வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் தங்க என்ன ஸ்லோகம் சொல்ல வேண்டும்?



“ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே.”

- என்ற ஸ்லோகத்தை சதா மனதிற்குள் சொல்லிக்கொண்டு இருந்தாலே போதும். அதோடு கீழ்காணும் மந்திரத்தை தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றும் சமயத்தில் 18 முறை சொல்லிவந்தால் வீட்டில் என்றென்றும் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும்.
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நம:
 வஸுதே வஸுதாரே வஸூகரீ தனகரீ தான்யகரீ
 ரத்னகரீ சௌபாக்யகரீ சாம்ராஜ்யகரீ ஸ்வாஹா
 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நமஹ ”

* தலைக்குமேல் கைகளை உயர்த்தி வணங்கக்கூடாது என்கிறார்களே, ஏன்? - விஸ்வநாத், பெங்களூரு.

திரௌபதியின் மானம் காக்க கண்ணன் வந்தது எப்பொழுது? இரு கைகளையும் மேலே தூக்கி, கண்ணா நீயே கதி என்று சரண் அடைந்தவுடன் ஓடோடிவந்தானே!ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தலைக்கு மேல் கைகளை உயர்த்தி இறைவனை வணங்கும்போது அவர்கள் இறைவனை முழுமையாக நம்பி சரணடைகிறார்கள் என்றுதான் பொருள்.இவ்வாறு வணங்குவது அவர்களுடைய பக்தியின் வெளிப்பாடு. ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் தலைக்குமேல் கைகளை உயர்த்தி வணங்குவது சரியே. இதில் எந்தத் தவறும் இல்லை.
?சைவம், அசைவம் எது ஆன்மிகத்திற்கு ஏற்றது? -சு.பாலசுப்ரமணியன், இராமேஸ்வரம்.

தான் வேட்டையாடிக் கொண்டு வரும் மாமிசத்தை தினமும் இறைவனுக்கு படைப்பதைத் தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தார் கண்ணப்ப நாயனார். இறைவன் அன்றாடம் தனக்கு எந்த உணவை அளிக்கிறானோ, தான் எதை உண்டு உயிர் வாழ்கிறானோ, அதனையே இறைவனுக்கும் நைவேத்யம் செய்வதை ஆண்டவனும் ஏற்றுக்கொண்டான்.உண்மையான பக்திக்கு சிரத்தைதான் முக்கியம்.மற்ற விஷயங்கள் அங்கே காணாமல் போகும்.ஆன்மிகத்திற்கு சைவம், அசைவம் என்ற பேதம் ஏதும் கிடையாது.

?நிறைமாத கர்ப்பிணிகள் நேருக்கு நேர் சந்திக்கக் கூடாது என்கிறார்கள்.குறிப்பாக சொந்தங்களுக்குள் சந்திப்பு நிகழக்கூடாது என்கிறார்களே, ஏன்?

- பார்வதி வைரமுத்து, ராயபுரம். மகப்பேறு மருத்துவரிடம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறைமாத கர்ப்பிணிகள் ஆலோசனை பெறுவதற்காக வந்திருப்பார்கள்.இந்த கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் எதிரெதிரிலும், அருகிலும் அமர்ந்திருப்பார்கள்.மருத்துவமனைக்குள் நடக்கும்போது ஒருவருக்கொருவர் எதிரெதிரே சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பும் அதிகம். நீங்கள் கருதுவதுபோல் நிறைமாத கர்ப்பிணிகள் எதிர் எதிரே சந்தித்துக்கொள்ளும்போது ஏதேனும் பிரச்னை உண்டாகலாம் என்ற கூற்றில் உண்மை இருந்தால் அதனை  மருத்துவர்கள் அனுமதிப்பார்களா?

