஏற்றி வைத்தால் போதுமானதாயிருந்தது. இப்போது ஒரே ராக்காலமாகவே ஆகிவிட்டதால் அவதார புருஷர் ஆயுஸ்காலம் பூராவும் நிறைய விளக்குப் போட்டாகவேண்டும் என்றாயிற்று. மனோ விகாரங்களும், விகல்பமான எண்ணங்களும் ஜனங்களுக்கு ஜாஸ்தியாகிவிட்டதால் அவதாரம் தாம்பத்ய வாழ்க்கையே இல்லாமல் இருக்கவேண்டுமென்றும் ஆயிற்று.

ஆசார்யாள் பூர்ணமாக மநுஷாயுஸ் பூலோகத்தில் இருக்கவில்லை, முப்பத்திரண்டே வயஸுதான் இருந்தாரென்று தெரிந்திருக்கும். அதாவது, இத்தனை
கலி ப்ரவாஹத்தையும் அடக்குவதற்கு அத்தனை ஸ்வல்ப காலமே போதும்படியாக அப்பேர்ப்பட்ட ஞான சக்தியோடும் க்ரியா சக்தியோடும் அவதாரம் ஏற்பட முடிந்தது என்று தெரிகிறது. முப்பத்திரண்டு வருஷமென்ன, சொடக்குப்போடும் நாழியிலேகூட ஈஸ்வர சக்தியால் ஸாதிக்க முடியாததாக எதுவாவது உண்டா? ஆனால், நரலீலைக்காக அவதாரம் என்று ஆடிக் காட்டுவதில் இப்படி 32 வருஷமென்று ஸங்கல்பம் செய்யப்பட்டது. அதை ரொம்பவுமே லீலா விநோதமாகப் பண்ணினார். எப்படியென்றால், முதலில் தம்முடைய ஸ்வய ஸங்கல்பப்படி எட்டே வயஸு இருக்கிறமாதிரியும், அப்புறம் முதலை வாயிலிருந்து தப்புகிறபோது எட்டைப் பதினாறாக்கிக் கொண்டாற்போலவும், பதினாறு முடிந்தபோது வ்யாஸர், ப்ரம்மா ஆகியவர்களுடைய விருப்பப்படி இன்னும் ஒரு பதினாறு கூட்டிக்கொண்ட மாதிரியும் விளையாட்டுப் பண்ணினார்.

ஆனால், முதலிலேயே பரமேஸ்வரன் ப்ளான் போட்டதுதான், - தாம் முப்பத்திரண்டு வருஷம் ஸந்நியாஸ குருவாயிருந்தே அத்வைத க்ரந்தங்களை எழுதி அவற்றை தேசம் பூரா ஸஞ்சாரம் பண்ணிப் பிரசாரம் செய்ய வேண்டுமென்பது. ஸரி. ஆனால் 32 வருஷம் என்பது புருஷாயுஸ் இல்லை. புருஷாயுஸ் (என்பது) நூறு வருஷம். இந்த அவதாரம் அப்படிப் பூர்ணாயுஸ் கொண்டதாகவோ அல்லது எண்பது தொண்ணூறு வயஸ் ஜீவிப்பதாகவோ இருந்து, அதில் முதலில் மற்ற ஆஸ்ரமங்களை வஹித்துவிட்டுக் கடைசி 32 வருஷம் மட்டும் ஸந்நியாஸியாயிருக்க முடியுமல்லவா? ‘அப்படியெல்லாம்கூட க்ருஹஸ்தாஸ்ரமக் கலப்பு இருக்கவே கூடாது. அவதார கார்யத்தைப் பண்ணுவதற்கு 32 வருஷம் போதுமா? அப்படியானால் அந்த 32 வருஷமும் ஸந்நியாஸியாயிருந்துவிடவேண்டும். ஜீவிதம் பூராவும் ஞானோபதேசமே கார்யமாயிருந்துடணும். இந்தக் கலியுகத்தில் அவதாரமாக வரும்போது க்ருஹஸ்தாஸ்ரம வாடையே காட்டப்படாது’ என்று பரமேஸ்வர ஸங்கல்பமாயிற்று.

-(காஞ்சி முனிவர் சந்திரசேகரேந்திர சுவாமிகள் அருளியது)