‘மத்தளம் கொட்ட மரகதம் உதிரும்’ என்றால் என்ன?



புனித யாத்திரை - ராமேஸ்வரம் 12

திருக்கயிலாயத்தில் சிவபெருமான் தன் துணைவி பார்வதிதேவியிடம் தான் ஏற்கனவே கற்றுக் கொடுத்திருந்த வேதமந்திரத்தைச் சொல்லும்படி கேட்க, தேவியால் சொல்ல இயலவில்லை. காரணம், அதை அவர் மறந்து விட்டார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் பூலோகத்திற்குச் சென்று வேதியர் ஒருவரின் மகளாக பிறந்து வேதங்களை பலமுறை பயின்றுவர பார்வதிதேவிக்கு சாபமிட்டார். சாபம் பெற்ற பார்வதிதேவியை, ராஜமாணிக்க சதுர்வேதபுரம் என்ற ஊரில் முறைப்படி வேதம் பயின்ற, குழந்தை வரம் வேண்டி நீண்டகாலம் தன்னை நினைத்து தவமிருந்து வரும் வேதியர் ஒருவருக்கு மகளாக பிறக்கச் செய்தார்.

பூண் முலையாள் என்ற பெயரோடு வேதமந்திரங்களை கற்று வளர்ந்து வந்த பார்வதிதேவி பருவ வயதை அடைந்ததும், சிவபெருமான் வேதியர் உருவில் வந்து அவரை மணந்தார். அங்கிருந்து மீண்டும் திருக்கயிலாய மலைக்கு அழைத்து வந்து வேதமந்திரங்களை சொல்லச் சொன்னார். அவரும் வேதமந்திரங்களை சொல்ல அதற்கான பொருளை சிவபெருமான் விளக்கினார். தேவியைத் தன் துணையாக திரும்பப் பெற்று அவருக்கு வேத மறைபொருளை சிவபெருமான் உணர்த்தியதால் இத்தலம் ‘உத்தரகோச மங்கை’ எனப் பெயர் பெற்றது. (கோசம் - வேதம்; உத்தரம் - திரும்ப பெறும் விடை; மங்கை - பார்வதி). ஆதிசிதம்பரம், மங்களபுரி, தட்சிண காசி, சதுர்வேத புரி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

ராவணன் அரசாண்ட காலத்தில், ராமேஸ்வரம் தோன்றுவதற்கு முன் உருவான இக்கோயிலே உலகின் முதல் கோயில் என்றும், பூலோக கைலாயம் என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. ‘மண் முந்தியோ…. இல்லை… மங்கை முந்தியோ’ என்று இப்பகுதியில் நிலவும் வழக்குச் சொல் இதை உறுதிப்படுத்தும். 120 அடி உயரம் உள்ள ஏழு நிலை கோபுரமும் அடுத்து 64 அடி உயர ஐந்து நிலை கோபுரமும் கொண்டு விளங்கும் இவ்வாலயம் ஏழு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு நடராஜப் பெருமானுக்கு ஆதி சிதம்பரம் என்ற தனிக் கோயில் உள்ளது. இத்தலத்தில் மட்டும்தான் மூலவராக நடராஜர் கோவில் கொண்டுள்ளார். மூலவர் மங்களநாதர் என்று போற்றப்படுகிறார்.

மண்டோதரி உலகிலேயே சிறந்த சிவபக்தனை மட்டுமே  திருமணம் செய்வேன் எனக் கூறி சிவபெருமானை வேண்டி தியானம் செய்தாள். அவளுக்கு காட்சிதர முடிவுசெய்த சிவபெருமான், தான் பாதுகாத்து வந்த வேத ஆகம நூல் ஒன்றை முனிவர்களிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்கச் சொல்லிவிட்டுச் சென்றார். மண்டோதரியின் முன் குழந்தை வடிவில் காட்சி தந்த சிவபெருமானை அடையாளம் கண்டு கொண்ட ராவணன் சிவனைத் தொட அவனை சோதனைக்குள்ளாக்க நினைத்த இறைவன் அக்னியாய் மாறியதால் உலகில் அனைத்தும் தீப்பற்றி எரிந்தது. முனிவர்களிடம் பாதுகாப்பாக சிவபெருமான் வைத்திருக்கச் சொல்லியிருந்த வேத ஆகம நூலுக்கும் ஆபத்து வந்ததால் பயந்து போன முனிவர்கள் தீர்த்தத்தில் குதித்து இறந்தனர்.

