ராமர் வகுத்துக் கொடுத்த வழிபடு மரபு!



புனித யாத்திரை ராமேஸ்வரம்

கிழக்கு பார்த்த சந்நதியில் சூரியன், தேவியுடன் இருக்கிறார். சூரியனுக்கு எதிரே ‘சோமஸ்கந்தர் மண்டபம்’ என்னும் மகாமண்டபம் அமைந்துள்ளது. சர்வதீர்த்தம் இங்குதான் இருக்கிறது. முதல் திருச்சுற்றின் தென்புறம் தொடங்கி மூலவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களும் உள்ளனர்.

கணங்கள் குழுமியிருக்கும் இடத்தில் ஆடும் சபாபதி, ஆகாசத்தில் ஆடும் சிதம்பரேசர், யோகியர் மட்டுமின்றி யாவருக்கும் காட்சி தந்து ஆடும் அம்பலவாணர் - என மூன்று நடராஜர்கள் இக்கோயிலில் இருக்கின்றனர். தனிக்கோயிலோ, சுற்றுகளோ இல்லாமல் மாடத்தில் இருக்கின்றனர்.

வடகிழக்கு பகுதியில் விபிஷணன் பிரதிஷ்டை செய்த ‘ஸஹஸ்ரலிங்கம்’ அமைந்துள்ளது. இதையடுத்து காசி விசுவநாதர் சந்நதி உள்ளது. இதில் வீற்றிருக்கும் காசி விசுவநாத லிங்கத்திற்குதான் முதலில் பூஜை செய்ய வேண்டும். இந்த மரபு ராமர் வகுத்துக் கொடுத்தது. அதற்கு ஒரு காரணக் கதை சொல்லப்படுவதுண்டு. ராவணவதம் முடிந்ததும் சீதையோடு வானர வீரர்கள் சூழ வந்த ராமரை அகத்தியர் முதலான ரிஷிகளும், தேவர்களும் வணங்கி வழிபட்டதோடு பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட ஆலோசனை கூறினர்.

அவர்கள் கூறியபடி பூஜித்து வழிபட சிவலிங்கம் ஒன்றை கொண்டு வரச்சொல்லி தன் பரம பக்தனான அனுமனை ராமர் அனுப்பி வைத்தார். அவர் வரத் தாமதமானது. பூஜைக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால் சீதை மணலை தன் கைகளால் குவித்து லிங்கம் போல் செய்து தர, அதையே பிரதிஷ்டை செய்து, ராமர் வழிபாட்டை ஆரம்பித்தார்.

தாமதமாக வந்த அனுமன் தான் கொண்டு வந்த லிங்கம் இனி பயனின்றிப் போகுமோ என்று வருத்தமும், கோபமும் கொண்டு சீதை உருவாக்கிய லிங்கத்தை தன் வாலால் சுற்றி வளைத்து பிடுங்கி எறிய முயன்றார். தன் முழு பலத்துடன் முயன்றபோதும் அவரால் அதை பிடுங்க முடியவில்லை. அதோடு, அந்த முயற்சி வேகத்தில் அங்கிருந்து வெகுதொலைவில் போய் விழுந்தார்.

அப்படி அவர் விழுந்த இடம், அங்கிருந்து, முப்பத்தேழு கி.மீ. தொலைவில் இன்றும்  ‘வாலாந்தரவை’ (வால் + அருந்த + தரவை) என்று அழைக்கப்படுகிறது. இராமேஸ்வரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது இவ்வூர். லிங்கத்தை அனுமன் பிடுங்க முயன்றபோது ஏற்பட்ட வால் தழும்பு இன்றும் அந்த லிங்கத்தின் மீது இருக்கிறது.

மிகுந்த வருத்தத்தோடு நின்ற அனுமனை மிகுந்த பரிவுடன், உடனே சமாதானம் செய்தார் ராமர். பிறகு, அனுமன் கொண்டு வந்த காசிவிசுவநாதர் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, பூஜை நடத்திய பின் சீதை உருவாக்கி கொடுத்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அதோடு, ‘சீதை உருவாக்கி, நான் பிரதிஷ்டை செய்த ராமலிங்கத்தை தரிசனம் செய்வதால் கிடைக்கும் முழு பலனையும் ஒரு பக்தர் பெற வேண்டுமானால் அதற்குமுன் உன்னுடைய சிவலிங்கத்தை பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டும்’ என்று கூறி அனுமனுக்கு ஆசி அளித்தார்.

காசியில் விசுவநாதர் சந்நதி அமைந்திருக்கும் முறையிலேயே கருவறையை நீர் விட்டு நிரப்பும் அமைப்பிலேயே இங்கும் அமைந்துள்ளது.அடுத்து ராமநாத சாமியின் மூலஸ்தானம். சீதை உருவாக்கிக் கொடுத்து ராமர் பிரதிஷ்டை செய்த ‘ராமலிங்கத்’தை கருவறையில் தரிசிக்கலாம். ஐந்து தலை நாகம் குடைபிடித்த கவசம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. திருமேனியில் ருத்திராட்ச மாலை, பதக்கங்களுடன் ராமலிங்கர் பேரருள் பொழிகிறார். ராமரின் சிலை முன்மண்டபத்தில் அமைந்துள்ளது.