ஆக இந்தக் கருத்தில் அறிவியல் ரீதியான உண்மை ஏதும் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.குறிப்பாக சொந்தங்களுக்குள் கூடாது என்று தனியாக ஒரு விதியைச் சொல்லியிருக்கிறீர்கள். கர்ப்பிணிப் பெண்களுக்குள் ஒருவருக்கொருவர் மனதிற்குள் உண்டாகும் எண்ண ஓட்டம் வயிற்றில் உள்ள குழந்தையைச் சென்றடையலாம், உதாரணத்திற்கு பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பொறாமை எண்ணம் கொண்டவர்களாக இருக்கும் பட்சத்தில் எதிரெதிரே சந்தித்துக்கொள்ளும்போது வெளியில் சிரித்தாலும்  மனதிற்குள் உண்டாகும் தீய எண்ணத்தின் அதிர்வலைகள் வயிற்றுக்குள் இருக்கும் பிள்ளையை பாதிக்கக்கூடும் என்ற எண்ணத்தில் பெரியவர்கள்  இவ்வாறு சொல்லி வைத்திருப்பார்கள். இதைத்தவிர வேறெந்த காரணமும் இருக்க முடியாது.கர்ப்பிணிப் பெண்கள் ஒருவருக்கொருவர் எதிரெதிரே சந்தித்துக்கொள்ளக் கூடாது என்ற கருத்தில் உண்மை இல்லை.

* அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வதால் வீட்டு வாசலில் கோலம் போடலாமா, கூடாதா? - ரா.பாஸ்கரன், பெங்களூரு...

தர்ப்பணம் செய்கின்ற நாளில் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது என்பதில் உடன்பாடில்லை. வீட்டு வாயிலில் கோலம் போடுவது என்பது நல்ல தேவதைகளை வீட்டிற்குள் வரவேற்பதற்காக. முன்னோர்களை துர்தேவதைகள் என்றும், முன்னோர்களுக்காக அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வதை கெட்ட நிகழ்வு என்றும் கருதுவது முற்றிலும் தவறு. தர்ப்பணம் என்பது அமங்கலமாக நிகழ்வு அல்ல. வீட்டில் அல்லது பங்காளி வகையறாவில் யாரேனும் இறந்துவிட்டால் இறந்த நாள் முதல் பத்து நாட்கள்வரை அல்லது கருமகாரியங்களைச் செய்து முடிக்கும்வரை வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. மற்ற நாட்களில் அவசியம் கோலம் போடவேண்டும். தினசரி கோலம் போட்டால்தான் வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும்.அமாவாசை நாளில் வீட்டில் தர்ப்பணம் செய்தாலும், வீட்டு வாசலில் கோலம் போடுவதில் எந்தத் தவறும் இல்லை.

* பூஜையின்போது மணி அடிப்பது ஏன்? - கௌதமன், சென்னை.

“ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ராக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ தேவதாஹ்வாந லாஞ்ச்சனம்.”

- என்ற மந்திரத்தைச் சொல்லி மணி அடித்து பூஜையினைத் துவக்குவார்கள். பூஜை நடக்கும் இடத்திலிருந்து அசுரத்தனமான தீய சக்திகள் விலகிச் செல்லவும், பூஜைக்குரிய பிரதான தெய்வத்தை ஆவாஹனம் செய்வதற்குத் துணையாக சுபத்தினைத் தரக்கூடிய மங்களகரமான தேவதைகளின் சக்தி வந்து சேரட்டும் என்பதற்காக இந்த மணியினை அடிக்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள். மணி ஓசையால் பூஜை நடக்கும் இடத்திலிருந்து தீய சக்திகள் விலகிச் செல்கின்றன.மணியோசை ஒலிக்கும்போது அங்கே இறை சாந்நித்யம் வந்து சேர்ந்துவிடும் என்பது அனுபவபூர்வமான உண்மை.

* பெண்கள் கழுத்தில் தாலி கட்டுகின்ற சம்பிரதாயம் எப்படி ஏற்பட்டது? - எஸ்.எஸ்.வாசன், தென்எலப்பாக்கம்.

இந்து திருமண விதிகளின்படி ஆரம்ப காலத்தில் தாலி கட்டும் சம்பிரதாயம் கிடையாது.தாலி கட்டினால் மட்டும் அந்தத் திருமணம், இந்து திருமணச் சட்ட விதிகளின்படி செல்லுபடி ஆகாது. பாணிக்ரஹணம் (மணமகளின் கரம் பற்றி உறுதி கூறுதல்), ஸப்தபதி (மணமகளின் வலது கால் கட்டை விரலை பிடித்து ஏழு அடி எடுத்து வைத்தல்) ஆகிய நிகழ்வுகள் நடந்தால்தான் இந்து மத திருமண விதிகளின்படி திருமணம் நடந்ததாக ஏற்றுக்கொள்ளப்படும். சாஸ்திர விதிகளின்படி தாலி கட்டுதல் கிடையாது. ஆனால் புராணங்களில் தாலிகட்டுதல் என்கிற சம்பிரதாயத்திற்கான ஆதாரம் உண்டு.

