மாயவனைக் கட்டிப்போட்ட மன்னவன்!



புனித யாத்திரை ராமேஸ்வரம் - 8

பிராகாரங்களைக் கடந்து உள்ளே நுழைந்ததும் அனுப்பு மண்டபம் எனப்படும், முழுவதும் கருங்கல்லினாலான சேதுபதி மண்டபம் வரவேற்கும். அதைக் கடந்து உள்ளே நுழைந்ததும் தெற்கு முகமாக நெடிதுயர்ந்த அனுமன் தன் வலக்கையை உயர்த்தியபடி காட்சி தருகிறார். அனுமன் கோயிலுக்கு எதிரில் மகாலட்சுமி தீர்த்தம் உள்ளது. தீர்த்தத்தில் நீராடிய பின்பு தான் சந்நதிக்குள் சென்று வழிபட வேண்டும். இத்தீர்த்தத்தில் நீராடிய பின் அதே வழியாக மகாலட்சுமி சந்நதிக்கு வரலாம்.

அனுமன் கோயிலுக்கு மேற்கு பக்கத்தில் ‘சேதுபதீசம்’ (சேதுபதி ஈஸ்வரம்) உள்ளது. சேதுபதி மன்னர்களில் ஒருவரான விஜயரகுநாத சேதுபதி நாள்தோறும் குதிரையில் வந்து ராமநாதரை வழிபட்ட பின்னரே இரவு உணவை உண்பது வழக்கம். ஒருமுறை அவர் வருவதற்குள் அர்த்தசாமபூஜை முடிந்து விட்டது. அதனால் இனியும் தரிசனம் தடைபடக்கூடாது என்பதற்காக இந்த சேதுபதீசத்தை உருவாக்கினார். இங்கு எழுந்தருளியிருக்கும் ராமநாதர், விஸ்வநாதர் இருவரும் “சேதுபதீஸ்வரர்” என்றும்,  பருவதவர்த்தினி, விசாலாட்சி ஆகிய இருவரும் “சேதுபதியம்மன்” அழைக்கப்படுகின்றனர்.

இந்த வரலாற்றை நினைவு கூறும் வகையில் விஜயரகுநாத சேதுபதி குதிரை மீது சவாரி செய்யும் பாவனையில் அமைந்த உலோகச் சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. சேதுபதீசத்தின் தெற்கே உள்ள சிறிய நடைமண்டபம் வழியாகவும் மகாலட்சுமி தீர்த்தத்தையும், மகாலட்சுமி சந்நதியையும் அடையலாம். பொருள் முதலிய அனைத்து மங்கள செளபாக்கியங்களுக்கும் தலைவியான மகாலட்சுமியை தீர்த்தத்தில் நீராடி வழிபட்ட பின், நடைமண்டபம் வழியாக தெற்கு நோக்கிப் போனால் பர்வதவர்த்தினியின் சந்நதி அமைந்த கல்யாண மண்டபம் வரும். ஆடி மாதத்தில் அம்மனுக்கு கல்யாண உற்சவ வைபவம் இந்த மண்டபத்தில் நடைபெறுவதால் இதற்கு ‘கல்யாணமண்டபம்’ என்ற பெயர் ஏற்பட்டது. இந்த கல்யாண மண்டபத்தின் இருபக்கத்திலும் விநாயகர் மற்றும் முருகன் சந்நதிகள் உள்ளன.

மகாலட்சுமி தீர்த்தத்தை அடுத்து சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி தீர்த்தங்கள் உள்ளன, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்ட மிகப்பெரிய தொட்டியில் இம்மூன்று தீர்த்தங்களும் அமைந்துள்ளன. மேற்கு சுற்றின் மேற்கு திசையில் ஸ்ரீகோதண்டராமசாமி கோயில் கொண்டுள்ளார். இக்கோயில் பகுதியில் கவய தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், நள தீர்த்தம், நீல தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம் என்ற ஐந்து தீர்த்தங்கள் உள்ளன, இவற்றோடு மொத்தம் பத்து தீர்த்தங்கள்.

இதற்கடுத்து வெள்ளை சலவைக்கல்லால் வடிவமைக்கப்பட்ட சேதுமாதவர் கோயில் திகழ்கிறது. கிழக்கு பார்த்த மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றோடு அமைந்துள்ள இக்கோயிலில் சேதுமாதவராக எழுந்தருளியிருக்கிறார் விஷ்ணு! அவர் இங்கு சேதுமாதவராக வந்ததற்கு ஒரு தனி கதை உண்டு. மதுரையை ஆண்டு வந்த புண்ணியநாதி என்ற மன்னன் இங்குள்ள ராமநாதர் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தான். அவன் தனுஷ்கோடி சென்று விதிப்படி நீராடி விஷ்ணுவை முன்னிட்டு ஒரு யாகம் செய்தான். ராமநாதரையும் தரிசித்து வந்தான்.

