பொறுமையால் பெருமை வென்ற ரகுராமன்!



கம்பன் சொல்லோவியம் ராமன்
காவிய எழுத்தோவியம் சீதை
மிதிலை நகரத்து மாடப்புறாவின்
மதிஒளி வென்ற முகத்தை
விதிவசம் கண்டனன் நாயகன்!
விழிதீபத்தால் விழி தீபமேற்றி
காதல் தீபம் ஒளிர்ந்தது- அன்று
காதல் மண்ணில் உயிர்த்தது.
மான வேலிக்கு மாலையிட்டு
மலரவன் பாதம் சரணடைந்த சீதை
காவலன் அணிதுறந்து காவி தரித்து
கானகம் ஏகினான்; காதலி பின்தொடர்ந்தாள்.
கனகமயிலை கண்ட புள்ளி மான்கள்
அழகில் தோற்றோமென ஓடி ஒளிந்தன
கண்மான், கலைமான், மடமான்
கண்டு மயங்கினள் பொன்மான், பொய்மான்
அம்மான் கொண்டுவருவீர் எம்மான் என்றாள்
இளமான் பேச்சில் பெருமான் பேதையுற்றான்
ஒளிமான் நீயிருக்க நிழல்மான் எதற்கு என்றான்
தனிமான் நானும் விளையாட வேணும் என்றாள்
கோமான் துரத்தி செல்ல குலமான் காத்திருந்தாள்
அசுரமான் அந்தக் கவரிமானை கடத்திச்
சென்றான்
மனம் நேரானவள் சிறைபட்டாள் அசோகவனம்
மங்கைபிரிவால் ராமன் மனம் சோகவனம்
வாலியை மறைந்து கொன்றான்
என்றொரு குறை ராமனுக்குண்டு
மனைவியை பிரிந்து உயிர்பாதியானான்
மனம் கூடானான்; சுக்ரீவன் சகியை
தனதாக்கி கொண்ட வாலி - குணாளன்
நேர் நிற்க தகுதியிழந்தான்- ஆகையால்
மறைந்து நின்று அம்பெய்த - வாலி
மண்ணில் வீழ கண்முன் விரிந்தான் ராமன்
கொதிக்கும் ஊர் உலையை தணிக்க
கோதையை தீயிலிறக்கினான் ராமன்
தீ தீண்டாத தீம்பழம் சீதை!

சீலத்தில் சீறும் பாம்புக்கு நிகர் என்றுரைத்தான்
ஆட்சி நிர்வாகத்தில் அயோத்தி ராமன்
மாட்சி, மாண்பில் கோசலை ராமன்
வீரத்தில், பரிவில் தசரத ராமன்
ஆழ்ந்த அன்பில் ஜானகி ராமன்
கம்பனாக எனை பாவித்து தந்தேன்
சடையப்பவள்ளல் கரம் காணிக்கை முத்தம்
கம்பனாக நானும் மாறி தந்தேன்
பொன்ஏரி பூத்த ரங்கநாதன் வழி
தோன்றல் கருணை வான்கைக்கு முத்தம்
ராமனெனும் பாத்திரப் படைப்பை
தமிழ்காவியம் இதுவரை கண்டதில்லை-நாம்
ராமன் வழி நடப்பதே கம்பனுக்கு கைமாறு!

விஷ்ணுதாசன்