நம்மவர்கள் மீனாக்ஷி கல்யாணத்தை உதாரணமாகக் கொள்கிறார்கள். மீனாக்ஷி கல்யாணத்தின்போது சுந்தரேஸ்வரர், அன்னை மீனாக்ஷியின் கழுத்தில் மங்கலநாண் அணிவித்தார் என்று சொல்லப்பட்டுள்ளதை ஆதாரமாகக் கொண்டு, திருமணத்தின்போது தாலிகட்டுகின்ற சம்பிரதாயம் தோன்றியிருப்பதாக சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள் சொல்கிறார்கள்.

* ஒரு ஆண் அல்லது பெண்ணின் ஜாதகப்படி காதல் திருமண அமைப்பு இருந்து அவ்வாறு நடந்துவிடும்போது அவர்களை பெற்றோர் ஒதுக்கிவிடுகிறார்களே, ஜாதகத்தின்படி விதி அவ்வாறு அமைந்திருக்கும்போது அவர்கள் என்ன செய்வார்கள்? பெற்றோர் செய்வது சரியா?
- நாகேஷ்வரன் பிரபு, அரியலூர்.

ஜாதக அமைப்பின்படி காதல் திருமணம்தான் நடக்கவேண்டும் என்ற விதி இருந்தால் அவர்கள் பெற்றோரின் சம்மதத்திற்காகக் காத்திருக்கலாமே!தானத்திலே பெரியதானம், அதாவது மஹாதானம் என்று கன்னிகாதானத்தைச் சொல்வார்கள்.ஒரு தகப்பன், தான் பெற்ற பெண்ணை கன்னிகாதானம் செய்து தரும்போது அவரது பரம்பரையில் 21 தலைமுறையைச் சேர்ந்தவர்கள் கரையேறுவதாக சாஸ்திரம் சொல்கிறது. கிடைத்தற்கரிய அந்த வாய்ப்பினை வேண்டாம் என்று தன்னுடைய சுயவிருப்பத்திற்காக தூக்கியெறிந்துவிட்டுச் செல்லும் பெண்ணை பெற்றோர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்  என்ன நியாயம் இருக்க முடியும்?

உண்மையாக காதலிப்பவர்கள் எத்தனை காலம் ஆனாலும் பெற்றோரின் சம்மதத்திற்காகக் காத்திருக்க வேண்டும்.அதே நேரத்தில் நீங்கள் குறிப்பிடுவது போல் பெற்றோரின் சம்மதமின்றி திருமணம் செய்துகொள்வார் என்ற விதி ஜாதகத்தில் அமைந்திருந்தால் அதனை மாற்ற இயலாது.அதுபோன்ற அமைப்பினை உடையவர்களுக்கு பாக்ய ஸ்தானம் கெட்டிருக்கும்.பெற்றோர் இவர்களை ஒதுக்கிவிடுவார்கள் என்ற விதி இருந்தால் அதையும் இந்தப் பிள்ளைகள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். பெற்றவர்களின் சம்மதமின்றி தங்களின் சுயவிருப்பத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து தாங்களாகச் சென்று திருமணம் செய்து கொள்ளும் பிள்ளைகளை பெற்றோர் ஒதுக்கிவிடுவது முற்றிலும் சரியே. இதில் எந்தவிதமான தவறும் இல்லை.

* நான் பூஜை செய்யும் கோவிலில் உள்ள சுவாமி சிலையின் திருமேனியில் அழுக்கு படிகிறது.இதனை எவ்வாறு போக்குவது என்று தெரியவில்லை.அழுக்கு நீங்க என்ன செய்ய வேண்டும்? - திருத்தணி வாசகர்.

அரிசிமாவை நன்கு புளித்த தயிரில் ஊறவைத்து அதனை சுவாமி சிலைகளின் மீது காப்புபோல நன்றாக அப்பிவிட வேண்டும்.சில மணி நேரங்கள் கழித்து அந்த மாவு காய்ந்து ஏடு, ஏடாக பிரிந்து வரும்போது சிலைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் அழுக்கும் சேர்ந்து வெளிவரும்.அதன்பின்பு மாவுகாப்பினைக் களைந்துவிட்டு தேங்காய் நாரால் நன்றாகத் தேய்த்தால் சிலைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் அழுக்கு காணாமல் போகும். கத்தி அல்லது இரும்புத்தகடு ஆகியவற்றை உபயோகிக்கக் கூடாது.