ராமலிங்கத்தை எப்பொழுது ராமர் பிரதிஷ்டை செய்தார் என்பது குறித்து இருவேறு கருத்துகள் உள்ளன. ராவண வதத்திற்காக ராமர் பாலம் கட்டத் தொடங்கிய செய்தி ராவணனுக்குத் தெரிய வந்தது. பாலம் இருந்தால்தானே படை எடுத்து வரமுடியும்? பகல் முழுக்க பாலத்தை ராம சேனைகள் கட்டி முடித்த அன்றிரவே ராவணன் தன் சேனைகளுடன் வந்து அப்பாலத்தைத் தகர்த்துவிட தீர்மானித்தான். சீதையை மீட்பதற்காக இலங்கைக்குள் நுழைய பாலம் அவசியம். ஒருவேளை ராவணன் அதற்கு வாய்ப்பளிக்காமல் இந்தப் பாலத்தை அழித்துவிடுவானோ என்ற சந்தேகம் ராமனுக்கு எழுந்தது. தன் குழுவினர்களோடு ஆலோசனை செய்தார்.

அப்பொழுது ஜாம்பவான், ‘பாலத்தைக் கட்டி முடித்ததும் அதன்மீது ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்துவிடுங்கள். தீவிர சிவபக்தனான ராவணன், அந்தச் சிவஉருவை சிதைக்க மாட்டான்,’ என யோசனை கூறினார். அதன்படி ராமர் பிரதிஷ்டை செய்ததுதான், இப்போது ஆலயத்தில் இருக்கும் ராமலிங்கம் என சிவபுராணம், ஆஞ்சநேய புராணம் ஆகியவை கூறுகின்றன.

கம்பராமாயணம், தேவாரப் பதிகங்கள் ஆகியனவோ, ராவணனைக் கொன்ற பிறகு, தன் பிரம்மஹத்தி தோசத்தை போக்கிக் கொள்ள ராமலிங்கத்தை ராமர் பிரதிஷ்டை செய்தார் என்று கூறுகின்றன.

 திருஞான சம்பந்தர் தன்னுடைய பதிகம் ஒன்றில், ‘தசமாமுகன் பூவியலும் முடிபொன்று வித்த பழி போ அற ஏவியலும் சிலை அண்ணல் செய்த ராமேச்சுரம்’ என இக்கருத்துக்கு வலு சேர்க்கிறார். போருக்கு முன்பா? போருக்கு பின்பா? என்பதில் இரு  கருத்துகள் இருந்தாலும் ராமலிங்கத்தை ராமர் தான் பிரதிஷ்டை செய்தார் என்பதில் கருத்து வேறுபாடுகள் இல்லை.

அன்று ராமர் அனுமனுக்கு ஆசி கூறியபடியே வழிபாடு இன்றும் நடைமுறையில் இருக்கிறது. அதாவது அனுமன்  கொண்டுவந்த லிங்கத்திற்கு பூஜைசெய்து முடித்த பின்புதான் ராமலிங்கத்திற்கு (ராமநாதசாமி) பூஜை செய்யும் வழக்கம் இன்றும் பின்பற்றப்படுகிறது.

கடல் மண்ணால் ஆன ராமலிங்கம், காலப்போக்கில் கல் போல இறுகிவிட்டதால், அதற்கு அபிஷேகம் செய்யும்போது கரைவதில்லை. ஆனால் இந்த லிங்கம் மணலினால் செய்யப்பட்டதல்ல என சிலர் சந்தேக வாதங்களை கிளப்பி வந்தனர். மணலால் ஆனதாக இருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்குமில்லையா என விதண்டவாதம் பேசினர்.

இதைக் கேள்விப்பட்டதனால் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர் ஒருவர், தண்ணீரில் எளிதில் கரைந்தும், அதனோடு உருத்தெரியாமல் கலந்தும் போகக்கூடிய உப்பில் ஒரு லிங்கத்தை செய்து அதற்கு அபிஷேகம் செய்தார்.

அந்த லிங்கம் கரையவில்லை! ‘அம்பாளை வணங்கும் சாதாரண பக்தனான தான் பிரதிஷ்டை செய்த உப்பு லிங்கமே கரையாத போது, சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாமல் இருப்பதில் என்ன அதிசயமிருக்கிறது; கரைந்தால் அல்லவா அது அதிசயம்!’ எனக் கூறி விதண்டவாதம் பேசியவர்களின் வாயை மூட வைத்தார்.

ராமலிங்கத்திற்கு பின்புறம் இன்றும் இந்த உப்புலிங்கத்தைத் தரிசிக்கலாம். கருவறைக்கு முன் அழகிய வேலைப்பாடுடன் கூடிய தூண்களைக் கொண்ட முன்மண்டபத்தில் ரதம் ஒன்றில் ராமர், சீதை, அனுமன், சுக்ரீவன் ஆகியோரின் விக்கிரகங்கள் உள்ளன, ராமலிங்கத்திற்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த மரகத ஸ்படிகலிங்கம் உள்ளது. ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட இந்த லிங்கத்தை முன்னால் வைத்துதான் ராமலிங்கத்துக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அபிஷேகத்தின்போது மரகத லிங்கம் வழியே ராமலிங்கத்தை கண்டு தரிசிப்பது சிறப்பு.

தீர்த்தங்களில் நீராடி வினைகளையும், பாவங்களையும் போக்கிக் கொண்டு, ராமலிங்கத்தை தரிசித்த பின், கோயிலின் மேற்கு வாசல் வழியே வெளியே சென்று, வெளிப்பகுதியில் வீற்றிருக்கும் விநாயகரிடம் நன்றி சொல்லி விடைபெற வேண்டும், அருகே இருக்கும் முருகருக்கும் வணக்கம் செலுத்தவேண்டும் என்பது வழிபடு மரபு. இம்மேற்கு வாசல் பகுதியில் விவேகானந்தர் இக்கோயிலில் ஆற்றிய சொற்பொழிவின் உரை, கல்வெட்டாகப் பதிக்கப்பட்டுள்ளது. விநாயகரிடம் விடைபெற்றுக் கொண்டதும் நாம் அடுத்துச் செல்லவேண்டிய தலம் ‘திருப்புல்லணை’.

(தொடரும்)

கோபி சரபோஜி