இதனால் அவனுடன் விளையாடிப் பார்க்க நினைத்த விஷ்ணு மகாலட்சுமியை ஒரு சிறுமியாக அங்கே அனுப்பி வைத்தார். தனக்கு மகள் இல்லாத குறையை போக்கவே இப் பெண்குழந்தை கிடைத்திருப்பதாக நினைத்த மன்னன் அவளை அரண்மனைக்கு அழைத்துச் சென்று வளர்த்து வந்தான். பருவ வயதை அடைந்த மகாலட்சுமி அழகு தேவதையாய் விளங்கினாள். ஒருநாள் அவள் அரண்மனை தோட்டத்தில் பூக்கள் பறித்துக் கொண்டிருந்த போது வயதான அந்தணர் ஒருவர் அவள் அழகில் மயங்கி கையை பிடித்து இழுப்பதைக் கண்ட காவலர்கள் பதறிப்போயினர். பாய்ந்து வந்தவர்கள் அந்தணரை பிடித்துக் கொண்டு போய் மன்னன் முன் நிறுத்தினர்.

நடந்தவற்றைக் கேட்டு கோபம் கொண்ட மன்னன் ராமநாதசாமி கோயிலில் உள்ள ஒரு மண்டபத்தில் கயிற்றாலும், சங்கிலியாலும் அந்தணரை கட்டிப்போட உத்தரவிட்டான். மன்னனின் உத்தரவு காவலர்களால் நிறைவேற்றப்பட்டது. மறுநாள் விடியும் நேரம், தான் கட்டிப்போட்ட வயதான அந்தணர் சங்கு, சக்கரம் ஏந்தி ஆதிசேஷன் மீது படுத்திருப்பதைப் போல மன்னன் கனவு கண்டான். பதறி எழுந்தவன் விடிந்ததும் தன் வளர்ப்பு மகளோடு ராமநாதசாமி கோயிலுக்கு வந்தான்.

அங்கு மண்டப தூணில் தன் கால்கள் விலங்கிடப்பட்ட நிலையில் விஷ்ணு அவனுக்கு காட்சியளித்தார். இதைக்கண்டு செய்வதறியாது திகைத்து தன்னை மன்னித்தருளும்படி பாதம் பணிந்து வணங்கி நின்ற மன்னனிடம் விஷ்ணு தன் விளையாட்டைப் பற்றி கூறினார். அதோடு தான் இங்கேயே ‘சேதுமாதவர்’ என்ற பெயரில் அர்ச்சாவதாரம் கொள்ளப்போவதாகவும், இங்கு தன்னை தரிசிப்பவர்களின் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும் என்றும் அருளினார். மன்னனின் வளர்ப்பு மகளாய், அழகு தேவதையாய் அதுவரை அங்கு நின்றிருந்தவள் மகாலட்சுமியாய் மாறி விஷ்ணுவோடு இணைந்தாள். சேது மாதவர் ‘ஸ்வேத மாதவர்’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். ஸ்வேதம் என்றால் வெண்மை என்று பொருள்.

‘ஹரியும் சிவனும் ஒன்று’ என்பதை உலகிற்கு உணர்த்தும் விதமாக இவ்விருவரும் இத்தலத்தில் வீற்றிருக்கின்றனர். சேதுமாதவர் சந்நதிக்கு அருகிலேயே சேதுமாதவ தீர்த்தம் அமைந்துள்ளது. தெப்பக்குளம் போன்ற அமைப்புடைய இத்தீர்த்தத்தில் நீராடி சேதுமாதவரையும், மகாலட்சுமியையும் தரிசிக்க வேண்டும். மேற்கு சுற்றும், மேற்கு கோபுர வாசலிலிருந்து சேதுமாதவர் சந்நதிக்கு வரும் வழியும் கூடும் இடம் பெருக்கல் குறி போல இருக்கும். சொக்கட்டான் பலகையை நினைவுபடுத்தும் வகையில் அதன் தோற்றம் அமைந்துள்ளதால், இப்பகுதி ‘சொக்கட்டான் மண்டபம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபத்தில் ஒரே கல்லில் உருவான மூன்று ஜன்னல்களும், அதில் பசுவின் முகமும் அமைந்திருப்பது பார்க்க கண்கொள்ளா காட்சியாகும்.

மூன்றாம் திருச்சுற்றின் வடமேற்கு மூலையில் ‘ஸ்ரீ ராமலிங்க பிரதிஷ்டை’ நிகழ்ச்சி தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நதி அமைந்துள்ளது. மற்ற கோயில்களில் உள்ளதைவிட நடராஜர் விக்கிரகம் உயரமாகவும், சந்நதியின் விமானம் ருத்திராட்ச மணிகளால் அமைக்கப்பட்டும் இருப்பது சிறப்பு. கணங்களுக்கெல்லாம் அதிபதியாய், சபாபதியாய் சிவகாமியோடு வீற்றிருக்கும் நடராஜரை வணங்கி வழிபடுவதோடு மூன்றாம் திருச்சுற்று தரிசனம் முடிவடையும்.

(தொடரும்)

- கோபி சரபோஜி