ஆனால், அங்கிருந்த மாணிக்கவாசகர் மட்டும் தைரியமாக நின்று அந்த நூலை காப்பாற்றினார். அதன்பின் இறைவன் ராவணனுக்கும், மண்டோதரிக்கும் திருமணம் நடக்க அருள்பாளித்தார். ஆகமநூலை காத்து நின்ற மாணிக்கவாசகருக்கு ஒரு லிங்க வடிவத்தை கொடுத்தருளினார். மற்ற தலங்களில் மாணிக்கவாசகரின் திருமேனி துறவு நிலையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இங்குமட்டும் தனிச் சந்நதியில் லிங்க வடிவில்  காட்சி தருகிறார். இத்தலம் பற்றி ஒன்பது பாடல்களைப் பாடியுள்ள மாணிக்கவாசகர் ‘அழகமர் மண்டோதரிக்கு பேரருள் அளித்த பிரான்’ என்று சிவனைப் பாடுகிறார். உலகிலேயே முழு மரகதத்தாலான நடராஜர் திருவுருவம் இங்கு மட்டுமே அமைந்துள்ளது.

இதை வடிவமைத்தவர் ஷண்முக வடிவேலர். திருவாசியுடன் சேர்த்து ஏழடி உயரத்தில் அமைந்துள்ள இம்மரகதச் சிலை மிகவும் மென்மையானது. சாதாரண ஒலி அலைகளால் கூட உதிர்ந்து விழும் தன்மை கொண்டதால், ‘மத்தளம் கொட்ட மரகதம் உதிரும்,’ என்னும் வழக்குச் சொல் உருவானது. இச்சிலை ஆண்டு முழுவதும் சந்தனத்தால் கவசம் போல பூசி வைக்கப்பட்டு வருடத்திற்கு ஒருமுறை ஆருத்ரா தரிசனம் அன்று மட்டும் சந்தனக்காப்பு களையப்பட்டு நடராஜர் சிலை பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படுகிறது. மரகதச் சிலையின் மீது பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவ குணம் உடையது. நவகிரகங்களில் சனீஸ்வரர் மட்டுமே காட்சியளிப்பது இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

தவிர, இத்தலத்தில் உள்ள இலந்தை மரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருப்பதாக கூறப்படுகிறது. இறைவன் சுயம்புவாக இம்மரத்தடியில் தோன்றியதாகவும், மாணிக்கவாசகர் இம்மரத்தடியில்தான் அமர்ந்திருந்தார் என்றும், வேதவியாசர், பராசரர் ஆகியோர் இம்மரத்தடியில் அமர்ந்து தவம் செய்ததாகவும், பதஞ்சலி மற்றும் வியாக்கிரபாதர் இம்மரத்தடியில் நிஷ்டையில் இருந்ததாகவும் தலச்சிறப்பு கூறுகிறது. இம்மரத்தின் அருகிலுள்ள லிங்கத்தின் மீது வரிசைக்கு ஐம்பது வீதம் இருபது வரிசைகளில் ஆயிரம் லிங்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அறையில் ஆடிய பதஞ்சலிக்கும், வியாக்கிரபாதருக்கும், காரைக்கால் அம்மையாருக்கும் நடராஜர் இங்குதான் முதலில் காட்சி தந்து, அதன்பிறகே சிதம்பரம் சென்று அனைவரும் காணுமாறு ஆடினார். இதற்கு ஆதாரமாக ஆரம்பகாலத்தில் உத்தரகோசமங்கைக்கும், சிதம்பரத்திற்கும் இடையில் சுரங்கப்பாதை இருந்ததையும் காலப்போக்கில் பராமரிப்பின்றி மணலால் அப்பாதை அடைபட்டு விட்டதையும் எடுத்துக்காட்டுகின்றனர். வருடம் முழுவதும் வற்றாத, உப்புக் கரிக்கும் நீரை உடைய தெப்பக்குளத்தைக் கொண்ட இக்கோயில் குளத்தில் உள்ள மீன்கள் கடல்வாழ் மீன் வகைகளைச் சேர்ந்தவை. கடல்நீரால் சூழப்பட்டிருந்த இத்தலம் கடல்நீர் உள்வாங்கி சென்ற பின் இன்றைய நிலையை அடைந்திருக்கிறது.

இக்கோயிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு யாளி சிலைகளின் திறந்த வாய்க்குள் பந்து போன்ற கல் உருண்டை ஒன்று சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது, இன்றும் தமிழர்களின் சிற்பக்கலைக்கு சான்றாகத் திகழ்கிறது. இங்கு நடைபெறும் மார்கழி திருவாதிரைத் திருவிழா, சித்திரைத் திருவிழா இரண்டும் மிகவும் புகழ்பெற்றவை. மாணிக்கவாசகரால் பாடப்பெற்றதும், பிருகு முனிவர், கங்கை, சாண்டிலியர், அக்னி ஆகியோர் வணங்கி பேறு பெற்றதுமான இத்தலத்தில் உள்ள நடராஜரை வணங்குவதோடு ராமேஸ்வர யாத்திரை நிறைவு பெறுகிறது.

(மேலும் சில உபரி செய்திகள் அடுத்த இதழில்)

- கோபி சரபோஜி