* நாம் வாழுகின்ற பூமியிலிருந்து பல லட்சம் கி.மீ.தூரத்தில் இருக்கும் குரு, சனி ஆகிய கிரஹங்களின் சஞ்சாரம் மனிதனின் நடவடிக்கையில் மாற்றத்தை உண்டாக்குகின்றன என்ற கருத்தினை எவ்வாறு ஏற்க இயலும்? - ஜி.டி.சுப்ரமணியம், கொளத்தூர்.

கடந்த மாதத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் காஸ்மிக் கதிர்கள் பற்றிய வியப்பூட்டும் தகவல் ஒன்று வெளியானது.பூமியின் தென்துருவமான அண்டார்டிகாவில் இந்த காஸ்மிக் கதிர்களைப் பற்றி ஆய்வு செய்து வருகின்ற விஞ்ஞானிகள் குழு ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். பூமிக்குத் தென்திசையில் உள்ள வானத்தில், கப்பலின் பாய்மரம் போன்ற வடிவில் அமைந்துள்ள வெலா என்ற நட்சத்திரக் கூட்டத்தின் அருகில் இருந்து பிரபஞ்சக் கதிர்கள் என்று அழைக்கப்படுகின்ற இந்த காஸ்மிக் கதிர்கள் வருகின்றன.  

இவை, பூமியின் வானிலை மாற்றத்தில் மேகமூட்டத்தை திசை திருப்புவது, காற்றில் மின்னூட்டத்தை ஏற்படுத்தும் இடி, மின்னல்களை உருவாக்குவது போன்ற மிக முக்கியமான செயல்களில் ஈடுபடுகின்றன என்று கூறும் விஞ்ஞானிகள் மேலும் தொடர்கிறார்கள்.... இவற்றில் உள்ள நியூட்ரினோ கதிர்கள் நிறை (mass)அதாவது, எடையும், மின்னூட்டமும் (electric force) இல்லாதவை என்பதால் பூமியில் உள்ள பாறைகள், உலோகங்கள், மனிதர்கள் என அனைத்தின் மீதும் ஊடுருவிச் செல்கின்றன, இதனால் மனிதனின் மீது உண்டாகும் தாக்கம் என்ன என்பதைப் பற்றி ஆராய்ந்து வருவதாகவும் கூறுகிறார்கள்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது யாதெனில் பல லட்சக்கணக்கான மைல்கள் தூரத்தில் இருந்து வெளிப்படும் பிரபஞ்சக் கதிர்கள் மனிதனின் மீதும், பூமியின் தட்ப வெப்ப சூழ்நிலையின் மீதும் தனது தாக்கத்தைச் செலுத்த முடியும் என்றால் அதைவிட அருகில் இருக்கும் நவகிரஹங்களில் இருந்து வெளிப்படும் கதிர்களின் தாக்கம் மனிதனை ஏன் பாதிக்காது?  பூமியிலிருந்து  மிகத்தொலைவில் இருக்கும் கோள்கள் எவ்வாறு மனிதனை இயக்க முடியும், குருவும், சனியும் எவ்வாறு நன்மை தீமைகளை செய்ய முடியும் என்றெல்லாம் கேலியும், கிண்டலுமாக வினா எழுப்பி வந்த சில நாத்திகர்களுக்கு சரியான பதில் தரும் வகையில் இன்றைய விஞ்ஞானிகளின் இந்த ஆராய்ச்சி முடிவானது அமைந்திருக்கின்றது என்றே கூறலாம்.
இவற்றையெல்லாம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆராய்ந்துதான் நமது முன்னோர்களும், வானவியல் அறிஞர்களும், சித்த புருஷர்களும் நவகிரஹங்கள் மனிதனின் மீதும், பூமியின் இயற்கையான தட்ப வெப்ப நிலையின் மீதும் தங்கள் ஆதிக்கத்தினை செலுத்துகின்றன என்ற தகவலையும்கூறிவிட்டு சென்றிருக்கிறார்கள்.  இந்த மெய்ஞ்ஞானக் கருத்தினை இன்றைய நவீனகால விஞ்ஞானிகளும் தங்களின் ஆராயச்சிகளின் மூலம் ஏற்றுக் கொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

-திருக்கோவிலூர் K .B  ஹரிபிரசாத் சர்மா